Sunday, 22 April 2018

கிழக்கும் மேற்கும்


.
(17th March 2018)

'ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உருவாக்கிய ரிலேட்டிவிட்டி தியரி பற்றிய குறிப்புகள் நம் பண்டைய வேதத்திலேயே இருக்கின்றன. சொல்லப் போனால் ஐன்ஸ்டைன் தியரியை விட வேதத்தில் உள்ள தியரி மேன்மையானது என்று மறைந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.'
இப்படி பேசி இருப்பவர் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன். மறைந்த விஞ்ஞானி பற்றி நிருபர்களிடம் பேசுகையில் இப்படி சொல்லி இருக்கிறார். 'வேதத்தில் எந்த இடத்தில் ரிலேட்டிவிட்டி பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது?' என்று ஒரு நிருபர் கேட்டார். 'ஹாக்கிங் எப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பேசினார்?' என்று இன்னொரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலாக 'நீங்கள் போய் தேடிப் பாருங்கள்; கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கா விட்டால் அப்புறம் நான் ஆதாரம் தருகிறேன்,' என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
நவீன விஞ்ஞானத்தின் சாதனைகளையும் பண்டைய நாகரிகங்களின் சாதனைகளையும் ஒப்பிடும் முயற்சிகள் இதற்கு முன்பே நிறைய நடந்திருக்கின்றன. பிரிஜாஃப் காஃப்ரா என்பவர் எழுதிய 'Tao of Physics ' என்பது இதில் முக்கியமான புத்தகம். எரிக் வான் டானிகன் எழுதிய 'Chariots of the Gods? இன்னொன்று. தமிழில் கூட சுஜாதா எழுதிய ‘கடவுள்’ எனும் புத்தகத்தில் ஆழ்வார் பாசுரங்களையும் சிவ புராண சுலோகங்களையும் குவாண்டம் மெக்கானிக்ஸ் தத்துவங்களுடன் ஒப்பிட்டு சிலாகித்து எழுதி இருப்பார்.
எதனால் இப்படிப்பட்ட ஒப்பீடுகளும், பண்டைய சிலாகிப்புகளும் நடக்கின்றன என்பது சரிவரப் புரியவில்லை. ஆனால் ஒன்று, பொதுவாக இந்த மாதிரி புத்தகங்கள் அடிப்படைவாதிகளுக்கு பெரும் ஊக்குவிப்பை தருகின்றன. தாவோ புத்தகத்தை மேற்கோள் காட்டாத ஆர்எஸ்எஸ் தொண்டரை நான் இதுவரை பார்த்ததில்லை. குரானில் இல்லாத வாழ்வியல் நெறிகள் வேறு எங்கும் இல்லை; அதைத் தாண்டி எதுவும் நான் யோசிக்க வேண்டியதில்லை என்பதுதான் இஸ்லாமியவாதிகளின் முக்கிய கொள்கை.
நான் நிறைய தடவை குறிப்பிட்டு உள்ளது போல பண்டைய நாகரிகங்கள் எல்லாமே நிறைய சாதனைகளைப் புரிந்து உள்ளன. இந்தியாவின் வேத நாகரிகம், மெசபடோமியா, எகிப்து, தென் அமெரிக்கா என்று எல்லாமே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி விட்டுத்தான் போயிருக்கின்றன. அவர்கள் போட்ட அஸ்திவாரத்தில்தான் நாம் எல்லாரும் பெருமையுடன் வீற்றிருக்கிறோம். ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அதைத் தாண்டி யோசிக்க எதுவுமே இல்லை என்பது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது.
கடவுள் புத்தகத்தில் சுஜாதாவே குறிப்பிடுவது மாதிரி, இப்படி எல்லாம் ஒப்பிடுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி தெரிந்திருந்தது, ப்ரோட்டான் துகளை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் உட்டாலக்கடி. ஆனால் நிறைய யோசித்து இருக்கிறார்கள். நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஆனால் புரியாதவை, புலனுக்கு எட்டாதவற்றை கடவுள் என்று பிராண்ட் பண்ணி விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் முன்னேற இயலாமல் போயிருக்கிறது.
