Saturday 23 June 2018

எட்டு வழிச் சாலை

எட்டு வழிச் சாலை பற்றிய விவாதங்களை பார்க்கும் போது நான் இங்கிலாந்தில் இருந்த போது நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

நாங்கள் தெற்கு விம்பிள்டனில் வசித்து வந்தோம். அது அமைதியான, ஆரவாரமில்லாத ஒரு பகுதி. அங்கே ரயில் நிலையமே வெறிச்சோடித்தான் இருக்கும். அதனருகில் ஒரு எட்டு அடுக்கு மால் ஒன்று கட்டும் திட்டத்தை விம்பிள்டன் கவுன்சில் கொண்டு வந்தது. விம்பிள்டன் மொத்தமுமே எடுத்தால் கூட மூன்று மாடிக்கு மேல் எந்தக் கட்டிடமும் பார்க்க முடியாது. அந்த மால் தெற்கு விம்பிள்டனின் அமைதியை, அழகை கெடுத்து விடும் என்றும் அந்தப் பகுதியில் டிராஃபிக்கை அதிகரித்து விடும் என்றும் சர்ச்சை எழுந்தது. அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்கள். அதில் பெரும்பாலோர் மால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் பாத் ஸ்பா எனும் ஊரில் வேலை செய்து வந்தேன். அங்கே என் அலுவலகம் போகும் தெருவில் இருந்த மரம் ஒன்று வேர் பரப்பியதில் அருகே இருந்த ஒரு மியூசியத்தில் அஸ்திவாரம் பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்தது. ஆகவே அந்த மரத்தை வெட்டி விட லோக்கல் கவுன்சில் முடிவெடுத்தது. அதற்கு ஒரு மாதம் கழித்து ஒரு தேதி குறித்து அந்த செய்தியை ஒரு போர்டில் அச்சடித்து அந்த மரத்தில் மாட்டி விட்டார்கள். குறித்த தேதியில் அந்த மரம் வெட்டப்படும் என்றும், அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு தொலைபேசி எண்ணும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஒருவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு அந்த மரத்தை தன் இல்லத்து தோட்டத்தில் தன் செலவிலேயே நட்டுக் கொள்வதாக கூறி விடவே, வெட்டும் திட்டம் கைவிடப்பட்டது. மரத்தை பெயர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் ஒதுக்கப் பட்டது. அன்று பந்தல் போட்டு கேக், ஷாம்பேன் எல்லாம் போகிற வருகிறவர்களுக்கு கொடுத்தார்கள். (நானும் போயிருந்தேன்.) மரத்தை சுற்றி ஐந்து அடிக்கு வட்டமாக வெட்டி அதனை ஆக்டொபஸ் மாதிரி ஒரு இயந்திரத்தால் அப்படியே பெயர்த்து டிரக் ஒன்றில் படுக்க வைத்து விட்டார்கள். பொதுமக்களின் பலத்த கரவொலியோடு அந்த மரம் தன் புதிய வீட்டை நோக்கி பயணித்தது.

எட்டு வழிச்சாலை தேவையா, இல்லையா அல்லது அதற்கு ஆகும் பணவிலை, சமூக விலை, சுற்றுச்சூழல் விலை இவையெல்லாம் அதனால் வரும் பலனுக்கு ஈடாகுமா என்பதெல்லாம் தனிக் கேள்விகள். நான் படித்துப் பார்த்த வரை அந்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. அரசின் Project Feasibility Report எனப்படும் தகவல் அறிக்கையே கூட முழுமையாக, ஆழ்ந்த ஆராய்ச்சியில் தயாரிக்கப் பட்டதாக தெரியவில்லை. பழைய வேறு ரிப்போர்ட்களில் இருந்து நிறைய பகுதிகள் காபி பேஸ்ட் செய்தது மாதிரிதான் இருக்கிறது. காடுகள் அழிக்கப்படும், மலைகள் உடைக்கப்படும், விளைநிலங்கள் அழிபடும், ஏரிகள் மூடப்படும் ஒரு மாபெரும் ப்ராஜக்ட் பற்றிய முழுமையான தகவலை மக்களுக்கு அளிக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் கடமை. அந்த ரிப்போர்ட்டில் உள்ள குழப்பங்கள் பற்றிய தெளிவுகளை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நிலக்கையகப் படுத்தும் சட்டத்திலேயே இந்த மாதிரி திட்டங்களுக்கு Impact Assessment என்று ஒன்று நடத்த வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. அதாவது இந்தத்திட்டத்தால் நிகழும் சமூகத் தாக்கம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இது என்னவென்றால், நிலம் உள்ளவர்களுக்கு இழப்பீடு கிடைத்து விடும். ஆனால் நிலம் அற்ற, ஆனால் அந்தப் பகுதிகளை நம்பி இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள்தான் மெஜாரிட்டி. அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசிடம் உள்ள தீர்வு என்ன? அங்கே இருக்கும் வரலாற்று சின்னங்கள், வழிபாட்டு தலங்கள், காடுகளை அண்டி வாழும் பழங்குடியினர் நிலை என்ன? அந்த Impact Assessment கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் இவை.

