Sunday, 22 April 2018

முத்தலாக் எனும் குற்றம்


.
(16 December 2017)
முத்தலாக் பயன்படுத்தி மனைவியை விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் சட்ட வடிவம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றிருக்கிறது. இது அவையில் நிறைவேறி விட்டால் முத்தலாக் பயன்படுத்துவோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
இது தேவையற்ற செயலாக எனக்குப் படுகிறது. முத்தலாக் சட்ட விரோதம் என்றும் மத ரீதியாகக் கூட அதற்கு அங்கீகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் அறுதிபட கூறியாகி விட்டது. அப்படி இருக்கும் போது ஒருவர் தன் மனைவியிடம் மும்முறை தலாக் அறிவித்தால் அது செல்லுபடி ஆகாது. ஒரே ஒரு முறை தலாக் கூறியதாகத்தான் எடுத்துக் கொள்ளப் படும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இஸ்லாமிய சமூகத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்தினாலே போதுமானது.
முத்தலாக் என்பது ஏறக்குறைய மனைவியை திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு துரத்துவது போன்றது. அது இதர மதத்தவரிடமும் நடக்கிறது. அப்போது அவர்களும் சிறைக்கு செல்ல வேண்டியதுதானா?
மூன்று வருடம் சிறை என்பது கலவரம் செய்பவர்களுக்கு, சில வகை கொலைகளுக்கு வழங்கப்படும் தண்டனை. அதனை இன்ஸ்டன்ட் விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு வழங்க முனைவது பெருந்தவறு. இஸ்லாமிய சமூகத்தின் மேல் இந்த அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது.
சரி, மனைவியிடம் சொல்லி விட்டு வீட்டை போவது குற்றம் என்றால், சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி அப்புறம் 'எனக்கு மனைவியே இல்லை,' என்று அஃபிடவிட் கொடுப்பதை அதை விடப் பெருங்குற்றம் என்று பொருள் கொள்ளலாமா? அதற்கு எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்?

==========================================================

முத்தலாக் பற்றிய பதிவில் பிரதமரை வம்புக்கு இழுத்திருக்கிறேன் என்று கமெண்டுகள் வருகின்றன. வெறும் லைக்-குகளுக்காக அல்லது மதச்சார்பின்மையை நிரூபிப்பதற்காக அப்படி செயகிறேன் என்றும் கமெண்டுகள்.
என் லைக்குகளை நான் கணக்கு செய்து கொண்டிருப்பவன் அல்ல. மேலும் இவ்வளவு வருடம் கழித்து புதிதாக என் மதச்சார்பின்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று நம்புகிறேன்.
அது ஒரு புறம் இருக்க, பிரதமரின் மணவாழ்வு அவரின் தனிப்பட்ட பிரச்சினை என்று நம்புகிறவன். அந்த சர்ச்சை வெளிவந்த போது கூட பிரதமரை இந்த விஷயத்தில் நெருக்கக் கூடாது என்று பதிவு எழுதியவன். பிரைவசியின் தேவையில் பெரும் நம்பிக்கை உடையவன்.
ஆனால் பிரதமருக்கு இருக்கும் அதே உரிமை, அதே பிரைவசி தனி மனிதனுக்கும் இருக்க வேண்டும். முத்தலாக் சட்டம் அந்த உரிமையை பறிக்கிறது. உரிமையை குற்றமாக்கி அவனை சிறைக்கு தள்ளுகிறது. இது தவறு என்று வாதிட என்னிடம் இருந்த குறிப்புகளில் சக்தி வாய்ந்த குறிப்பு பிரதமர்தான். பிடிக்காத மணத்தில் இருந்து தானே வெளிவந்த பிரதமருக்கு முத்தலாக்கை குற்றமாக்குவது தவறு என்று சொந்த அனுபவத்தால் புரிந்திருக்க வேண்டும். அது புரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டினேன்.
அவ்வளவுதான்.

முத்தலாக் தீர்ப்பு


.
(22nd August 2017)

