Thursday 14 January 2016

ஜல்லிக் கட்டு - பாகம் 1 (பீட்டா)

Big Girl, one of the dogs that was abused by their owners and left to die. PETA put her to sleep.
ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக பெரும் ஆரவாரத்துடன் கருத்துகள் முன் வைக்கப் பட்டுக் கொண்டு வருகின்றன. என் முகநூல் கணக்கில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு என்னை டேக் செய்து பதிவுகள் வந்திருக்கின்றன. இன்பாக்ஸில் கொஞ்சம் பாராட்டியும் மிக அதிக அளவு விமர்சித்தும் வந்திருக்கின்றன. பாட்டி தவிர என் வீட்டில் உள்ள எல்லாப் பெண்களும் வீதிக்கு இழுத்து வரப் பட்டு விட்டார்கள்.


இன்றும் நேற்றும் ஜல்லிக்கட்டு பற்றி வந்த பதிவுகள், திட்டுக்கள் அளவுக்கதிகமாக இருந்ததால் முழுமையாக பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. எனவே தனித் தனியாக பதில் அளிக்க இயலாததற்கு வருந்துகிறேன். ஆனால் அந்தக் கேள்விகள் இன்னமும் கொஞ்சம் தொக்கி நிற்கின்றன. எனவே அவற்றை இங்கே ஆராயலாம் என்று முனைந்தேன்.


முதல் முதலில் PETA பற்றி பேசலாம். அவர்கள் நாய் பூனைகளை கொல்கிறார்கள் என்பதை பெரிய வாதமாக முன் வைக்கிறார்கள். எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் விகடன் இணைய தளத்திலேயே இதை ஒரு கட்டுரையாக போட்டிருந்தார்கள் (1). அதை விட பெரிய ஆச்சரியம் ‘ரத்தக் கறை படிந்த பீட்டா-வின் உண்மை முகம்!’ என்றும் ‘அதிர்ச்சிப் பின்னணி’ என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் கொடுக்கும் ஒரே ஆதாரம் ஹஃபிங்க்டன் போஸ்ட் என்கிற இணைய தளத்தில் வந்த கட்டுரை (2). பாதிக்குப் பாதி விஷயங்கள் ‘சொல்லப் படுகிறது’, ‘கூறப்படுகிறது’ என்றெல்லாம் சாமர்த்தியமாக எழுதி உள்ளனர். யார் கூறினார்கள், யார் சொன்னார்கள் என்பதெல்லாம் பற்றி கவலையே படவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பீட்டா-வின் இணைய தளத்துக்கு போய் பார்த்தோ அல்லது அவர்கள் அலுவலகத்துக்கோ கூட போன் பேசி விசாரித்து இருக்கலாம். அப்படி செய்யாமல் ஒரு பக்க வாதத்தை மட்டுமே கொடுப்பதன் மூலம் கட்டுரையாளரின் நோக்கம் என்ன என்பதை சொல்லி விடுகிறார்.


இப்போது அந்தக் குற்றச்சாட்டை பார்ப்போம்.


பீட்டா ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான விலங்குகளை கருணைக் கொலை செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களும் அதனை மறைக்கவோ மறுக்கவோ செய்வதே இல்லை. இதை வைத்து பீட்டா விலங்குகளை கொன்று குவிக்கும் அசுர குலம் மாதிரி இங்கே பேசப்படுகிறது. ஆனால் அப்படி கருணைக் கொலை செய்வதற்கு இருக்கும் காரணங்கள்தான் இங்கே முக்கியம்.


ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பல்லாயிரக் கணக்கான விலங்குகளை தெருக்களில், வீடுகளில் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றுகிறார்கள். அப்படி பெறப்பட்ட விலங்குகளை தத்து எடுத்துக் கொள்ள பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி அழைப்பு விடுக்க வேண்டும், அவர்களே காப்பகத்தில் வைத்துக் காப்பாற்றலாமே என்று கேட்கலாம். நிறைய விலங்குகள், குறிப்பாக நாய் பூனை, இவை territorial animals என்று சொல்லப்படுபவை (3). அதாவது அவை பிறந்த, கொஞ்ச நாள் வளர்ந்த இடங்களை தங்கள் சொந்த வாழ்விடமாக பாவித்து அந்த இடத்தில் அடுத்த விலங்கை அனுமதிக்காது. அப்படி வேறு ஒரு விலங்கு அந்த இடத்துக்கு வந்தால் அதனை சண்டையிட்டு துரத்தி அடித்து விடும். இதை நீங்கள் நம் ஊர் தெரு நாய்களிடமும் பார்க்கலாம். ஒரு தெருவில் வசிக்கும் நாய் அடுத்த தெரு நாயை உள்ளே விடாது. அப்படி வாழ்ந்த நாய்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க முடியாது. அதனால்தான் நம் ஊர் கார்ப்பரேஷன் கூட தெரு நாய்களுக்கு கருத்தடை பண்ண எடுத்துக் கொண்டு போய் ஆபரேஷன் பண்ணி விட்டு திரும்பவும் அவர்களை எடுத்த தெருவிலேயே விட்டு விடுவார்கள். நாய்களின் இந்த குணம் தெரியாமல் நிறைய மக்கள் திரும்ப அவற்றை அவர்கள் தெருவில் விடுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அவர்களுக்கும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் எல்லாம் வந்திருக்கிறது.


அந்த மாதிரி மக்கள் எதிர்ப்புக்கு பயந்து பூட்டான், ஜோத்பூர் இரண்டு ஊர்களிலும் அந்த ஊர் கார்ப்பரேஷன் தெரு நாய்கள் எல்லாவற்றையும் ஒரு பெரிய மைதானத்தில் வேலிகள் கட்டி காப்பகம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே நாய்கள் கும்பல் கும்பலாக சண்டையிட்டுக் கொண்டு பலவீன நாய்கள் பெரும் காயங்கள் அடைந்திருக்கின்றன. வெற்றி பெற்ற நாய்கள் போடப்படும் உணவை தாங்களே எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க, அவற்றுக்கு பயந்து காப்பக ஊழியர்கள் வேலிக்கு வெளியில் இருந்தே உணவு மொத்தத்தையும் தூக்கிப் போட்டுப் போய் விட, யாரும் சுத்தம் செய்ய உள்ளே போகாமலே போய்  நாய்கள் எல்லாம் காயத்திலும், பட்டினியிலும், தங்கள் மல-ஜல சேற்றில் மூழ்கியும் கொஞ்சம் கொஞ்சமாக இறந்திருக்கின்றன.(4)


எதற்கு இதை சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி இருக்கும் போது அந்த நாய்களை வைத்துக் காப்பாற்ற முடியாது. அவற்றை தனித் தனியாக வீடுகளில் தத்துக் கொடுப்பது மட்டுமே தீர்வு. அதுவும் பத்துப் பதினைந்து நாய்கள் என்றால் கூட சமாளித்து விடலாம். பீட்டா கையகப் படுத்தும் விலங்குகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் தத்து எடுக்க வருபவர்களோ டஜன் கணக்கில் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் அந்த நாய் பூனைகள் அடித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சாவதற்கு இதுவே பரவாயில்லை என்று ஆகிறது.


அடுத்த வகை feral என்று அழைக்கப் படும் விலங்குகள். அதாவது காட்டு விலங்கு நிலையிலேயே இருப்பவை. பெரும்பாலான தெரு நாய்கள், தெருப் பூனைகள் இவ்வகையானவையே. இவற்றை தத்து எடுத்துப் போய் எல்லாம் வீட்டில் வளர்க்க முடியாது. இவற்றில் சில பெரும் ஆக்ரோஷத்துடனேயே இருக்கும். இப்படி இருப்பதால் இந்த விலங்குகளுக்கும் பிரச்சனை, அதை சுற்றி இருப்பவர்களுக்கும் ரிஸ்க்தான்.


