ஒரு வருடம் என்பது இந்தியா மாதிரியான ஒரு சிக்கலான அமைப்புகள் கொண்ட நாட்டில் கொஞ்சம் குறுகிய காலம்தான். எனவே மத்திய அரசின் ஒரு வருட ஆட்சி என்பதை எடை போடுவது சரியா என்கிற கேள்வி வந்து கொண்டே இருந்தது. எப்படியும் எல்லாரும் செய்யப் போகிறார்கள், அதைப் பற்றி விவாதிக்கப் போகிறார்கள் என்பதால் நானும் களத்தில் இறங்கி விட்டேன்.
என்னைப் பொறுத்த வரை மோடியின் முக்கியமான சாதனை என்பது முலாயம் சிங், லாலு பிரசாத், மாயாவதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களை பிரதமர் ஆகாமல் தடுத்ததுதான். இன்றும் கூட அவரிடம் நிறைய புகார்கள் இருந்தாலும் இப்போது ஆட்சியில் அவர்தான் இருக்கிறார், மேற்குறிப்பிட்டவர்கள் இல்லை என்பதற்காகவே நான் ஆசுவாசப் பட்டுக் கொள்கிறேன்.
அதை விடுத்துப் பார்த்தால், மோடி எப்படியும் முதலாளித்துவ வழியில்தான் நடப்பார் என்பது நாம் எல்லாரும் எதிர் பார்த்ததுதான். அவர் குஜராத்தில் கூட அப்படித்தான் இருந்தார். அவர் சார்ந்திருக்கும் பிஜேபி ஒரு வலது சாரி கட்சி. உலகமெங்கும் வலது சாரிகள் கேபிடலிஸ்ட்-ஆகத்தான் இருக்கிறார்கள். எனவே அவர் நடவடிக்கைகளில் நமக்கு அதிர்ச்சியோ, புகாரோ இருக்கக் கூடாது. தனக்கு நன்றாக தெரிவதை, தான் சார்ந்திருக்கும் கட்சியின் அடிப்படை நம்பிக்கையின்படி அவர் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதை சரியாகவே செய்து வருகிறார். அதில் ‘இந்த குறிப்பிட்ட தொழிலதிபருக்கு பரிந்து செய்கிறார்,’ என்கிற முணுமுணுப்புகள் இருப்பது புரிந்து கொள்ளத் தக்கதே. எந்த அரசாங்கமாக இருந்தாலும் அப்படிப்பட்ட சார்பு நிலையையும் அது ஒட்டி எழும் புகார்களை தவிர்க்க இயலாது. எனவே எனக்கு அதில் பெரிய வருத்தம் இல்லை.
அதை விட்டுப் பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகளில் நிலவிய ‘கொள்கை பாரிச வாயு’ (Policy Paralysis) முற்றிலும் விலகி இருக்கிறது. அவையில் கிடைத்த பெரும்பான்மையினால் எந்த உதிரிக் கட்சிகளையும் நம்பாமல் தான் நம்பிய பாதையில் அரசு பயணிக்கத் துவங்கி இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் பற்றிய சர்ச்சையில் ‘இதெல்லாம் கூட்டணி தர்மம்’ என்று மன்மோஹன் சிங் அங்கலாய்த்தார். அந்த மாதிரி எல்லாம் இவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரும் ஆறுதல். Moody போன்ற கணிப்பு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தி அறிக்கை கொடுத்துள்ளன. நாராயண மூர்த்தி முதல் டாடா வரை தேசத்தின் பொருளாதார வளர்ச்சி பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அதற்கான நிறைய முன்னெடுப்புகளை இந்த அரசு எடுத்துக் கொண்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தது சமூகப் பாதுகாப்பு திட்டங்கள். ஜன் தன் யோஜனா துவங்கி முத்ரா, இன்ஷூரன்ஸ் திட்டம் என்று நிறைய social security திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் ஒரு விஷயம், இந்த மாதிரி நிறைய திட்டங்கள் முந்தைய அரசுகளில் கூட வந்துள்ளன. ஆனால் இந்த அளவுக்கு அவர்களால் இந்த திட்டங்களை விளம்பரப் படுத்த இயலவில்லை. அதற்கு இயல்பாகவே மோடிக்கு இருக்கும் PR திறமை காரணம் எனலாம். அந்தத் திறமையை நிறையப் பேர் கிண்டல் செய்கிறார்கள். நான் அதனை ஒரு வலிமையாகத்தான் (strength) பார்க்கிறேன். இந்தத் திட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வெகு குறுகிய காலத்தில் சென்றடைந்து இருக்கின்றன. (வடக்கே நிறைய கிராமங்களில் ஜன்-தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவக்குவதற்கு மக்களை ஊக்குவிக்க ‘மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு ஐந்து லட்சம் டெபாசிட் செய்யப் போகிறது. அப்போது உங்களுக்கு வங்கிக் கணக்கு வேண்டும்,’ என்று கட்சிக்காரர்கள் சொல்லி திறக்க செய்திருக்கிறார்கள். இது தனி கதை.)
