Thursday 11 April 2019

தேச பக்தர்களின் கடமை

இந்தியாவுக்கு 2019ல் நடைபெறும் தேர்தல் மிக முக்கியமானதாக அமையப்போகிறது. அது இரண்டு பிரதமர் வேட்பாளர்களுக்கான தேர்தல் அல்ல. இரண்டு கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் அல்ல. 

இரண்டு சிந்தனாவாதங்களுக்கு இடையேயான தேர்தல். சுதந்திரம் அடைந்த போது இந்தியா பாகிஸ்தான் இரண்டு தேசங்களும் இரண்டு தனித்த உணர்வுகளை மையமாக வைத்து தங்கள் தேசங்களை கட்டமைக்கத் துவங்கின. பாகிஸ்தான் இந்தியா மற்றும் இந்துக்கள் மீதான வெறுப்பை மையமாக வைத்து தன் பயணத்தை துவக்கியது. இந்தியா எல்லா மதத்தவரையும் இணைத்து செல்லும் அன்பை முன்வைத்து தன் பயணத்தை துவக்கியது. 

எழுபது ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் பெரும் துன்பத்தில், பொருளாதார சிக்கலில், பிற்போக்குவாதத்தில், தீவிரவாதத்தில் உழல்கிறது. இந்தியா ஜனநாயகம், படிப்பறிவு, ஐடி, பொருளாதார முன்னேற்றம் என்று முன்னேறிக்கொண்டு இருக்கிறது. 

2014 தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ‘குஜராத் மாடல்’ எனும் பிம்பத்தை முன்வைத்து பிரச்சாரத்தை நடத்தினார். பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி, வேலை வாய்ப்பு, அந்நிய முதலீடு, எல்லாரையும் அரவணைத்து முன்னேற்றம் (ஸப்கா சாத், ஸப்கா விகாஸ்) என்ற கோஷம் முன்வைக்கப் பட்டது. இந்தியாவை வல்லரசாக்கும் தலைவராக மோடி முன்னிறுத்தப் பட்டார். 

ஐந்து ஆண்டுகள் கழிந்தன. பொருளாதார முன்னேற்றம் பற்றிய விவாதத்தில் ஜிடிபி கணக்கீட்டை தனக்கு வசதியாக மாற்றிக் கொண்டதுதான் முன் நிற்கிறது. வேலைவாய்ப்பு பற்றி பேசவே மறுக்கிறது இந்த அரசு. பண மதிப்பிழப்பு ஊரக இந்தியாவில் எப்பேர்ப்பட்ட பாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது என்பது பற்றிய எந்த ஆய்வும் இந்த அரசால் மேற்கொள்ளப்படவில்லை. ஜிஎஸ்டி கொண்டு வந்ததில் சிறு குறு நிறுவனங்கள் எப்படி சிதிலமாகின என்பது பற்றி  அதிகாரபூர்வமற்ற பல்வேறு அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்திய ஃபிரன்ட்லைன் இதழில் இந்தியா முழுவதும் எப்படி இந்தத்துறையை ஜஎஸ்டி நசித்தது என்பது குறித்து விரிவான கட்டுரை வந்திருக்கிறது.

ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு இரண்டு பற்றியும் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் இருப்பது ஒன்றைக்காட்டுகிறது. மக்கள் இதனால் பட்ட அவதிகள் பற்றி தெரிந்து கொள்ளும் அக்கறை கொஞ்சம் கூட இவர்களிடம் இல்லை. அதே போல விவசாயிகள் தற்கொலை பற்றி தொடர்ந்து பதிப்பித்து வந்த அறிக்கைகளை 2016ல் நிறுத்தி விட்டிருக்கிறது இந்த அரசு.

ஆனால் தேசபக்தி பற்றி மட்டும் அலுக்காமல் எல்லாருக்கும் பாடம் எடுக்கிறார்கள். வந்தே மாதரம் பாடாமல் இருப்போர் தேச விரோதிகள். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காதவர்கள் தேச விரோதிகள். பாரத மாதாவுக்கு ஜே போடாதவர்கள் தேச விரோதிகள்.

இவையெல்லாம் உண்மையில் தேசபக்தி கிடையாது. இவையெல்லாம் ஒரு மாபெரும் நோக்கத்தை வைத்து மக்களை ஒருங்கிணைக்கும் கருவிகள் மட்டுமே. சுதந்திரப்போராட்ட காலத்தில் மக்களை ஒருங்கிணைக்க, உணர்ச்சிப்படுத்த போராட்டக்காரர்கள் பயன்படுத்திய கருவிகள் மட்டுமே இவை. அதைத்தாண்டி இவற்றுக்கு பெரிய உபயோகம் கிடையாது. 

ஆகவே, தேசபக்தி என்ற வார்த்தையில் இருக்கும் ‘பக்தி’ என்பது அந்த மண்ணின் மீதான பக்தி அல்ல. அந்த மண்ணில் வாழும் மக்களின் மீதானது. அவர்களின் நலவாழ்வின் மீதானது.  உண்மையான தேசபக்தி கொண்ட ஒரு தலைவர் அந்த அக்கறையை கொண்டிருப்பார். தன் தேசத்தில் வாழும் மக்களின் நிலைமை குறித்து மேலும் மேலும் தேர்ந்து கொள்ளும் ஆர்வத்தில், அக்கறையில்தான் இருப்பார். 

ஆனால் பிரதமர் மோடியிடம் அந்த ஆர்வம் கொஞ்சமும் இருப்பதாக தெரியவில்லை. பாரதமாதாவின் புதல்வர்கள் புதல்விகள் வேலையில்லாமல் இருக்கிறார்களா? பாரதமாதாவின் புதல்வர்கள் தேசத்தின் 85 சதவிகித பணம் செல்லாததாக ஆனவுடன் பாதிப்புக்கு உள்ளானார்களா? பாரத சமுதாயம் ஜிஎஸ்டியினால் நசிந்ததா? பாரத மாதாவின் கணக்கற்ற விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு தூரம் உண்மை? அவர்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

பாரதமாதாவின் மேல் பற்றுக்கொண்டவர் உண்மையில் இந்தக்கேள்விகளையே கேட்பார். ஆனால் இந்த எந்தக்கேள்விக்கும் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்றவர், இருக்கும் கொஞ்ச நஞ்ச தரவுகளையும் மறைப்பவர் தன் தேசத்தின் மீது பக்தி கொண்டவர் அல்ல. சொல்லப்போனால் அப்படிப்பட்டவர் தேசத்தின் முதன்மை விரோதி என்றே கருதப்பட வேண்டும்.

அதே போல உண்மையான தேசபக்தர் தன் தேசத்தின் மக்களை பிளவுபடுத்த முனைய மாட்டார். அப்படி செய்ய முயல்பவர் தேசவிரோதியாகவே இருப்பார். பாகிஸ்தானின் இன்றைய சோகமான நிலைமைக்கு யாரெல்லாம் காரணம் என்று பார்த்தால், அந்த சமூகத்தில் மதத்தை திணிக்க முயன்றவர்கள்,  பெரும்பான்மை சுன்னி அடிப்படைவாதத்தை புகுத்தியவர்கள், சிறுபான்மை இந்து மற்றும் கிறித்தவர்களை, ஷியா மற்றும் அஹமதி பிரிவினரை தனிமைப்படுத்தி ஒடுக்கியவர்கள் ஆகியோர்தான். இவர்கள் எல்லாருமே அந்த தேசத்தின் பக்தர்கள்தான். பாகிஸ்தான் மீது தேசபக்தி  மற்றும் இஸ்லாம் மீது மதப்பற்று என்ற பெயரில்தான்  அவர்கள் அத்தனை அட்டூழியத்தையும் செய்தார்கள். அந்த அட்டூழியங்கள்தான் அந்த தேசத்தின் பொருளாதாரம் நாசமாக காரணம். அது தீவிரவாதிகளின் கூடாரம் ஆகக் காரணம். இஸ்லாம் என்ற மதத்தின் மீது உலகம் முழுக்க நிறைய பேருக்கு கசப்புணர்வு வரக்காரணம். அவர்களை  பாகிஸ்தானின் தேசபக்தர்கள் என்று நாம் சொல்ல முடியுமா என்ன? பாகிஸ்தானின் முதன்மை தேச விரோதிகள்தானே அவர்கள்?