உதாரணத்துக்கு, அந்த எட்டு வழிச்சாலை அண்ணாமலையார் கோயில் வழி போக வேண்டும் என்றாலோ ரமணாசிரமம் வழி போக வேண்டும் என்றாலோ அந்தக் கோயில் தகர்க்கப் பட வேண்டி இருக்கும். அப்படி நடப்பதற்கு நம்மில் யாராவது ஒப்புக் கொள்வோமா? வளர்ச்சித் திட்டத்துக்குத்தானே கோயிலை தாரை வார்க்கிறோம் என்று நாம் யோசிப்போமா? அது நடக்கவே நடக்காது இல்லையா? அந்தக் கோயிலை சுற்றிக் கொண்டு போகும் படிதான் சாலையை கட்டமைப்போம். இதே மாதிரி அண்ணாமலை கோயிலை விட பழமையான அல்லது உணர்வுபூர்வமான ஒரு வழிபாட்டுத்தலம் திட்டப்பகுதியில் வாழும் ஒரு பழங்குடியினருக்கு இருக்கக் கூடும். அந்தத் தலம் மட்டுமே அவர்கள் மதத்தின் திருத்தலமாக இருக்கலாம். அப்போது அது தகர்க்கப்படும் பட்சத்தில் அவர்களின் வாழ்வியலே உடைபடலாம். (ஒடிசாவில் இப்படி நடந்திருக்கிறது).

அதே போல அந்த கிராமங்கள் அழிபடும் போது அங்கே உள்ள நிலமற்றோர் எங்கே குடிபெயருவார்கள்? அவர்கள் பல்லாயிரக்கணக்கில் அருகில் உள்ள நகரங்களுக்கு குடிபெயர்வார்கள். அப்போது அங்கே புதிய குப்பங்கள், பிளாட்பாரக் குடியிருப்புகள் உருவாகும். அவற்றின் பாதிப்பு அந்த நகரத்தில் எப்படி இருக்கும். அதனால் அந்த நகரத்தின் நிர்வாகத்துக்கு ஆகும் செலவுகள், பாதிப்புகள் என்னென்ன? (இந்த செலவும் ப்ராஜக்ட் திட்ட செலவில் சேர்க்கப் படவேண்டும்.)

இதையெல்லாம் இந்த Impact Assessment ஆய்வு வெளிக்கொணர வேண்டும். சுதந்திர இந்தியா துவங்கியதில் இருந்து அணைக்கட்டுகள், அரசுத் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்காக இடம்பெயர்க்கப் பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு கோடியைத் தாண்டும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இவர்கள் எங்கே உள்ளார்கள். என்ன செயகிறார்கள், அவர்கள் மறுகுடியிருப்புக்கு நம் அரசுகள் செய்தது என்ன என்பதற்கான எந்தத் தகவலும் தெளிவாக இல்லை. ஒரு தேசத்தில் இருந்து போர், கலவரம் காரணமாக வேறு தேசத்துக்கு புகலிடம் தேடுவோருக்கு அகதிகள் (refugees) என்று பெயர். நம் ஊரில் உள்தேசத்திலேயே இரண்டு கோடி அகதிகள் அட்ரஸ் இல்லாமல் உள்ளனர். வெளிதேசத்து அகதிகளுக்காக ஐநா சபை முதற்கொண்டு அம்னெஸ்டி இன்டர்நெஷனல் வரை வரிந்து கட்டிக் கொண்டு வரும் அமைப்புகள் உள்ளன. உள்நாட்டு அகதிகளுக்காக இந்த மாதிரி யாருமே இல்லை.

