.
‘பத்மாவத்’ பற்றிய என் பதிவில் அலாவுதீன் கில்ஜி பற்றிய கமெண்டுகளில் ‘அவன் கொடுங்கோலன். அவனை அப்படித்தானே சித்தரிக்க முடியும்?’ என்று கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன.
கில்ஜி கொடுங்கோலனாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என் பிரச்னை அதுவல்ல. ராஜபுத்திர அரசன் ராஜா ரத்தின சேனன் கருணை மிகுந்த, நேர்மையான, மென்மையாகப் பேசும் நல்லவனாக சித்தரிக்கப் படுகிறான். அதுதான் பிரச்சனை. அவன் அமைச்சரவையிலும், ராணுவத்திலும் கூட நேர்மை மிகுந்த நல்லவர்களே இருக்கிறார்கள். கூட இருக்கும் ஒரே கெட்டவன் ஒரு பிராமண பண்டிதன்.அவனின் உண்மை ரூபமும் கூட கதையின் துவக்கத்திலேயே வெளியாகி ரத்தின சேனனால் நாடு கடத்தப் பட்டு விடுகிறான். அப்போது கூட ராஜா அந்தப் பண்டிதனுக்கு மரண தண்டனை கொடுக்கவில்லை. ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் (பிரம்ம ஹத்தி தோஷம்) தனக்கு வரக்கூடாது என்று கூறுகிறான்.
ஆனால் கில்ஜி மட்டுமல்ல, கில்ஜியின் அமைச்சரவையில் எல்லாருமே தீயவர்கள். அவனருகில் இருக்கும் சுமாரான நல்ல மானுடம் அவன் மனைவி மட்டுமே. அதுவும் அவள் நல்லவள் என்று சொல்லவியலாது. கில்ஜியை பழிவாங்க அவளுக்கு ஒரு பழைய கணக்கு இருக்கிறது. அதுவும் இல்லையென்றால் அவளும் இவர்களோடு சேர்ந்தே இயங்கி இருக்கக் கூடும்.
அதிலும் ரத்தின சேனனும் கூட ஏற்கெனவே திருமணமாகி இன்னொரு பெண் மேல் மையல் கொண்டு அவளை மணந்து கொண்டு வருகிறான். கில்ஜியும் அதையே செய்ய முற்படுகிறான். ஆனால் இருவருக்கும் என்ன வித்தியாசம்! ஒருவன் மகா காதலன்; இன்னொருவன் காமாந்தகாரன்.
என்னைப் பொறுத்தவரை ராஜபுத்திரர்களாகட்டும், சோழ பாண்டியார்களாக இருக்கட்டும், மௌரியர்களாக இருக்கட்டும். எல்லாருமே பெருமளவுக்கு கொடுங்கோலர்களாக, ஆணாதிக்கவாதிகளாகவே இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சொல்லப் போனால் 12ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சமூகம் ராஜபுத்திரர்களை விட அதிகமாக பெண்களுக்கு உரிமைகள் கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. விதவை மறுமணம், விவாகரத்து உரிமை போன்றவற்றை எல்லாம் இந்திய சமூகம் கேள்விப்படும் முன்பே இஸ்லாம் கொண்டு வந்திருக்கிறது.
ஏன், இன்றைக்குமே கூட, இத்தனை முன்னேற்றங்களுக்குப் பிறகும் கூட, பெண்கள் வளர்ச்சியில் பின்னணியில் இருக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முக்கிய இடம் வகித்துக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது இதே சமூகம் 12ம் நூற்றாண்டில் பெண்களுக்கு பெரிய மரியாதை செய்தது என்று நம்ப இயலவில்லை. இன்றைக்கு இருக்கும் மனித வளக் குறியீடுகளில் எதிலுமே ராஜபுத்திர அரசர்கள் பங்களித்ததாக வரலாறு இல்லை. தில்லி சுல்தான்கள் போல, முகலாயர்கள் போல இவர்களும் அதிகாரத்துக்காக மாமன் மச்சான் சண்டை, அரண்மனை சதிகள், மர்மமான அரச குடும்ப கொலைகள் என்றுதான் வாழ்ந்திருந்திருக்கிறார்கள். எத்தனை அரசர்கள் தங்கள் ராஜ்யத்தின் மக்களை சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற்ற முயற்சிகள் மற்றும் கொள்கை முனைப்புகள் எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கில்ஜிகளுக்கும் இதர அரசர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குறிப்பாக, மற்ற ராஜ்ஜியங்கள் மீது போர் தொடுத்து அவர்கள் சொத்துகளை, கோயில்களை கொள்ளையடிப்பதில் கூட இந்து மற்றும் முஸ்லீம் அரசர்களுக்குள் பெரிய அளவு வித்தியாசம் இருக்கவில்லை.