எழுபதுகளில் பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்தை துவக்கிய போது இன்னும் முப்பது ஆண்டுகளில் ‘இஸ்லாம் என்றாலே தீவிரவாதம்’ என்று உலகில் நிறைய பேர் யோசிப்பார்கள் என்று ஜியா உல் ஹக் யோசித்திருப்பாரா? பள்ளிப்பாடங்களை இஸ்லாமிய மயமாக்கிய போது, அந்தப்பாடத்திட்டத்தை துவக்கியவர்கள் பாகிஸ்தானின் அருமைகள், இஸ்லாத்தின் பெருமைகள் சிறுவர்களுக்கு தெரிய வேண்டும் என்றுதானே கருதி இருப்பார்கள். ஆனால் அந்தப் பாடத்திட்டங்கள்தானே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறக்காரணம்? 

அதேதான் இந்தியாவிலும் நடக்கிறது. இங்கே பெரும்பான்மை இந்து மதவாதம் பேசுபவர்கள், சிறுபான்மையினரை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், தலித்துகள் அவர்கள் ‘இடத்தில்’ வாயை மூடிக்கொண்டு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். பண்டைய இந்து மதத்தில்தான் உலகில் உள்ள எல்லாப்பிரச்சினைகளுக்கும் விடைகள் உள்ளன என்று நம்புபவர்கள்….

இவர்களுக்கும் பாகிஸ்தானிய ‘தேசபக்தர்களுக்கும்’ என்ன வித்தியாசம்? என்னைப்பொருத்தவரை அப்படிப்பட்ட இந்துத்துவ சிந்தனையை ஊக்குவிக்கும் கட்சியினரைப்போன்ற தேசத்துரோகிகள் இந்தியாவிலேயே கிடையாது. இந்தியாவின் கொடூரமான தேசத்துரோகிகள் இந்துத்துவ சிந்தனையாளர்கள்தான். சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்தியா கண்ட வளர்ச்சிக்கு இந்துத்துவ சிந்தனைகளை தெளிவாக ஒதுக்கி வைத்ததுதான் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கல்வியில், பொருளாதாரத்தில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் நாம் கண்ட எல்லா வளர்ச்சிகளும் மதங்களை ஒதுக்கி வைத்து மக்களை முன்னே வைத்ததால், அறிவியலை முன்னெடுத்தால், அனைத்து சாதி மதத்தினருக்கும் பிரதிநித்துவம் கொடுக்க முனைந்ததால் வந்த வளர்ச்சிகள். 

பாகிஸ்தான் இன்று பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டத்துக்கு, வெறும் மில்லியன்களுக்கு வேண்டி அமெரிக்காவிடம் கையேந்திக் கொண்டு இருப்பதற்கு காரணம் மதத்தை முன்னிறுத்தி, பெரும்பான்மைவாதம் பேசிய இஸ்லாமியவாதிகள் காரணம். அதாவது இந்துத்துவர்களின் கண்ணாடி பிம்பங்கள். இந்தியாவின் இந்துத்துவர்களுக்கும் பாகிஸ்தானின் இஸ்லாமியவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அதனால்தான் இருவரும் சதா சர்வகாலமும் ஒருவர் இன்னொருவரைப்பற்றிய நினைவிலேயே காலத்தை கழிக்கின்றனர்.

இந்த அரசு தங்களின் கொள்கை முடிவுகளால் மக்களுக்கு நிகழும் அவதிகள் பற்றிய கவலை எதுவுமின்றி இருக்கிறது. ஆகவே இந்த அரசு மக்களுக்கு எதிரானது. . 

இது ஜனநாயக அடித்தளங்களை கண்டமேனிக்கு உடைத்து முன்னேற முயற்சிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகங்களை துச்சமாக மதிக்கிறது. எனவே இந்த அரசு ஜனநாயகத்துக்கு எதிரானது.  

இது நவீன சிந்தனைகளான கருத்து சுதந்திரம், மனித உரிமைகள், மதசார்பின்மை, அறிவியல் சிந்தனாவாதம் போன்றவற்றை எள்ளி நகையாடி, போட்டு மிதிக்கிறது. எனவே இந்த அரசு முன்னேற்றத்துக்கு எதிரானது. 

இது முஸ்லிம்கள், தலித்துகள் போன்ற சிறுபான்மையினரின் உரிமைகளை தொடர்ந்து மறுக்கிறது. மாநில மொழிகளை, உரிமைகளை அவமதிக்கிறது. பெரும்பான்மை மதத்தை, மொழியை, கலாச்சாரத்தை ஒட்டு மொத்த தேசத்தின் மீது திணிக்க முயல்கிறது. எனவே இந்த அரசு சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. 

இது பொய்யான பண்டைய பெருமைகளை புகழ்கிறது. பொய்யான நிரூபணங்களற்ற பண்டைய நம்பிக்கைகளை உண்மையென மக்கள் மீது திணிக்க முயல்கிறது. எனவே இது அறிவியலுக்கு எதிரானது. 

நவீன, அறிவியல் சமூகத்துக்கு கொஞ்சமும் ஒவ்வாத அரசு இப்போதைய அரசு. அறிவியல்- சார்ந்த அணுகுமுறை (Scientific Temper), தரவுகள்-சார்ந்த கொள்கை முடிவுகள் (Empirical Approach), நவீன சிந்தனாவாதங்கள் அனைத்துக்கும் எதிரானது. வன்முறைகளை, ஒடுக்குதலை, அறிவற்ற நிலையை போற்றுவது. கேள்விகள், விமர்சனங்களை எதிர்ப்பது. பாசிச சிந்தனைகளை ஊக்குவிப்பது.

இந்த அரசும் இது ஊக்குவிக்கும் இந்துத்துவ சிந்தனைகளும் தேசத்தை அழிவுப்பாதைக்கு இட்டுசெல்ல வல்லவை. இந்திய தேசத்தை, அதன் பல்வேறு கலாச்சாரங்களை, மொழிகளை, மதங்களை, மக்களை, அவர்கள் நல்வாழ்வை துச்சமாக மதிக்கும் இந்துத்துவர்கள்தான் உண்மையான, அக்மார்க் தேசத்துரோகிகள். இவர்களை புகழும், போற்றும், ஊக்குவிக்கும் இந்த அரசு விடைபெற வேண்டும். 

சமத்துவத்தை, அமைதியை, வளர்ச்சியை, அறிவியலை மதச்சார்பின்மையை விரும்பும் இந்தியாவின் உண்மையான தேசபக்தர்கள் இந்த தேசவிரோத அரசுக்கு, பாகிஸ்தானின் கண்ணாடி பிம்பமாக இந்தியாவை மாற்ற முனையும் இந்த தேசத்துரோக அரசுக்கு ஒரு முடிவு எட்ட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடும் வாய்ப்பு இருக்கும் சிறு, குறு கட்சிகளை ஒதுக்க வேண்டும். அவர்கள் நாளைக்கு வளர்ந்து கொள்ளட்டும். தேசத்தின் வளர்ச்சி, மாட்சிமை மற்றும் எதிர்காலம் எல்லாவற்றையும் விடப்பெரிது.

இந்தியாவை உளமார நேசிக்கும் ஒவ்வொரு தேசபக்தனின் கடமை இது.

