கிரீன் பீஸ் உலகளாவிய அளவில் தங்கள் போராட்டங்களை நடத்தி வரும் ஒரு அமைப்பு. அவர்கள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் நன்கொடைகள் பெற்று வந்திருக்கிறார்கள் என்று நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அப்படியே இருந்தாலும் எங்கிருந்து அவர்களுக்கு அந்த நன்கொடைகள் வந்தன, அவை ஏன் ஆட்சேபத்துக்கு உரியவை என்கிற எந்தத் தகவலும் அரசின் தரப்பில் இருந்து தரப்படவில்லை.
கிரீன் பீஸ் பொருளாதார முன்னேற்ற திட்டங்களை முடக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு முன்-வைக்கப் படுகிறது. அது ஓரளவுக்கு உண்மையாகவே இருக்கக் கூடும். ஆனால் அந்த மாதிரி ஒரு தடைக் கல் இல்லா விட்டால் இந்நேரம் இந்தியாவின் முக்கால் வாசி காடுகள் அழிக்கப் பட்டிருக்கும். கனிம வளங்களின் மத்தியில் குடியிருக்கும் எல்லா ஆதிவாசிகளும் இந்நேரம் காணாமல் போயிருப்பார்கள். அந்த மாதிரி ஆகாமல் இன்னும் கொஞ்ச நஞ்சம் மிச்ச்சமிருப்பதற்கு கிரீன் பீஸ் மாதிரி நிறைய இயக்கங்கள்தான் காரணம்.
சுதந்திரமடைந்தது முதல் இந்தியாவில் 'முன்னேற்றத் திட்டங்கள்' என்கிற பெயரில் கிட்டத் தட்ட 60 மில்லியன் மக்கள் மறு குடியேற்றம் எதுவும் இல்லாமல் தத்தம் கிராமங்களில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. அதாவது மூன்று ஆஸ்திரேலியாவே அல்லது ஒரு இங்கிலாந்தே காணமல் போயிருக்கிறது. வளர்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் பாதிக்கப் படும் மக்களுக்கு rehabilitation வழங்குவதில் இந்திய அரசாங்கங்களின் ரெகார்ட் படு மோசம். 2010ல் உலகின் 10 அடர்ந்த காடுகள் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 367 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காடுகள் அழிக்கப் பட்டுள்ளன என்று Forest Survey of India-வின் அறிக்கை பயமுறுத்துகிறது. இதிலும் இந்திய அரசாங்கங்களிடம் இருந்து எந்த தெளிவான திட்டமும் தெரியவில்லை. இப்போதோ செம்மரக் கடத்தல் பிரச்சனையில் முன்னாள் அமைச்சர்கள் பெயர் எல்லாம் அடிபடுகின்றன. கர்நாடகா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் என்று கனிம வள முறைகேடுகள் எங்கே நடந்தாலும் அங்கே அந்தந்த ஊர் மந்திரிகள், அரசியல்வாதிகள் பெயர் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் கொஞ்சம் சன்னமாகவாவது ஒரு எதிர் குரல் ஒலித்துக் கொண்டு இருப்பது அவசியமாகிறது. கிரீன் பீஸ் மாதிரி இயக்கங்கள்தான் இதை செய்ய முடியும். இதையும் அடைத்து விட்டால் பிரச்சனை இல்லாமல் பொருளாதாரம் முன்னேறுகிறதோ இல்லையோ, காடுகளும் கனிம வளங்களும் பிரச்சனையே இல்லாமல் திருடப்படும் நிலை தோன்றி விடும்.
கிரீன் பீஸ் மாதிரி இயக்கங்கள் ஏதாவது நிதி மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதனை ஆதாரங்களுடன் வெளிக் கொணர வேண்டியது அரசுகளின் கடமை. அதே சமயத்தில் தொண்டு நிறுவனங்களை நன்கொடை விபரங்களை வெளியிட வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அதே சமயம் தொண்டு நிறுவனங்களின் குடையில் ஒளிந்து கொண்டு இருக்கும் அரசியல் கட்சிகளும், குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை, தங்கள் நிதி விபரங்களை வெளியிட வேண்டும். அப்படி செய்யாமல் இந்த மாதிரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மட்டும் குறி வைத்தால் இதில் அரசியல் உள் நோக்கம் மட்டுமே இருக்கிறது என்கிற முடிவுக்கு மக்களாகிய நாம் வர வேண்டும். சமீபத்தில் கூட டைம் பத்திரிகையின் பேட்டியில் ‘’ஸப்கா ஸாத், ஸப்கா விகாஸ்’, எல்லோரையும் சேர்த்து எல்லோருக்கும் முன்னேற்றம், என்கிற தன் தேர்தல் கோஷத்தை மோடி நினைவு கூர்ந்தார். அந்த ‘ஸப்’-பில் இந்த தேசத்து ஆதிவாசிகளும் சேர்த்தி என்பதை அவருக்கு யாராவது நினைவு படுத்த வேண்டும்.
குறிப்பு: நம் தேசத்தின் மறு-குடியேற்றம் பற்றிய எளிமையான அறிமுகத்துக்கு பின் வரும் புத்தகங்களை புரட்டவும்.

No comments:
Post a Comment