அடுத்து, பெறப்பட்ட விலங்குகளில் நிறைய பெரும் நோயினால் காப்பாற்றும் நிலையை தாண்டியவை மற்றும் அவற்றை வைத்திருந்தவர்களால் கொடூரமாக நடத்தப் பட்டு மனிதர்களைக் கண்டாலே பயந்து நடுங்குபவை. இவற்றை வாழ வைத்திருப்பதை விட கருணைக் கொலை செய்வது பல மடங்கு நல்லது. மனிதர்களிலேயே quadriplegia மாதிரி வாத நோய் அல்லது காப்பாற்ற இயலாத, பெரும் வலி கொண்ட சிலவகை கான்சர் நோயுடையோரை கருணைக் கொலை செய்ய பெரும்பாலான மேலை நாடுகளில் சட்டம் அனுமதிக்கிறது. இந்தியாவிலும் இந்த கருணைக் கொலை பற்றிய விவாதங்கள் கோர்ட்டில் அடிக்கடி நடக்கின்றன.


இந்த மாதிரி விலங்குகள்தான் கருணைக் கொலை செய்யப் படுகின்றன. பீட்டா இது பற்றி நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள். இணையத்தில் கிடைக்கின்றன (5). அதற்கு பொறுமை இல்லாதவர்கள் அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவைப் பார்க்கலாம் (6).


விலங்கு உரிமை விவாதத்தில் இரு தரப்பு இருக்கின்றன. ஒரு தரப்பு கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்பது.பீட்டா இந்த தரப்பு. இன்னொரு தரப்பு விலங்குகளை எந்த நிலையிலும் கொலையே செய்யக் கூடாது என்பது. No Kill Advocacy Centre மாதிரி இந்த இயக்கங்கள் இதனை முன்னெடுக்கின்றன. இந்த இயக்கம்தான் பீட்டாவின் கருணைக் கொலையை விமர்சித்த ஹஃபிங்க்டன் போஸ்ட் கட்டுரைக்கு காரணமானவர்கள். இந்த இயக்கத்தின் விமர்சனம்தான் விகடன் கட்டுரை மற்றும் முகநூலில் பகிரப் பட்ட நிறைய பதிவுகளுக்கு மூலமாக கிடைத்திருக்கிறது.


என்னைப் பொறுத்த வரை இந்த ஹஃபிங்க்டன் போஸ்ட் கட்டுரையை பீட்டா-வின் ‘கொடூர முகமாக’ பார்ப்பதை விட கருணைக் கொலை பற்றிய விவாதமாகவே பார்க்க வேண்டும் என்பேன். இரண்டு விலங்கு உரிமை இயக்கங்கள் தங்கள் கொள்கை நிலைப்பாட்டை விமர்சித்துக் கொள்கின்றன என்கிற நிலையில் மட்டுமே இது முக்கியத்துவம் பெறுகிறது.


நான் கருணைக் கொலையை ஆதரிக்கிறேனா என்பதை என்னால் இன்னமும் முடிவு செய்ய இயலவில்லை. மனிதனோ, மிருகமோ அவற்றை கருணைக் கொலை செய்வதை ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது. ஆனால் மேற்சொன்ன எல்லாக் காரணங்களையும் நான் ஏற்றுக் கொள்ளவே செய்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நிலையில் என்னை நிறுத்தினால் பீட்டா செய்வதையேதான் நானும் செய்வேனா என்பது தெரியவில்லை. இதில் பிரச்சனை என்னவென்றால் கொலை செய்யாமல் இருக்கும் கொள்கை கொண்டதினால் No Kill Advocacy Centre மிகக் குறைவான விலங்குகளையே தங்கள் காப்பகத்தில் ஏற்றுக் கொள்கிறது. பீட்டா உலகளாவிய இயக்கமாதலால் இவர்கள் மாதிரி அளவோடு நிறுத்த முடியாது. அப்படி அளவோடு ஏற்றுக் கொண்டால் ‘No Kill Advocacy Centre கையகப் படுத்தாமல் போன மற்ற விலங்குகள் கஷ்டப் படுவதை அவர்கள் அனுமதிப்பதாகத்தானே ஆகிறது?’ என்கிற பீட்டாவின் கேள்வி இங்கே முக்கியமானது (7).