Friday 8 March 2019

பரியேறாத அம்பாள்



.
சமீபத்தில்தான் ‘பரியேறும் பெருமாள்’ பார்த்து முடிக்க முடிந்தது. படம் சொல்லும் கதை பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ காலத்தில் இருந்து சொல்லப்பட்டதுதான் என்றாலும் அப்போது ஆணவக் கொலைகள் பற்றிய செய்திகள், விவாதங்கள் இத்தனை பரவலாக வரவில்லை என்பதால் அதன் வீரியம் என்னை இந்த அளவு தாக்கவில்லை. அதுவுமின்றி இயல்பாகவே பள்ளிக்கூடக் காதல்கள் பற்றிய படங்கள் மேல் எனக்கு இருக்கும் சின்ன ஒவ்வாமை அந்தப் படத்தின் பின்னிருந்த சமூகப் பிரச்சனையை கவனிக்க முடியாமல் செய்து விட்டது.
ஆனால் பரியனிடம் அந்தப்பிரச்சனை இருக்கவில்லை. பரியன் மற்றும் ஜோ இருவரிடமும் மலர்வது காதல் என்ற அளவில் கூட இயக்குனர் மாரி செல்வராஜ் காண்பிக்கவில்லை என்பது படத்திலேயே பெருத்த ஆறுதலாக இருந்த விஷயம். ஜோ-விடம் தனக்கு இருந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில் பரியனுக்கு இருந்த பிரச்சனையை இறுதியில் அவன் விளக்குவது புரிந்து கொள்ளத்தக்க வகையிலேயே இருந்தது. கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது.
படத்தில் கருப்பியை வைத்து செய்யப்படும் குறியீடு முக்கியமானது என்று நினைக்கிறேன். பண்டைய இந்திய இலக்கியங்களில் தலித் மற்றும் நாய் ஒப்பீடுகள் பரவலாக இருக்கின்றன.++ மாரி செல்வராஜ் அதனை தெரிந்தே பயன்படுத்தி இருக்கிறார் என்று நம்புகிறேன்.
அதையும் விட என்னை மிகவும் பாதித்தது பரியனின் தந்தை பாத்திரம் வரும் காட்சிகள்தான். அவரை அறிமுகப்படுத்திய விதமாகட்டும், பின்னர் கல்லூரியில் அவர் அவமதிக்கப் படும் காட்சியாகட்டும் அவை உணர்வு-ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட இனத்தில் ஒருவராக இருப்பதே ஒரு கொடும் பிரச்சனையாக இருக்கும் பொழுது அதில் உள்ளே மேலும் ஒடுக்கப்படும் குழுவில் ஒருவராக இருப்பது எவ்வளவு பெரிய பிரச்னை என்பது முகத்தில் அறைந்தாற்போல காட்டப்படுகிறது.
படம் நெடுகவும் போராடுவது, தன் உரிமையை நிலை நாட்ட வன்முறையை கையில் எடுப்பது பற்றி பேசப்படுகிறது. ‘அவனை அப்படியே அனுப்பிட்டீங்க? அவன் வெளிய போய் திரும்ப சண்டை போடப்போறான் சார்!’ என்று அவன் ஆசிரியை முதல்வரிடம் கவலை கொள்கிறார். அதற்கு முதல்வர் ‘ரூம்ல போய் தூக்கு போட்டுக்கிட்டு சாவறத விட சண்டை போட்டுக்கிட்டு சாவட்டும்,’ என்று பதில் சொல்கிறார். படம் முடிவைத்தாண்டி தொடர்ந்து என்னை பாதித்த வரி இதுதான். ஒடுக்கப்படும் சமூகங்கள் பற்றி, போராடுதலை தீர்வாக எடுப்பது பற்றி, இயலாமையின் விளைவாக எழும் வன்முறை பற்றிய நிறைய கேள்விகளை என்னுள் இந்த வரிகள் எழுப்பின. சுய வன்முறை அல்லது சமூக வன்முறை இரண்டுதான் இருக்கும் ஆப்ஷன்களா, என்று தோன்றியது.
ஆனால் மூன்றாவது ஆப்ஷனும் அந்தக்கல்லூரி முதல்வர் வழி பேசப்படுகிறது. ‘பேய் மாதிரி படிச்சேன்,’ என்று சொல்கிறார். பரியனின் தாத்தா மூலமும் அதே வேட்கை வெளிப்படுத்தப் படுகிறது. அப்பாவை அவமானப் படுத்திவர்களை வெட்டிப் போட பரியன் உத்தேசித்துக் கொண்டு இருக்கையில் அவன் அம்மாவும் அதையே குறிப்பிடுகிறார். அதே காட்சியில் பரியன் ஆங்கிலத் தேர்வில் பாஸ் ஆகிவிட்ட சேதி வருவது முக்கியக் குறியீடாக இருக்கிறது. தன் இருத்தலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஆங்கிலம் முக்கிய மைல்கல்லாக அங்கே இருக்கிறது. சேதி கேள்விப்பட்டு அவன் கன்னத்தை கிள்ளி அம்மா ஒரு முத்தம் தருகிறார். அரிவாளை விட சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை தன் மகன் கையில் எடுத்து விட்டான் என்ற தைரியம் அங்கே வெளிப்படுகிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, சாதி, சமூகக் கட்டமைப்புகள் தாண்டியும், படம் முன்னெடுக்க விரும்பிய விவாதங்கள் தாண்டியும், என்னை பாதித்த ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் ஜோ-வின் பாத்திரம். அவளை மையமாக வைத்துதான் கதை நகர்கிறது என்றாலும் கதையின் திசையில், பேசப்படும் சமூக மாற்றத்தில் அவளுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. அவள் பரியனை காதலிக்கிறாளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள அவள் தந்தைக்கோ, குடும்பத்துக்கோ எந்த அக்கறையும் இருக்கவில்லை. பரியனும் கூட தனக்கு நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறையை, அவமதிப்பை அவளிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. அவளிடம் அதை சொன்னால், அவள் தந்தை மேல் அவளுக்கு இருக்கும் அன்பு போய் விடும் என்று பயப்படுகிறான். ஆனால் அந்த முடிவை அவள்தானே எடுத்திருக்க வேண்டும்? ஜோ தன் அப்பாவை விரும்புவதா அல்லது வெறுப்பதா என்பதை முடிவு செய்ய பரியன் யார்?
அவள் தந்தையும் கூட பரியன் மேல் தன் சமூகம் நிகழ்த்திய வன்முறை பற்றி அவளிடம் பேசுவதில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு பரியன் மேல் சாதிய வன்மம் பெரிதாக இல்லை என்பது தெரிகிறது. ஆனால் தன் குடும்ப ‘மானம்’ மற்றும், முக்கியமாக, பெண்ணின் உயிர் பற்றிய கவலை இருக்கிறது. பரியன் பற்றி வெளியே தெரிய வந்தால் தன் மகளையும் கொன்று விடுவார்கள் என்று பயப்படுகிறார். அதற்கான அறிகுறிகளும் வெளிப்படுத்தப் படுகின்றன. காதலித்ததால் வீட்டில் அடி உதை வாங்கி மயங்கிய ஒரு பெண் தூக்கில் தொங்க விடப்படுகிறாள். இன்னொரு பெண் மொட்டை அடிக்கப்பட்டு அனுப்பப்படுகிறாள். சாதிய வன்மத்தில் பெண்கள் collateral damage-ஆகவே கருதப்படுகின்றனர். ‘தங்கள் குடும்ப மானம் தன் வீட்டுப் பெண்களின் யோனியில்தான் இருப்பதாக பெற்றோர் கருதுகின்றனர்,’ என்று என் புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பேன். இங்கே சாதியும் கூட பெண்களின் யோனியில்தான் குடியிருக்கிறது. ஆனால் அது பற்றிய கருத்தியல் அவர்களுக்கு இருப்பதில்லை. அதற்கான அனுமதியும் கூட அவர்கள் கொடுக்க வேண்டியதில்லை. தங்கள் யோனியில் குடியேற்றப்பட்டிருக்கும் சாதியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பில் தாங்கள் இருக்கிறோம் என்பது கூட அவர்களுக்கு அறிவுறுத்தப் படுவதில்லை. அந்த யோனிக்கான சாவியையும் கூட ஆண்களேதான் வைத்திருக்கின்றனர்.
வக்கீலுக்குப் படிக்கலாம் என்று தன் பெண்ணுக்கு ‘அனுமதி’ அளித்த அவள் தந்தை அவள் யாருடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதில் அந்த அனுமதிக்கு எல்லையை வகுக்கிறார். தனக்கு நிகழ்ந்த வன்முறையை அவளிடம் இருந்து மறைப்பதன் மூலம் தன் தந்தை பற்றிய எந்த விதமான அபிப்ராயத்தை அவள் கொண்டிருக்க வேண்டும் என்பதை பரியன் முடிவு செய்கிறான். இந்த இரண்டிலும் அவள் முடிவோ, அவள் கருத்தோ இருவருக்குமே தேவைப்படுவதில்லை. தன்னை சுற்றி பெரும் சாதிய வன்மம் தினம் தினம் தொடர்ந்து கட்டவிழ்க்கப் பட்டு வருகிறது என்பது பற்றி அவளுக்கு தெரிவதே இல்லை என்பது போல காட்டப்படுகிறது. அது உண்மையாகவும் கூட இருக்கக் கூடும். தந்தை மற்றும் நெருங்கிய நண்பன் இருவருமே அவளை அந்த வன்மத்தில் இருந்து பாதுகாக்கவே முயல்கிறார்கள். அப்படி முயல்வதன் மூலம் மூன்று விஷயத்தை அந்த ஆண்கள் உறுதி செய்கிறார்கள்.
