யோகா இன்றைக்கு மிகப் பெரிய வணிக நிறுவனமாகி விட்டது. அமெரிக்காவில் மட்டுமே இன்றைய தேதிக்கு ஒன்றரைக் கோடிப் பேர் யோகா பயில்கின்றனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. இன்று உலக யோகா தினம் கொண்டாடப் படுகையில் டெல்லி இந்தியா கேட் அருகே பிரதமரே கலந்து கொண்டு சிறப்பித்த பெரும் யோகப் பயிற்சிக் கூட்டம் கின்னஸ் சாதனை செய்யும் அளவுக்குப் போயிருக்கிறது.
இந்த உலக யோகா தினத்துக்கு போவதில் கொஞ்சம் பிரச்சனைகளும் இல்லாமலில்லை. மத்திய அரசு பள்ளிச் சிறுவர்கள் எல்லாம் யோகா செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் இருந்து கொஞ்சம் எதிர்ப்பு எழுந்து, யோகா ஹிந்து மதத்தை சேர்ந்ததா இல்லையா என்பதில் கொஞ்சம் விவாதங்கள் நடந்து, யோகா எத்தனை புராதனமானது, எவ்வளவு புனிதமானது என்கிற அளவுக்கு போயிருக்கிறது. குறிப்பாக மத்திய தர முன்னேறிய சாதியினர் ‘யோகா பற்றி தவறாக பேசினால் கையை ஒடிப்பேன்,’ என்று பாயத் துவங்கி விட்டனர்.
ஆகவே யோகா-வின் பழைமை வரலாறு பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று யோசித்தேன்.
சிலர் யோகா சிந்து சமவெளி நாகரீகத்திலேயே இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள் (கிமு 3500). அங்கே கிடைத்த சில சித்திரங்களில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் உருவங்கள் ஒன்றிரண்டு இருந்திருக்கின்றன என்பது மட்டுமே இதற்கு ஆதாரம். அது நம் இந்தியர்கள் சாதாரணமாக அமரும் நிலைதான் என்பது ஒருபுறம் இருக்க இந்த தியரி ஒரு ஆதார தவறை செய்கிறது. அதாவது யோகா என்பது ‘ஆசனங்கள்’ மட்டுமே என்கிற சிந்தனையின் பேரில் வரும் தியரி இது. யோகா என்பது வெறும் ஆசனங்கள் மட்டுமே என்கிற நிலை வந்தது 19ம் நூற்றாண்டில்தான்.
யோகா என்கிற வார்த்தை ரிக் வேதத்திலேயே இருக்கிறது (கிமு 1500). ஆனால் அந்த வார்த்தை குதிரை அல்லது மாடுகளை வண்டியில் பூட்டுவதற்கு பயன்படுத்தும் கட்டையைக் குறிக்கும் வார்த்தை. (ஆங்கிலத்தில் இதற்கு பயன்படுத்தும் yoke என்னும் வார்த்தை இதில் இருந்துதான் வந்தது.) இதில் இருந்துதான் யோகம் என்னும் வார்த்தையும் வந்திருக்கிறது. அதாவது மனதை அடக்கி, சமனப் படுத்தி, பிரம்ம சக்தியிடம் பூட்டுவது.
பகவத் கீதையிலும் யோகா வருகிறது (கிமு 400-500) ஞானத்தை அடைய (enlightenment) கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்கிற மூன்று பாதைகள் கிருஷ்ணரால் குறிப்பிடப் படுகின்றன. இந்த மூன்றிலும் கூட ஆசனங்கள் கிடையாது.
யோகா உபநிடதங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது (கிமு 300-கிபி 100). ஆனால் அதிலும் யோகா அதாவது ‘யோகம்’ என்பது ஒரு தியான நிலையில் மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் கடவுளை அடைவது என்கிற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
கடைசியாக இன்றைய யோகா-வுக்கு ஆதாரமாக பெரும்பாலும் எல்லாரும் குறிப்பிடுவது பதஞ்சலியின் யோக சூத்திரம் எனும் புத்தகம்தான் (கிபி 300). ஆனால் இதிலும் இன்றைய ஆசனங்கள் பற்றியெல்லாம் பெரிய அளவு விளக்கங்கள் இல்லை. தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி செய்பவர் சகஜமான நிலையில் உட்கார வேண்டும் என்று மட்டும்தான் பதஞ்சலி குறிப்பிடுகிறார்.
