Saturday, 28 April 2018

இரு நல்ல செய்திகள்


.
இன்று காலை ஹிண்டு பேப்பரை திறந்ததுமே தென்றல் வந்து தீண்டியது போன்ற ஒரு சுகம். ஒரு புறம் வடதென் கோரிய அதிபர்கள் கை கோர்த்து கல்லூரி நண்பர்கள் போல நடக்க, இன்னொரு புறம் மோடியும் ஜின்-பிங்கும் சிரித்த முகத்துடன் அளவளாவும் படங்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

ஐம்பதுகளின் இரு தேசங்களிடை நடந்த கொடும் போருக்குப் பின் தென் கொரியாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன். இவரும் தென்கொரிய அதிபர் மூன் ஜெ-இன் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி அணு ஆயுதத் தடுப்பு, அமெரிக்காவுடன் நட்பு, இருபுறமும் ஆயுதக் குறைப்பு போன்றவற்றை பேசி சில ஒற்றுமைகளை அணுகி இருக்கிறார்கள். உலக சமாதான வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இந்த சந்திப்பு இருக்கப் போகிறது.

இரண்டாவது மோடியும் சீன அதிபரும் சந்தித்து முறை பேசியது. முறையான அஜெண்டா எதுவும் இதற்கு இல்லை. ராகுல் காந்தியும் இதனை குறிப்பிட்டு கிண்டல் அடித்து இருக்கிறார். ஆனால் பரம்பரை விரோதிகள் திடீரென்று தங்கள் பிரச்சனைகளை தீர்க்க முடிவெடுத்து சந்தித்துக் கொண்டால் ‘எப்படிய்யா இருக்கே? பொண்டாட்டி புள்ளைங்க சௌக்கியமா?’ என்றுதான் பேச வேண்டும். ‘போன வருசம் அந்த வடக்கு தோட்டத்தை உன் மச்சானுக்கு எழுதி வெச்சியே! அதை எப்போ என் பேருக்கு மாத்தப் போறே?’ என்று ஆரம்பிக் கூடாது. போலவே இந்தியா சீனா இது போல பல்வேறு முறைசாரா சந்திப்புகளை நடத்த வேண்டும். Thawing of relationship என்று சொல்வார்கள். ஃப்ரீசரில் இருக்கும் சிக்கனை எடுத்து அப்படியே அடுப்பில் போட மாட்டோம். இரண்டு மணி நேரம் வெளியே சிங்க்கில் வைத்து ஐஸ் கரைந்ததும்தான் சமைக்கத் துவங்குவோம். அதற்கு thawing என்று பெயர். அது போலவே சீன இந்திய உறவும் கொஞ்சம் கொஞ்சமாக thaw ஆக வேண்டும். இப்போதுதான் பிரதமர் சிக்கனை ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்திருக்கிறார். கூடிய விரைவில் பிரியாணி கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

எது எப்படியோ, இந்த இரண்டு சந்திப்புகளும் ஒரு உண்மையை உணர்த்துகின்றன. நாகரீக உலகில் வன்முறைக்கு இனி இடம் இல்லை. நான் அடிக்கடி குறிப்பிடுவது போல ஒட்டு மொத்த மானுடமும் வன்முறையை முற்றிலும் துறப்பதற்கு இன்னும் 100-150 வருடங்கள் பிடிக்கலாம். ஆனால் அதற்கான முனைப்புகள் இந்த நூற்றாண்டிலேயே  நடக்கத் துவங்கி உள்ளன. நான் எதிர்பார்ப்பது மாதிரி பாகிஸ்தான் விஷயத்திலும் thawing விரைவில் துவங்கி பத்துப் பதினைந்து ஆண்டுகளில் காஷ்மீர் விஷயத்திலும் ஒரு சமாதானத் தீர்வு எட்டப்பட்டு விடும் என்று நம்புகிறேன்.

அதற்கான முனைவுகளில் ஈடுபட்டிருக்கும் தலைவர்களுக்கு நன்றியுடன் இந்தக் காலை விடிகிறது.

No comments:

Post a Comment