1) உண்மையை அறிந்து கொண்டு அதன் மூலம் தெளிவான முடிவெடுக்கும் திறமை பெண்களுக்கு கிடையாது.
2) சாதிய வன்மம் மற்றும் அது சார்ந்த வன்முறை ஆண்கள் தங்களுக்கென்று உருவாக்கி தாங்களே தொடர்ந்து கொண்டிருக்கும் அவலம். பெண்களுக்கு அது பற்றிய கவலையோ, கருத்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
3) பெண்களை சமூக அவலங்களில் இருந்து பாதுகாப்பதோ அல்லது, தேவைப்பட்டால், அந்த அவலத்தில் இருந்து ‘நீக்குவதோ’ ஆண்களின் முக்கிய கடமை.
இத்தனைக்கும் ஜோ மற்ற படங்களில் வருவது போன்ற ஒரு ‘லூசுப்பெண்’ எல்லாம் கிடையாது. நன்றாகப் படிக்கும், சட்டக்கல்லூரி சேர்ந்திருக்கும் திறமை வாய்ந்த பெண். பரியனுக்கே டியூஷன் எடுத்து அவனை பாஸ் பண்ண வைக்கிறாள். விதிவிலக்கின்றி அனைவரிடமும் அன்பு செலுத்துகிறாள். கல்மிஷமின்றி தொடர்ந்து உண்மை பேசுகிறாள். அவளுக்கு ஒரு சிறிய பிரச்னை வரும்போது அதனை எதிர்த்து நிற்கவும் செய்கிறாள். நிறைய விஷயங்களில் அவள் தன் தந்தை அல்லது பரியன் இருவரையும் விட தெளிவாகவும் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்ள முடியும் என்பதையும் காட்டுகிறாள். பரியன் கல்லூரிக்கு அழைத்து வரும் நாடகத் தந்தையிடம் அவள் மன்றாடும் காட்சி இதற்கு ஒரு முக்கிய உதாரணம்.
ஆயினும் அவளை ‘பாதுகாக்கவே’ வேண்டும் என்றுதான் அவள் சம்பந்தப்பட்ட ஆண்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர். கதையிலும் பரியன் மட்டுமே victim ஆக நமக்கு தென்படுகிறான். ஆனால் ஜோ-வும் கடும் மனத்துயருக்கு ஆளாகிறாள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, பரியன் ஏன் தன்னை விட்டு விலகி ஓட வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை. அது அவளுக்கு பெரும் துன்பத்தைக் கொடுக்கிறது. ஆனால் அது அவள் தந்தைக்கோ, பரியனுக்கோ பொருட்டாக இல்லை. பரியனின் நண்பன் மட்டுமே அதனை ஓரிரு முறை குறிப்பிட்டு ஆதங்கப் படுகிறான். சாதி வன்மத்தின் target முக்கியமாக பெண்கள் என்பது படம் பார்க்கும் நமக்கும் தெரிவதில்லை. அதன் தீர்வும் கூட அவர்களிடமேதான் இருக்கிறது என்பதும் புரிவதில்லை.
இதை வேறு வகையில் புரிந்து கொள்ள, கதையை கொஞ்சம் திருப்பி யோசித்துப் பார்ப்போம். பெண்ணை collateral damage-ஆக இரு சமூகங்களும் நினைப்பதில்லை. அவள் தந்தை மற்றும் நண்பன் இருவருமே அவளை தங்களுக்கு ‘சமமாக’ நடத்தி அவளிடம் உண்மையை பேச விழைகிறார்கள். அதற்கான ‘முதிர்ச்சி’ அவளுக்கு இருப்பதாக நம்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? நாம் இப்போது பார்க்கும் வகையிலேயே படம் இருக்காது. பெண்களுக்கு சுய முடிவு எடுக்க உரிமை இருக்கும் சமூகங்களில் சாதிய வன்முறைகளுக்கு அல்லது ஆணவக்கொலைகளுக்கு அவசியம் இருக்காது. சாதியே இருக்காது என்று சொல்ல முடியாது. படம் விவாதிக்கும் வேறு பிற பிரச்சனைகள் தொடரலாம். தொடராமல் போகலாம். அது வேறு விஷயம்.
சொல்லப்போனால் பரியனின் தந்தைக்கு நிகழும் கொடுமையும் கூட பெண்கள் பற்றிய நம் கண்ணோட்டத்தையே வெளிக்காட்டுகிறது. 'பெண்மை' என்பதை இழிவாகக் கருதும் மனப்போக்கு இருந்திராவிடில் அந்தத் தந்தைக்கு அப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
மேஜர் வயதை எட்டிய பெண்ணுக்கு தன் வாழ்வு மற்றும் தேவைகளை தானே தீர்மானித்துக் கொள்ள இயலும். ஏன் தன் கருத்தியலைக் கூட சொந்தமாக உருவாக்கிக் கொள்ள இயலும். அவளுக்கு எந்த விதமான ‘சமூகப் பாதுகாப்பும்’ ஆண்கள் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அவளை சமூகத்தின் அவலங்களில் இருந்து தள்ளி, ‘பொத்தி’ எல்லாம் வளர்க்க வேண்டியதில்லை என்று இருந்திருந்தால் காதல் சம்பந்தப்பட்ட நிறைய சாதிய வன்முறைகள் அரங்கேற மேடையே இருக்காது. சொல்லப் போனால் பெண்களைப் பாதிக்காமல் இருக்க ஆண்கள் முயற்சி செய்யும் இந்த அவலங்கள் முக்கால்வாசி ஆண்கள் தாங்களே உருவாக்கியதுதான். படத்தில் ஆணவக்கொலைகளை முன்னின்று நடத்திக் கொடுக்கும் ஒரு பெரியவர் சாதிக்கட்டுக்களை மீற முயற்சிக்கும் சேவலையும் கோழியையும் ‘அறுத்துப் போடுவதை’ குலசாமிக்கு செய்யும் சேவையாக கருதி அதற்கு பணம் பெற மறுக்கிறார். பிறப்பால் உருவாகும் ஏற்றத்தாழ்வோ, அதனை மீறுவதை குலசாமி விரும்பாது என்பதோ ஆண்கள் தங்களுக்குத் தாங்களே இட்டுக்கட்டிக் கொண்ட கற்பனை உலகம்தானே? தாங்களே ஒரு உலகத்தை உருவாக்கி, அந்த உலகத்தை தாங்களே கட்டிக்காத்து அந்த உலகத்தின் அவலங்களில் இருந்து பெண்களை ‘பாதுகாக்க’ தொடர்ந்து முயன்று கொண்டே வருகிறோம். அந்த உலகத்தைப் பற்றிய பெண்களின் கருத்து எதுவும் நமக்குத் தேவையாகக் கூட இருப்பதில்லை.
இறுதியிலும் அதேதான் நடக்கிறது. நான் சமீபத்தில் பார்த்ததிலேயே ஆகச்சிறந்த climax இதுதான் என்பேன். ‘பம்பாய்’ படத்தில் வருவது மாதிரி எல்லாப்பிரச்னைகளும் தீர்ந்தன, சுபம் என்று இருவரும் கை கோர்த்து ‘மலரோடு மலரிங்கு’ என்று பாடல் பாடி முடிக்கவில்லை. ‘காதல்’ மாதிரி ஒரு மெலோட்ராமா கொடுத்து நம்மை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்த முயலவில்லை. Light at the end of the tunnel மாதிரி ஒரு சமாதான உடன்படிக்கை தெரிகிறது. அதுவும் கூட கொஞ்சம் தயக்கத்துடனும் கவலையுடனுமே பகிரப்படுகிறது.
ஆனால் அந்த தயக்கமான உடன்படிக்கையிலும் அந்தப்பெண்ணுக்கு சம்பந்தமோ, சம்மதமோ இல்லை. அவளுக்கு அது தெரியக்கூட இல்லை. அவளுக்கான முடிவையும் அவள் வாழ்வில் இருக்கும் ஆண்களே முடிவு செய்து விடுகிறார்கள். வழக்கம் போல அவர்கள் இருவருக்கும் டீ கொண்டு போய் கொடுப்பதுடன் அவள் வேலை முடிந்து விடுகிறது.
பெருமாள் குதிரை ஏறிவிட ஒரு தயக்கமான அனுமதி கிடைத்து விட்டது. ஆனால் அம்பாள் இன்னமும் பின்னே நடந்துதான் வருகிறாள்.
.
.
.
(Disclaimer: கட்டுரையில் முன்வைக்கப்படும் பெண்ணிய வாதங்கள் படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. இப்போது இருப்பதை விட வேறு எந்த வகையிலும் அந்தப்பெண்ணின் பாத்திரம் அமைக்கப் பட்டிருக்க முடியாது என்றே நம்புகிறேன். சொல்லப்போனால் அந்தப்பாத்திரம் உண்மைத்தன்மையுடனேயே அமைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன். ஆனால் சாதியத்துக்கும் பெண்ணியத்துக்கும் உள்ள தொடர்பையும் முடிச்சையும் விவாதிக்க நினைத்தேன். அதற்கு இந்தப்படம் ஏதுவாக கிடைத்ததை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். அவ்வளவுதான்.)
.
.
.
++ Refer to the chapter ‘Dogs as Dalits in Indian Literature’, from the book ‘On Hinduism’ by Wendy Doniger

