Sunday 20 March 2016

ஆதார் என்னும் ராஜ சதி



(ழான் த்ரே பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த, இந்தியாவைத் தன் இல்லமாக வரித்துக் கொண்டு விட்ட, பொருளாதார அறிஞர். அமர்த்திய சென்னோடு சேர்ந்து நிறைய ஆய்வுகள் நடத்தியவர். ஆதார் பற்றி அவர் ஹிண்டுவில் எழுதியதை அவர் அனுமதியோடு இங்கே மொழி பெயர்த்து பதிகிறேன். முன்வடிவைப் படித்து திருத்தங்கள் வழங்கிய Shah Jahan அவர்களுக்கு
முதன் முதலில் ஆதார் திட்டம் விருப்பமுள்ள மக்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்யலாம் என்று சொல்லித்தான் ஆரம்பிக்கப் பட்டது. அதாவது நீங்கள் ஆதார் எண் வைத்துக் கொள்வதற்கு சட்ட ரீதியாக எந்த அழுத்தமும் அரசு கொடுக்கப் போவதில்லை. ஆனால் ஆதாரை உருவாக்கிய மத்திய அரசின் UIDAI துறை கடுமையாக உழைத்து, ஆதார் இல்லாமல் வாழ இயலா நிலையை உருவாக்கி வருகிறது. நிறைய திட்டங்களுக்கு இன்றைக்கு உங்களுக்கு ஆதார் கண்டிப்பாகத் தேவை என்று ஆகி விட்டது. விரைவிலேயே ஆதார் இல்லாத இந்தியனுக்கு வாழ்க்கை ரொம்பவே கஷ்டமாக மாறப் போகிறது. இன்றைய சூழலில் ‘ஆதாருக்கு கட்டாயம் இல்லை, தன்னிச்சையானது’ என்று சொல்வது ‘மூச்சு விடுவதற்கு உங்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை, அது தன்னிச்சையானது’ என்று சொல்வதற்கு சமம். கட்டாயம் என்பது சட்ட ரீதியானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நடைமுறை ரீதியாக இருந்தாலும் அது கட்டாயம்தான்.

வானளாவிய அதிகாரங்கள்
-----------------------------------------
இப்படி ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ என்று அரசு இருந்ததை சுப்ரீம் கோர்ட் மார்ச் 2014ல் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. ‘எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்களுக்கு சட்ட ரீதியாக கிடைக்க வேண்டிய சேவைகள் "ஆதார் இல்லை" என்பதை வைத்து நிறுத்தவோ தாமதிக்கவோ கூடாது,’ என்று உத்தரவு பிறப்பித்தது. ஆதார் தன்னிச்சையானது என்பதற்கு ஏற்ற முடிவு இதுதான். ஆனால் அந்த வழக்கு விவாதங்களில் மத்திய அரசு ‘ஆதார் தன்னிச்சையானது’ என்றே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டு வந்தது. எனவே அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக கோர்ட் எதுவும் சொல்லி விடவில்லை.

இதில் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்: தன்னிச்சையான ஆதார் என்பது மிகவும் பயனுள்ள திட்டம். சரி பார்க்கக் கூடிய பொதுவான அடையாள அட்டை என்கிற அளவில் அது மிகவும் முக்கியமான ஆவணமாக அது மக்களுக்கு இருக்கும். ஆனால் UIDAI துறை ஆதாரை பொதுவான ஐடி கார்டாக உருவாக்குவதிலும், அதற்கான மென்பொருள்களை கட்டமைப்பதிலும் பெரிய ஆர்வம் காட்டவே இல்லை. அதனை கட்டாய அடையாளமாகவும், பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை + கண் ரெடினா அடையாளங்களை வைத்து ஒரு மாபெரும் தகவல் பெட்டகத்தை உருவாக்குவதிலுமே கவனமாக இருந்தது. அதன் நோக்கங்கள் ஆதாரின் அடிப்படை நோக்கத்தில் இருந்து முற்றிலுமாக விலகியவை.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அதிகாரிகளுக்கு மனக் கசப்பைக் கொடுத்தது. ஏனெனில், அந்த உத்தரவு ஆதாரினால் செயல்பாட்டுத் திட்டங்கள் பலதையும் பெரிதும் பாதித்தது. எனவே அதற்கு பதில் தாக்குதலாக கடந்த வாரத்தில் ஆதாரை பண மசோதாவாக மாற்றி அரசு நிறைவேற்றி விட்டது. அதில், விதி எண் 7ன் கீழ் ஆதாரை பலவிதமான சேவைகளுக்கும் கட்டாயமாக்கும் வானளாவிய அதிகாரத்தை அரசுக்கு அந்த மசோதா கொடுக்கிறது. விதி எண் 57 ஆதார் அடையாளத்தை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தும் சுதந்திரத்தை அரசுக்குக் கொடுக்கிறது. (அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றனதான்.)

