Saturday 16 February 2019

ராமலிங்கங்கள் பற்றி எழுதுதல்

.

பிரதமர் மோடி ஊடக சந்திப்புகள் நடத்தாமல் இருப்பது பற்றிய என் பதிவில் ஒரு நண்பர் வந்து ‘நீ ஏன் ராமலிங்கம் சம்பவம் பற்றி எழுதவில்லை?’ என்று கேட்டிருக்கிறார். அதாவது நான் ராமலிங்கம் பற்றி எழுதாமல் போனதால்தான் மோடி கோபித்துக் கொண்டு நிருபர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார் என்ற ரேஞ்சுக்கு அந்த கமெண்ட் இருந்தது.

இந்த மாதிரி பேசுவதை Whataboutism அல்லது Whataboutery என்று அழைப்பார்கள். மதவாத வலதுசாரிகள் உலகெங்கும் பின்பற்றும் உத்தி இது. குஜராத் கலவரத்தை கேட்டால் ‘சீக்கியர் படுகொலை பற்றி கேட்டாயா?’ (What about Sikh massacre?’) என்று கேட்பது. ரஃபேல் பற்றிக் கேட்டால் ‘போஃபர்ஸ் பற்றிக் கேட்டாயா?’ என்று கேட்பது. அதாவது ‘What about this?’ என்ற மறு கேள்வியே முந்தைய கேள்விக்கு பதிலாக இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது (1).

இதனை இந்துத்துவ / பாஜக அபிமானிகள் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு மட்டுமே இதில் பங்கில்லை. எல்லாத்தரப்பினரும் இந்த Whatabouteryஐ பின்பற்றுகிறார்கள். பர்தா பற்றிய என் பதிவுகளில் சில முஸ்லிம்கள் வந்து வடஇந்தியாவில் இந்துப்பெண்களும் முக்காடு போட்டுக் கொள்கிறார்களே அதைக் கேட்டாயா? என்று வினவினார்கள்.

ராமலிங்கம் பற்றி நான் எழுதாததற்கு காரணம் அது மதமாற்றத்தை எதிர்த்ததால் வந்த கொலையா அல்லது வேறு தகராறில் நடந்த கொலையா என்பதே எனக்கு முதல் இரண்டு நாட்கள் குழப்பமாக இருந்தது. அப்புறம் மதமாற்றத்தால் நடந்த கொலை என்றால் அதில் எதனை கண்டிப்பது என்பது புரியவில்லை. மதமாற்றத்தை கண்டிப்பதா? அல்லது சில முஸ்லிம்கள் மதத்துக்காக கொலையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பதா? இந்துத்துவ அபிமானிகளுக்கு மதமாற்றம்தான் பிரச்சனையாக இருக்கிறது.

மதமாற்றம் என்பது கிறித்துவ, இஸ்லாமியர்களுக்கு நம் அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் உரிமை. அது சலுகை அல்ல. தவிர, அந்த உரிமை தானாகவே கூட வழங்கப்படவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு அமுலில் இருந்த மதவாத தொகுதி ஒதுக்கீட்டு முறைமையை (Communal Electorate) ரத்து செய்ய ஒப்புக்கொள்வதற்காக சிறும்பான்மை பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை (2). இது சலுகை என்று சொல்பவர்கள் ‘இந்தியா ஒரு இந்து தேசம். இங்கே மதபோதகம் செய்ய அடுத்தவர்களுக்கு உரிமை இல்லை,’ என்று நம்புபவர்கள். இஸ்லாமும், கிறித்துவமும் ஆயிரம் வருடங்களுக்கும் மேல் இங்கே பின்பற்றப்பட்டு வருகின்றன, எனவே இந்து மதத்துக்கு இருக்கும் அதே உரிமை இஸ்லாம் மற்றும் கிறித்துவத்துக்கும் இருக்கிறது என்பதை வேறு ஒரு பதிவில் விளக்கி இருக்கிறேன். (3)