இன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் ‘முத்தலாக்’ எனும் உடனடி விவாகரத்து முறைமையை சட்டவிரோதம் என்று அறிவித்து இருக்கிறது. அதே நேரம் இது தாற்காலிக தடைதான் என்றும் நீண்ட கால அடிப்படையில் இதையொட்டி ஒரு சட்டவடிவத்தை நாடாளுமன்றம் கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவு என்று கருதுகிறேன். நான் பலமுறை முத்தலாக் பற்றி பதிவுகள் எழுதி இருக்கிறேன். அது ஒரு பண்டைய கால மூடத்தனம்தான் என்றாலும் இன்றைக்கு இஸ்லாத்தில் மிகவும் நவீனமாக உபயோகிக்கப் படும் விஷயங்களில் அதுவும் ஒன்று. நாளிதழ் விளம்பரங்கள் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. எஸ்.எம்.எஸ், ஸ்கைப், ஏன் வாட்ஸ்அப் மூலம் கூட மூன்று முறை தலாக் பிரயோகித்து மனைவியை கழட்டி விட்ட சம்பவங்கள் நடைமுறையில் இருக்கின்றன துருக்கி, மலேசியா, பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய பெரும்பான்மை மக்கள் வசிக்கும் நாடுகளிலேயே இது தடையில் இருக்கிறது. ஏன், பாகிஸ்தான் மாதிரி ஷரியா சட்டங்கள் நடைமுறையில் உள்ள தேசத்திலேயே கூட முத்தலாக்-குக்கு அங்கீகாரம் இல்லை.
காரணம் ‘தலாக்-ஏ-பிதா’ (Talaq-e-Bid’ah) எனும் முத்தலாக் இஸ்லாமிய சமூகங்களில் பண்டைய காலத்தில் இருந்தே பழக்கத்தில் இருந்தாலும் இஸ்லாத்தில் அதற்கு அங்கீகாரம் இல்லை. குர்ஆனில் முத்தலாக் கிடையாது. நபிகளும் அதனை அங்கீகரித்ததில்லை. அவரின் உடனிருந்த ருக்கான்-பின்-யாஸித் என்பவர் ஒரு முறை முத்தலாக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் நபிகளிடம் அது பற்றி வருந்திக் கூறிய போது நபிகள் ‘எதை வைத்து உன் மனைவியை விவாகரத்து செய்ததாக நினைக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு யாஸித் ‘அவளிடம் மூன்று முறை தலாக் கூறினேன்,’ என்றார். ‘ஒரே நேரத்தில் தொடர்ந்து மூன்று முறை தலாக் சொல்வது ஒரே ஒரு முறை தலாக் சொல்வதற்குதான் சமம்; உன் விவாகரத்து முடிவடையவில்லை. எனவே, அவளை திரும்ப உன்னிடம் அழைத்துக் கொள்வதில் தடையேதும் இல்லை.’ என்று நபிகள் அறிவித்தார்.
இந்த சம்பவத்தை ஒட்டி மூன்று முறை தொடர்ந்து தலாக் சொல்வது ஒரே ஒரு முறை சொல்வதாகத்தான் உலகெங்கும் இஸ்லாமிய அறிஞர்களால் கருதப் படுகிறது. எனவேதான் முத்தலாக்கை ஆதரித்த முஸ்லீம் சட்ட வாரியமே கூட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அஃபிடவிவிட்டில் ‘முத்தலாக் இஸ்லாத்தில் ஒரு பாவம்,’ என்றே குறிப்பிட்டு இருக்கிறது.
இஸ்லாமிய அறிஞர்களை உச்ச நீதிமன்றம் தீர கலந்தாலோசித்தே இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால் எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைஸி ‘இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பெரும் பாடாக இருக்கும்!’ என்று சொல்லி இருக்கிறார். அது உண்மைதான். இஸ்லாமிய விவாகரத்துகள் நீதிமன்றத்துக்கு வராது. தவிர முஸ்லிம்கள் கெட்டோ (ghetto) என்று சொல்லப்படும் உள்ளடங்கிய, தனித்துவ சமூகங்களாக பெருமளவு வாழ்வதால் அங்கே நடக்கும் குடும்ப சச்சரவுகள் அதிகம் வெளியே வராது. ஆயினும் கொஞ்சம் கொஞ்சமாக படித்த பெண்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் உள்ள போராளிகள் அத்துமீறல்களை வெளியே கொண்டு வந்து சர்ச்சையை கிளப்பி இந்த வழக்கத்தை பெருமளவு கட்டுக்குள் வைக்க உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பிரதமர் மோடி இந்தத் தீர்ப்பு வந்த உடனே அடித்துப் பிடித்து இதனை வரவேற்று ட்வீட் செய்திருக்கிறார். அது சரிதான்; ஆனால் ‘இது முஸ்லீம் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்!’ என்று டீவீட்டில் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கான அப்பாடக்கர் தீர்ப்பா இது என்பது தெரியவில்லை. கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் வந்திருக்கிறது; அவ்வளவுதான். என்னைப் பொருத்த வரை முஸ்லீம் பெண்கள் நலனில் இது ஒரு துவக்கம், அவ்வளவே. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அந்தப் பயணத்தை முஸ்லீம் ஆண்கள் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.
