Friday 2 June 2017

தொண்ணூற்றி ஐந்து வயது வாலிபன்


அவரைப் போல வாழ்வின் சூறாவளிகளை சந்தித்திருக்கும் மனிதர்கள் கொஞ்சமேதான் இருப்பார்கள். ஆனாலும் அதெல்லாம் யாருக்கோ நடந்தது போல, இன்னமும் 1969ல் முதல் பதவி ஏற்ற இளைஞன் போலவே, வலம் வந்து கொண்டு இருப்பது அதிசயம்தான். அவரின் சிந்தனைக்கு வயதே ஆகாத மாதிரிதான் தெரிகிறது.

சமீப காலம் வரை உடலுக்கும் கூட வயதாகாமல்தான் இருந்திருக்கிறது. சென்னை வெள்ளத்தின் போது, அப்போதைய முதல்வர் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நேரத்தில், அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தவர் கலைஞர். அது போதாதென்று வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் போய் பார்த்து, நிவாரணங்களை வழங்கித் திரும்பினார். அப்போது அவருக்கு 93 வயது என்பதும் சக்கர நாற்காலியில் கட்டுண்டிருந்தார் என்பதும் முக்கியமான விஷயம். (அந்த வீடியோவை அடிக்கடி போட்டுக் காட்டி நோய்வாய்ப்பட்டிருந்த என் 83 வயது அம்மாவை நான் ஊக்குவித்துக் கொண்டு இருந்தேன்.)

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முதல் எமெர்ஜென்சி முதல் பொருளாதார தாராளமயம் வரை எல்லா சரித்திர நிகழ்வுகளுக்கும் கலைஞர் உடனிருந்து இருக்கிறார். தமிழ் நாட்டில் ஒரு நிகழ்வு கூட அவர் கவனத்தை விட்டுப் போனதில்லை. ஒரு சமகால வரலாற்று குறிப்பாளராகவே இருந்தார். அவருக்குப் பாதகமான விஷயங்களில் கூட கருத்து சொல்லி மாட்டிக் கொண்டும் இருக்கிறார். அப்போது அவர் அறிக்கைகளை எல்லாம் கிண்டல் அடித்தாலும் இன்றைக்கு எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத முதல்வர்களைப் பார்த்த பின்புதான் அவரின் அருமை புரிகிறது. நிருபர்களிடம் அவர் சண்டை போட்டு திட்டினாலும் கூட ஊடகங்களிடம் பேசவே செய்தார். இன்று போல ஒரு நிருபர் கூட்டம் கூட வைக்காமல் ஆட்சியையே முடித்து விட்ட அரசியல் தலைவர்களைப் பார்க்கும் போதுதான் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று புரிகிறது.

எனக்குத் தெரிந்து நேருவுக்குப் பின் மத வாதம், சமூக நீதி, பெண்ணுரிமை, ஊடக சுதந்திரம், பகுத்தறிவு இவை எல்லாவற்றையும் பற்றி பேசி, கவலைப்பட்ட ஒரே இந்தியத் தலைவர் இவர்தான்.

நேருவுக்குப் பின் இந்த அளவுக்கு எழுதிக் கொண்டே இருந்த இந்தியத் தலைவரும் இவர் மட்டுமே. சமீப காலம் வரை கூட தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டு இருந்தவர். (ஒரே ஒரு புத்தகத் தொகுப்பை முடிப்பதற்குள் என் தாவு தீர்ந்து போய் விட்டது.)

ஆனாலும் கலைஞர் என்ற பதம் பெரும் தீரமான உணர்வுகளை மக்களிடையே இன்று வரை கூட எழுப்புகிறது என்பதில் சந்தேகமில்லை. அவர் ஆதரவாளர்கள் அவரை ஏறக்குறைய வணங்குகிறார்கள். ஆனால் அவர் எதிர்ப்பாளர்கள் மோசமான வசவுகளால் அர்ச்சிக்கிறார்கள். சும்மா மிதமான எந்த கருத்தியலையும் அவர் உருவாக்குவதில்லை என்பதே கூட அவர் அரசியல் பயணத்தின் தீவிரத்தை மற்றும் அது ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளைத்தான் காட்டுகிறது.