அப்படியானால் கொலை செய்யலாமா என்று கேட்கலாம். கண்டிப்பாக செய்யக்கூடாதுதான். அதே மாதிரி கிறித்துவ மத போதகர்கள் இந்துக் கடவுளர்களை அவமதித்து, கிண்டலடித்து போதனைகள் செய்வதும் தவறுதான். ஒரு வீடியோவில் கிறித்துவ போதகர் ஒருவர் தமிழகத்தில் உள்ள கோயில்கள் சாத்தானின் உறைவிடங்கள் என்று பேசிய வீடியோ சில மாதங்கள் முன்பு வைரல் ஆனது. இந்த மாதிரி ஆட்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஏன் கொலையாளிகள், வன்புணர்வாளர்கள், மதவெறியர்கள் இந்து மதத்தில் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன? வேற்று மதத்தில் கொலைகாரர்கள் இருந்தால் மட்டும் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது? ராமலிங்கத்துக்காக அப்படி கண்ணீர் வடித்த நீங்கள் அக்லாக்குக்காக எவ்வளவு சொட்டு கண்ணீர் வடித்தீர்கள் என்று நான் கேட்கலாமா? மதமாற்றத்தை கண்டித்த நீங்கள் கர்-வாப்ஸி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? (இத்தனைக்கும் கர்-வாப்ஸி எனும் தாய் மதம் திரும்பும் சடங்கு இந்து மத மரபிலேயே கிடையாது.)

அப்படி நான் கேட்க முடியாது. கேட்டால் நானும் மற்றவர்களைப் போலவே Whatboutery செய்வது மாதிரி ஆகி விடும்.

அக்லாக் சம்பவம் நடந்த போது நான் அந்த சம்பவத்தைப் பற்றி நேரடியாக எழுதாமல் மாட்டுக்கறி உண்ணும் பண்டைய இந்திய மரபு பற்றி வரலாற்றுக்குறிப்புகளுடன் ஒரு பதிவு எழுதினேன் (4). கேரள பாதிரி ஒருவர் பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போது பழைய போப் ஆண்டவர்கள் முதல் இதில் சம்பந்தப்பட்டது பற்றியும் இந்த ‘கிறித்துவ சாமியார்’ சிஸ்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் பற்றியும் எழுதினேன். அதே போல ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடந்த போது வஹாபிஸம் பற்றி நீள் பதிவு எழுதினேன் (4).

எனக்கு இந்த மாதிரி ஆதார சிஸ்டங்களை அலசுவது மட்டுமே உவப்பாக இருக்கிறது. அதனால்தான் தனிப்பட்ட சம்பவங்களை விட பொதுவான தத்துவ ரீதியான வளர்ச்சி மற்றும் அழிவுகள் என்னை ஈர்க்கின்றன. Macro currents more significantly important than micro incidents. அதனால்தான் ஒரு ராமலிங்கம் விஷயமோ அல்லது ஒரு லோக்கல் பாஜக தலைவர் தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களை இழிவுபடுத்தி பேசுவதோ தனியாக பின்பற்றி பதிவுகள் எழுதுவது எனக்கு உகந்ததாக இருப்பதில்லை. அவற்றில் சொல்வதற்கு எனக்கு பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை.

வஹாபிஸம் உலக அளவில் பரவுவதும், அது இஸ்லாமிய சமூகத்துக்கு வில்லனாக இயங்குவதும் கவலை தருகிறது. அதே போல, இந்துத்துவம் இந்து சமூகத்துக்கு அழிவாக வருவது கவலை தருகிறது. இந்துத்துவம், வஹாபிஸம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று கண்ணாடி பிம்பங்கள் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன்.
ஆனால் இந்துத்துவத்தை குறிப்பாக அதிக அளவில் விமர்சிக்கிறேன். காரணம், அதுதான் இப்போது அதிகாரத்தில் இருக்கிறது. அது பெரும்பான்மை மதத்தை சார்ந்து இருக்கிறது. தேசத்தின் மாபெரும் ஒரு கட்சியின் ஆதாரக் கொள்கையாக இருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் இந்துத்துவ சிந்தனை அரங்கேற்றிய சம்பவங்களில் இறந்த அப்பாவிகள் எண்ணிக்கை இஸ்லாமிய தீவிரவாத சம்பவங்களில் இறந்தோரை விட பன்மடங்கு அதிகம்.