அதாவது சிந்தனைப் கட்டுப் பாட்டில் தியான நிலை என்கிற அர்த்தத்தில்தான் யோகம் என்கிற வார்த்தை பெரும்பாலும் அப்போது பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் உடலை போஷிப்பதையே பதஞ்சலி தூற்றுகிறார். உண்மையான யோகிகள் உடலை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள் என்று சொல்கிறார். அது உண்மைதான். அவர் காலத்தில் யோகிகள் என்று அறியப்படுபவர்கள் உடல் என்கிற கட்டுப் பாடுகள் இல்லாத காரியங்கள் செய்வார்கள் (என்று நம்பப் பட்டது). அதாவது யோகிகள் தண்ணீரில் நடப்பார்கள், பறப்பார்கள், கண்ணுக்குத் தெரியாமல் உலாவுவார்கள்.
இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் யோகிகள் என்கிற வார்த்தை பண்டைய காலத்தில் நிறைய அர்த்தங்களை குறித்தது. சில யோகிகள் மேற்சொன்ன ‘சித்து வேலைகள்’ செய்வார்கள். சிலர் போதை மருந்துகளை உட்கொண்டு கடவுளர் பற்றிய மாயத் தோற்றங்களை காண்பார்கள். (எல்.எஸ்.டி. சாப்பிட்டு நிறையப் பேர் அமெரிக்காவில் இயேசு கிறிஸ்துவை பார்த்து பேசியெல்லாம் இருக்கின்றனர்!).
இவர்கள் வணங்கும் கடவுள் ருத்ரன் எனப்படும் வேதக் கடவுள். (இந்த ருத்ரன் பிற்காலத்தில் சிவனின் ஒரு வடிவமாக ஆக்கப்பட்டு விட்டார். இவரின் இன்னொரு பெயர்தான் யோகேஸ்வரன் - அதாவது யோகிகளின் ஈஸ்வரன்.)
இதே யோகிகள் பிற்காலத்தில் இந்த ‘உடலை வெறுக்கும்’ வேலையை கொஞ்சம் ஓவர்-ஆகவே செய்து காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது இவர்கள்தான் உடலை ‘மலம், மூத்திரம், சீழ் இவற்றால் ஆன கலவை’ என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்தவர்கள். உடலை ஒரு பொருட்டாக மதிக்காமல் பெரும் குளிரில் பாதுகாப்பே இல்லாமல் நடப்பார்கள். உடைகள் அணியாமல் நிர்வாணமாக உலவுவார்கள். மண்டையோட்டை தட்டாக வைத்து சாப்பாடு போட்டு சாப்பிடுவார்கள். (நிறையப் பேர் மனிதக் கழிவை உண்டு நாளைக் கடத்துவதும் உண்டு.) இவர்கள் செய்யும் ஒரே ‘ஆசனம்’ ஒற்றைக் காலில் தவமிருப்பதுதான். இந்த ஒற்றைக் கால் தவசி யோகிகள் மக்களின் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானார்கள். (மாமல்லபுரத்தில் - இதே கிண்டலில் செய்யப் பட்ட - ஒற்றைக் காலில் தவமிருக்கும் பூனையின் சிற்பம் ஒன்று உள்ளது.)
இந்த மாதிரி எல்லாம் செய்ததால், அப்போது (5 முதல் 10ம் நூற்றாண்டு) யோகிகள் பொதுவாக பைத்தியக் காரர்கள் அல்லது மந்திரவாதிகள் என்றுதான் மக்களால் கருதப் பட்டார்கள். இவர்களைப் பார்த்து நிறையப் பேர் பயந்தார்கள். யோகிகள் எனப்படுபவர்கள் பொதுவாக சம்பிரதாய வழிபாட்டு முறைகளுக்கு எதிரானவர்கள் என்கிற தோற்றமே பெரும்பாலும் இருந்தது. யோகிகள் ‘மந்திர சக்தி’ வாய்ந்தவர்கள் என்று நம்பியதால் அவர்கள் மேல் பாலியல் ரீதியான பயமும் இருந்தது. சில ‘நல்ல யோகிகள்’ வாழ்த்தினால் அவர்களின் ‘செலவிடாமல் சேமித்து வைத்த விந்து சக்தியால்’ பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் ஒரு நம்பிக்கை இருந்தது. இதே போர்வையில் சில ‘போலி யோகிகள்’ தங்களை அண்டிய பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதும் அப்போதே நடந்திருக்கிறது. பின்னர் 12 முதல் 15ம் நூற்றாண்டுகளில் இந்த தாந்திரீக முறைகளும் சேர்ந்து கொண்டதால் யோகிகளுக்கு இருந்த கெட்ட பெயர் இன்னும் மோசமானது. இந்த காலகட்டத்தில் தான் ‘ஹட யோக ப்ரதீபிகா’ என்கிற புத்தகம் பிரபலமானது. ‘ஹட’ என்றால் force என்று அர்த்தம். இந்த புத்தகத்தில்தான் குண்டலினி என்கிற முறையில் முதுகுத் தண்டின் கீழ் உறங்கிக் கிடக்கும் பாம்பு போன்ற ஒன்றை யோக முறையில் மேலே ஏற்றி ஏற்றி மூளைக்கு கொண்டு செல்லும் முறை குறிப்பிடப் பட்டிருந்தது. இதிலும் ஒரு பெண்ணுடன் கலவி கொள்ளும் யோகி அவளின் ‘சக்தி’ முழுவதையும் உறுஞ்சி தனதாக்கிக் கொள்ள முடியும் என்கிற அளவுக்கு பாலியல் ரீதியான பயமுறுத்தும் விஷயங்கள் நிறைய இருந்தன . இவை நிலைமையை இன்னும் மோசமாக்கின.