சொல்லப்போனால், தமிழகத்தின் மற்ற தலைவர்களை வைத்து அவரை எடை போடுவதே அவருக்கு செய்யும் அநீதிதான். ஜெயலலிதாவை எடுத்துக் கொள்ளுங்கள்; ரகசியமான வாழ்வு, ரகசியமான சாவு, சர்வாதிகார ஆட்சி, கடும் ஊழல்கள் என்று மட்டுமே சொல்ல முடிகிறது. விஜயகாந்த், ஒரு வாக்கியம் கூட கோர்வையாக பேசத் தெரியாத மனிதர். ஓபிஎஸ், சமீப காலம் வரை அடிமை வாழ்வு வாழ்ந்து விட்டு இப்போதுதான் அந்த சங்கிலியை கழற்றி விட்டு வந்திருப்பவர். எடப்பாடி பழனிச்சாமி, அவரின் சங்கிலியை இன்னமும் கழற்றாமல் பூட்டின் சாவியை இன்னொரு எஜமானனிடம் கொடுத்து விட்டு அமர்ந்திருப்பவர். ராமதாஸ் சாதியவாதத்தை, சாதிய வன்முறைகளை அடிக்கல்லாக வைத்து தன் அரசியலை கட்டமைத்து இருப்பவர், சீமான், இனவாதம், சாதியவாதம் மற்றும் பிற்போக்குக் கொள்கைகளின் ஒட்டு மொத்த குத்தகைதாரர். சுற்றி இவர்களைப் பார்க்கும் போதுதான் கலைஞரின் அருமை தெரிய வருகிறது. தொண்ணூறுகள் தாண்டியும் தொடர்ந்து பொது வாழ்வில் பங்கெடுத்துக் கொண்டு தொடர்ந்து கொடுத்து வரும் அவரின் கடும் உழைப்பையும் வியக்க வைக்கிறது.

பிரச்சனைகளும் இல்லாமலில்லைதான். சர்ச்சைகள், ஊழல் புகார்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் என்றெல்லாம் அவர் வாழ்வு தோறும் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் என்ன? இத்தனை நீண்டதொரு வாழ்வில், நீண்ட அரசியல் பங்கெடுப்பில், அதுவும் இந்தியாவில், இந்த மாதிரி சர்ச்சைகள் இல்லாமல் யாராலும் இருந்திருக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

அவரை நீங்கள் விரும்புகிறீர்களோ வெறுக்கிறீர்களோ, ஆனால் இந்த மனிதர் தமிழை விரும்புகிறார், இலக்கியத்தை ரசிக்கிறார், ஜனநாயகத்தை, சமூக நீதியை, பெண்ணியத்தை, ஊடக சுதந்திரத்தை, கூட்டாட்சி தத்துவத்தை, பகுத்தறிவை இவற்றை எல்லாம் மதிக்கிறார். ரசிக்கிறார்.

எல்லாவற்றை விட வாழ்வை ரசிக்கிறார்; அனுபவிக்கிறார்; வாழ்கிறார்.

அந்த ரசிகனுக்கு, இந்தியாவின் இளம் அரசியல் தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Saturday 6 May 2017

ஃபிரெஞ்சு தேர்தல்



ஃபிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முக்கிய கட்டம் இன்று நடைபெற இருக்கிறது. களத்தில் நிறைய பேர் இருந்தாலும் வழக்கம் போல கவனம் இரண்டு பேரிடம் மட்டும்தான் இருக்கிறது. தேசிய முன்னணியைச் சேர்ந்த மரின் லபென் மற்றும் முன்னேற்றக் கட்சியை சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன்.

இதில் மக்ரோன் நடுவு சார் கொள்கைகளை நம்புபவர். இனச் சிறுபான்மையினர், அகதிகள் குடியேற்றம், இஸ்லாமியர்கள் போன்ற விஷயங்களில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வற்புறுத்துபவர். ஃபிரான்ஸ் தேசம் ஐரோப்பிய யூனியனுக்கு உள்ளேயே இருந்து தன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துபவர். சோஷலிஸக் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்.