இந்தப் பிரச்சனைகளால்தான் முந்தைய மத்திய அரசு இந்த Impact Assessmentஐ முக்கிய தேவையாக வைத்து சட்டத்திருத்தம் செய்தது. புதிய பாஜக அரசு பதவி ஏற்றதும் முதல் வேலையாக இந்த பாதிப்பு ஆய்வு தேவையை நிலக்கையகப் படுத்தும் சட்டத்தில் இருந்து நீக்க முயன்றது. ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பாலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததாலும் அந்த சட்டத்திருத்தம் கைவிடப்பட்டது. இது பற்றி நான் ஒரு பதிவு எழுதினேன். ++

இது தவிர இந்தத்திட்டத்துக்கு வரும் எதிர்ப்புகளை இந்த அரசு அணுகும் விதமும் கவலையளிக்கிறது. சீனாவில் கட்டமைப்பு திட்டங்களுக்கு வரும் எதிர்ப்புகளை அந்த அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பது பற்றி முன்னர் ஒரு முறை எழுதி இருந்தேன். அது சீன அரசு; அங்கே ஜனநாயகம் எல்லாம் கிடையாது. அனால் இது ஜனநாயக நாடு. இங்கே இந்த அரசு நடந்து கொள்ளும் விதம் திட்டம் பற்றிய விவாதம் என்று ஒன்று எழுவதையே இவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இத்திட்டம் நல்லதாக, பயனுள்ளதாகவே கூட இருக்கலாம். ஆனால் இது மக்கள் மேல் திணிக்கப்படக் கூடாது. ஒரு நல்ல ஜனநாயக அரசில் அரசே இதற்கு வரும் எதிர்வாதங்களுக்கு தளம் அமைத்து அந்த விவாதம் ஆரோக்கியமாக நடைபெற உதவ வேண்டும். இந்த திட்டம் மக்களுக்காகவே என்றால், இந்த திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகாது என்றால், இதனால் இடம் பெயர்க்கப் படும் மக்களுக்கு போதிய மறு வாழ்வாதாரம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது என்றால் அதனை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த பிரச்சாரம் மிரட்டல், கைதுகள் எல்லாம் இல்லாத ஒரு அமைதியான சூழலில் இடம் பெற வேண்டும். போராட்டம் செய்பவர்கள் எல்லாருமே சமூக விரோதிகள் என்று பிம்பங்கள் கட்டமைக்கப்படும் சூழலில் இந்த விவாதம் நடைபெறுவது ஆபத்தானது. அது இந்த அரசின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

கடைசியாக, ‘இதுவரை போடப்பட்ட சாலைகள் எல்லாமே காடுகளை அழித்துப் போட்டதுதானே? சென்னையே காடுகளின் சமாதியில்தான் அமைக்கப் பட்டிருக்கிறது. அதெல்லாம் ஓகே, ஆனால் பசுமை வழிச் சாலை மட்டும் கூடாதா?’

என்கிற மாதிரி வாதங்கள் நிறைய வருகின்றன.

நாம் பரிணாம வளர்ச்சி அடைந்ததில் இருந்து மானுட நாகரிகமே காடுகளின் சமாதிகளில்தான் கட்டமைக்கப் பட்டிருந்தது. அதற்குக் காரணம் நமக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியோ, காடுகளின் முக்கியத்துவம் பற்றியோ, உணவு- மற்றும் உயிரின-சங்கிலிகள் பற்றியோ எந்த விழிப்புணர்வும் அப்போது இருக்கவில்லை. இன்று நாம் புரிந்து வைத்திருக்கும் Environmentalism பற்றிய சிந்தனாவாதங்களே எழுபதுகளில்தான் உருப்பெற ஆரம்பித்தன. அது புதிய நூற்றாண்டில் தீவிரமாக அரசுகளால் நடைமுறையில் பின்பற்ற ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. Climate Change எனப்படும் பூமி வெப்பமயமாவதின் ஆபத்து எல்லாருக்கும் இப்போது தெரிந்து விட்டது.

டிரம்ப் மாதிரி ஓரிரு அறிவிலி தலைவர்கள் தவிர மற்ற உலக அரசியல்வாதிகள் அனைவருமே இப்போது இதனைப் புரிந்து கொண்டு விட்டார்கள். இதனால்தான் உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேசத்துக்கு தேசம் தனித்தனியாக இலக்கு வைத்து அமைந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்து இட்டிருக்கிறது. அமெரிக்காவே இதில் இருந்து விலகிய பின்னரும் கூட ‘இந்தியா தன் இலக்கை நோக்கிப் பயணிக்கும்,’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்து அப்போதே உடனடியாக அறிக்கை வெளியிட்டார்.

