Saturday 1 August 2015

சசி பெருமாள்


மதுவிலக்குக்கு ஆதரவாக போராடிய சசி பெருமாள் இறந்திருப்பது மதுவிலக்கு ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது. அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா என்கிற அளவுக்கு பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. தமிழகத்தில் நிலவும் அதீத சூழலால் உண்மை என்ன என்பது கடைசி வரை நமக்கு தெரியாமலே போகும் வாய்ப்புகள்தான் இருக்கின்றன.


அது ஒரு புறம் இருக்க சசி பெருமாள் மொபைல் டவர் மேல் ஏறி போராடப் போவது அதிகாரிகளுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. அவர் அந்தப் போராட்டத்துக்கு அனுமதி வாங்கினாரா, அல்லது வாங்கவாவது முயற்சித்தாரா என்பதும் தெரியவில்லை. அவரை ‘காந்தியவாதி’ என்று விளிக்கின்றனர். சொல்லாமல் கொள்ளாமல் தீவிரமான போராட்டங்களை காந்தி என்றுமே மேற்கொண்டதில்லை. முதலில் அரசுக்கு கடிதங்கள், petitionகள், அரசுடன் பேச்சுவார்த்தைகள், பின்னர் நீதிமன்றம் மூலமான முயற்சிகள், பின்னர் அதுவும் பலிக்காமல் போனால்தான் போராட்டம் என்பது அவரின் template ஆகவே இருந்தது. அதுவும் அந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு, இங்கே, இந்த நாளில் போராட்டம் நடக்கப் போகிறது, இத்தனை பேர் வரை கலந்து கொள்ளப் போகிறோம், போராட்டத்தின் வடிவம் இது என்பதை எல்லாம் தெளிவாக விளக்கி, அனுமதி கிடைத்தால் சட்டபூர்வ போராட்டம் அதுவும் கிடைக்காமல் போனால்தான் சட்ட மீறல் போராட்டம் என்கிற ஒரு systematic approachஐ காந்தி எப்போதுமே பின்பற்றினார். ‘காந்தியவாதியான’ சசி பெருமாள் இதை எல்லாம் செய்தாரா என்று தெரியவில்லை. அவரின் உதவியாளரின் பேட்டியின் படி பார்த்தால் அவர் தீக்குளிக்கும், அல்லது அப்படி மிரட்டி அதிகாரிகளுக்கு  அழுத்தம் கொடுக்கும் எண்ணத்தோடுதான் சென்றிருக்கிறார் என்று தெரிகிறது. இது காந்திய வழியே அல்ல. இன்னும் சொல்லப் போனால் plain blackmail. இதைக் கேட்டால் காந்தி மிகவும் முகம் சுளித்திருப்பார்.


தவிர, மதுவிலக்கு என்கிற ஒரு மிக முக்கியமான விஷயத்தை சும்மா டவர் மேல் ஏறி தீக்குளிப்பு என்கிற மாதிரி பயமுறுத்தி எல்லாம் கொண்டு வர முடியுமா என்பது தெரியவில்லை. இந்தியாவில் நாகாலாந்து, மணிப்பூர், குஜராத், லக்ஷத்வீப் போன்ற இடங்களில் மட்டுமே பூரண மதுவிலக்கு அமுலில் இருக்கிறது. குஜராத் போன்ற இடங்களில் கூட அதனை அமுல்படுத்த பெரிய முயற்சிகள் எல்லாம் அரசுகளால் எடுக்கப் படுவதில்லை. உலகெங்கிலும் தீவிரமான தண்டனைகளை வழங்கும், ஜனநாயகம் இல்லாத, இஸ்லாமிய தேசங்கள் தவிர பிற எந்த இடத்திலும் மதுவிலக்கு அமுலில் இல்லை, அல்லது அமுல்படுத்த முயற்சித்த சமயங்களில் பெரும் தோல்விகளையே சந்தித்திருக்கிறது.