இப்படி இரு விலங்கு உரிமை இயக்கங்கள் நடுவில் நடக்கும் சிந்தனாவாத விவாதத்தைதான் ஜல்லிக் கட்டு ஆதரவாளர்கள் எடுத்துக் கொண்டு பீட்டாவின் ‘முகமுடியை’ கிழித்து விட்டதாக பரபரகிறார்கள்.


விகடன் கட்டுரையின் அடுத்த விமர்சனம் கருத்தடை பற்றியது. விலங்குகளை கருத்தரிக்கவே செய்யாமல் அவர்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்து விடுவதை பீட்டா பிரச்சாரம் செய்கிறது, அப்படி செய்வதன் மூலம் அந்த விலங்குகள் இயற்கையான வாழ்க்கை வாழ்வதை தடுத்து அவர்களை ‘கொடுமைப் படுத்துகிறது’  என்று விகடன் கட்டுரை குற்றம் சாட்டியது.


இந்தக் குற்றச்சாட்டை விட இந்தக் கட்டுரையாளரின் illiteracy என்னை மிகவும் பாதித்தது என்பதுதான் உண்மை.


தெரிந்தோ தெரியாமலோ பூனை, நாய் இவற்றை மனிதன் domesticate பண்ணி நம்மோடு வாழப் பழக்கி விட்டான். சில காலத்துக்கு முன்பு வரை அவற்றின் தேவை அவனுக்கு இருந்தது. இப்போது அந்தத் தேவை முடிந்து போய் விட்டதால் அவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் முடிந்து போய் விட்டதாக கருதுகிறோம். அப்படி செய்ததனால் இந்த இரண்டு விலங்கினங்களும் பெரும் கஷ்டத்தில் உழல்கின்றன. தெரு நாய்களின் கஷ்ட ஜீவனம் பற்றி நானே முன்பு ஒரு ப்லாக் எழுதியிருந்தேன் (8) இவை பல்கிப் பெருகி இன்னமும் பெரும் கஷ்டத்தில் முழுகுகின்றன. இந்தப் பிரச்சனைக்கு நம்மிடம் இருக்கும் தீர்வுகள் இரண்டு. ஒன்று: இந்த விலங்குகள் அனைத்தையும் ஒவ்வொரு குடும்பமும் ஆளுக்கு ஒன்று என்று தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு: இந்த விலங்குகளுக்கு கருத்தடை பண்ணி அவை இன்னமும் பெருகாமல், அவற்றின் சனத்தொகை குறையும் படி செய்ய வேண்டும்.


பீட்டா இரண்டாவதைத்தான் பின்பற்ற வேண்டும் என்கிறது. இந்தக் கருத்தில் நான் முழுமையாக உடன் படுகிறேன். ஆரோக்கியமான பூனைகள் அவர்கள் வாழ்நாளில் கிட்டத் தட்ட 100 குட்டிகள் போடும் சக்தி கொண்டவை. ஏற்கெனெவே நம்மிடையே இருக்கும் பூனைகளை காப்பாற்ற வழியில்லாத போது பிறந்த குட்டிகளை எப்படி வைத்துப் பாதுகாப்பது? தெரு நாய்கள் ஆறேழு குட்டி போட்டு விட்டு அவற்றுக்கு பால் கூட கொடுக்க முடியாமல் கஷ்டப் படுகின்றன. உங்களுக்கு எப்போதாவது நேரமிருந்தால் குட்டி போட்ட தெரு நாயை போய் கவனியுங்கள். உங்கள் இதயம் உடைபடும். அப்போது நீங்களும் இந்த வழிமுறையை வரவேற்க வாய்ப்பிருக்கிறது.


