‘நிர்பயா வழக்குதான் பெரிய வழக்கா? பில்கிஸ் பானோ வழக்கு பெரிய வழக்கு இல்லையா? அதைப் பற்றி ஏன் யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள்?’
என்று பதிவுகள் பார்க்கிறேன்.
பில்கிஸ் பானோ யார் என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய பின்குறிப்பு: குஜராத் கலவர நேரத்தில் தன் குடும்பத்துடன் பில்கிஸ் பானோ தப்பித்துப் போக முயன்ற போது ஒரு கும்பல் அவர்களை தடுத்து பானோவை கொடும் வல்லுறவு செய்து, கூடவே அவர் மகள், தாய் என்று எல்லாரையும் கொன்று போட்டனர். அவர் அப்போது ஐந்து மாத கர்ப்பிணி என்பதும் முக்கியமான விஷயம். அந்த வழக்கில் 11 பேருக்கு மும்பை ஹைகோர்ட் ஆயுள் தண்டனை கொடுத்தது. ஆனால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டி பானோ இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறார்.
நிற்க. இங்கே பிரச்னை அவர்களுக்கு தூக்கு கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதல்ல (என்று நம்புகிறேன்). நிர்பயா அளவுக்கு அந்த வழக்கு முக்கியத்துவம் பெறவில்லையே என்பதுதான்.
அவர் முஸ்லீம் என்பதால் அது முக்கியத்துவம் பெறவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளில் நிர்பயா அல்லது பானோ என்று இரண்டே இரண்டு வல்லுறவு சம்பவங்கள் நடந்திருந்தால் நாம் அப்படி நினைக்கலாம். ஆனால் ஆண்டுக்காண்டு ஆயிரக்கணக்கில் வல்லுறவு வழக்குகள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.
தேசிய குற்றவியல் ஆவணக் கழக அறிக்கையின் படி வல்லுறவுக் குற்றங்கள் எண்ணிக்கை:
- 2012 - 24,923
- 2013 - 33,707
- 2014 - 36,735
- 2015 - 34,651
அதாவது 2012ல் நிர்பயா சம்பவம் நடந்த அதே ஆண்டில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் வல்லுறவு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அப்படியானால் அந்த மற்ற வழக்குகள் ஏன் பெரிய கவனம் பெறவில்லை? அதற்கு அடுத்த வருடமே கூட சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் சிறுசேரியில் வல்லுறவுக்கு உள்ளாகி இறந்து போனாள். அதே வருடம் உத்திரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் இரண்டு தலித் இளம்பெண்கள் சாதி இந்துக்களால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர். அப்புறம் மற்ற தலித்துகளுக்கு சேதியாக அந்த சடலங்கள் ஊர்ப் பஞ்சாயத்து ஆலமரத்தில் தொங்க விடப்பட்டன. சென்னை சம்பவம் எந்தக் கம்பெனி, உபி சம்பவம் எந்த கிராமம் என்று கூகுள் செய்யாமல் உங்களில் எத்தனை பேரால் சொல்ல இயலும்?
விஷயம் இதுதான். நிறைய சம்பவங்கள், குற்றங்கள், நல்ல, கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சில விஷயங்கள் மட்டும் திடீரென்று நம் உணர்வைத் தூண்டி நம் கற்பனையை உசுப்பி விட்டு விடுகின்றன. ஆண்டாண்டு காலமாக கறுப்பின மக்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப் பட்டுத்தான் வந்திருக்கிறார்கள். ஆனால் அறுபதுகளில் ரோஸா பார்க்ஸ் எனும் பெண்ணுக்கு பஸ்ஸில் வெள்ளையர் சீட்டில் உட்கார இடம் கொடுக்கவில்லை என்றதும் அதை அவள் எதிர்த்தும் பெரும் பிரச்சனையாகி அமெரிக்கா எங்கும் போராட்டங்கள் வலுத்து உலக வரலாற்றையே மாற்றியது. இன்று கறுப்பின உரிமைப் போராட்டத்தின் சின்னமாகவே அந்தப் பெண்மணி மாறி விட்டார்.