அதாவது, இந்த மசோதா ஆதாரை நிறைய விஷயங்களுக்கு கட்டாயமாக்க அரசுக்கு அதிகாரத்தை தருகிறது: சம்பளப் பட்டுவாடா, முதியோர் உதவித் தொகை, பள்ளிச் சேர்க்கை, ரயில் டிக்கட் பதிவு, திருமண சான்றிதழ், ஓட்டுனர் லைசென்ஸ், மொபைல் சிம் கார்ட் வாங்குவது, ஏன் ஒரு இன்டர்நெட் சென்டரை பயன்படுத்துவதற்குக் கூட உங்களுக்கு ஆதார் தேவைப்படும் நிலை விரைவில் வரும். வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் அரசாங்கம் ஆதாரை வைத்து வேறு என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதை நாமே கற்பனை செய்து பார்த்துக் கொள்ள இயலும். ஆதாரை உருவாக்கிய நந்தன் நிலேகனியே ஒரு முறை குறிப்பிட்டது போல ‘ஆதார் எங்கும் விரவி இருக்கும் ஒன்றாக’ மாறும் நாள் தொலைவில் இல்லை.

ஒட்டு மொத்தக் கண்காணிப்பு
---------------------------------------------

சரி, அப்படியே வந்தால்தான் அதில் என்ன பிரச்சனை? நிறைய இருக்கிறது: பயோ-மெட்ரிக்கின் நம்பகத் தன்மை முதற் கொண்டு தனி நபர் சுதந்திரம் பறி போவது வரை சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றையும் விட முக்கியப் பிரச்சனை குடிமகன்களை ஒட்டு மொத்தமாக கண்காணிப்பதற்கான கதவை ஆதார் திறந்து கொடுக்கிறது. ‘தேசப் பாதுகாப்புப் பிரச்சனை’ என்கிற ஒன்றை வைத்தே அரசு ஆதார் சம்பந்தப் பட்ட தகவல் பெட்டகங்களை நிறைய சட்டச் சிக்கல்கள் இன்றி திறந்து பார்க்க இயலும். யாரை எப்போது வேண்டுமானாலும் தொடர்ந்து கண்காணிப்பது நமது உளவு நிறுவனங்களுக்கு வெகு சுலபமாகி விடும் - நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், எங்கெல்லாம் போகிறீர்கள், எந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறீர்கள், யாரைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள், சந்திக்கிறீர்கள், யாருடன் போனில் பேசுகிறீர்கள் என எல்லாமே கண்காணிப்புக்கு உள்ளாகும். எந்த உலக நாடுமே, குறிப்பாக எந்த ஜனநாயக நாடுமே, இதுவரை இந்த அளவுக்கு தங்கள் குடிமக்கள் மேல் இத்தனை வலுவான கண்காணிப்புக் கட்டமைப்பை வைத்திருக்கவில்லை.