அடுத்த் தங்கம் சேமிப்பு திட்டம். சென்ற ஆட்சியில் ‘தங்கத்தை குறைத்து வாங்குங்கள். தங்கம் வாங்காதீர்கள்’ என்றெல்லாம் சிதம்பரம் வேண்டிக் கொண்டே இருந்தார். அது எப்படியென்றால் ரஷ்யர்களைப் பார்த்து ‘வோட்கா குடிக்காதீர்கள்,’ என்று கேட்டுக் கொள்வதற்கு சமம். அப்போதே குருமூர்த்தி ‘தங்கம் வாங்குவது நம் கலாசாரத்தின் ஒரு அங்கம். அது நம் strength . அதனை எப்படி exploit பண்ணுவது என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று எழுதினார் . இப்போது அவர் மோடியின் ஆலோசகர்களில் ஒருவர். இந்த தங்கம் சேமிப்பு திட்டம் கண்டிப்பாக அவர் ஐடியாவாகத்தான் இருக்கும். அது கொஞ்சம் அப்படி இப்படி மாறுதல் கண்டு விரைவில் நல்ல பலன் அளிக்கும் என்பது என் நம்பிக்கை.
மோடியின் ஆட்சியிலேயே மிக அதிகமாக கிண்டல் அடிக்கப் பட்டது அவரின் வெளிநாட்டு பயணங்கள் தான். ஆனால் அதனை அவரின் கடும் முயற்சியாகத்தான் நான் பார்க்கிறேன். இப்படி வித்யாசமான timezone களில் தொடர்ந்து பயணித்து பெரிய அளவில் ஒய்வு இல்லாமல் தொடர்ந்து காமிரா கண்காணிப்பிலேயே இருப்பது எவ்வளவு கடினமான செயல் என்று ஒரே ஒரு முறை வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு தெரியும். அப்படி மோடி பயணம் செய்ததில் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் பெருமளவு உயர்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். .(Time பத்திரிகையில் மோடியின் அட்டைப் படக் கட்டுரை இதற்கு ஆதாரம். இதே பத்திரிகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன்மோஹன் சிங்-கின் படம் போட்டு அவரை செயல்படாத பிரதமர் என்று விமர்சித்து வந்த கட்டுரையையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.)
கூடவே பெரும் அளவிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் எட்டப் பட்டிருக்கின்றன. இவை எல்லாம் இன்னும் இந்தியாவுக்கு முழுமையாக வரவில்லை. அதில் சொன்ன முழுமையும் வராதுதான். ஆனால் பெருமளவு வரும். அதற்கு இந்த அரசின் தொடர்ந்த செயல்பாடுகளும் காரணங்களாக இருக்கும்
சீனாவுடனான நட்புறவை மேம்படுத்த பெரும் முயற்சிகளை மோடி எடுத்து வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. நிறைய முதலீடுகள் நிறைய வணிக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன. ஆனால் ஆயிரம் இருந்தாலும் அவர்களுடன் இருக்கும் எல்லைப் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்காமல் எந்த உறவும் நிலைத்து நிற்காது. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் அவரை அனுமதிக்குமா என்று தெரியவில்லை.