எனவே அப்போது செய்தோமே, இப்போது செய்யக் கூடாதா என்பதே அர்த்தமற்ற கேள்வி. அப்போது மாறி மாறி போர்கள் தொடுத்துக் கொண்டிருந்தோம், பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தோம், சில சாதியினரை ஊரை விட்டு விலக்கி வைத்திருந்தோம், இவையெல்லாம் அசிங்கம் என்று புரிந்து கொண்டு மாற முயற்சி செய்வது மாதிரி இதையும் புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு இல்லாத வகையில் வளர்ச்சிகள் கொண்டு வரவேண்டும் என்பது புதிய உலகத்தின் புதிய விதிமுறைகள். அதிலும் இந்த Climate Change பெரிதும் பாதிப்பது இந்தியா மாதிரி வளரும் நாடுகளைத்தான். 2015ல் நடந்த சென்னை வெள்ளம் கூட சுற்றுச்சூழல் பாதிப்பின் விளைவுதான்.

சரி, அப்படி என்றால் எப்படித்தான் வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் காண்பது என்றால் இன்று சுற்றுச்சூழலை பாதிக்காமல், அல்லது மிகச்சிறிய அளவிலான பாதிப்புகளை மட்டுமே வைத்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. அவற்றை Sustainable Development என்று அழைக்கிறார்கள். அவை ஓரளவுக்கு அதிக செலவைக் கொடுத்தாலும் நீண்ட பலனை அளிக்கிறது. இந்தத் தொழில் நுட்பங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன. இதில் தொடர்ந்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நாம் கொஞ்சம் முயன்றாலே இவற்றைப் பின்பற்றி கட்டமைப்புகளை செயலாக்க முடியும்.

ஆனால், இந்த மாதிரி எல்லாம் செய்வதற்கு சமூக அக்கறை, பன்னாட்டு வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவு, ஜனநாயக முதிர்ச்சி இவையெல்லாம் தேவைப்படும். ‘இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்!’ என்கிற சிந்தனாவாதத்தில் தலைவர்கள் உழலும் நிலையில் இவையெல்லாம் சாத்தியப்படாது.