நான் கொஞ்சம் அதிகமாகவே பயப்படுகிறேன் என்று உங்களுக்கு தோன்றினால், இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஒட்டு மொத்தக் கண்காணிப்பு என்பது உளவு நிறுவனங்கள் உலகெங்கிலும் ஏங்கும் விஷயம். எட்வர்ட் ஸ்நோடேன் விஷயத்தில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும்தானே? இந்திய அரசாங்கத்துக்கும் குடிமக்களைக் கண்காணிப்பது, குறிப்பாக தங்களுக்கு பிடிக்காதவர்களை கண்காணிப்பது எவ்வளவு பிடித்தமான விஷயம் என்பதை நாம் பார்த்து வந்திருக்கிறோம். ஒரு ஆளை பிடித்து அடித்தால் ஓராயிரம் பேர் வழிக்கு வருவார்கள் என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்த விஷயம். தனி நபர் சுதந்திரம் என்பதற்கும் ஜனநாயக தேசத்தில் சட்டத்திற்கு உட்பட்டு போராடுவது என்பதற்கும் தொடர்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தக் கண்காணிப்பு என்பது தனி நபர் சுதந்திரம் மற்றும் சமூக உரிமைகள் இரண்டுக்கும் எதிரானது. பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் மக்கள் கொடிய, சர்வாதிகார அரசாங்கங்களின் கீழ்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கட்டாயப் படுத்தல்கள், கைதுகள், அரசியல் கொலைகள், சித்ரவதைகள் இவை எல்லாம் செய்து தங்களுக்கு பிடிக்காத ஆட்களை/ தங்களை எதிர்க்கும் ஆட்களை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். யாரிடம் பேசுவது, என்ன பேசுவது, எழுதுவது என்கிற பயமில்லாமல் வாழ்வது போன்ற, இன்று நாம் சாதாரணமாக நினைக்கும் தனி நபர் சுதந்திரம் எல்லாமே பெரும் போராட்டங்களுக்குப் பிறகு நாம் பெற்றவையாகும். இந்த அளவுக்கான சுதந்திரம் இன்றும் கூட பெருமளவு மக்களுக்கு கிடைக்கவில்லை. தலித் மக்களும், ராணுவத்தின் காலடியில் நசுங்கிக் கிடக்கும் பகுதிகளும் இன்னமும் இத்தகைய சுதந்திரத்துக்காக காத்திருக்கிறார்கள். அது வேறு விஷயம். ஆனால் அவர்களுக்கும் இந்த சுதந்திரம் கிடைப்பதற்காக நாம் போராட வேண்டுமே தவிர, இருப்பவர்களிடம் இருந்தும் அதைப் பிடுங்குவது தவறு.

ஆதார் சட்டம் இந்த வரலாற்றுப் போராட்டங்களை எல்லாம் நம்மை மறக்கச் சொல்கிறது. அரசாங்கம் நம் மீது கருணையுடன் நடந்து கொள்ளும் என்று நம்பிக்கை வைக்கச் சொல்கிறது. இப்போதைக்கு ஒன்று சொல்லலாம்: நம் சமூக உரிமைகளுக்கும், தனி நபருக்கு உள்ள ஜனநாயக சுதந்திரத்துக்கும் உடனடியாக பெரிய ஆபத்து ஏதும் இல்லைதான். ஆனால் மிக அப்பாவியான ஒரு நபர் மட்டுமே ஆதாரை ஒட்டு மொத்தக் கண்காணிப்புக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புவார். அரசாங்கம் அந்தக் கண்காணிப்பை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவே மாட்டார்கள் என்று உறுதி அளித்தால் கூட அப்படிப்பட்ட கண்காணிப்பு என்பதே ஜனநாயகத்துக்கும் சமூக உரிமைகளுக்கும் எதிரானதுதான். க்லென் க்ரீன்வால்ட் தான் எழுதிய No Place to Hide என்கிற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எந்த சமூகத்திலும் கண்காணிப்புக்கான வசதி இருந்தாலே போதும். அதைப் பயன்படுத்தாமலே அது எதிர் மறைக் கருத்துக்களையும், அரசுக்கு எதிரான போராட்டங்களையும் உருவாகாமலே செய்து விடுகிறது.”