லபென் பற்றி பேசுவதற்கு முன் அவர் தந்தை பற்றி: இவரின் தந்தை ழான்-மரி லபென்தான் தேசிய முன்னணிக் கட்சியை நிறுவியவர். அதீத வலது சாரி சிந்தனையாளர். பெரும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக திகழ்ந்தவர். யூதர்களை, முஸ்லிம்களை வெளிப்படையாகவே விமர்சித்தவர். யூதர்களை கொத்துக் கொத்தாக எரித்த ஹிட்லரின் நெருப்பு மனைகளை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்கிற அர்த்தத்தில் இவர் பேசிய ஒரு பேச்சு பெரும் அலைகளைக் கிளப்பியது. ஃபிரெஞ்சு கால்பந்து டீமில் வெள்ளையர்கள் கம்மியாக இருப்பதால் அது ஃபிரெஞ்சு டீமே அல்ல என்று பேசியவர். இவரை விட இவர் மகள் கொஞ்சம்  ‘மென்மையான’ வலது சாரி என்று நம்புகிறார்கள். அது ஓரளவு உண்மைதான். அந்த ஹிட்லர் பேச்சுக்காக தன் தந்தையையே கட்சியை விட்டு நீக்கினார் லபென். ஆனால் தந்தை மாதிரியே லபென்னும்  ஐரோப்பிய யூனியனை விட்டு ஃபிரான்ஸ் விலக வேண்டும் என்று விரும்புகிறார். பிரிட்டன் பிரெக்சிட் (Brexit = British Exit) கொண்டு வந்த மாதிரி ஃபிரெக்சிட் (Frexit = French Exit) கொண்டு வரவேண்டும் என்று பிரச்சாரம் செயகிறார். அகதிகளை வெளியேற்ற விரும்புபவர். பிரெஞ்சுக் கலாச்சாரத்தை காப்பாற்ற ‘வந்தேறிகள்’ திருப்பி அனுப்பப் படவேண்டும் என பேசுகிறார். எல்லா தீவிர வலதுசாரிகள் போலவே இஸ்லாமிய வெறுப்பு, சொந்த தேச கலாச்சார மகிமை, வெளிநாட்டவருக்கு விசா கெடுபிடிகள், என்றெல்லாம் டெம்பிளேட் வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்.

வழக்கம் போல இந்த எளிமையான, உணர்வு பூர்வமான வலதுசாரி தத்துவங்கள் மக்களிடையே எடுபட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஃபிரெஞ்சு மக்கள் கலாச்சாரப்பெருமை கொண்டவர்கள். ஐரோப்பாவிலேயே உயர்ந்த கலாச்சாரம் தங்களுடையதுதான் என்று தீவிரமாக நம்புபவர்கள். அதற்கு முஸ்லிம்களாலும், குடியேறிகளாலும் பங்கம் வந்து கொண்டு இருக்கிறது என்று லபென் செய்யும் பிரச்சாரம் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

ஆனால் இப்போதைக்கு லபென் கொஞ்சம் பின்னணியில் இருக்கிறார். முதல் காரணம் அவர் தந்தைக்கு இருந்த ஹிட்லர் இமேஜ். இரண்டாவது காரணம், முக்கியமாக, ஃபிரான்ஸ் தேசத்தின் பொதுவான மென்மையான அணுகுமுறைதான். செக்யூலரிஸம், சமத்துவம், சமூக நீதி போன்ற விஷயங்களை வெகு காலத்துக்கு முன்பே கொண்டு வந்த சமூகம் ஃபிரெஞ்சு சமூகம். தேசத்தில் கிட்டத்தட்ட பாதி பேர் மத நம்பிக்கை அல்லாதவர்கள். மொத்த தேசத்தில் 12 சதவிகிதம்தான் தொடர்ந்து சர்ச்சுக்கே போய்க் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசம் அவ்வளவு எளிதில் இந்த விஷயங்களை விட்டுக் கொடுத்து மதவாதம் மற்றும் இனவாதங்கள் மேல் விழ மாட்டார்கள்…

என்று நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறது. உலகெங்கும் தீவிர வலதுசாரி சிந்தனைகள் கொடியேற்றிக் கொண்டு வருகின்றன. இந்தியா, ஃபிலிப்பைன்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் (பிரெக்சிட்) என்று இவை பெறுகிற வெற்றிகள் ஃபிரான்ஸையும் பாதிக்குமா என்பதுதான் இன்றைய தேர்தல் முன் இருக்கும் கேள்வி. செக்யூலரிஸம், சமத்துவம் போன்ற விஷயங்களை உலகுக்கே போதித்த ஒரு தேசம் அவற்றை விடுத்து உணர்ச்சி வசப்பட்டு லபென் பின்னால் போகுமா? அப்படிப் போனால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? ஃபிரான்ஸ்தான் ஐரோப்பிய யூனியனின் அச்சாணி என்று சொல்வார்கள். அந்த அச்சாணி கழண்டால் ஐரோப்பிய யூனியன் துண்டு துண்டாக உடைந்து போகும். உலகப் பொருளாதாரத்தில் அதன் விளைவு எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட 12 சதம் முஸ்லிம்கள் வாழும் தேசத்தில் முஸ்லீம் வெறுப்பு ஜனாதிபதி ஒருவர் வந்தால் என்ன விளைவுகள் உருவாகும்? தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி சிந்தனைகளுக்கு லபென்-னின் வெற்றி எந்த மாதிரியான ஊக்கம் கொடுக்கும்?