நம்மிடம் இன்றைக்கு இருக்கும் பிரச்சனை pet animals எனப்படும் செல்ல விலங்குகள் லட்சக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் அவற்றை வளர்க்க ஆசைப்படும் மக்கள் ஆயிரத்தில் கூட இல்லை. அந்த மாதிரி சமயத்தில் இருப்பவற்றை முடிந்த அளவு காப்பற்ற வேண்டும், மற்றும் அவை பல்கிப் பெருகாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பீட்டாவின் நிலைப்பாடு. அதில் முழுமையாக நான் உடன்படுகிறேன். நான் முன்பு ஒரு பூனை வளர்த்து வந்தேன். அது வயதுக்கு வந்த உடனேயே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து விட்டேன். சென்னை கார்ப்பரேஷன் ப்ளூ க்ராஸ் சேர்ந்து தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைத்தார்கள். உண்மையில் இந்த சிந்தனைக்கு முன்னோடியாக இருந்ததற்காக பீட்டா-வுக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும்.


இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். பீட்டா பற்றி விமர்சிக்கும் விதமான விஷயங்கள் எங்கே படித்தாலும் அதை நன்கு ஆராய்வது முக்கியம். Taking it with a pinch of salt என்று சொல்வார்கள். அது மாதிரி. ஏனெனில் பீட்டா-வுக்கு உலகெங்கிலும் சக்தி வாய்ந்த எதிரிகள் இருக்கிறார்கள். சும்மா ஜல்லிக் கட்டு என்கிற ஒரு விஷயத்தில் கை வைத்ததற்கே பாதி தமிழ் நாடு அவர்களுக்கு எதிராக கொதித்து எழுந்திருக்கிறது. ஆனால் பீட்டா கை வைத்த மற்ற விஷயங்கள் பில்லியன் டாலர் தொழில்கள் சம்பந்தப் பட்டவை. விலங்குகளை பரிசோதனைக்கு பயன்படுத்தும் மருந்து கம்பனிகள், அழகு சாதன க்ரீம்களை விலங்குகள் மேல் டெஸ்ட் செய்யும் காஸ்மெடிக் கம்பனிகள்,  இறைச்சி உற்பத்தி கம்பனிகள், தோல் பதனிடும் கம்பனிகள், ஹலால் இயக்கங்கள், திமிங்கலங்களை வேட்டையாடும் ஜப்பானிய அரசு  என்று பீட்டாவின் மேல் கறம் வைத்துக் கொண்டு ஆயிரம் எதிரிகள் காத்திருக்கிறார்கள். பீட்டாவின் மேல் ஒரு சிறிய புகார் வந்தாலும் அதனை கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெளியிட பில்லியன் டாலரில் பட்ஜெட் வைத்துக் கொண்டு இவர்கள் தயார்.


இன்று பொதுக் கருத்தை ஒட்டி விகடன் மாதிரி, தி இந்து மாதிரி பத்திரிகைகளே கூட ஜல்லிக் கட்டு ஆதரவாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது. அப்படியானால் உலக அளவில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இயக்கம் இது.

இவர்கள் முன்னெடுக்கும் விஷயங்கள் இன்று சிரிப்பாகவும், நடைமுறைக்கு ஒத்து வராததாகவும் தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயக்கம் நமக்கு கண்டிப்பாக தேவை என்பது என் கருத்து. இங்கே இப்போது பீட்டா நுழைந்ததனால் விலங்குகளை இதுவரை ஒரு பொருட்டாக மதித்திராதவர் கூட அதைப் பற்றி பேசும், கொஞ்சமாவது யோசிக்கும் நிலை தோன்றி இருக்கிறது. போன வருஷம் வரை சாராயம் ஊற்றிக் கொடுத்து, கூர் கத்தியால் மாட்டின் பின்னால் குத்து குத்தென்று குத்தி விட்டு, இன்றைக்கு ‘மாடும் மனிதனும் ஒன்றென வாழும் இனம் நாம்,’ என்று நம்மைப் பேச வைத்ததற்கே பீட்டா-வுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.