அதே போல இன்று இந்தியாவில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கோ, வளர்ச்சி திட்டங்கள் தீட்டுவதற்கோ, பாடத்திட்டங்களை முடிவு செய்வதற்கோ வஹாபிஸ்ட்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏன் சாதாரண முஸ்லிம்களுக்கு கூட அரசியல் அதிகாரம் இல்லாத அளவுக்கு போய்க்கொண்டு இருக்கிறது.

ஆனால் இந்த அதிகாரங்கள் எல்லாம் இந்துத்துவ சிந்தனையாளர்களுக்கு இருக்கிறது. வரலாற்று ஆய்வு முதல் பாடத்திட்டங்கள் வரையறை செய்யும் குழு வரை இந்துத்துவ சிந்தனையாளர்கள் தலைமை வகிக்கிறார்கள். இந்துத்துவத்தை வாழ்நாள் முழுவதும் முழு மூச்சுடன் எதிர்த்து வந்த நேருவின் நினைவு நிலையத்தின் இன்றைய இயக்குனர் ஒரு ஆர்எஸ்எஸ் அனுதாபி. அந்த அளவுக்கு இந்துத்துவம் இங்கே வேர் கொண்டிருக்கிறது.

இவை எல்லாமே இந்தியாவுக்கு ஆபத்தான விஷயங்கள். இந்தியாவின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் முஸ்லிம்கள் மட்டும்தான் என்று நம்பும் இந்த illiteracy சுதந்திர இந்தியாவுக்கு வந்திருக்கும் மாபெரும் நோய். இதனை தொடர்ந்து கண்டிக்காமல் விட்டால் இந்த நோய் முற்றி குணமாக்கவே முடியாத நிலைக்கு போய் விடும்.

ஆகவேதான் இந்துத்துவத்தை குறி வைத்து தொடர்ந்து எழுதி வருகிறேன். ஊழலோ, பொருளாதாரக் கொள்கையோ, வளர்ச்சி திட்டங்களோ, அடிக்கடி நடக்கும் தீவிரவாத சம்பவங்களோ இவற்றில் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. மோடி பெருசா, மன்மோகன் பெருசா என்று தனிப்பட்ட ஆட்சியாளர்கள் இடையில் ஒப்பீட்டு விவாதம் நடத்தலாம். ஆனால் கட்சி அளவில் இருவரும் பெரிய வித்தியாசம் இன்றிதான் இயங்கி வருகிறார்கள். இருக்கும் ஒரே முக்கிய வித்தியாசம் இந்துத்துவம். அதனால்தான் அதனை சிறப்பாக தேர்ந்தெடுத்து விமர்சிக்க வேண்டி இருக்கிறது. அதைப்பார்த்து அதிகமாக பயப்பட வேண்டி இருக்கிறது.

எனவே இந்த WhatAbouteryஐ நிறுத்தும் வரை நமக்கு விமோசனமில்லை. இது நம் சிந்தனையை குறுக்கி கோபத்தை, அர்த்தமற்ற விரோதத்தை மட்டுமே வளர்க்க உதவும் கருவி. அடுத்த முறை ஒரு விவாதத்தை எதிர்கொள்வதற்கு முன்பு நாம் WhatAbouteryஐ அங்கே பயன்படுத்துகிறோமா என்று யோசித்துக் கொள்வோம். தரமான சிந்தனைக்கும், விவாதத்துக்கும் முயற்சி செய்வோம். தேசம் என்ன ஆகிறதோ இல்லையோ, நம் சுய வளர்ச்சிக்கு அது நன்கு உதவும்.



1) Whataboutery for Dummies - https://www.youtube.com/watch?v=H91QUGgsPBU
2) Question of Representation - https://www.thehindu.com/opinion/op-ed/questions-of-representation/article23930516.ece
3) இந்திய மதங்கள் - https://www.facebook.com/sridharfc/posts/10155558982456473
4) ‘மாட்டுக்கறி’ மற்றும் ‘வஹாபிஸமும் ஷிர்க் ஒழிப்பும்’ இரண்டு கட்டுரைகளும் என் முதல் புத்தகம் ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’ புத்தகத்தில் இருக்கிறது.



No comments:

Post a Comment