அதை எல்லாம் விட முக்கியமாக மற்ற தேசங்கள் போல ஃபிரான்ஸும் உணர்ச்சி வசப்பட்டு விடுமா, அல்லது தங்கள் ஆதார சிந்தனைகளின் பின் அணிவகுக்குமா?

விடை நாளை தெரிந்து விடும்.

நிர்பயா எனும் சின்னம்



‘நிர்பயா வழக்குதான் பெரிய வழக்கா? பில்கிஸ் பானோ வழக்கு பெரிய வழக்கு இல்லையா? அதைப் பற்றி ஏன் யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள்?’


என்று பதிவுகள் பார்க்கிறேன்.


பில்கிஸ் பானோ யார் என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய பின்குறிப்பு: குஜராத் கலவர நேரத்தில் தன் குடும்பத்துடன் பில்கிஸ் பானோ தப்பித்துப் போக முயன்ற போது ஒரு கும்பல் அவர்களை தடுத்து பானோவை கொடும் வல்லுறவு செய்து, கூடவே அவர் மகள், தாய் என்று எல்லாரையும் கொன்று போட்டனர். அவர் அப்போது ஐந்து மாத கர்ப்பிணி என்பதும் முக்கியமான விஷயம். அந்த வழக்கில் 11 பேருக்கு மும்பை ஹைகோர்ட் ஆயுள் தண்டனை கொடுத்தது. ஆனால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டி பானோ இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறார்.


நிற்க. இங்கே பிரச்னை அவர்களுக்கு தூக்கு கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதல்ல (என்று நம்புகிறேன்). நிர்பயா அளவுக்கு அந்த வழக்கு முக்கியத்துவம் பெறவில்லையே என்பதுதான்.


அவர் முஸ்லீம் என்பதால் அது முக்கியத்துவம் பெறவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளில் நிர்பயா அல்லது பானோ என்று இரண்டே இரண்டு வல்லுறவு சம்பவங்கள் நடந்திருந்தால் நாம் அப்படி நினைக்கலாம். ஆனால் ஆண்டுக்காண்டு ஆயிரக்கணக்கில் வல்லுறவு வழக்குகள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.


தேசிய குற்றவியல் ஆவணக் கழக அறிக்கையின் படி வல்லுறவுக் குற்றங்கள் எண்ணிக்கை:
  • 2012 - 24,923
  • 2013 - 33,707
  • 2014 - 36,735
  • 2015 - 34,651


அதாவது 2012ல் நிர்பயா சம்பவம் நடந்த அதே ஆண்டில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் வல்லுறவு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அப்படியானால் அந்த மற்ற வழக்குகள் ஏன் பெரிய கவனம் பெறவில்லை? அதற்கு அடுத்த வருடமே கூட சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் சிறுசேரியில் வல்லுறவுக்கு உள்ளாகி இறந்து போனாள். அதே வருடம் உத்திரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் இரண்டு தலித் இளம்பெண்கள் சாதி இந்துக்களால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர். அப்புறம் மற்ற தலித்துகளுக்கு சேதியாக அந்த சடலங்கள் ஊர்ப் பஞ்சாயத்து ஆலமரத்தில் தொங்க விடப்பட்டன. சென்னை சம்பவம் எந்தக் கம்பெனி, உபி சம்பவம் எந்த கிராமம் என்று கூகுள் செய்யாமல் உங்களில் எத்தனை பேரால் சொல்ல இயலும்?