Saturday 16 February 2019

ராமலிங்கங்கள் பற்றி எழுதுதல்

.

பிரதமர் மோடி ஊடக சந்திப்புகள் நடத்தாமல் இருப்பது பற்றிய என் பதிவில் ஒரு நண்பர் வந்து ‘நீ ஏன் ராமலிங்கம் சம்பவம் பற்றி எழுதவில்லை?’ என்று கேட்டிருக்கிறார். அதாவது நான் ராமலிங்கம் பற்றி எழுதாமல் போனதால்தான் மோடி கோபித்துக் கொண்டு நிருபர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார் என்ற ரேஞ்சுக்கு அந்த கமெண்ட் இருந்தது.

இந்த மாதிரி பேசுவதை Whataboutism அல்லது Whataboutery என்று அழைப்பார்கள். மதவாத வலதுசாரிகள் உலகெங்கும் பின்பற்றும் உத்தி இது. குஜராத் கலவரத்தை கேட்டால் ‘சீக்கியர் படுகொலை பற்றி கேட்டாயா?’ (What about Sikh massacre?’) என்று கேட்பது. ரஃபேல் பற்றிக் கேட்டால் ‘போஃபர்ஸ் பற்றிக் கேட்டாயா?’ என்று கேட்பது. அதாவது ‘What about this?’ என்ற மறு கேள்வியே முந்தைய கேள்விக்கு பதிலாக இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது (1).

இதனை இந்துத்துவ / பாஜக அபிமானிகள் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு மட்டுமே இதில் பங்கில்லை. எல்லாத்தரப்பினரும் இந்த Whatabouteryஐ பின்பற்றுகிறார்கள். பர்தா பற்றிய என் பதிவுகளில் சில முஸ்லிம்கள் வந்து வடஇந்தியாவில் இந்துப்பெண்களும் முக்காடு போட்டுக் கொள்கிறார்களே அதைக் கேட்டாயா? என்று வினவினார்கள்.

ராமலிங்கம் பற்றி நான் எழுதாததற்கு காரணம் அது மதமாற்றத்தை எதிர்த்ததால் வந்த கொலையா அல்லது வேறு தகராறில் நடந்த கொலையா என்பதே எனக்கு முதல் இரண்டு நாட்கள் குழப்பமாக இருந்தது. அப்புறம் மதமாற்றத்தால் நடந்த கொலை என்றால் அதில் எதனை கண்டிப்பது என்பது புரியவில்லை. மதமாற்றத்தை கண்டிப்பதா? அல்லது சில முஸ்லிம்கள் மதத்துக்காக கொலையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பதா? இந்துத்துவ அபிமானிகளுக்கு மதமாற்றம்தான் பிரச்சனையாக இருக்கிறது.

மதமாற்றம் என்பது கிறித்துவ, இஸ்லாமியர்களுக்கு நம் அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் உரிமை. அது சலுகை அல்ல. தவிர, அந்த உரிமை தானாகவே கூட வழங்கப்படவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு அமுலில் இருந்த மதவாத தொகுதி ஒதுக்கீட்டு முறைமையை (Communal Electorate) ரத்து செய்ய ஒப்புக்கொள்வதற்காக சிறும்பான்மை பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை (2). இது சலுகை என்று சொல்பவர்கள் ‘இந்தியா ஒரு இந்து தேசம். இங்கே மதபோதகம் செய்ய அடுத்தவர்களுக்கு உரிமை இல்லை,’ என்று நம்புபவர்கள். இஸ்லாமும், கிறித்துவமும் ஆயிரம் வருடங்களுக்கும் மேல் இங்கே பின்பற்றப்பட்டு வருகின்றன, எனவே இந்து மதத்துக்கு இருக்கும் அதே உரிமை இஸ்லாம் மற்றும் கிறித்துவத்துக்கும் இருக்கிறது என்பதை வேறு ஒரு பதிவில் விளக்கி இருக்கிறேன். (3)

அப்படியானால் கொலை செய்யலாமா என்று கேட்கலாம். கண்டிப்பாக செய்யக்கூடாதுதான். அதே மாதிரி கிறித்துவ மத போதகர்கள் இந்துக் கடவுளர்களை அவமதித்து, கிண்டலடித்து போதனைகள் செய்வதும் தவறுதான். ஒரு வீடியோவில் கிறித்துவ போதகர் ஒருவர் தமிழகத்தில் உள்ள கோயில்கள் சாத்தானின் உறைவிடங்கள் என்று பேசிய வீடியோ சில மாதங்கள் முன்பு வைரல் ஆனது. இந்த மாதிரி ஆட்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஏன் கொலையாளிகள், வன்புணர்வாளர்கள், மதவெறியர்கள் இந்து மதத்தில் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன? வேற்று மதத்தில் கொலைகாரர்கள் இருந்தால் மட்டும் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது? ராமலிங்கத்துக்காக அப்படி கண்ணீர் வடித்த நீங்கள் அக்லாக்குக்காக எவ்வளவு சொட்டு கண்ணீர் வடித்தீர்கள் என்று நான் கேட்கலாமா? மதமாற்றத்தை கண்டித்த நீங்கள் கர்-வாப்ஸி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? (இத்தனைக்கும் கர்-வாப்ஸி எனும் தாய் மதம் திரும்பும் சடங்கு இந்து மத மரபிலேயே கிடையாது.)

அப்படி நான் கேட்க முடியாது. கேட்டால் நானும் மற்றவர்களைப் போலவே Whatboutery செய்வது மாதிரி ஆகி விடும்.

அக்லாக் சம்பவம் நடந்த போது நான் அந்த சம்பவத்தைப் பற்றி நேரடியாக எழுதாமல் மாட்டுக்கறி உண்ணும் பண்டைய இந்திய மரபு பற்றி வரலாற்றுக்குறிப்புகளுடன் ஒரு பதிவு எழுதினேன் (4). கேரள பாதிரி ஒருவர் பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போது பழைய போப் ஆண்டவர்கள் முதல் இதில் சம்பந்தப்பட்டது பற்றியும் இந்த ‘கிறித்துவ சாமியார்’ சிஸ்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் பற்றியும் எழுதினேன். அதே போல ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடந்த போது வஹாபிஸம் பற்றி நீள் பதிவு எழுதினேன் (4).