உறுதியற்ற சேவைகள்
-----------------------------------
ஆதார் சட்டத்தை ஆதரிப்பவர்கள் இந்தக் கவலைகளை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆதார் மூலம் அரசுக்கு நிறைய பணம் சேமிக்க முடியும் என்று வாதிடுகிறார்கள். ஆதாரால் திட்டங்களில் ஊழலை நிறுத்த முடியும் என்பது போன்ற கற்பனாவாதங்கள் உலவ விடப் படுகின்றன. உண்மையில் ஆதாரால் குறிப்பிட்ட சில திட்டங்களில் மட்டுமே பணக் கசிவைத் தவிர்க்க முடியும். உணவுப் பொது விநியோகத்தில் (ரேஷன் கடைகள்) அடையாளம் சம்பந்தப் பட்ட பிரச்சனை இல்லாததால், ஆதாரால் அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்த இயலாது. சமீபத்திய உதாரணங்களைப் பார்த்தால் ஆதார் பொது விநியோகத்தில் நிறைய குழப்பங்களைத்தான் உருவாக்கி இருக்கிறது. எங்கெல்லாம் பொது விநியோகத்தில் ஆதார் அறிமுகப் படுத்தப் பட்டதோ அங்கெல்லாம் தாமதங்களும், அடையாளக் குழப்பங்களும், கனெக்ஷன் பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதுவும் பொது விநியோகம் மிக முக்கியமாக தேவைப்படும் மாநிலங்களில் ஆதார் மாதிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வசதிகள் சரியாக இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலும் இதே பிரச்சனைகள்தான்.

நானே என் கண்களால் இதைப்பார்த்திருக்கிறேன். ஜார்க்கண்டில் உணவு விநியோகம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் வங்கிக் கணக்குகள் இவற்றில் ஆதார் நுழைந்த போது குழப்படிகள் நடந்திருக்கின்றன. அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப் படுவதிலேயே தடைகள் வரும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. உதாரணத்துக்கு ஊரக வேலைக்கான அட்டை வழங்கலில் பிரச்சனை வந்ததால் ஆதாரின் 100 சதவிகித கார்டு நோக்கத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதற்காக நிறைய வேலைக் கார்டுகளை கான்ஸல் செய்து விட்ட சம்பவங்களை நானே பார்த்தேன். அந்தத் திட்டத்தில் இருந்த வேலையாட்களை ஊரக வங்கிகள் ஆதார் வங்கிகளுக்கு மாற்றி விட, அதில் அவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதில் பெருத்த தாமதங்கள் நிகழ்ந்தன. ஜார்க்கண்டில் இப்போதுதான் உணவு விநியோக முறையில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த நேரத்தில் ஆதாரை அங்கே நுழைத்ததில், நடந்து வந்த கொஞ்ச நஞ்ச சீர்திருத்தங்களும் பாதிப்படையும் நிலையில் இருக்கிறது.

ஆதார் ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகியும் அது துவங்கப் பட்டபோது கொடுத்த வாக்குறுதிகளையும், அது உறுதியளித்த சீர்திருத்தங்களையும் செய்வதில் பெரும் பிரச்சனைகள் தென்படுகின்றன. ஆனால் பொய்யான ஆய்வுகளும், விளம்பரப் பிரச்சாரங்களும், கற்பனையான சேமிப்பு எண்களும்தான் இதுவரை நமக்கு திரும்பத் திரும்ப கிடைத்திருக்கின்றன. (சமையல் எரிவாயுவில் 12,700 கோடி சேமிப்பு பற்றிய தகவலும் இப்படிப்பட்டதுதான்.) எனக்குத் தெரிந்தவரை ஆதார் பற்றிய ஒரு தீவிரமான ஆய்வும் எந்தத் திட்டத்திலும் மேற்கொள்ளப் படவில்லை. சொல்லப் போனால் ஆதாரில் நிகழ்ந்த தோல்விகளையே பிரச்சாரங்கள் மூலம் வெற்றிகளாக காட்டி இருக்கிறார்கள். ஜார்க்கண்டில் ராத்து மாவட்டமும் ராஜஸ்தானில் கோட்காசிம் மாவட்டத்தில் செய்த மண்ணெண்ணெய் மானியமும் இதற்கு உதாரணங்கள்.