கூடவே எல்லா அரசர்களும் தங்கள் சுய முக்கியத்துவத்தை போற்றுவதையே வேலையாக கொண்டிருந்தார்கள். திரைப்படத்தில் தன் பெயர் இல்லாத வரலாற்றுப் பக்கங்களை கில்ஜி கிழித்து நெருப்பில் வீசும் காட்சி ஒன்று வரும். அதே போல நிறைய அரசர்கள் கூட செய்து கொண்டு இருந்தார்கள். பண்டைய இந்திய வரலாற்றிலேயே கூட நிறைய காலி பக்கங்கள் இருக்கின்றன. நபிகள் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே கூட, அதாவது இஸ்லாம் என்ற ஒன்று உருவாவதற்கு முன்பே கூட இந்த காலி பக்கங்கள் இருக்கின்றன. ஆகவே வரலாறுகள் ‘காணாமல் போனதற்கு’ இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டும் காரணம் அல்ல. இந்து அரசர்களும் நிறைய ‘பங்களித்து’ இருக்கிறார்கள்.
அடுத்தது சட்டம் ஒழுங்கைப் பேணுதல். கில்ஜி தாறுமாறாக உத்தரவுகளை இடுவான். அதன் சாதக பாதகங்களை யோசிக்கவே மாட்டான். இதுவும் எல்லா அரசர்களும் செய்ததுதான். பாகுபலியில் ராஜமாதா சிவகாமி அடிக்கடி கூறும் வசனம் ஒன்று வரும். ‘இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்.’ அதன் சரியான அர்த்தம் என்ன? ‘நான் வெச்சதுதான் இங்க சட்டம்.’ அதுதானே?
அப்படித்தான் எல்லா அரசர்களும் இருந்திருக்கிறார்கள். எல்லா அரசர்களும் படையெடுப்பாளர்கள்தான். எல்லா அரசர்களும் ஒரு வகையில் கொடுங்கோலர்கள்தான். இவன் கெட்டவன், இவன் ரொம்பக் கெட்டவன் என்று வேண்டுமானால் வித்தியாசப் படுத்தலாம், அவ்வளவுதான்.
இந்த வரைமுறையை மீறி பெருங்கருணையுடன், ஓரளவு சட்ட திட்டங்களை வடிவமைத்து அதன் அடிப்படையில் ஆட்சி செய்த அரசர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை கைவிரல்களில் எண்ணி விடலாம்.
எவ்வளவு ஓட்டைகள் இருந்தாலும் உலகெங்கும் ஜனநாயகம் போற்றப்படுவதற்கு காரணம் இதுதான். ஒரு ஓட்டை ஜனநாயக அரசு சாதித்ததில் பத்து சதவிகிதம் கூட ‘கருணை மிக்க அரசர்’ ஒருவர் சாதிக்கவில்லை. இந்தியாவிலும் ஜனநாயகம் வந்த பிறகுதான் சமூகப் பொருளாதார முன்னேற்றங்கள் சாதாரண மனிதனை சென்றடைந்தது. வறுமைகள் குறைந்து, பட்டினி சாவுகள் நீங்கி, மருத்துவ வசதி அதிகரித்து, கல்வியறிவு பரவி, கருத்து சுதந்திரம் பெருவாரியாக கிடைத்து பொதுவான வாழ்க்கைத்தரம் பெருகியது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களை தவறாக சித்தரிக்கிறோம். அவர்கள் இங்கே படையெடுத்தார்கள். இங்கே மதமாற்றம் செய்தார்கள். இங்கே மசூதிகள் கட்டினார்கள் என்கிறோம். உண்மைதான். அதனை மோசமாக சித்தரிக்கிறோம்.
ஆனால் சோழர்கள் இந்தோனேஷியாவில் படையெடுத்தது, அதில் தோற்றுப் போன மன்னர்களையே கல் சுமக்க வைத்து இந்துக் கோயில் கட்டியது எல்லாம் பெருமையாக பேசப்படுகிறது. இஸ்லாமிய சுல்தான்கள் செய்ததற்கும் சோழப் படையெடுப்பார்கள் செய்ததற்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஆனால் ஒருவர் செய்தது கொடுமையாகவும் அடுத்தவர் செய்தது பெருமையாகவும் பார்க்கப் படுகிறது. ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.
ஒரே காரணம்தான். ‘நம்மாளு’ ஜெயிக்கிறான். ‘நம்மாளு’ தோற்கிறான். ‘’நம்மாளு’ ஜெயித்தால் அவன் வீரன். ‘நம்மாளு’ தோற்றால் ‘எதிரி’ ஒரு கொடுங்கோலன். நம்மாளு வேற்று தேசத்து பெண்ணை இரண்டாம் தாரமாக மணமுடித்து கூட்டி வந்தால் அவன் கில்லாடி. ‘எதிரி’ நம் பெண்ணை அப்படி செய்ய முயற்சித்தால் அவன் காமாந்தக்காரன்.
இதுதான் நாம் எழுதிக் கொண்டு இருக்கும் வரலாறு.