அது என்ன பார்க்ஸ் பிரச்சனைதான் பெரிய பிரச்சனையா? வேறு கறுப்பர்கள் அதற்கு முன்பெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாகவே இல்லையா என்றால் என்ன சொல்ல முடியும்? அடக்கி வைக்கப் பட்டிருந்த கோபங்களின் கதவை அந்த சம்பவம் திறந்து விட்டது. அவ்வளவுதான். அது இல்லையென்றால் வேறு ஏதாவது திறந்து விட்டிருக்கும்.
அதே போல உப்பு சத்தியாகிரகம் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய சம்பவமாக பார்க்கப் படுகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை அசைத்த சம்பவம் அது. ஆனால் அதுதான் இருப்பதிலேயே பெரிய போராட்டமா என்றால் இல்லை. சாவு எண்ணிக்கையில், கைதான ஆட்களின் எண்ணிக்கையில் என்று எதில் யோசித்தாலும் உப்பு சத்தியாகிரகம் லிஸ்டில் கடைசியில்தான் இருக்கும். ஆனால் என்னவோ ஏதோ திடீரென்று பூரா இந்திய மக்களின் கற்பனையை அது தூண்டி வெள்ளையருக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்து விட்டது.
தமிழகத்தில் அமில வீச்சு என்றால் நமக்கு விநோதினிதான் நினைவுக்கு வருவார். ஆனால் அவருக்கு முன்பும் பின்பும் பல்வேறு பெண்கள் அமிலம் வீசப்பட்டு வாழ்வை இழந்துள்ளனர்.
கலவரம் என்றாலே நமக்கு குஜராத் கலவரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் சாவு எண்ணிக்கையில், மக்கள் இடம்பெயர்ந்த எண்ணிக்கையில் மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் குஜராத் கலவரம் லிஸ்டில் மூன்றாவதாகத்தான் வருகிறது. ஆனால் இன்று மதக்கலவரம் என்றாலே நம் எல்லாருக்கும் குஜராத்தான் நினைவுக்கு வரும்.
இதே போல சொல்லிக் கொண்டே போகலாம்.
போலவே நிர்பயா சம்பவமும் திடீரென்று எல்லார் கற்பனையையும் தூண்டி வல்லுறவுகளுக்கு எதிரான கோபத்தை உண்டாக்கி விட்டிருக்கிறது. கறுப்பின உரிமைக்கு ஒரு ரோஸா பார்க்ஸ் மாதிரி இந்திய வல்லுறவுக் குற்றங்களுக்கு ஒரு நிர்பயா. ஒரு சின்னம். ஒரு கொடி. அவ்வளவுதான்.
இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை என்பது என் நிலைப்பாடு. மாறாக நிர்பயா சின்னத்தை நாம் மென்மேலும் பரப்பி, விவாதித்து, அதன் வடு அழியாமல் பராமரிக்க வேண்டும். 25 ஆயிரம், 35 ஆயிரம் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அவலமான ஒரு விஷயம் தேச அளவில் பத்துப் பதினைந்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது தூக்கு தண்டனைகளாலும், ஆயுள் தண்டனைகளாலும் நடக்காது. ஆண்களாகிய நாம் நம்மை, பெண்கள் பற்றிய நம் சிந்தனைகளை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சும்மா பாரதி டி-ஷர்டை மட்டும் போட்டு வலம் வராமல் நிசமான பெண் விடுதலை பற்றிய விவாதங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அது நிர்பயா என்கிற சின்னத்தின் கீழ் நடப்பதில் தவறேதும் இல்லை. தேவை சமூகத்தில் மாற்றம். சின்னத்தில் அல்ல.

No comments:
Post a Comment