தரவுகள்:
========
1)http://goo.gl/5NZeyW
2) http://goo.gl/614HKQ
3) https://en.wikipedia.org/wiki/Territory_(animal)
4) http://goo.gl/nX0uAW
5) http://www.peta.org/blog/euthanize/
6) https://www.youtube.com/watch?v=u3AxNgrU51o
7) http://www.peta.org/issues/companion-animal-issues/animal-shelters/
8) http://sriwritesintamil.blogspot.in/2015/10/blog-post_22.html

Tuesday 5 January 2016

ரஹ்மான்


‘ஒ ஸாயா…’ என்கிற அடி நாத சப்தத்தில் அது ஆரம்பிக்கவில்லை. அந்தப் பயணம் உண்மையில் ஆரம்பித்தது கொஞ்சம் நீண்ட, சற்றே கிராமிய வாசம் கொண்ட ஹம்மிங்-கில்தான். ஒரு கிராமப் பெண் தன் சின்னச் சின்ன ஆசைகளை வெளிப்படுத்திய பாடலில்தான் அவரின் முதல் ஹம்மிங் குரல் வெளிப்பட்டது. அந்தப் பாடலைக் கேட்ட எல்லாருக்குமே அவர்கள் உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றப் பட்டு விட்டது என்பது புரிந்து விட்டது. பொருளாதார சீர்திருத்தக் குழந்தைகள் எல்லாருக்குமே ஒரே இரவில் அல்லா ராக்கா ரஹ்மான் ஒரு ஆதர்ஷ புருஷனாகி விட்டார்.


ரஹ்மானைப் பற்றி எழுதுவது கொஞ்சம் சிரமம்தான். என்ன எழுதினாலும் ரொம்பவும் அதீத பாராட்டுதல்கள் அல்லது ஏற்கெனெவே படித்த வார்த்தைகள் மாதிரி எழுதுவது தவிர்க்க இயலாமல் போகிறது. ஏனெனில் அவ்வளவு வார்த்தைகள் ஏற்கெனெவே எழுதப் பட்டு விட்டன. அவர் ஆரம்பித்த காலத்தில் அவர் இசையில் ‘கம்ப்யூட்டர் வாசம்’ அதிகம் வீசியதாக குற்றம் சாட்டப் பட்டார். கொஞ்சம் பேஸ் சப்தம் அதிகமாகவும், மெல்லிய எதிரொலியோடும், ரொம்ப கீச்சும் பின்னணி இசையும் செயற்கையாக இருப்பதாக கருதப் பட்டது. அவர் ஒன்று ரிதம் லூப்-களிலும் எலெக்ட்ரானிக் வாத்திய இசைகளிலும் வரிகள் கொஞ்சம் அமிழ்ந்து போன நிலையில் அமைத்தார், அல்லது அமைதியான ஹாலோ கிடாரில் தெளிவான வரிக் கொண்ட பாடல்களில் கொஞ்சம் மேலோடியின் விதிகளை வளைத்து பாடல்கள் அமைத்தார். அந்தக் கால கட்டங்கள்தான் அவர் தன் இசை ஒலியை இன்னமும் வளர்த்துக் கொண்டிருந்த தருணங்கள். ஒரு இசைக்கலைஞன் தன் சொந்த இசை ஒலியை உருவாக்குவது என்பது பெரும் சிரமத்துக்குரிய காரியம். அதுவும் இந்திய சூழலில், ஒரு திரைக்கதையை ஒட்டியே இசை அமைக்க வேண்டியிருக்கிறது. அதுவும் வெறும் காதல் பாடல்களுக்கு மட்டுமே இசை அமைப்பது ரஹ்மானுக்கு கொஞ்சம் அலுப்பாகவே இருந்தது. ஆனால் அவர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிதான். ஏனெனில் அப்போது வந்த நிறைய புதிய இயக்குனர்கள் அவர் சுதந்திரமாக விளையாட களம் அமைத்துக் கொடுத்தனர். அதன் காரணமாக லகான், பம்பாய், ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, மீனாக்ஷி போன்ற படங்கள் வந்தன.


