.
(25th March 2018)
மைசூரில் ஒரு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடுகையில் ஒரு மாணவி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை.
'என்சிசி பயிற்சியாளர் சி சான்றிதழ் தேர்வில் தேறி விட்டால் அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்கும்?' என்று அந்தப் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு ராகுல் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லி இருக்கிறார்.
இது சர்ச்சையாகி விட்டிருக்கிறது. இதில் ராகுலை விமர்சித்து பாஜக தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் என்சிசி பற்றி பிரதமர் மோடி பேசிய ஒரு பேச்சை பதிவிட்டு 'இதோ மோடியிடம் என்சிசி பற்றி கேட்டு தெரிந்து கொள்!' என்று கிண்டல் அடித்து இருக்கிறது.
மோடியின் அந்தப் பேச்சு என்ன என்று பார்த்தால் என்சிசி இயக்க மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு அது. அதாவது பிரதமராக, அதிகாரபூர்வமாக பேசிய பேச்சு. அந்த நிகழ்ச்சி பற்றி அவருக்கு முன்னமே தெரிந்திருக்கும். நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரதமரின் அலுவலகத்தில் அவர் உதவியாளர்கள் தகவல்கள் திரட்டி ஒரு பேச்சை தயாரித்து வைத்திருப்பார்கள். அதில் இருந்துதான் மோடி குறிப்புகள் எடுத்து பேசி இருந்திருப்பார். அதில் பெரிய திறமை இல்லை.
ஆனால் ராகுல் அந்த மாதிரி ஒரு கேள்வி அந்த மாணவி கேட்பார் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே இதில் ராகுல் மேல் தவறு காண இடமில்லை. அதுவுமின்றி கேள்வி கேட்ட உடனே 'எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. ஆகவே பதில் அளிக்க இயலவில்லை,' என்று அவர் சொன்னது பாராட்டத் தக்கது. எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.
இதற்கு முன்பு இதே மாதிரி வேறு ஒரு மாணவிகள் கூட்டத்தில் மோடி கலந்து கொண்ட போது ஒரு மாணவி உலகம் வெப்பமயமாதல் குறித்து ஒரு கேள்வி கேட்டார். அப்போது மோடி சம்பந்தமே இல்லாமல் ஒரு பதில் சொன்னார். அப்போது உண்மையிலேயே மோடிக்கு நேர்மை இருந்திருந்தால் 'எனக்குத் தெரியாது!' என்று சொல்லி இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
இந்த விஷயத்தில் பாஜக எதிர்பார்ப்பது மாதிரி உண்மையிலேயே மோடியை ராகுலுடன் ஒப்பிட வேண்டுமானால் பிரதமர் ஒரு நிருபர் கூட்டம் நடத்த வேண்டும். முன்னமே தயாரிக்கப் பட்ட கேள்விகள் இல்லாமல் அந்தக் கூட்டத்தில் நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் டாண் டாண் என்று திறமையாக பதில் சொன்னால் உண்மையிலே அவர் அறிவாளி என்று ஒப்புக் கொள்ளலாம்.
பி. கு.: தான் பிரதமரான நாள் முதல் இன்று வரை நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட மோடி அப்படி ஒரு நிருபர் கூட்டத்தை கூட்டவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

No comments:
Post a Comment