Sunday, 22 April 2018

குற்றமும் தண்டனையும்


.
சிறார் வல்லுறவு குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது பற்றி நான் எழுதி இருந்த பதிவில் நிறைய வருத்தமான, கோபமான கமெண்டுகள் வந்திருந்தன. ‘சிறார் மேல் பாலியல் ஆர்வம் கொள்வது peadophilia எனப்படும் மனநோய். இது ஒரு வகையான சைக்கோத்தனம்தான், இது வேறு, பெண்கள் மேல் தொடுக்கப்படும் பாலியல் வல்லுறவு வேறு,’ என்று ஹரி வேறு விளக்கி இருந்தார். அது உண்மைதான்.
ஆனால் சைக்கோ என்றதும் 'சிகப்பு ரோஜாக்கள்' அல்லது 'The Silence of the Lambs' ரேஞ்சுக்குத்தான் யோசிப்போம். கத்துவா சம்பவத்தை வைத்தும் அப்படிதான் யோசிக்கத் தோன்றும்.
இந்த பீடஃபைல் சைக்கோக்கள் பொதுவாக அப்படி இருக்க மாட்டார்கள். நம் வீட்டில் மாமா, சித்தப்பா அல்லது மாடி வீட்டு அங்கிள் இப்படித்தான் இருப்பார்கள். நைச்சியமாக வீட்டில் இருந்து கொண்டே நம் குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்துக் கொண்டே வேலையை நடத்திக் கொண்டு இருப்பார்கள். தேசிய குற்றவியல் ஆய்வுக் கழகத்தின் 2016 அறிக்கையின் படி தேசத்தில் அரங்கேறும் சிறார் பாலியல் குற்றங்களில் 94.6 சதவிகிதம் சம்பந்தப்பட்ட சிறுமியின் உறவினர் அல்லது குடும்ப நண்பர் இவர்களாலேயே நிகழ்த்தப் பட்டிருக்கின்றன.
யோசித்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் மாமா இப்படி செயகிறார் என்று தெரிய வந்தால், அவரை மாட்டி விட்டால் அவருக்கு மரணம் சாத்தியம் என்றால், என்ன செய்வீர்கள்? நீங்கள் கோபத்தில் புகார் கொடுக்க எத்தனித்தாலும் அத்தை மற்றும் இதர உறவினர்கள் விடுவார்களா? மாடி வீட்டு அங்கிள் மாட்டினால் மாடி வீட்டு ஆன்டி எப்பாடு பட்டாவது அதனை தடுக்கப் பார்க்க மாட்டார்களா? எனவே இந்த அவசர சட்டம் குற்றத்தை வெளிக்கொணர்வதற்குப் பதில் மறைக்கத்தானே உதவும்?***
இதையே சிறைத்தண்டனை என்றாலும் அப்படி நடக்கலாமே என்று வாதிடலாம். ஒருவர் சிறைக்குப் போவார் என்றால் நம் அணுகுமுறை வேறு, அதே நேரம் தூக்கில் தூங்குவார் என்றால் வேறு. உங்கள் புகாரால் ஒருவர் சாகும் நிலை வந்து அந்தக் கறை உங்கள் கைகளில் படர நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். ‘அவனை வெட்டு, குத்து’, ‘அந்த நாட்டின் மீது அணுகுண்டு வீசு!’ என்றெல்லாம் முகநூலில் பதிவிடுவது சுலபம். நம் கண் முன்னால் ஒரே ஒரு ஆள் கையை வெட்டினால் அடுத்த பத்து ஆண்டுகள் நம்மால் சரியாக தூங்க முடியாது.
அப்போது என்ன செய்வோம்? அந்த மாமாவையோ அங்கிளையோ நாலு சாத்து சாத்திவிட்டு, ‘ஏரியாப் பக்கமே வராதே!’ என்று சொல்லி துரத்தி விடுவோம். அந்த மாமாவோ வேறு ஏரியாவுக்குப் போய் தன் ஹாபியை செவ்வனே தொடருவார்.
எனவே இந்த அவசர சட்டம் உண்மையில் ஒரு அவசரக் கோலம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நிறைய பொய்க்கேஸ்கள் போடப்படும் என்பதில் துவங்கி நிறைய சம்பவங்கள் வீட்டுக்குள்ளேயே போட்டுப் புதைக்கப் பட்டு விடும் சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆகவே இந்த சட்டம் தவறு என்கிறேன்.
அது ஒரு புறம் இருக்க, இதில் நமக்கும் ஒரு கடமை இருக்கிறது.
நம்மில் இன்னும் நிறையப் பேருக்கு பீடஃபைல் பற்றிய விழிப்புணர்வு இல்லை. நமக்கு கிடைத்த அறிவெல்லாம் ஹாலிவுட் சைக்கோ படங்கள் மூலம்தான். அது மாறவேண்டும். பீடஃபைல் பற்றியும் அதன் உடனடியான ஆபத்து பற்றியும் நமக்குத் தெரிய வேண்டும். நம் பிள்ளைகள் இதற்கு ஆட்பட்டுக் கொண்டு இருந்தாலும் உடனே சொல்ல மாட்டார்கள். அது பற்றிய குற்றவுணர்வு, வெட்கம், புரிதலின்மை போன்றவை அவர்களை தடுக்கும். கூடவே ‘நம்ம மாமாதானே!’ என்னும் அந்நியோன்னியமும் சேர்ந்து அந்தப் புரிதலின்மையை அதிகரிக்கும். ஆனால் வருடங்கள் கூடக் கூட அந்த அனுபவம் அவர்கள் மனதில் ஆறா வடுவை விதைத்து பெரும் உளவியல் பிரச்சனைகளை எதிர்காலத்தில் விளைவிக்கும்.++++
எனவே சும்மா ‘வெட்றா அவனை!’ என்று சதா விறைப்பாகவே அலையாமல் பிரச்சனையை ஆழப் புரிந்து கொண்டு நாம் அதற்கான நடைமுறை தீர்வுகளை தேட வேண்டும். அந்த மாமனை விட அந்தச் சிறுமியின் எதிர்காலத்தை யோசிக்க வேண்டும். அந்த வடு ஆறுவதற்குத் தேவையான கவுன்சிலிங் மற்றும் உளவியல் தெரபியை அந்தச் சிறுமிக்கு வழங்க வேண்டும். நம் உறவினர்களை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நம் பிள்ளைகளிடம் நேரும் அதீத மாற்றங்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கடைசியாக இந்த மாதிரி விஷயங்களில் தெளிவான தீர்வுகளை கொடுக்கும் திறமையோ அறிவோ நம் அரசுகளிடம் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
.
.
.
*** - இது பற்றி புரிந்து கொள்ள மீரா நாயர் இயக்கிய Monsoon Wedding படத்தைப் பாருங்கள்.
++++ - அமீர் கான் தயாரித்த சத்யமேவ ஜெயதே தொடரில் இது பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதனைப் பார்க்க இங்கே சுட்டவும்.

No comments:

Post a Comment