ஆதாரில் ஓரளவு பயன்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அதில் இருக்கும் பிரச்சனைகளை மனதில் வைத்து ‘குறைந்த பட்ச உபயோகம், அதிக பட்ச எச்சரிக்கை’ என்றுதான் அதன் பயன்பாடு இருக்க வேண்டும். ஆனால் அரசின் நோக்கமோ ‘அதிக பட்ச உபயோகம், குறைந்த பட்ச எச்சரிக்கை’ என்பதாக இருக்கிறது. ஆதார் பண மசோதாவில் கொஞ்சம் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் ஆதாரை ஒட்டு மொத்தக் கண்காணிப்புக்கு அல்லது தவறான பயன்பாட்டிலிருந்து தடுக்கும் எந்த அம்சமும் அதில் இல்லை. இருக்கின்ற சிலவும் சர்ச்சையில் இருந்து அரசின் UIDAI துறையை பாதுகாப்பது பற்றி மட்டுமே அதில் இருக்கிறது.

ஆதாரின் பிரச்சாரகர்கள் அதைப் பற்றி பேசும் போது நாம் ஒரு ‘புரட்சியின் எல்லையில்’ இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை அதை ‘ராஜ சதியின் எல்லை’ என்றுதான் சொல்வேன். இப்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் ஆதார் சட்டம் உச்சநீதிமன்றத்துக்குத் தெரியாமல் ஒரு கண்காணிப்புக் கோட்டையை கட்டிக் கொள்ள அரசாங்கத்துக்கு உதவி இருக்கிறது. அதனை பண மசோதாவாக நிறைவேற்றியதில் நாடாளுமன்றத்தில் அது குறித்து நடக்கவிருந்த ஆரோக்கியமான விவாதங்களையும் அது தடுத்து இருக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையே ஆதார் பற்றிய கவலைகளை இன்னமும் மோசமாக்குகிறது.

Sunday 6 March 2016

பி.ஹெச்.டி-யும் அரசு உதவிப் பணமும்



பி.ஹெச்.டி-க்கு அரசு கொடுக்கும் உதவிப் பணத்தை கிண்டலடித்தும், விமர்சித்தும் பதிவுகள் பார்த்தேன். இதில் நிறையப் பேர் பிஜேபி அபிமானிகள் என்பதில் சந்தேம் இல்லை. இன்போசிஸ் கம்பனியின் முன்னாள் நிதி இயக்குனர் மோகன்தாஸ் பை கூட இதைக் கேள்வி கேட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் (1).

உலக அளவில் பி.ஹெச்.டி படிப்பு என்பதை வேலையாகவே பார்க்கிறார்கள். அதாவது, அந்த மாணவர் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தில் வேலை செய்கிறார் என்றுதான் அர்த்தம். அதுவுமின்றி, பி.ஹெச்.டி என்பது மாஸ்டர்ஸ் (முதுகலைப்) பட்டத்துக்கு அப்புறம் படிக்க வேண்டிய படிப்பு. முதுகலைப்பட்டத்தை முடிக்கும்போது ஒரு மாணவனோ மாணவியோ 25 வயதை எட்டி இருப்பார்கள். அவர்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்களுக்கு உதவி ஊதியம் கொடுக்கப்படாவிடில், மேலே படிக்கும் ஆர்வம் இருக்கிற இளைஞர்களும் அப்படி செய்யாமல்  வேறு வேலை தேடிக் கொள்ள நேரிடும். அதனாலேயே பி.ஹெச்.டி படிப்புக்கு மாதா மாதம் உதவி ஊதியம் கொடுக்கப் படுகிறது.

அது சரி, அப்படியே அவர்கள் வேலை தேடிக் கொள்ளட்டுமே? அரசாங்கம் ஏன் பி.ஹெச்.டியை ஊக்குவிக்க வேண்டும் என்றால் பதில் இருக்கிறது.