எனக்கு இந்த மாதிரி ஆதார சிஸ்டங்களை அலசுவது மட்டுமே உவப்பாக இருக்கிறது. அதனால்தான் தனிப்பட்ட சம்பவங்களை விட பொதுவான தத்துவ ரீதியான வளர்ச்சி மற்றும் அழிவுகள் என்னை ஈர்க்கின்றன. Macro currents more significantly important than micro incidents. அதனால்தான் ஒரு ராமலிங்கம் விஷயமோ அல்லது ஒரு லோக்கல் பாஜக தலைவர் தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களை இழிவுபடுத்தி பேசுவதோ தனியாக பின்பற்றி பதிவுகள் எழுதுவது எனக்கு உகந்ததாக இருப்பதில்லை. அவற்றில் சொல்வதற்கு எனக்கு பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை.

வஹாபிஸம் உலக அளவில் பரவுவதும், அது இஸ்லாமிய சமூகத்துக்கு வில்லனாக இயங்குவதும் கவலை தருகிறது. அதே போல, இந்துத்துவம் இந்து சமூகத்துக்கு அழிவாக வருவது கவலை தருகிறது. இந்துத்துவம், வஹாபிஸம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று கண்ணாடி பிம்பங்கள் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன்.
ஆனால் இந்துத்துவத்தை குறிப்பாக அதிக அளவில் விமர்சிக்கிறேன். காரணம், அதுதான் இப்போது அதிகாரத்தில் இருக்கிறது. அது பெரும்பான்மை மதத்தை சார்ந்து இருக்கிறது. தேசத்தின் மாபெரும் ஒரு கட்சியின் ஆதாரக் கொள்கையாக இருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் இந்துத்துவ சிந்தனை அரங்கேற்றிய சம்பவங்களில் இறந்த அப்பாவிகள் எண்ணிக்கை இஸ்லாமிய தீவிரவாத சம்பவங்களில் இறந்தோரை விட பன்மடங்கு அதிகம்.

அதே போல இன்று இந்தியாவில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கோ, வளர்ச்சி திட்டங்கள் தீட்டுவதற்கோ, பாடத்திட்டங்களை முடிவு செய்வதற்கோ வஹாபிஸ்ட்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏன் சாதாரண முஸ்லிம்களுக்கு கூட அரசியல் அதிகாரம் இல்லாத அளவுக்கு போய்க்கொண்டு இருக்கிறது.

ஆனால் இந்த அதிகாரங்கள் எல்லாம் இந்துத்துவ சிந்தனையாளர்களுக்கு இருக்கிறது. வரலாற்று ஆய்வு முதல் பாடத்திட்டங்கள் வரையறை செய்யும் குழு வரை இந்துத்துவ சிந்தனையாளர்கள் தலைமை வகிக்கிறார்கள். இந்துத்துவத்தை வாழ்நாள் முழுவதும் முழு மூச்சுடன் எதிர்த்து வந்த நேருவின் நினைவு நிலையத்தின் இன்றைய இயக்குனர் ஒரு ஆர்எஸ்எஸ் அனுதாபி. அந்த அளவுக்கு இந்துத்துவம் இங்கே வேர் கொண்டிருக்கிறது.

இவை எல்லாமே இந்தியாவுக்கு ஆபத்தான விஷயங்கள். இந்தியாவின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் முஸ்லிம்கள் மட்டும்தான் என்று நம்பும் இந்த illiteracy சுதந்திர இந்தியாவுக்கு வந்திருக்கும் மாபெரும் நோய். இதனை தொடர்ந்து கண்டிக்காமல் விட்டால் இந்த நோய் முற்றி குணமாக்கவே முடியாத நிலைக்கு போய் விடும்.

ஆகவேதான் இந்துத்துவத்தை குறி வைத்து தொடர்ந்து எழுதி வருகிறேன். ஊழலோ, பொருளாதாரக் கொள்கையோ, வளர்ச்சி திட்டங்களோ, அடிக்கடி நடக்கும் தீவிரவாத சம்பவங்களோ இவற்றில் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. மோடி பெருசா, மன்மோகன் பெருசா என்று தனிப்பட்ட ஆட்சியாளர்கள் இடையில் ஒப்பீட்டு விவாதம் நடத்தலாம். ஆனால் கட்சி அளவில் இருவரும் பெரிய வித்தியாசம் இன்றிதான் இயங்கி வருகிறார்கள். இருக்கும் ஒரே முக்கிய வித்தியாசம் இந்துத்துவம். அதனால்தான் அதனை சிறப்பாக தேர்ந்தெடுத்து விமர்சிக்க வேண்டி இருக்கிறது. அதைப்பார்த்து அதிகமாக பயப்பட வேண்டி இருக்கிறது.

எனவே இந்த WhatAbouteryஐ நிறுத்தும் வரை நமக்கு விமோசனமில்லை. இது நம் சிந்தனையை குறுக்கி கோபத்தை, அர்த்தமற்ற விரோதத்தை மட்டுமே வளர்க்க உதவும் கருவி. அடுத்த முறை ஒரு விவாதத்தை எதிர்கொள்வதற்கு முன்பு நாம் WhatAbouteryஐ அங்கே பயன்படுத்துகிறோமா என்று யோசித்துக் கொள்வோம். தரமான சிந்தனைக்கும், விவாதத்துக்கும் முயற்சி செய்வோம். தேசம் என்ன ஆகிறதோ இல்லையோ, நம் சுய வளர்ச்சிக்கு அது நன்கு உதவும்.



1) Whataboutery for Dummies - https://www.youtube.com/watch?v=H91QUGgsPBU
2) Question of Representation - https://www.thehindu.com/opinion/op-ed/questions-of-representation/article23930516.ece
3) இந்திய மதங்கள் - https://www.facebook.com/sridharfc/posts/10155558982456473
4) ‘மாட்டுக்கறி’ மற்றும் ‘வஹாபிஸமும் ஷிர்க் ஒழிப்பும்’ இரண்டு கட்டுரைகளும் என் முதல் புத்தகம் ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’ புத்தகத்தில் இருக்கிறது.



Saturday 9 February 2019

புர்காவும் பிகினியும்



ரஹ்மான் மகள் கதிஜா நிகாப் அணிந்து கொண்டது பற்றிய என் பதிவு பெரும் அலைகளை கிளப்பி விட்டிருக்கிறது. அது குறித்து கொஞ்சம் விரிவாகப் பேசலாம் என்று நினைத்தேன். 

முதலில் ஒரு சிறிய விளக்கம்: தலையை மட்டும் ஒரு துணியால் சுற்றிக்கொள்ளும் ஆடைக்கு ஹிஜாப் என்று பெயர். முகம் மறைத்து கண்கள் மட்டும் தெரியும் ஆடைக்கு ‘நிகாப்’ என்று பெயர். கண்களும் மறைக்கும் முழு ஆடைக்கு புர்கா என்று பெயர். இது பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய தேசங்களில் பின்பற்றப்படுகிறது. 

இரண்டாவது, அந்தப்பதிவு ரஹ்மான் பற்றியது அல்ல. தான் எந்த அளவுக்கு மதக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனும் சுதந்திரத்தை தன் குடும்பத்தினருக்கு அவர் வழங்கியே இருக்கிறார் என்று நம்புகிறேன். கதிஜாவும் சுயமாக விரும்பியே நிகாபை அணிந்து கொண்டிருப்பதாக தெளிவு படுத்தி இருக்கிறார். என் விமர்சனம் அவர் பற்றியோ அல்லது ரஹ்மான் பற்றியோ அல்ல. 