அடுத்து தூய்மை இந்தியா என்கிற திட்டம். அதனை அவர் துவங்கிய விதம் அதற்கு செய்த பிரச்சாரங்கள், ஒதுக்கிய நிதி ஆதாரங்கள் எல்லாமே மோடி இந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறார் என்பதை பறை சாற்றியது. இதனை ஒரு அரசு திட்டமாக மட்டும் எடுத்துச் செல்லாமல் ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அவர் முனைவது தெரிகிறது. அதில் அவர் பெரும் வெற்றி உண்மையில் மக்களாகிய நம்மிடம்தான் இருக்கிறது என்றாலும் அரசு அளவில் தொலை நோக்கு கொள்கை வடிவங்கள் வைப்பது தேவை. அவற்றுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று நம்புகிறேன்.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் தன் திட்டங்களுக்கு மாநிலங்களை சேர்த்து செயல்படும் ஆர்வம்தான். Fedaralism என்கிற வார்த்தையை மோடி பல முறை பயன்படுத்தி விட்டார். கூடவே மாநில முதல்வர்களையும் தன் பயணங்களில் சேர்த்து அழைத்து செல்கிறார். முந்தைய மத்திய அரசு ஜெயலலிதா ஆட்சியிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டது நமக்கெல்லாம் தெரியும். அந்த மாதிரி விரோத குணமெல்லாம் வளர்க்காமல் அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு இணைந்து செல்ல முடியுமோ அந்த அளவுக்கு செல்ல நினைப்பது சந்தோசமான விஷயம்.
குறிப்பாக மோடி ஆட்சியிலேயே எனக்குப் பிடித்தது ஆதார் எண்ணுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம்தான். எதிர்க் கட்சியாக இருந்த போது அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அதே முறைப்பில் இல்லாமல் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்று யோசித்து செயல்படுத்த நினைப்பதை மனமாரப் பாராட்டுகிறேன். இந்தியாவின் எதிர்காலம் ஆதார் என்பதையும் அது முழுமையாக வந்து விட்டால் மற்ற அரசாங்க அட்டை எல்லாம் தேவைப்படாமல் ஆகி விடும் என்பதையும் உறுதியாக நம்புகிறேன். அதற்கு பாதை போட முயலும் மோடி அரசுக்கு என் பாராட்டுகள்.
இவையெல்லாம் மோடியின் ஆட்சியில் நல்ல விஷயங்கள் என்று நான் நம்புபவை. இனி பிரச்சனை விஷயங்களுக்கு வருவோம்.
பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் ஹிந்துத்வா-வை கையில் எடுப்பார்கள் என்பது நாம் எல்லாரும் எதிர் பார்த்ததுதான். ஆனால் இந்த ஒரு வருடத்திலேயே இப்படி ஆட்டம் போடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பிஜேபி எம்பிக்களே நிறைய மோசமாக பேசி அவற்றில் பட்டும் படாமல் கொஞ்சம் எதிர்த்தும் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்து மத்திய அரசு செய்வது அவர்களுக்கே வினையாக முடியும் என்று நினைக்கிறேன். இதை நாங்கள் செய்யவில்லை. அந்தக் குழுவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றெல்லாம் பிஜேபி சொல்வது அரதப் பழைய சால்ஜாப்புகள். சென்ற ஆட்சியில் இந்தக் குழுக்கள் இப்படி எல்லாம் ‘இல்லம் திரும்புதல்’, ‘கோட்சேக்கு சிலை’ என்று எல்லாம் ஏன் முயற்சி செய்யவில்லை? ஏன் சர்ச்-கள் உடைக்கப் படவில்லை என்பதற்கு இவர்களிடம் பதில் இருக்காது. ‘எனக்கு பதினைந்து வருடங்கள் கொடுங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்.’’ என்று மோடி மக்களிடம் கேட்டார். அதனை உண்மையில் அவர் தன் ஹிந்துத்வா அடிபொடிகளிடம் தான் கேட்க வேண்டும்.
அடுத்தது பாடத் திட்டங்கள். இவையும் ஹிந்துத்வாவில்தான் சேரும் என்றாலும், நாளைய இளைஞர்களையும் ஹிந்து வெறியர்களாக ஆக்கும் முயற்சி இன்றே துவக்குவது ஆபத்தானது என்று நினைக்கிறேன். இன்றைக்கு பாகிஸ்தானில் மத வெறிக் குழுக்கள் தலை வெறித்தாடுவதற்கு அவர்கள் பாடத் திட்டங்கள்தான் காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அந்தப் பாடத் திட்டங்கள் 70களில் ஜியா உல்-ஹக்-கால் ஆரம்பிக்கப் பட்டன. அவை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தில் ஊறி இன்றுதான் ‘பலன்’ தரத் துவங்கி உள்ளன. அதே மாதிரி இந்தப் பாடத் திட்டங்கள் நம் சமூகத்தில் ஊறி இன்னும் 15-20 ஆண்டுகளில் இந்தியா ஒரு ‘ஹிந்து பாகிஸ்தான்’ஆக மாறும் ஆபத்து இருக்கிறது. (ஆனால் இந்தத் திட்டம் முழுமையாக வேலை செய்யாமல் நம் செக்யூலர் சக்திகள் தடுத்து விடும் என்று இப்போதும் நம்புகிறேன்.)