விஷயம் இதுதான். நிறைய சம்பவங்கள், குற்றங்கள், நல்ல, கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சில விஷயங்கள் மட்டும் திடீரென்று நம் உணர்வைத் தூண்டி நம் கற்பனையை உசுப்பி விட்டு விடுகின்றன. ஆண்டாண்டு காலமாக கறுப்பின மக்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப் பட்டுத்தான் வந்திருக்கிறார்கள். ஆனால் அறுபதுகளில் ரோஸா பார்க்ஸ் எனும் பெண்ணுக்கு பஸ்ஸில் வெள்ளையர் சீட்டில் உட்கார இடம் கொடுக்கவில்லை என்றதும் அதை அவள் எதிர்த்தும் பெரும் பிரச்சனையாகி அமெரிக்கா எங்கும் போராட்டங்கள் வலுத்து உலக வரலாற்றையே மாற்றியது. இன்று கறுப்பின உரிமைப் போராட்டத்தின் சின்னமாகவே அந்தப் பெண்மணி மாறி விட்டார்.


அது என்ன பார்க்ஸ் பிரச்சனைதான் பெரிய பிரச்சனையா? வேறு கறுப்பர்கள் அதற்கு முன்பெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாகவே இல்லையா என்றால் என்ன சொல்ல முடியும்? அடக்கி வைக்கப் பட்டிருந்த கோபங்களின் கதவை அந்த சம்பவம் திறந்து விட்டது. அவ்வளவுதான். அது இல்லையென்றால் வேறு ஏதாவது திறந்து விட்டிருக்கும்.


அதே போல உப்பு சத்தியாகிரகம் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய சம்பவமாக பார்க்கப் படுகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை அசைத்த சம்பவம் அது. ஆனால் அதுதான் இருப்பதிலேயே பெரிய போராட்டமா என்றால் இல்லை. சாவு எண்ணிக்கையில், கைதான ஆட்களின் எண்ணிக்கையில் என்று எதில் யோசித்தாலும் உப்பு சத்தியாகிரகம் லிஸ்டில் கடைசியில்தான் இருக்கும். ஆனால் என்னவோ ஏதோ திடீரென்று பூரா இந்திய மக்களின் கற்பனையை அது தூண்டி வெள்ளையருக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்து விட்டது.


தமிழகத்தில் அமில வீச்சு என்றால் நமக்கு விநோதினிதான் நினைவுக்கு வருவார். ஆனால் அவருக்கு முன்பும் பின்பும் பல்வேறு பெண்கள் அமிலம் வீசப்பட்டு வாழ்வை இழந்துள்ளனர்.


கலவரம் என்றாலே நமக்கு குஜராத் கலவரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் சாவு எண்ணிக்கையில், மக்கள் இடம்பெயர்ந்த எண்ணிக்கையில் மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் குஜராத் கலவரம் லிஸ்டில் மூன்றாவதாகத்தான் வருகிறது. ஆனால் இன்று மதக்கலவரம் என்றாலே நம் எல்லாருக்கும் குஜராத்தான் நினைவுக்கு வரும்.


இதே போல சொல்லிக் கொண்டே போகலாம்.


போலவே நிர்பயா சம்பவமும் திடீரென்று எல்லார் கற்பனையையும் தூண்டி வல்லுறவுகளுக்கு எதிரான கோபத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது. கறுப்பின உரிமைக்கு ஒரு ரோஸா பார்க்ஸ் மாதிரி இந்திய வல்லுறவுக் குற்றங்களுக்கு ஒரு நிர்பயா. ஒரு சின்னம். ஒரு கொடி. அவ்வளவுதான்.


இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை என்பது என் நிலைப்பாடு. மாறாக நிர்பயா சின்னத்தை நாம் மென்மேலும் பரப்பி, விவாதித்து, அதன் வடு அழியாமல் பராமரிக்க வேண்டும். 25 ஆயிரம், 35 ஆயிரம் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அவலமான ஒரு விஷயம் தேச அளவில் பத்துப் பதினைந்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது தூக்கு தண்டனைகளாலும், ஆயுள் தண்டனைகளாலும் நடக்காது. ஆண்களாகிய நாம் நம்மை, பெண்கள் பற்றிய நம் சிந்தனைகளை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சும்மா பாரதி டி-ஷர்டை மட்டும் போட்டு வலம் வராமல் நிசமான பெண் விடுதலை பற்றிய விவாதங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அது நிர்பயா என்கிற சின்னத்தின் கீழ் நடப்பதில் தவறேதும் இல்லை. தேவை சமூகத்தில் மாற்றம். சின்னத்தில் அல்ல.