ஆதி சங்கரரின் சீடர்கள் இந்த உடல் ரீதியான யோகா முறைகளை முழுவதுமாக புறக்கணித்தனர். இந்தக் கால கட்டத்தில் படித்த ஹிந்துக்கள் யோகிகளை முழுவதுமாக ஒதுக்கி விட்டனர். ‘ஹட யோக ப்ரதீபிகா’ புத்தகம் ஹிந்துக்களுக்கு ஒரு அவமானமாச் சின்னமாகவே இருந்தது. 19ம் நூற்றாண்டை சேர்ந்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய, சுவாமி தயானந்த சரஸ்வதி ஹட யோகா ப்ரதீபிகா புத்தகத்தை ஆற்றில் விட்டெறிந்த ஒரு கதையும் இருக்கிறது.
சுவாமி விவேகானந்தரும் ஹட யோகத்தை அறவே ஒதுக்கி தானே ராஜ யோகம் என்கிற யோக வழியை பின் பற்ற வலியுறுத்தினார். பல்வேறு ஹிந்து தத்துவ வழிகளில் இருந்து கலந்து எடுக்கப் பட்ட இந்த வழியே எல்லா யோகத்திலும் உயர்ந்தது என்று கருதினார் (எனவேதான் அந்தப் பெயர்.)
இந்த மாதிரி சங்கடகரமான விஷயங்களால் பிரிட்டிஷாரும் கூட யோகிகள் என்பவர்களை வெறுத்தனர். மேற்சொன்ன பிரச்சனைகள் போதாதென்று பிரிட்டிஷ் அரசை வன்முறை ரீதியாக எதிர்த்த ‘தீவிரவாதக்’ குழுக்கள் நிறைய யோகா நிலையங்கள் என்கிற போர்வையில்தான் இயங்கின. இதனால் யோகா நிலையங்களையே சட்ட விரோதமாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
அந்தக் கால கட்டத்தில் யோகா-வும் பாலியலும் கூட கலந்தே பார்க்கப் பட்டது. பண்டைய காலத்து சிந்தனையான யோகிகளின் ‘பாலியல் சக்தி’யும் மத்திய காலத்து தாந்திரீக முறைகளும் கலந்து யோகிகள் அல்லது யோகா என்றாலே செக்ஸ் என்னும் பார்வையும் மக்களிடம் இருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் சர் ரிச்சர்ட் பர்ட்டன் 1883ல் பதிப்பித்த காம சூத்ரா என்னும் புத்தகத்தில் ‘ஆசனங்கள்’ பற்றி குறிப்பிடுகிறார். 1902ல் தாமஸ் எடிசன் எடுத்த Hindu Fakir என்னும் ஆவணப் படத்தில் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக யோகா செய்யும் படங்கள் அமெரிக்காவில் பிரசித்தி பெற்றன.
இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ‘நவீன’ யோகா உருப் பெற ஆரம்பித்தது. கொஞ்சம் பிரிட்டிஷ் உடற்பயிற்சி முறைகள், அமெரிக்க transcendentalism, ஸ்வீடனின் ஜிம்னாஸ்டிக்ஸ், YMCA-வின் பயிற்சிகள் இவற்றை சேர்த்து ஒரு கலவையாக உடற்பயிற்சி முறைகள் உருவாகின. இந்த முறை யோகா உருவாக ஐரோப்பியர்கள், பிரிட்டிஷ் அரசு மற்றும் தேசியவாதப் போராட்ட வீரர்கள் மூவரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் மற்றும் பிரிட்டிஷார் அவர்களின் உடற்பயிற்சி முறைகளை இதனுள் புகுத்த, தேசியவாதிகள் உடலை வலிமைப் படுத்தும் வழியாக யோகாவை மாற்றும் முயற்சியில் இந்த மாறுதல்கள் நிகழ்ந்தன.