தன் கற்பனை சுதந்திரம் முழுவதுமாக கிடைத்த சந்தோசத்தில் ரஹ்மான் ஒலியில் புதுப் புது பரிசோதனை முயற்சிகள் செய்யத் துவங்கினார். உலகில் பல்வேறு இசை ரகங்களை கலந்து ஒன்றிணைப்பது அவருக்குப் பிடித்தமாக இருந்தது. கவ்வாலி-யில் காதல் கலந்து ‘தேரே பினா’ என்று குரு-வில் கொடுத்தார். Folk Rock எனும் பாப் டிலன் ஸ்டைலில் இளைஞர்களின் எழுச்சி ‘ரூ பா ரூ’ என்று ரங் தே பசந்தியில் பாடினார்கள். மேற்கத்திய கிராமிய இசையை ஒட்டி வந்த பாடல் போருக்கு எதிராக ‘வெள்ளைப் பூக்கள்’ மலர ஏங்கியது. இன்றைய டெக்னோவோடு அன்றைய மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தோடு இயைந்து ‘தில் கா ரிஷ்தா’ வாக கூவியது. பொருளாதார தாராளமயத்துக்குப் பின் தாங்களும் உலகமயமாகிய இந்திய இளைஞர்கள் இவற்றை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார்கள். அதே சமயம்  சாஸ்த்ரிய சங்கீத ரசிகர்களையும் கைவிடாமல் அவர்களையும் திருப்திப் படுத்த முனைந்தார். ஜோதா அக்பரின் ‘மன் மோகனா’-வில் சுத்தமான பஜனை கிடைத்தது. ஜானே தூ யா ஜானே நா-வின் ‘ஜானே தூ’ பாடலில் இந்தியாவிலேயே முதன் முதல் தூய ஜாஸ் ஒலித்தது. பகத் சிங்-கில் ‘சர்ஃபரோஷ் கி தமன்னா’ ஹிந்துஸ்தானியில் மேலோடி கலந்து குழைந்தது. இன்னும் கொஞ்சம் மேலே போய் தூய ஹிந்துஸ்தானியே டெல்லி 6ல் ‘போரே மாயி’ வழியாக கொடுத்தார்.

இப்படிப்பட்ட ஆரவாரமான சாதனைகளோடு எல்லாம் ஒப்பிடுகையில் ‘ஜெய் ஹோ’ கொஞ்சம் மட்ட ரகம்தான். ஆனால் என்ன செய்வது, அகாதெமி அவார்ட்-கார்கள் ‘ஜானே தூ’ கேட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா? ‘ஜெய் ஹோ’ எப்படி இருந்தாலும் ஆஸ்கார் விருது சரியான ஆளைத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா என்ன? இந்தப் பாடல்தான் அவருக்கு அந்த விருதை கையில் வைத்தது என்றாலும் கிட்டத் தட்ட இருபது ஆண்டுகளின் உழைப்பும் அசாத்தியத் திறமையுமே அந்த மேடைக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கிறது என்பது ரஹ்மானின் ரசிகர்களுக்கு தெரியும். ‘ஜெய் ஹோ’-வை விட்டுத் தள்ளுங்கள். டெல்லி 6ல் ‘ரெஹ்னா தூ’ பாடலைக் கேளுங்கள். ஆப்பிரிக்க ரெக்கே பின்னணியில் துவங்கும் பாடல் மெலோடி விதிகளை எல்லாம் உடைத்து ரஹ்மானின் குரலோடு இழைந்து துவங்குகிறது. உடனே இடைவெளியில் கொஞ்சம் அரேபிய இசை உறுத்தாமல் நுழைந்து கலந்து செல்கிறது. கடைசியில் புல்லாங்குழல் போன்ற ஒரு சிந்தஸைசர் ஒலியில் கர்நாடக வடிவ இசை துவங்கி அந்த ரெக்கே-வோடு கலந்து வருடி முடிகிறது. பாப் மார்லியும் தியாகராஜரும் கட்டி அணைத்து விடை பெறுகிறார்கள். அதுதான் ரஹ்மான். அந்த மனிதருக்குத்தான் ஆஸ்கார் கொடுத்திருக்கிறார்கள்!