Tuesday 28 March 2017

கண்டுகொள்ளப்படாத குழந்தை உரிமைகள்

(இன்றைய  மத்திய அரசு ஏற்கெனவே இருந்து வந்த குழந்தைகள் மற்றும் மகப்பேறு நலத் திட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவை கொஞ்சம் கொஞ்சமாக குலைந்து வருகின்றன என்று ழான் த்ரே (Jean Drèze) ஹிண்டுவில் எழுதிய கட்டுரையை அவர் அனுமதியுடன் தமிழில் வழங்குகிறேன்.)



சத்துணவுத் திட்டத்தில் உணவு உட்கொள்ளும் சிறுவர்கள் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அனுப்பிய சமீபத்திய சுற்றறிக்கை விமர்சனத்துக்கு உள்ளானது நினைவிருக்கும். இதில் சோகம் என்னவென்றால், அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டு விட்டது என்கிற மாதிரி ஒரு பிம்பத்தை அரசுத் தரப்பில் உருவாக்கி விட்டார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

சிறுவர்கள், குழந்தைகள் உரிமையின் மேல் இந்த அரசு தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் ஒரு அத்தியாயம்தான் இது. மேலும் சில உதாரணங்களை இங்கே பகிர்கிறேன்

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013ன் கீழ் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ரூபாய் 6,000 கர்ப்ப கால உதவித் தொகையாக வழங்க வேண்டும். இதனை  கடந்த மூன்று வருடங்களாக செயல்படுத்தாமல் வருகிறார்கள். 2015-16ல் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் ‘ தாயும் சேயும்’ என்கிற முக்கியமான அத்தியாயம் இருக்கிறது. அதில் மகப்பேறு மற்றும் கைக்குழந்தை சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் ‘பெரும் பலனைக் கொடுக்கின்றன,’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முந்தைய அரசு ‘இந்திரா  காந்தி மகப்பேறு திட்டம்’ என்று கொண்டு வந்து 53 மாவட்டங்களுக்கு மாதிரி முயற்சியை மேற்கொண்டது. இந்தத் திட்டத்தை எல்லா மாவட்டங்களுக்கும் விரிவாக்குவதாக சுப்ரீம் கோர்ட்டுக்கு 2015 அக்டோபர் மாதம் இப்போதைய மத்திய அரசு எழுத்தில் உறுதிமொழி அளித்திருந்தது.

டிசம்பர் 31ம் தேதி உரையில் பிரதமர் நரேந்திர மோடி தேசமெங்கும் கருவுற்ற பெண்களுக்கு ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை தனது அரசின் புதிய திட்டமாக பெருமை கொண்டார். விஷயம் என்னவென்றால் இது ஏற்கெனெவே உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் இருந்ததுதான். இது கூடப் பரவாயில்லை என்று விட்டு விடலாம். பண நீக்கத்தில் பாதிக்கப் பட்டிருந்த மக்களுக்கு ஆறுதலுக்காக அப்படி சொல்கிறார் போல; எப்படி இருந்தாலும் பிரதமரே மகப்பேறு திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதால் இதில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் வரும் என்று நினைத்தோம்.

ஆனால் பெரிய முன்னேற்றம் எதுவும் வரவில்லை. மத்திய பட்ஜெட்டில் இதற்கு ஒதுக்கியிருக்கும் நிதி 2,700 கோடி மட்டுமே. தேசத்தில் இருக்கும் மொத்த கர்ப்பிணிப் பெண்களில் நான்கில் ஒரு பங்குக்குக் கூடப் போதாது. இதிலும், இந்த நிதியில், 40 சதம் மாநிலங்களின் பட்ஜெட்டில் இருந்துதான் கொடுக்க வேண்டும். இந்தத் திட்டம் முதல் முறை கருவுற்ற பெண்களுக்கு மட்டுமே செல்லும் செல்லும் என்று வேறு ஒரு பேச்சு இருக்கிறது. இதுவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. அதெல்லாம் போக, இன்று வரை இந்தத் திட்டம் எங்கேயும் அமுல் படுத்தப்பட்டதாக தகவல் இல்லை. ஆற அமர திட்டத்தை ஆரம்பித்தால் ஒதுக்கப்பட்ட 2,700ஐ விடக் குறைவாக செலவழித்து விடலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள் போல. பொருளாதார ஆய்வறிக்கையில் ‘கர்ப்ப காலத்தில் சத்துணவுத் தேவையை பூர்த்தி செய்ய முயலும் திட்டம்,’ என்று இதை வர்ணித்ததற்கும் நடைமுறைக்கும் உள்ள சம்பந்தம் இவ்வளவுதான்.