என் விமர்சனம் நிகாப் மற்றும் அதனை வலியுறுத்த முயலும் மதக்கட்டுப்பாடுகள் குறித்துதான். இந்த ஆடையை அணிய வலியுறுத்துவதன் தீவிரம் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. தலிபான், ஐஎஸ், அல்லது போகோ ஹராம் போன்ற தீவிரவாத இயக்கங்களின்  கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் முழு புர்கா அணியாத பெண்கள் பிரம்படி பெறுவார்கள். சற்றே கோபமாக இந்தக்கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் பெண்கள் கல்லடி பெற்று இறக்கவும் நேரிடலாம். ஈரான் போன்ற தேசங்களில் ஹிஜாப் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த மாதிரி ஆடைகளை வெளிப்படையாக தடை செய்துள்ள இஸ்லாமிய பெரும்பான்மை தேசம் துருக்கி மட்டும்தான். அதற்கு அங்கே மதச்சார்பின்மையை வலுக்கட்டாயமாக கொண்டு வந்த கேமல் அடதுர்க் முக்கியக் காரணம். ஏறக்குறைய இந்தியாவுக்கு நேரு மாதிரி இவர் துருக்கிக்கு. 

இவற்றை தடை செய்திருக்கும் இன்னொரு இஸ்லாமிய நாடு ‘சாத்’ எனும் குறு ஆப்பிரிக்க தேசம். பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,  போன்ற நிறைய ஐரோப்பிய தேசங்களில் இந்த வகை ஆடைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

நிகாப் பற்றி குர்-ஆனில் தெளிவான, வெளிப்படையான வலியுறுத்தல் இல்லை. பின்வரும் வரிகளை பொதுவாக குறிப்பிடுகிறார்கள்:

'Prophet, tell your wives, daughters and women believers to make their outer garments hang low over them. This will make it more likely that they will be recognised and not insulted.' (33:59)

அதே போல இன்னொரு இடத்தில், நெருங்கிய ஆண் உறவினர்களைத்தவிர வேறு எவரிடத்தும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று கூறப்படுகிறது:

'Tell believing women that they should lower their eyes and guard their private parts and not reveal their charms beyond what to reveal.' (24:31)

இதில் ‘தஹாரா’ எனும் அரேபிய வார்த்தை  ‘காட்டுவது’, ‘வெளிப்படுத்துவது’  என்ற பொதுவான வார்த்தையாகையால் எந்த அளவு வெளிக்காட்டுவது என்பதில் கொஞ்சம் குழப்பம் தெரிகிறது. வழக்கமாக இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கண்ட வரிகளை ஹதீத் எனும் இன்னொரு நூலில் உள்ள குறிப்பிட்ட சில வரிகளுடன் சேர்த்து பார்க்கிறார்கள். அதில் முகம் மற்றும் கைகளை மட்டும் வெளிக்காட்ட வேண்டும் என்று இருக்கிறது.++

எனவே குர்-ஆனை வைத்துப் பார்த்தாலும் அல்லது ஹதீத்தை வைத்துப் பார்த்தாலும் முகம் முழுவதையும் மூடுவதற்கு மார்க்கத்தில் தெளிவான வலியுறுத்தல் இல்லை. குர்-ஆன் இறைவன் கொடுத்த வேதம்; ஹதீத் நபிகள் நாயகத்தின் வாழ்வு நெறிகளை தொகுத்தது. அதாவது ஏக இறைவன் மற்றும் அவனின் தூதர் நபிகள் இருவருமே இதனை வலியுறுத்தவில்லை.

முகத்தை மூடும் வழக்கம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. இது முக்கியமாக ஆப்கானிய, எகிப்திய மற்றும் ஓரிரு அரேபிய பழங்குடிகளிடம் இருந்திருக்கிறது. இது பற்றிய குறிப்புகள் (பழைய ஏற்பாட்டு) பைபிளிலும் காணப்படுகின்றன. இஸ்லாத்துக்கு முன்பு இந்தப்பகுதிகளுக்கு பயணித்த ரோமானிய பயணிகளும் இது குறித்து குறிப்புகள் எழுதி இருக்கிறார்கள். 



இந்த மாதிரி வழக்கம் இந்துக்களிடமும் இருக்கிறது. வடஇந்தியாவில், குறிப்பாக ‘ஹிந்தி பெல்ட்’ என்று அழைக்கப்படும் பிராந்தியங்களில் மணமான பெண்கள் தலையை மூடி, பாதி முகத்தை மூடிக் கொண்டு இருக்கும் ‘கூங்கட்’ எனும் முக்காடு பரவலாக வழக்கத்தில் இருக்கிறது. பண்டைய இலக்கியங்களிலும் இது குறித்து குறிப்புகள் இருக்கிறது.

நிகாப் மற்றும் புர்கா இரண்டுமே சில மத்திய கிழக்கு  ஆசியாவின் சில பழங்குடியினர் இடையில் நிலவி வந்த பழக்கம். இந்தப்பகுதிகளில் இஸ்லாம் தலையெடுத்ததால் இவை இஸ்லாமிய பழக்கமாக பரவலாக நம்பப்பட்டு விட்டது. சலாஃபிசம் மற்றும் வஹாபிஸம் மாதிரி சில தீவிரவாத இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மட்டுமே நிகாப், புர்கா இரண்டையும் கட்டாயமாக வலியுறுத்துகிறார்கள். வஹாபிஸம் போற்றும் தாலிபான், சவூதி மதவாதிகள், போகோ ஹராம் உலகெங்கும் போகுமிடமெல்லாம் நிகாப், புர்கா போன்றவற்றை கட்டாயமாக்கி இருந்ததில் இது ஏறக்குறைய வஹாபிஸத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறி விட்டிருக்கிறது என்று இல்ஹாம் மனேயா எனும் ஆய்வாளர் கூறுகிறார். பல இஸ்லாமிய தேசங்களை சமூகப்பொருளாதார ரீதியாக நாசம் செய்த வஹாபிஸத்தின் அடையாளங்களில் ஒன்றுதான் இந்த நிகாப் மற்றும் புர்கா இரண்டுமே.

அதாவது இன்றைக்கு தலித் ஒருவர் ஊரைத் தாண்டி ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழ்ந்து ‘உயர் சாதியினர்’ முன்பு துண்டை இடுப்பில் கட்டி அவர்கள் தெருவுக்குள் புகாமல் வாழ்ந்து ‘இது நானே விரும்பி ஏற்றுக்கொண்டது. வர்ணாசிரம தர்மத்தின் மேல் எனக்கு இருக்கும் மரியாதையால் நான் இதை செய்கிறேன்,’ என்று சொன்னால் என்ன செய்வோம்? அல்லது கணவனை இழந்த ஒரு இளம்பெண் மொட்டை அடித்துக்கொண்டு வெள்ளையுடை அணிந்து ‘இது என் விருப்பம்,’ என்றாலோ என்ன சொல்வோம்? கண்டிப்பாக அந்தப்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக வண்ண உடை அணிவிக்க மாட்டோம்தான். ஆனால் அதனை freedom of choice என்று புகழ மாட்டோம். (நான் அந்தப்பெண்ணின் தந்தையாக இருந்தால் அவளை psychological counselling க்கு அனுப்ப முயற்சி செய்வேன்.)

இந்த வாதத்தை நான் துவங்கியதும் உடனே பிகினி போடுகிறார்களே  அவர்களை கேள்வி கேட்டீர்களா என்று எதிர்வாதம் வருகிறது. பிகினியை ஒரு மதத்துடன் இணைத்து இந்த மதத்தில் பெண்கள் பிகினி போட்டுக்கொண்டுதான் வெளியே வர வேண்டும். சுடிதார் அல்லது புடவை கட்டி வரும் பெண் மானங்கெட்டவள். செக்ஸுக்கு அலைபவள் என்று பிரச்சாரங்கள் நடக்கவில்லை. அப்படி நடந்தால் அந்த நிலையை கண்டிப்பாக எதிர்த்திருப்பேன்.

ஆனால் ஒரு விஷயம்: இப்படி கேள்வி கேட்பவர்கள் ‘டி-ஷர்ட், ஜீன்ஸ் போட்ட பெண்’ என்று சொல்வதில்லை. ஒப்பீடு நேரடியாக பிகினிக்கு போய் விடுகிறது. அப்போதுதானே வசதியாக இருக்கும்? நிர்வாணம் என்கிற வார்த்தையை அங்கே கொண்டு அந்தப் பெண்ணை அவமானப்படுத்தி புர்காவுக்குள் திணிக்க முடியும்! ஒரு பெண் ஒன்று நிகாப் அணிய வேண்டும், இல்லையேல் அவள் பிகினி அணிய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? எனக்கு நிகாப் வேண்டாம், டிஷர்ட் மற்றும் ஜீன்ஸ் எனக்கு வசதியாக இருக்கிறது என்று சொல்லும் ஒரு பெண் பற்றிய நமது கருத்து என்ன? 