ஆகவே, இன்று நாம் யோகா என்று புரிந்து கொள்ளும், பயிற்சி செய்யும் கலை உண்மையில் பல்வேறு மூலங்களில் இருந்து வந்து சங்கமித்த ஒரு விஷயம். முக்கியமாக டி. கிருஷ்ணமாசார்யா என்பவர் 1930 முதல் 1950 வரை உருவாக்கிய உடற் பயிற்சி முறைகள் மைசூர் அரச ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் இருந்து எடுக்கப் பட்டது. இவையும் யோகாவில் சேர்ந்து கலந்தன.
மேலும் பி.கே.எஸ். ஐயங்கார் 1966ல் பதிப்பித்த Light On Yoga புத்தகத்தில் இருந்த பயிற்சி முறைகள் நிறைய 1930லேயே மேற்கத்திய பயிற்சி முறைகளில் வழக்கத்தில் இருந்தன. அவை பெரும்பாலும் மேற்கத்திய பெண்களுக்கான ‘மென்மையான’ உடற்பயிற்சியாக பழக்கத்தில் இருந்தவைதான். இந்தப் புத்தகங்கள் மற்றும் யோகா மேற்கு நாடுகளுக்கு போன பிறகு இந்தப் பயிற்சிகள் ‘பெண்களுக்கான யோகா’ என்று ஆகி விட்டன. (ஆண்கள் இதற்கு மாறாக ‘கடுமையான’ உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.) இன்றும் கூட பார்த்தால் ஆண்களை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக பெண்களே யோகா பயிற்சி செய்கின்றனர்.
விவேகானந்தர் ஹட யோகாவை புறந்தள்ளி விட்ட பிறகு இந்திய ‘யோகிகள்’ ஹட யோகத்தில் இருந்த ‘சங்கடகரமான’ விஷயங்களை விட்டு விட்டு ஆங்காங்கே இருந்த சகஜ ஆசனங்கள், பண்டைய இந்தியாவில் இருந்த மூச்சுக் கட்டுப்பாடு (பிராணாயாமம்) என்று பலவற்றை கட்டுக் கலந்து ஒரு யோகா-வை உருவாக்கினார்கள். இதில் பண்டைய இந்தியாவில் இருந்த ‘சங்கட’ யோகா-வை விட்டுத் தள்ளி நவீன யோகா-வில் இருந்த நல்ல விஷயங்களை சேர்த்து இதுதான் பண்டைய யோகா என்று ஒன்று உருப் பெற்றது. அதாவது பழைய விஷயத்தில் புதிய விஷயங்கள் புகுந்து ஆனால் அதுதான் பழைய விஷயம் என்று ஆகி விட்டது. இந்த மாதிரி நடப்பதற்கு ஆங்கிலத்தில் palimpsest என்று சொல்வார்கள்.
பின்னர் இந்த ‘நவீன யோகா’-வுக்கு நிறைய குருமார்கள் உருவாகி 1950 மற்றும் 60களில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் பிரபலமடைய வைத்தார்கள். ஹென்றி தொரோ என்னும் அமெரிக்க யோகி கொஞ்சம் பதஞ்சலி, கொஞ்சம் தாந்திரீகம் என்று கட்டுக் கலவையாக ஒரு யோகா உரையை நிகழ்த்த ‘யோகா’ பண்டைய இந்தியக் கலை என்கிற எண்ணம் இன்னும் வலுப் பெற்றது.
கடைசியாக, இன்றைய யோகா என்று நாமெல்லாரும் புரிந்து கொள்ளும் ஆசனங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் உபநிஷதங்களுக்கும் ஹட யோகத்துக்கும் ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு விஷயம். இரண்டு நூற்றாண்டு காலனி ஆதிக்கத்தில் பல்வேறு கலைகள், பழக்கங்கள் கலந்து புதிய கலை உருவாகி அதுவே பண்டைய கலையாக உருமாறிய மாயம்தான் யோகா. கண்டிப்பாக பண்டைய இந்தியாவில் யோகா என்று ஒன்று இருந்திருக்கிறது. ஆனால் அது சுத்தமாக வேறு ஒரு விஷயம். இந்தியா கேட்டில் 35,000 பேர் பண்ணியது நவீன யோகா. அதனை ஐரோப்பியர்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அதனை மெருகேற்றி நிறைய பங்களித்து ஒரு ‘சங்கடகரமான’ விஷயத்தை பெருமையான விஷயமாக மாற்றித் தந்திருக்கிறார்கள். யோகா ஐரோப்பியக் கலை அல்ல. முழுமையான இந்தியக் கலையும் அல்ல. முதல் முதலில் உலகமயமான, வணிகமயமான உலகக் கலை.
-----------------------
தரவுகள்:
On Hinduism – Wendy Doniger, Penguin India
Rig Veda – Wendy Doniger
Raja Yoga – Swami Vivekananda
Eight Upanishads – Swami Gambhiranandha
Not as Old as You Think - Meera Nanda