.
(16 December 2017)
(16 December 2017)
முத்தலாக் பயன்படுத்தி மனைவியை விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் சட்ட வடிவம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றிருக்கிறது. இது அவையில் நிறைவேறி விட்டால் முத்தலாக் பயன்படுத்துவோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
இது தேவையற்ற செயலாக எனக்குப் படுகிறது. முத்தலாக் சட்ட விரோதம் என்றும் மத ரீதியாகக் கூட அதற்கு அங்கீகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் அறுதிபட கூறியாகி விட்டது. அப்படி இருக்கும் போது ஒருவர் தன் மனைவியிடம் மும்முறை தலாக் அறிவித்தால் அது செல்லுபடி ஆகாது. ஒரே ஒரு முறை தலாக் கூறியதாகத்தான் எடுத்துக் கொள்ளப் படும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இஸ்லாமிய சமூகத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்தினாலே போதுமானது.
முத்தலாக் என்பது ஏறக்குறைய மனைவியை திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு துரத்துவது போன்றது. அது இதர மதத்தவரிடமும் நடக்கிறது. அப்போது அவர்களும் சிறைக்கு செல்ல வேண்டியதுதானா?
மூன்று வருடம் சிறை என்பது கலவரம் செய்பவர்களுக்கு, சில வகை கொலைகளுக்கு வழங்கப்படும் தண்டனை. அதனை இன்ஸ்டன்ட் விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு வழங்க முனைவது பெருந்தவறு. இஸ்லாமிய சமூகத்தின் மேல் இந்த அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது.
சரி, மனைவியிடம் சொல்லி விட்டு வீட்டை போவது குற்றம் என்றால், சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி அப்புறம் 'எனக்கு மனைவியே இல்லை,' என்று அஃபிடவிட் கொடுப்பதை அதை விடப் பெருங்குற்றம் என்று பொருள் கொள்ளலாமா? அதற்கு எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்?
==========================================================
முத்தலாக் பற்றிய பதிவில் பிரதமரை வம்புக்கு இழுத்திருக்கிறேன் என்று கமெண்டுகள் வருகின்றன. வெறும் லைக்-குகளுக்காக அல்லது மதச்சார்பின்மையை நிரூபிப்பதற்காக அப்படி செயகிறேன் என்றும் கமெண்டுகள்.
என் லைக்குகளை நான் கணக்கு செய்து கொண்டிருப்பவன் அல்ல. மேலும் இவ்வளவு வருடம் கழித்து புதிதாக என் மதச்சார்பின்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று நம்புகிறேன்.
அது ஒரு புறம் இருக்க, பிரதமரின் மணவாழ்வு அவரின் தனிப்பட்ட பிரச்சினை என்று நம்புகிறவன். அந்த சர்ச்சை வெளிவந்த போது கூட பிரதமரை இந்த விஷயத்தில் நெருக்கக் கூடாது என்று பதிவு எழுதியவன். பிரைவசியின் தேவையில் பெரும் நம்பிக்கை உடையவன்.
ஆனால் பிரதமருக்கு இருக்கும் அதே உரிமை, அதே பிரைவசி தனி மனிதனுக்கும் இருக்க வேண்டும். முத்தலாக் சட்டம் அந்த உரிமையை பறிக்கிறது. உரிமையை குற்றமாக்கி அவனை சிறைக்கு தள்ளுகிறது. இது தவறு என்று வாதிட என்னிடம் இருந்த குறிப்புகளில் சக்தி வாய்ந்த குறிப்பு பிரதமர்தான். பிடிக்காத மணத்தில் இருந்து தானே வெளிவந்த பிரதமருக்கு முத்தலாக்கை குற்றமாக்குவது தவறு என்று சொந்த அனுபவத்தால் புரிந்திருக்க வேண்டும். அது புரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டினேன்.
அவ்வளவுதான்.

No comments:
Post a Comment