இரண்டாவது விஷயம், முழுமையான குழந்தை வளர்ச்சி சேவைகள் பற்றியது.  2015 வரை இதில்  நல்ல முன்னேற்றம் இருந்தது. இந்த அரசில் முதல் பட்ஜெட்டில் இதற்கான நிதியை 50% வரை குறைத்தார்கள். இது அவர்களின் அமைச்சரவையில் இருந்த மனேகா காந்தியையே கூட விமர்சிக்க வைத்தது. பெண்கள் குழந்தை நலத்துறை அமைச்சரான அவர் ‘நலத்துறை ஊழியர்களை “அடுத்த மாதம் சம்பளம் வருமா,” என்று சஸ்பென்ஸில் வைத்து விட்டோம்!’ என்று புலம்பினார்.

மாநில அரசுகளும் கூட இதனால் பிரச்சனைக்கு உள்ளாகின. ஜூலை 15, 2016ல் ஒரிஸா அரசு மத்திய அரசுக்கு ஒரு  கடிதம் அனுப்பியது.அதில் இந்த பட்ஜெட் குறைப்பால் சத்துணவுக் கூட ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாததை குறிப்பிட்டு இருந்தார்கள். ஆரம்பக்கல்வி மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு மருந்துகள் விநியோகமும் கூட பாதிக்கப் பட்டத்தை குறிப்பிட்டு இருந்தது.

சத்துணவு விநியோகமும் இதனால் பாதிக்கப் பட்டது. மேலே குறிப்பிட்ட திட்டங்கள் போலவே சத்துணவு திட்டமும் அதிர்ச்சியூட்டும் 36 சதவிகித பட்ஜெட் வெட்டை சந்தித்தது. பண மதிப்பில் 10,000 கோடி ரூபாய் நான்கு வருடத்துக்கு முந்தைய ஒதுக்கீட்டை விட 25 சதம் கம்மி (உண்மையான நேரடிக் கணக்கில் இன்னமும் குறைவாக வரும்.)

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்த சத்துணவுத் திட்டத்துக்கு மாநில அரசுகளின் பங்கும் இருக்கும். அந்தப் பங்கை 32%ல் இருந்து 42% ஆக ஏற்றி விட்டார்கள். இதில்  விஷயம் என்னவென்றால் ஏன் சிறுவர்கள் நலத் திட்டங்கள் மட்டுமே இவ்வளவு பாதிப்புக்கு உள்ளானது என்பது புரியவில்லை. (குடிநீர், சுகாதாரம் தவிர வேறு எந்தத் திட்டமும் இந்த அளவு பட்ஜெட் வெட்டை சந்திக்கவில்லை.)

அடுத்தது பாதிக்கப் பட்டது முட்டை: .நிறைய மாநில அரசுகள் இப்போது சத்துணவில் முட்டை சேர்த்துப் போடுகின்றன. முட்டை மூலம் பல்வேறு ஊட்ட சத்துகள் சிறுவர்களுக்கு கிடைப்பதால் இது ஒரு அற்புதமான திட்டம். இதனை  தேசிய அளவில் செயல்படுத்தி இருந்திருந்தால் கோடிக்கணக்கில் சிறுவர்கள் பயன் பெற்று உடல்நல முன்னேற்றம் கண்டிருப்பார்கள். ஆனால், இங்கேதான் சுவாரஸ்யமான விஷயம்: சத்துணவில் முட்டை  போடாத மாநிலங்களில் முக்கால்வாசி பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்தான். அதே போல, முட்டை சேர்க்கும் மாநிலங்களில் முக்கால்வாசி பிற கட்சிகள் ஆட்சி செய்பவைதான். வடமாநிலங்களில் அவர்களுக்கு இருக்கும் சைவ உயர்சாதியினரை திருப்திப் படுத்தவே இப்படி செய்கிறார்கள் என்பது கண்கூடு. இந்த விஷயத்தில் பதில் சொல்ல இயலாமல் மத்திய அரசு அமைதி காப்பதில் ஆச்சரியமே இல்லை.