என்னைப்பொருத்த வரை பிகினியோ, டிஷர்ட்டோ, நவீன, வசதியான உடை அணியும் பெண்ணைத்தான் சுதந்திரப் பெண்ணாக பார்க்க விரும்புகிறேன். பண்டைய உடையை, அதுவும் பாலியல் ஒடுக்குமுறையை வலியுறுத்திய உடையை அணியும் பெண் freedom of choice பற்றி பேசலாம். ஆனால் அங்கே உண்மையில் freedom இருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க சிந்தனையாளர் வில்லியம் ஜேம்ஸ் சொன்னது போல ‘A great many people think they are thinking when they are merely rearranging their prejudices.’ பெண்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதில் பெரும்பாலான விஷயங்கள் ஆணாதிக்க அடக்குமுறை வலியுறுத்தல்கள் என்பது ஆண்களுக்கே நிறைய நேரம் புரிவதில்லை. 

எனவே, வெள்ளை ஆடை அணிந்த விதவைப்பெண் ‘பெண் முன்னேற்றம்’ மற்றும் ‘தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்’ பற்றி பேசுவது பொருந்தாது. அவள் நூற்றாண்டு கால அடக்குமுறையை, பாலியல் தனிமைப்படுத்தலையே மறுஉறுதி செய்கிறாள்.

நவீன ஆடைகள் அணியும் பெண் தனக்கு விதிக்கப்பட்ட கட்டுமானங்களில் இருந்து ஒன்றை தாண்டி முன்னேறுகிறாள். தனக்கு தடை செய்யப்பட்ட ஒன்றை செய்கிறாள். மேல் சட்டையே அணியக்கூடாது என்ற நிலையை மீற கோட் சூட் போட ஆரம்பித்த அம்பேத்கர் செய்ததும் அதுதான். மேல் சட்டை போடாமல் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு அம்பேத்கரால் தலித்தியம் பேசி இருந்திருக்க முடியாது. அது போல்தான் பெண் முன்னேற்றம் தனக்கு விதிக்கப்பட்ட தளைகளை ஒவ்வொன்றாக உடைப்பதில் இருக்கிறது. 

‘லலிதாவிஸ்தார சூத்திரம்’ என்ற பண்டைய இந்திய இலக்கியத்தில் யசோதரா எனும் பெண் கூங்கட் எனும் முக்காடு அணிய மறுக்கிறாள். அதனால் அவள் ஒழுக்கம் கெட்டவளாக எல்லாராலும் இகழப்படுகிறாள். அப்போது அவள் அரசவைக்கு வந்து தைரியமாக அரசனிடம் முறையிடுகிறாள். ‘தங்கள் எண்ணங்களுக்கு முக்காடு போட்டு மூடி வைக்காதவர்கள் தங்கள் உடலுக்கு ஆயிரம் உடைகளை போட்டுக்கொண்டாலும் நிர்வாணமாகவே இருக்கிறார்கள். மாறாக, தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்திக் கொண்டு ஒருவனுக்கு மட்டும் தன் காதலை கொடுத்துக் கொண்டவர்களுக்கு எதற்கு முக்காடு தேவை?’ என்று கேட்கிறாள்.

அதே வாதத்தின் நீட்சியாகவே பிகினியையும் பெண் முன்னேற்றத்தின், பெண்ணியத்தின்  அங்கமாகக் கருத முனைகிறேன். படிப்பது, வேலைக்குப் போவது போன்றவைதான் முன்னேற்றம் என்று சொல்லலாம். அதுவும்தான், ஆனால் அது மட்டுமே என்று கோடு போடுவதில்தான் நாம் நமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைகிறோம். நிகாப் என்கிற விஷயம் மனிதியின் அடிப்படை விஷயமான அடையாளத்தையே பறிப்பது. அவளை முகம் முதல் கட்டை விரல் வரை பாலியல் அடையாளமாக பார்க்க முனைவது. உன் அடையாளத்தை நீ விலக்கிக் கொண்டால் நீ மதிக்கத் தக்கவள்; இல்லையேல் நீ மதிப்பிழந்தவள் என்று சொல்ல முனையும் ஆணாதிக்க அரசியல் அது. இங்கே விவாதத்தில் பிகினியை கொண்டு வருவதன் பின்னணியும் அதுதான். ஒன்று முழுவதும் மூடும் ஆடை, இல்லையேல் நீ நிர்வாணம் என்று கட்டமைக்க முனைதல்; அதன் மூலம் சம்பந்தப்பெண்ணை கூச வைத்து கட்டுப்பாடுகளை பின்பற்ற தள்ளுதல். 

அதுவுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற தேசங்களில் கூட அந்த ஊர் பெண்கள் வேலையிடத்திலோ அல்லது வீட்டு விசேஷங்களிலோ பிகினி போட்டுக்கொண்டு அலைவதில்லை. பொதுவாக அலுவலகத்துக்கு  சூட் அல்லது வெளியிடங்களில் டி-ஷர்ட், ஜீன்ஸ் என்றுதான் சுற்றுகிறார்கள்.
அவர்கள் நீச்சலுக்குப் போகும் போதோ அல்லது பீச் விடுமுறைகளிலோ மட்டுமே பிகினி அணிகிறார்கள். (பீச் விடுமுறைகள் பெரும்பாலும் கோடை காலத்தில் போகிறார்கள். அப்போது sunbath என்று அழைக்கப்படும் சூரியக்குளியலுக்காக உடலை முடிந்த அளவு சூரிய ஒளி பெறுவதற்காக திறந்து வைத்து இருக்க வேண்டி இருக்கிறது.)

நீச்சலுக்கு புடவை கட்டியோ, ஹிஜாப் அணிந்தோ போக முடியாது. அதற்கும் ஒரு தீர்வாக ‘புர்கினி’ (Burqa + Bikini) என்று தலை முதல், கால் வரை மறைக்கும் கருப்பு நீச்சல் அங்கி ஒன்று கொண்டு வர முயற்சி செய்தார்கள். நல்லவேளையாக அது பெரிய அளவு பிரபலம் ஆகவில்லை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெண்கள் பிகினியில் அலையும் மேலை நாட்டு பீச்சுகளில் வன்புணர்வு சம்பவங்கள் நடப்பதில்லை. பெண்கள் தலை முதல் கால் வரை மூட சொல்லி வலியுறுத்தும் போகோ ஹராம், ஐஎஸ் கேம்ப்களில்தான் மானாவாரியாக நடக்கிறது. என்ன ட்ரெஸ் போட வேண்டும், எங்கே போக வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்று பெண்களுக்கு ஆயிரத்தெட்டு க்ளாஸ் எடுக்கும் இந்தியாவில் நடக்கிறது.

அதாவது பிரச்சினை  பெண்கள் உடையிலோ, அவர்கள் நடத்தையிலோ இல்லை. பிரச்சினை ஆண்களாகிய நம்மிடம் இருக்கிறது. சதா பெண்களை காம எந்திரமாகவே பார்க்கும் நம் பார்வையில் இருக்கிறது. அப்படி பார்க்க சொல்லி நமக்கு கற்றுக்கொடுக்கும் நம் மதங்களில் இருக்கிறது. அதில் இருந்து நம்மை காப்பாற்றும் பொறுப்பு பெண்களிடம்தான் உள்ளது எனும் நம் கபடத்தனத்தில் இருக்கிறது. நிறைய நேரம் மதம் கூட சொல்லாத ஒரு விஷயத்தை உள்ளே நுழைத்து அதனை பெண்கள் பின்பற்ற வலியுறுத்தும் நம் கள்ளத்தனத்தில் இருக்கிறது. அந்த திட்டத்துக்கு சில பெண்கள் பலியாகும் போது அதற்கு வரும் எதிர்ப்பை சமாளிக்க freedom of choiceஐ வாதத்துக்கு கொண்டு வரும் நம் திறமையில் இருக்கிறது.


++ 'The Qur'an - A new translation' by MAS Abdel Haleem, Oxford University Press, Fourth Edition