‘மது அரக்கன்’ என்று அழைக்கப் படும் பிரச்சனையை அணுகுவதற்கு பெரும் எண்ணிக்கையிலான போதை விடுதலை மையங்கள் மற்றும் அது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும்தான் தேவை என்று நான் நிறைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். கூடவே விளிம்பு நிலை மக்கள் மதுவில் வீழ்வதற்கு காரணமாக இங்கே இருக்கும் சமூக அவலங்களை களையும் முயற்சிகளையும் எடுக்க வேண்டும். மேலும் நிறையப் பேர் மதுவுக்கு அடிமையாக இருப்பதற்கு clinical depression, post traumatic disorder, stress disorder போன்ற உளவியல் நோய்கள் காரணமாக இருக்கின்றன. இவற்றை கண்டுபிடித்து மருத்துவம் கொடுத்தாலே அவர்களை மதுவில் இருந்து விடுவிக்கலாம். இந்த மாதிரி எந்த முயற்சியும் எடுக்காமல் மதுவிலக்கு கொண்டு வருவது இப்போது இருப்பதை விட நிலைமையை இன்னும் மோசமாக்கும்.


மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் சசி பெருமாள் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காந்தி மேல் கொண்ட கண்மூடித்தனமான பற்றால் அவர் மதுவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம். இப்போது நேர்ந்த அந்த துர்மரணத்தாலும் அதற்கு கிடைக்கும் விளம்பரத்தாலும் தியாகியாகக்கூட  போற்றப் படலாம். ஆனால் இந்த மாதிரி சிந்தனைகளை ஊக்குவிப்பது பெரும் தீங்கில் நம்மை கொண்டு விடும் என்று நினைக்கிறேன். எனவே சசி பெருமாளை தியாகியாக ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஏற்கெனெவே மூன்று நான்கு பேர் மொபைல் டவர் மேல் ஏறி இருக்கிறார்கள். இன்னும் சிலர் பெட்ரோல் கேனை தூக்கிக் கொண்டு கிளம்பக் கூடும். இவற்றை எல்லாம் காந்தியப் போராட்டம் என்று நம்பி நாமும் கை தட்டி, நிதி உதவி கொடுத்து ஊக்குவிக்கக் கூடும்.


இவற்றால் எல்லாம் மதுப் பிரச்சனை தீராவே தீராது என்று உறுதியாக நம்புகிறேன். உணர்ச்சி வசப்படுபவர்களால் மதுப் பிரச்சனை தீர்க்கப் படவே முடியாது. அதற்கு முதலில் சசி பெருமாள் தலைக்கு பின்னால் உள்ள ஒளி வட்டத்தை கழற்றி விட்டு அவர் சீடர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும். மது கொள்முதலையும் வியாபாரத்தையும் தனியார் வசம் விட்டு விட்டு மதுவை விட்டு அரசையும் அரசியல் கட்சிகளையும் எவ்வளவு தூரம் வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் வைக்க வேண்டும். அதற்குப் பின்னர் மதுவின் பின்னால் உள்ள சமூகப் பிரச்சனைகளை களைய அரசை நெருக்க வேண்டும். நமக்கு தெரிந்த மதுவுக்கு அடிமையான ஆட்களுக்கு உளவியல் ரீதியான ட்ரீட்மென்ட் கொடுக்க முயல வேண்டும். கடைசியாக, சமூக ரீதியாக விளிம்பு நிலை மக்கள் படும் discriminationகளை அறிந்து அதனை களைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். (இதனைப் பற்றி ஒரு தனி பதிவு பின்னர் எழுதுகிறேன்.)


இந்த மாதிரி இல்லாமல் போகிறவர் வருகிறவர் எல்லாரையும் காந்தியவாதி என்று சொல்லிக் கொண்டு இருந்தால் காந்தியை அவமதிப்பதோடு இல்லாமல் பிரச்சனையும் மோசமாக்குவதற்கும் சேர்த்து நாம் உதவுகிறோம் என்பது மட்டும் நிச்சயம்.

மதுவிலக்கு பற்றிய என் முந்தைய பதிவை படிக்க இங்கே சுட்டுங்கள்:
http://goo.gl/pS66OJ