மேற்கு நாகரிகம் அந்தக் கட்டத்தை தாண்டி முன்னேறி இருக்கிறது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நியால் ஃபெர்குசன் எனும் ஆய்வாளர் Civilisations எனும் தன் புத்தகத்தில் பட்டியலிட்டிருக்கிறார். அந்த லிஸ்டில் இருக்கும் முக்கிய காரணம் மத அடிப்படைவாதம். அரேபிய நாகரிகமும் சரி, இந்திய நாகரிகமும் சரி ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேறாமல் போனதற்குக் காரணங்களில் ஒன்று மதவாதிகளின் ஆளுமை, குறுக்கீடுகள் என்று அவர் வாதிடுகிறார். மேற்கத்திய சமூகம் மதவாதத்தை தள்ளி வைத்ததால் அறிவியலுக்கும், நிரூபணம் தேவைப்படும் ஆய்வுகளுக்கும் (empirical research) முன்னுரிமை தந்ததில் பெருமளவு முன்னேற முடிந்திருக்கிறது, என்று ஃபெர்குசன் எழுதுகிறார்.
இதனை நேரு புரிந்து வைத்திருந்திருக்கிறார். Scientific Temper என்று பொதுவாக சொல்லப்படும் அறிவியல்ரீதியான சிந்தனைதான் தேசத்தை முன்னேற்றும் என்று பெருமளவு நம்பினார். தன் புத்தகம் Discovery of Indiaவில் இந்தப் பதத்தை முதன் முதலில் பயன்படுத்துகிறார். பின்னர் சுதந்திரத்துக்குப் பின் தொடர்ந்து இதனை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். நேரு அளவுக்கு இந்தப் பதத்தை பயன்படுத்திய வேறு அரசியல்வாதி கிடையாது. அரசியல் சாசனத்திலேயே இந்திய மக்களின் கடமைகளில் ஒன்றாக ‘To develop scientific temper, humanism and the spirit of inquiry and reform’ என்பது உள்ளது.
சுதந்திர இந்தியா இந்த அளவுக்கு முன்னேறியதற்கே கூட மதங்களின் அடிப்படைவாதங்களை விட்டு விலகி பெருமளவு நவீனக் கண்டுபிடிப்புகளையும், நவீன சிந்தனாவாதங்களையும் பின்பற்றத் துவங்கியதேதான் காரணம் என்று சொல்லலாம். இதர காலனிய ஆதிக்க நாடுகள் பெருமளவு பிரச்சனைகளில் உழல்வதற்கு அவர்கள் அப்படி செய்யாததுதான் காரணம் என்றும் சொல்லலாம். பாகிஸ்தானில் குரான் பற்றி கேள்வி கேட்டால் தூக்கில் போடுகிறார்கள். பங்களாதேஷில் ப்ளாக் எழுதினால் கொலை செய்கிறார்கள். இலங்கையில் பன்மைக் கலாச்சாரத்தை வேரெடுக்கவே விடமாட்டேன் என்கிறார்கள். அதன் பலன்களை அந்த நாடுகள் அனுபவிப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்தியாவிலும் சமீப காலங்களில் இது துவங்கி இருக்கிறது. பகுத்தறிவுவாதிகள் கொலை செய்யப் படுகிறார்கள். டார்வின் ஒரு வேஸ்ட் என்கிறோம். ஹாக்கிங் வேதம் படித்து சிலாகித்தார் என்கிறோம். வேத காலத்தில் பிளேன் ஒட்டினோம், பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினோம் என்கிறோம். எப்படி இருந்த நாம் இப்படி ஆகி விட்டோம் என்கிறோம். ராமாயணம் உண்மையில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம் என்று வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் ‘அறிவிக்கிறார்’. ஆயுர்வேதம் மிகவும் உயர்ந்தது என்று அதற்கு ஒரு துறை அமைக்கப் படுகிறது. அதன் கீழ் நடக்கும் ஜல்லியடி ஆய்வுகள் சிலாகிக்கப் படுகின்றன. இதற்கு ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. சுதந்திரத்துக்குப் பின் வந்த மாற்றங்கள், செக்யூலரிஸம், இட ஒதுக்கீடு, பல்-சமய, பன்மைக்-கலாச்சார சூழல் எல்லாமே கேள்விக்கும, விமர்சனத்துக்கும் உள்ளாக்கப் படுகிறது. இவற்றைப் போற்றிய நேரு கேவலப் படுத்தப் படுகிறார்.
இந்த மாபெரும் அலையில் இடையில் வந்து மாட்டிக் கொண்ட ஹாக்கிங்-கும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

No comments:

Post a Comment