.
(7th March 2018)
திரிபுராவில் தேர்தல் முடிவுகள் வந்ததும் வெற்றிக்களிப்பில் பாஜக தொண்டர்கள் சேர்ந்து ஒரு கல்லூரி வாயிலில் இருந்த லெனின் சிலை ஒன்றை அகற்றி இருக்கிறார்கள். அதே போல வேறொரு இடத்தில் இருந்த இன்னொரு லெனின் சிலை ஒன்று உடைப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் குதூகலத்தில் பாஜக தலைவர் ஹெச் ராஜா அதே போல தமிழகத்தில் வெற்றி பெற்றால் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று ஒரு ட்வீட் பதிய பெரும் சர்ச்சை எழுந்து அவர் அந்த டீவீட்டை நீக்கும் நிலைக்குப் போயிற்று.
எனக்கு இதில் முதல் ஆச்சரியம் பெரியார் வழித்தோன்றல்கள் ஒரு சிலைக்காக இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதுதான். ஒரே ஒரு பெரியார் சீடராவது ‘ஒரு கற்சிலையில் என்ன இருக்கிறது? வேண்டுமானால் உடைத்துக் கொள்ளுங்கள்!’ என்று பேசுவார் என்று எதிர்பார்த்தேன். யாரும் பேசவில்லை. ஏறக்குறைய அந்த அர்த்தத்தில் பேசிய கமலையும் கூட ஸ்லீப்பர் செல் என்று கலாய்த்து விட்டனர். பகுத்தறிவு வழி நடப்பவர்களுக்கே சிலைகள் அத்தனை உணர்வுபூர்வமாக இருக்கிறது என்றால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்களுக்கு கோயிலில் உள்ள சிலைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கலாம்.
ஆனால் இதை விட முக்கியம் லெனின் சிலை வீழ்ந்த போது பாஜக அபிமானிகள் அடைந்த புளகாங்கிதம்தான். பெரியார் பற்றிய ராஜா ட்வீட் வந்ததும் உடனே பெரியார் பற்றிய அவதூறுகளும் இணைந்தே துவங்கி விட்டன. சிகரம் வைத்தாற்போல சிலர் ரஷ்யாவில் சோவியத் ஆட்சி நொறுங்கியதும் அங்கே இருந்த லெனின் சிலைகள் சில வீழ்த்தப்பட்ட படங்களைப் பகிர்ந்து ரஷ்யாவிலேயே லெனின் சிலைகளை உடைத்திருக்கின்றனர் பாருங்கள் என்று வாதிடுகின்றனர்.
ரஷ்யாவில் நடந்ததால் இந்தியாவில் நடப்பது சரி என்கிறீர்களா? ஆம் என்றால் அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒரு கொள்கை தோற்று அதன் ஆட்சி முடிவடைந்து வேறொரு ஆட்சி வந்தால் அந்த முந்தைய கொள்கையின் சின்னங்கள் அகற்றப்பட, உடைக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜக அபிமானிகளின் நிலைப்பாடா? அப்படியானால் உலகெங்கிலும் நிறைய இடங்களில் இப்படி சிலைகள் உடைக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றி பெற்றதும் அங்கிருந்த மாபெரும் பாமியான் புத்தர் சிலை குண்டுகள் வீசி தகர்க்கப் பட்டது. சிரியாவில் ஐஎஸ் வெற்றி பெற்றதும் அங்கிருந்த பண்டைய பால்மைரா கோயில்களை தகர்த்திருக்கின்றனர். இவை எல்லாம் நியாயமான நடவடிக்கைகள் என்று பாஜக அபிமானிகள் கருதுகிறீர்களா?
சரி, அவ்வளவு தூரம் போக வேண்டாம். பண்டைய இந்தியாவிலேயே இஸ்லாமிய சுல்தான்கள் வெற்றி பெற்று சாம்ராஜ்யங்களை கைப்பற்றியதும் கோயில்களை இடித்து அங்கிருந்த சிலைகளின் முகங்களை சேதப்படுத்தி இருக்கின்றனர். முந்தைய ஆட்சி தோற்று புதிய ஆட்சி வென்றதன் வெளிப்பாடு அது. இப்போது திரிபுராவில் லெனின் சிலைகள் உடைபடுவது சரிதான், நாளை தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் அல்லது உடைக்கப்படும் என்று நீங்கள் வாதாடினால் கோயில் சிலைகளை சேதப்படுத்தியதும் சரிதான் என்று அலாவுதீன் கில்ஜி சார்பில் வாதாட முடியும் அல்லவா? அப்புறம் பாபரின் சேனாதிபதி அயோத்தியில் செய்த காரியத்தை நீங்கள் எப்படி தவறென்று விமர்சிக்க முடியும்?
விஷயம் இதுதான்: ஜனநாயகத்தில், மனித உரிமைகளில், பன்மைக் கலாச்சார வாழ்வியலில் நம்பிக்கை உள்ளவர்கள் கலாச்சார சின்னங்களை வரலாற்றின் அங்கமாகவே கொள்வார்கள். அந்த சின்னங்களை போற்றிப் பாதுகாப்பார்கள். கலாச்சார சின்னங்கள் அகற்றப்படுவது, நாசப்படுத்தப் படுவது என்பது உண்மையில் ஃபாசிசத்தின் வெளிப்பாடு. உலகம் முழுக்க ஃபாசிசவாதிகள் மட்டுமே இந்தக் காரியத்தை செய்திருக்கிறார்கள். ஜெர்மனியில் நாஜிகள், மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், சவுதியில் வஹாபிகள், சீனாவில் கம்யூனிஸ்டுகள், இலங்கையில் சிங்கள வெறியர்கள் என்று இவர்கள்தான் இந்தக் காரியத்தைப் போற்றிப் புகழ்வார்கள். ஊக்குவிப்பார்கள். உலகம் முழுக்க ஃபாசிசவாதிகள் வென்றதும் அவர்களின் முதல் குறி பிந்தைய கலாச்சாரத்தின் சின்னங்கள் மற்றும் இலக்கியங்கள் இவைதான். முதலில் இவற்றை அழிப்பார்கள், எரிப்பார்கள். அவை தீர்ந்து போனதும் மனிதர்களை எரிக்கத் துவங்குவார்கள்.
இந்தியாவில் இப்போது கலாச்சார சின்னங்கள் மேல் கவனம் துவங்கி இருக்கிறது. அடுத்ததாக...

No comments:
Post a Comment