அடுத்தது மத்திய அரசு என்றால் மோடி மட்டுமே காட்சி தருவது. ஒரு சாமானிய மனிதனுக்கு மோடியைத் தவிர்த்து அருண் ஜெட்லி மட்டுமே கண்ணுக்குத் தெரிவார். அந்த அளவுக்கு தன் சுயம் மட்டுமே முக்கியம் என்று செயல்படுவது கொஞ்சம் ஆயாசத்தைக் கொடுக்கிறது. சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெயருக்கு மட்டும்தான் இருக்கிறார். மோடியின் எந்த வெளிநாட்டுப் பயணத்திலும் அவர் பங்கெடுக்கவில்லை. வெளிநாடுகளில் மாட்டிக் கொண்ட இந்தியர்களை மீட்கும் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்திக் கொண்டு இருக்கிறார். ரவி ஷங்கர் பிரசாத் மாதிரி திறமையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் ஒரு அரசு ஓடிக் கொண்டிருப்பது நீண்ட கால பலனைத் தராது.
சென்ற ஆட்சியில் நிறைய குறைகள் இருந்தாலும் பல்வேறு விதமான சமூக நலத் திட்டங்கள் கொண்டு வரப் பட்டன. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமை, கல்வி பெரும் உரிமை போன்றவை மிகப் பிரமாதமான திட்டங்கள். நிறைய பலனும் தந்தவை வேறு. அவற்றை எல்லாம் பலவீனப் படுத்தும் முயற்சியில் இந்த அரசு இறங்கி இருக்கிறது. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஏற்கெனெவே முக்கால்வாசி கை விடப் பட்டு விட்டது. அதன் மூலம் கிராமங்களில் பசி, பட்டினி போன்றவை பெருமளவு குறைந்து வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்று ழான் த்ரே என்கிற பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ஆதார பூர்வமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதனை நாசம் பண்ணியது ரொம்பவே வருத்தம் தரும் விஷயம்தான்.
கடைசியாக நிலக் கையகப்படுத்தும் திட்டம். இந்தத் திட்டத்தால் பலன் நிறைய கிடைக்கும் என்று அரசு கூறினாலும், இதனை உண்மையில் ‘நில அபகரிப்பு சட்டம்’ என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கையகப் படுத்தப் பட்ட நிலங்கள் இருந்த ஊர்களில் மறு குடியேற்றம், தகுந்த compensation போன்றவை தருவதில் நம் முந்தைய அரசுகளின் ரெகார்ட் படு மோசம். இந்த ரெகார்ட் தொடராது என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இந்த புதிய அரசில் இருந்து வரவில்லை. முதலீடுகள் வருவதற்கு இந்த சட்டம் நிறைவேறுவது முக்கியம்தான், என்றாலும் ஒரு 10,000 பேரின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து அதில் வரும் தொழிற் சாலையில் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரும் திட்டமாகவே இதனை நான் பார்க்கிறேன். இந்த சட்டம் நிறைவேற்றுவதில் நிறைய சிக்கல்கள் இந்த அரசுக்கு வந்திருக்கின்றன என்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.
அறுபதுகளில் ஜானி வாக்கர் என்று ஒரு நகைச்சுவை நடிகர் ஹிந்தி-யில் இருந்தார். ஒரு படத்தில் அவர் எந்தக் கேள்வி கேட்டாலும் ‘பாஸ், பிஃப்டி பிஃப்டி’ என்பார் (50/50). இன்று மழை வருமா என்றால் ‘பாஸ், பிஃப்டி பிஃப்டி’ என்பார். அந்தப் பெண் என்னைக் காதலிப்பாளா என்றால் ‘பாஸ், பிஃப்டி பிஃப்டி’தான். அது போல மோடியின் ஓராண்டு ஆட்சி எப்படி என்றால், ‘பாஸ், பிஃப்டி பிஃப்டி’.