பி.ஹெச்.டி-க்கு செலவு செய்வது ஒரு தேசத்தின் முன்னேற்றத்துடன் தொடர்புடையது. பிரிட்டன் அரசின் ஒரு துறை நடத்திய ஆய்வில் எந்த தேசத்திலும் பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சியும் (GDP) அதிகரிக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் (2). மேற்கத்திய தேசங்கள் மேற்படிப்புக்காக கொள்கை அளவிலான நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அமெரிக்காவில் நிறைய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் பி.ஹெச்.டி படிக்கும் போது வேறு வேலை செய்வதற்கே கூட தடை விதிக்கப் பட்டிருக்கிறது. வேறு சில தேசங்களில், அப்படி செய்யும் வேறு வேலை வாரத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறைகள் உள்ளன. (3)

அடிப்படை எழுத்தறிவு அதிகரிப்பது சமூக முன்னேற்றத்துக்கு அறிகுறியாக கருதப்படுவது போல, பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை தேசத்தின் முன்னேற்றத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கப் படுகிறது. பெர்னார்ட் லீவிஸ் என்னும் அமெரிக்க வரலாற்று அறிஞர் 9/11க்கான பின்னணிக் காரணங்களை ஆய்ந்து What Went Wrong என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் வளைகுடா நாடுகளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசுகையில் அங்கே பி.ஹெச்.டி படித்தவர்கள் எண்ணிக்கை உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது என்கிற தகவலையும் ஒரு முக்கியப் பிரச்சனையாக குறிப்பிடுகிறார்(4). வெண்டி ஸ்டாக் மற்றும் ஜான் செக்ஃபிரைட் பதினைந்து வருடங்கள் அமெரிக்காவின் மேற்படிப்பு பற்றிய ஆய்வில் அமெரிக்காவில் பி.ஹெச்.டி முடிப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் அமெரிக்கர் அல்லாதவர் என்பதை கவலையுடன் குறிப்பிடுகிறார்கள் (5).

அதே ஆய்வுக் கட்டுரையில் பொதுவாக பி.ஹெச்.டி முடிக்க எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். அதற்குக் காரணம் ஆய்வுத் தலைப்புகளின் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டு வருவதும், ஒரிஜினல் ரிசர்ச் என்று சொல்லப் படும், புதிய சிந்தனைகளை ஆய்வில் கொண்டு வர வேண்டும் என்பதில் இருக்கும் அழுத்தங்களும்தான் காரணம் என்று நம்புகிறார்கள். படிக்க வருபவர்களில் 40% பேர் படிப்பை முடிக்க இயல்வதில்லை என்று இதே ஆய்வில் தெரிகிறது. ஆகவே அரசு உதவிப் பணம் பெற்று படிப்பவர்கள் முடிக்க இயலாமல் போவதில்  ஆச்சரியமோ கோபமோ படுவதிற்கில்லை.

எனவே பி.ஹெச்.டி படிப்பவர்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை சமூகத்துக்கு இருக்கிறது. இப்போது செலவு செய்வதை விட அதிகமாகவே செலவு செய்ய வேண்டுமே தவிர குறைப்பது பிரச்சனையில்தான் கொண்டு விடும். இந்தியாவில் நடத்தப் படும் பி.ஹெச்.டி-யின் தரம் சரியில்லை என்றால் அதை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர மொத்தமாக அரசின் உதவிகளையே நிறுத்துவது. சரியல்ல

அது ஒரு புறம் இருக்க, இந்திய அரசு பி ஹெச் டி-க்காக எவ்வளவுதான் செலவிடுகிறது?  நேச்சர் எனும் அறிவியல் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் படி அரசு ஒரு பி.ஹெச்.டி மாணவன் / மாணவிக்கு முதல் இரண்டு ஆண்டுகள் மாதம் 16,000 ரூபாயும் அடுத்த மூன்றாண்டுகள் மாதம் 31,330ம் உதவி ஊதியமாக வழங்குகிறது (6). இதுவே சென்ற ஆண்டு உயர்த்தப் பட்டதற்குப் பிறகு கிடைப்பது. டைம்ஸ் ஆஃப் இந்தியா-வின் ஒரு கட்டுரையின் படி இந்தியாவில் 77,798 பேர் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கிறார்கள் (7). இதை வைத்துக் கணக்கிட்டால் வருடத்துக்கு சுமார் 2,664 கோடி வருகிறது.