Friday 8 June 2018

காலா





(No spoilers - கதையின் முக்கிய திருப்பங்கள் விளக்கப் படவில்லை.)
.
.
தொண்ணூறுகளின் இறுதியில் நான் படித்தவைகளில் அருந்ததி ராய் எழுதிய The Greater Common Good முக்கியமான புத்தகம். இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்காக கட்டாயமாக இடம் பெயர்க்கப் படும் விளிம்பு நிலை மக்களின் அவலம் பற்றி உணர்வு பூர்வமாக பேசிய புத்தகம். மாபெரும் அணைக்கட்டுத் திட்டங்கள், கனிமச் சுரங்கங்கள், நகரங்களில் எழுச்சி கொள்ளும் அபார்ட்மெண்ட் தீவுகள் பற்றிய என் மதிப்பீடுகளை கேள்விக்கு உள்ளாக்கிய புத்தகம் அது. அதன் பின் இந்தப் பிரச்னை பற்றி நிறைய புத்தகங்கள் படித்ததும் நகரத்தின் மத்தியில் கண்களுக்கு ‘உறுத்தலாக’ இருக்கும் குப்பங்கள் பற்றி மோசமாக யோசித்ததே இல்லை. ஆனால் இந்தியாவின் இந்த முக்கியப் பிரச்னை பற்றி ஏன் படங்கள் வருவதில்லை என்று யோசித்ததுண்டு.
அதற்குப் பின் பாலிவுட்டில் நிறைய படங்கள் வந்து விட்டன. ஆனால் காலா அதனை தெளிவாக, வெளிப்படையாக பேசுகிறது. வளர்ச்சி எனும் சொல் நம்மை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரை, எப்படி ஏமாற்றி மயக்குகிறது என்று பேசுகிறது. அழுக்கான, நாறும் குப்பங்கள்...அதற்குப் பதில் அழகான சுத்தமான அடுக்கு மாடி கட்டிடங்கள், நட்ட நடுவே ஒரு கோல்ஃப் மைதானம். கேட்கவே எவ்வளவு ஆசையாக இருக்கிறது? நாமும் எப்போதுதான் சிங்கப்பூர் ஆக மாறுவது?
இந்த சிந்தனைக்குப் பின் உள்ள அரசியல்வாத, நில மாஃபியா சூழ்ச்சிகள், அதில் பகடைக்காய் ஆகும் விளிம்பு நிலை மக்கள் பற்றியெல்லாம் படம் விவாதிக்கிறது. கூடவே அவர்கள் எப்படி கிரிமினல்களாகவே பார்க்கப் படுகிறார்கள். அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள் எப்படி சமூக விரோத செயல்களாக சுலபமாக பிம்பப் படுத்தப் படுகிறது என்று காட்டுகிறது.
இதனை ரஞ்சித் தன் தலித் அரசியல் பார்வையில் வழக்கம் போல நிறைய குறியீடுகளாக மாற்றுகிறார். பிள்ளையார் சிலை கடலில் விழுவது படத்தின் முக்கிய திருப்பதுடன் இணைக்கப் பட்டிருப்பது. தாராவியை ஆட்டையைப் போட முயலும் கம்பெனியின் பெயர் ‘மனு ரியல்ட்டர்ஸ்’. காலா வாழும் ஏரியா ‘தண்டகாரண்ய நகர்’. காலா, கருத்தவன், ராவணன். அரசியல் தாதா ஹரிதாஸ் அப்யங்கர், சிவத்தவன், ராமன். கதைப்படி ராமன்தானே ஜெயிக்க வேண்டும்? ஆனால் ராவணனை ஜெயிப்பது அத்தனை எளிதல்லவே? பத்துத் தலைகளில் ஒவ்வொன்றை வெட்ட வெட்ட இன்னொரு தலை முளைக்கும் சக்தி கொண்டவன். அப்படிப்பட்ட ‘தீய சக்தியை’ ராமன் எப்படி எதிர் கொண்டு வீழ்த்த முடியும்?
மணி ரத்னத்தின் ‘ராவணன்’ படம் பார்த்தபோது ராமாயணக் குறியீடுகளை இவ்வளவு மோசமாக பயன்படுத்த முடியாது என்று நினைத்தேன். ஆனால் காலாவில் ராமாயணம் சரியாக பயன்படுத்தப் படுகிறது. இங்கே அது வேறு ஒரு பரிமாணம் கொள்கிறது. நவீன நிலக் கையகப் படுத்தும் அரசியலில், தலித் பிரச்சனைகளில் விளிம்பு நிலை வாழ்வியலில் ராமாயணத்தை ரஞ்சித் பெரும் திறமையுடன் பதிக்கிறார். ராமாயணம் பற்றிய நம் பிம்பங்களை, கருப்பு/சிவப்பு பற்றிய நம் மாயைகளை தகர்த்தெறிகிறார்.
என்ன, இவற்றை எல்லாம் செய்வதற்கு ரஜினி எனும் பெரிய மேடை தேவைப்பட்டிருக்கிறது. அவர் படத்தில் இல்லாவிடில் ஒரு சிறிய கலைப்படமாக, அல்லது வெறும் ஆவணப் படமாக காலா மாறி இருந்திருக்கும். ரஜினி என்னும் மந்திர நடிகன் சேர்ந்ததும் வேறு ஒரு உருக் கொள்கிறது. காலாவை தன் இருப்பால் ஒரு மாஸ் படமாக ரஜினி மாற்றுகிறார். அவருக்காக சேர்த்திருக்கும் பகுதிகள் பெரும் சிலிர்ப்பை உருவாக்குகின்றன. குறிப்பாக மேம்பாலத்தில் நடக்கும் சண்டை மற்றும் காவல் நிலையக் காட்சி இரண்டும் ரஜினியின் மாஸ் இன்னும் மங்கவில்லை என்று காட்டுகிறது.  67 வயதில் வேறு எந்த நடிகராலும் நிகழ்த்த முடியாத ஒரு ஆச்சரியம் இது. கபாலியில் ரஜினியின் பிம்பத்தையும் தன் தீவிர அரசியலையும் இணைத்து கொண்டு செல்வதில் ரஞ்சித்துக்கு சில சவால்கள் இருந்தன. காலாவில் அந்த சவால்கள் சரி செய்யப்பட்டு விட்டன.
படம் முடிந்ததும் நிலப்பிரபுத்துவம், வளர்ச்சி எனும் மாயகோஷம், சிங்கார நகரங்கள் எனும் கோஷங்கள், கருப்பு/சிவப்பு, இவை பற்றியெல்லாம் கேள்விகள், விவாதங்கள் உங்கள் மனதில் எழுந்தால் படத்தின் நோக்கம் வெற்றி பெற்று விட்டது என்று அர்த்தம். அருந்ததி ராய் படத்தைப் பார்த்தால் நிறையவே சிலாகிப்பார்.