அடுத்து மாட்டிக் கொண்டு இருப்பது ஜனனி சுரக்ஷா திட்டம், இது மருத்துவமனையில் பிரசவம் நடப்பதை ஊக்குவிக்கும் திட்டம். அப்படி நடக்கும் ஒவ்வொரு பிரசவத்துக்கும் இந்த திட்டத்தின் கீழ் பண உதவி கொடுக்கப் படும்.  தேசியக் குடும்ப ஆய்வறிக்கையின் தரவுகளின் படி இந்த பிரசவங்கள் எண்ணிக்கை நன்றாகவே உயர்ந்திருக்கின்றன; 2005ல் 39% ஆக இருந்தது 2015ல் 79% ஆக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகரித்ததால் பிரசவத்தின் போது தாய் மரணிக்கும் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்கிறது. ஜனனித் திட்டத்தினால்தான் இந்த முன்னேற்றம் வந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

ஆயினும் இந்த திட்டத்தை மூடி விட மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. பிப்ரவரி மாதம் விக்யான் பவனில் நடந்த ஒரு கூட்டத்தில் தாய் சேய் நலத்துறையின் உதவியாளர் இந்தத் திட்டம் தேசிய மகப்பேறு திட்டத்தோடு இணைத்து விடப்படும் என்று அறிவித்து இருக்கிறார். அதாவது, மகப்பேறு நல உதவிகள் எல்லாமே மருத்துவமனையில் பிரசவம் நடப்பதை நிபந்தனையாக முன்வைக்கின்றன. இது தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, இதை சாக்காக வைத்து ஜனனி திட்டம் விரைவில் குப்பைக்குப் போகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கடைசியாக, ஆதார் இனி எல்லாருக்கும் கட்டாயமாக ஆக்கப் படும். சத்துணவு, மகப்பேறு, ஜனனி என்று எல்லாமுமே ஆதாரில் ஐக்கியமாகும். இதை ஊழலை ஒழிக்கிறோம் என்கிற பேரில்தான்  செய்கிறார்கள், ஆனால் இந்தத் திட்டங்களில் தனிமனித அடையாளத்தில் ஃபிராடு நடக்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை. விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி சும்மா ஆதாரை எல்லா இடங்களிலும் பரவி விரவி இருக்க செய்ய வேண்டும் என்பதே நோக்கமாகத் தெரிகிறது. ஆதார் தன்னிச்சையான விஷயம் என்றால் சத்துணவு திட்டங்களில் எல்லாம் ஏன் இதனை கட்டாயமாக்க வேண்டும் என்கிற கேள்வி வருகிறது. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் மேல் எந்த மரியாதையும் இருப்பதாகத் தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் அதைப் பெரிதும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

இந்த உதாரணங்கள் மத்திய அரசு சிறுவர்களை மோசமாக நடத்துவதை வெளிச்சம் காட்டுகின்றன. ‘ஸப்கா ஸாத் ஸப்கா விகாஸ்’ என்பதில் சிறுவர்கள் சேர்த்தி இல்லாதது மாதிரி தெரிகிறது. நிதி அமைச்சகத்தில் பணி புரியும் ஒரு மூத்த அதிகாரியை இந்த பட்ஜெட் வெட்டுக்கள் பற்றி கேட்டதற்கு, இவை எல்லாம் அவசர கதியில் யோசிக்காமல் செய்யப்பட்டவை என்றும் தனியாக சிந்தித்து இவற்றின் விளைவுகள் பற்றி எல்லாம் ஆராயாமல் நடந்தவை என்றும் குறிப்பிட்டார். அதாவது சிறுவர் நலம் எவ்வளவு சுலபமாக ஓரம் கட்டப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது.

கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னவென்றால், சில மாநில அரசுகள் இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டாமல் செயல்படுகின்றன. தமிழ் நாடு, ஒரிஸா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் தாங்களே சுயமாக மகப்பேறு திட்டங்களை கொண்டு வந்து தங்கள் மாநில நிதியிலேயே இவற்றை செயல்படுத்துகின்றன. இவர்கள் மத்திய அரசின் நிதிக்கு காத்திருக்கவில்லை. ஆயினும், மத்திய அரசின் அக்கறையின்மை கூடிய விரைவில் மாநில அரசுகளையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது  இந்தியாவின் சிறுவர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த தேசத்துக்கே பாதிப்புகளை உண்டாக்கப் போகிறது.

(ழான் த்ரே, புகழ் பெற்ற பொருளாதார அறிஞர். முன்னேற்றப் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளை நிறைய மேற்கொள்கிறார். நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.)