இது அதிகமான செலவுதான். இதை ‘வேஸ்ட்’ என்று நிறுத்தி விட்டால் அந்தப் பணத்தை வேறு பற்பல கட்டுமானப் பணிகளுக்கு செலவிடலாம்தான். ஆனால், ‘வேஸ்ட்’ பற்றி பேசும் போது வேஸ்டாகப் போகும் மற்றப் பணத்தையும் பார்ப்போம்.

ஆட்டோமொபைல் துறையை ‘ஊக்குவிக்க’ 2014ல் அரசு விற்பனை வரிகளை குறைத்தது. அதில் வருடத்துக்கு 22,000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் வந்தது (8). இதில் கவனிக்க வேண்டியது, இந்த வரிக் குறைப்பு செடான் மற்றும் எஸ்.யூ.வி எனப்படும் சொகுசுக் கார்களுக்கும் கிடைத்தது. அதாவது பென்ஸ் கார் வாங்குபவரும் அரசின் வரிச் சலுகையை அனுபவித்தார். இந்த மாதிரி சொகுசுக் கார்களுக்கு கொடுத்த வரிச் சலுகையில் வந்த நஷ்டம் சுமார் 1,800 கோடிகள்.(9)

தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப் படும் மறைமுக வரிச் சலுகைகளில் ஆண்டுக்கு 7,500 கோடி அரசு இழக்கிறது. தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்வதில் இறக்குமதி வரியை அரசு தள்ளுபடி செய்ததில் 65,000 கோடி இழப்பு; ‘வாராக் கடன்’ போல ‘வாரா வரி’ என்று அரசு முழுக்குப் போட்டதில் 76,000 கோடி ரூபாய்கள். இதில் முக்கிய விஷயம் இந்த முழுக்குப் போட்டது பெருந்தொழிற் சாலைகள் என்று இருப்பவைகளில் இருந்து போனதுதான். இந்த மாதிரி பெருந் தொழிற்களுக்கு வரிச் சலுகைகள் கொடுப்பதை இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியே கூட விமர்சித்து இருக்கிறார் (10).

இந்த மாதிரி தொழிலதிபர்களிடம் இருந்து அரசுக்கு வராமல் போனதும், அரசே தள்ளுபடி மற்றும் சலுகைகள்  கொடுத்தது எல்லாம் சேர்த்து கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்கள் (11).

சரி, எந்த ‘வேஸ்ட்’ பற்றி இப்போது நாம் பேசலாம்? எதனை அரசு நிறுத்த வேண்டும் என்று போராடலாம்? பி.ஹெச்.டி படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கும் ஊதியம் 2,600 கோடிகளை நிறுத்த சொல்லலாமா? அல்லது பென்ஸ் கார் மாதிரி வாங்குபவர்களுக்கு கொடுக்கும் வரிச் சலுகையை நிறுத்த சொல்லலாமா? அல்லது மொத்தமாக ஆட்டோமொபைல்-களுக்கு தரும் 22,000 கோடி ரூபாய்களை  நிறுத்தலாமா? சரி, இந்த 30 லட்சம் கோடி இருக்கிறதே அந்தக் கடலில் கொஞ்சம் கை விட்டு அள்ளலாமா? இல்லையேல் அதெல்லாம் முடியாது என்று இந்த பி.ஹெச்.டி மாணவர்களின் 16,000 ரூபாயில் கை வைக்கலாமா?

தரவுகள்:

  1. SUV கார்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகையின் மூலம் உண்டாகும் இழப்பின் உண்மையான புள்ளி விபரம் கிடைக்கவில்லை. இங்கே குறிப்பிட்டிருப்பது, கடந்த வருடங்களின் விற்பனையில் இந்த வரிச் சலுகை சதவீதத்தைப் போட்டு செய்திருக்கும் ஒரு குத்துமதிப்பான கணக்குதான்