அது ஒரு புறம் இருக்க, ‘முத்தலாக் தீர்ப்பை கொடுத்த உச்ச நீதிமன்றம் சபரி மலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் இதே மாதிரி முடிவு எடுக்குமா?’ என்று கேட்டு பதிவுகள் முஸ்லிம்களிடம் இருந்து பார்க்கிறேன்.
சபரி மலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் பெண்களை அனுமதிக்கும் விதமாக தீர்ப்பு வரும், வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் முத்தலாக் விஷயத்தில் மத-ரீதியாகத்தான் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இதிலும் மதரீதியாக முடிவெடுக்க எத்தனித்தால் பெண்களுக்கு இருக்கும் தடையை தொடரத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். (பல நூறு ஆண்டுகளாக அய்யப்பன் கோயிலில் வயது வந்த பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இல்லை என்று தேவஸ்தான போர்ட் குறிப்பிட்டு உள்ளது. அதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது.) ஆகவே சபரிமலை விஷயத்தில் ‘முத்தலாக்கில் செய்தது மாதிரியே மத ஆதாரங்கள் சார்ந்து முடிவெடுக்காமல் மதம் தாண்டிய ‘பெண்ணுரிமையை’ கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
கடைசியாக, இப்படி ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. ‘குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேசுகிறாயே? காஷ்மீர் பண்டிட் பற்றி பேசினாயா? சீக்கியர் கலவரம் பற்றி பேசினாயா?’ என்று ஹிந்துத்துவ அபிமானிகள் கேட்கிறார்களே, அதற்கும் ‘முத்தலாக் வேண்டாம் என்கிறாயே, சபரிமலை விஷயத்தில் என்ன சொல்கிறாய்?’ என்று கேட்பதற்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு தெரியவில்லை. சொல்லப் போனால் ஹிந்து மதத்தில் பெண்கள் விஷயத்தில் சீர்திருத்தங்கள் துவங்கப் பட்டு நூறாண்டுகளுக்கு மேல் ஆகின்றன. சுதந்திர இந்தியாவில் ஹிந்துப் பெண்களுக்கு நிறைய உரிமைகள் வழங்கும் முக்கியமான சட்ட வடிவமான Hindu Code Bill ஐ கொண்டு வர நேருவும் அம்பேத்கரும் கடும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்த ஹிந்துத்துவ அபிமானிகள் (ஹிந்து மகாசாபா போன்றோர்) இதே சீர்திருத்தங்களை ஹிந்துப் பெண்கள் என்றில்லாது இந்தியா முழுக்க கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது அதனை முஸ்லீம் தலைவர்கள் எதிர்த்தார்கள். பிரிவினையின் காரணமாக இந்திய முஸ்லிம்கள் பெரும் பாதுகாப்பின்றி உணர்ந்ததால் அப்போது இந்த சட்டங்களை அவர்கள் மேல் திணிக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப் பட்டது.
இப்போதும் புதிய அரசின் முஸ்லீம் விரோதக் கொள்கைகளால் அந்த பாதுகாப்பின்மை நிலைமை கொஞ்சம் திரும்பி வந்திருக்கிறது என்பது உண்மைதான் எனினும் 1948ல் இருந்த அளவு மோசமான நிலை இப்போது இல்லை என்று உறுதியாகவே சொல்லலாம். எனவே, இப்போது இதனை எதிர்க்காமல், ஹிந்துப் பெண்களுக்கு செய்தாயா, கிருத்துவர்களுக்கு செய்தாயா என்றெல்லாம் எதிர்வாதங்கள் புரியாமல் இந்திய முஸ்லீம் சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்தக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவைஸி விடுத்த எச்சரிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு இந்த நீதிமன்ற உத்தரவை நடைமுறையில் அமுல்படுத்தி ஹிந்துத்துவ பிரச்சாரத்தின் பல்லைப் பிடுங்க இந்திய முஸ்லிம்கள் உதவுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் இந்த உத்தரவை மனதார ஆதரித்து உச்ச நீதிமன்றத்துக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொடுங்கோல் மன்னர்கள்


.
‘பத்மாவத்’ பற்றிய என் பதிவில் அலாவுதீன் கில்ஜி பற்றிய கமெண்டுகளில் ‘அவன் கொடுங்கோலன். அவனை அப்படித்தானே சித்தரிக்க முடியும்?’ என்று கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன.
கில்ஜி கொடுங்கோலனாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என் பிரச்னை அதுவல்ல. ராஜபுத்திர அரசன் ராஜா ரத்தின சேனன் கருணை மிகுந்த, நேர்மையான, மென்மையாகப் பேசும் நல்லவனாக சித்தரிக்கப் படுகிறான். அதுதான் பிரச்சனை. அவன் அமைச்சரவையிலும், ராணுவத்திலும் கூட நேர்மை மிகுந்த நல்லவர்களே இருக்கிறார்கள். கூட இருக்கும் ஒரே கெட்டவன் ஒரு பிராமண பண்டிதன்.அவனின் உண்மை ரூபமும் கூட கதையின் துவக்கத்திலேயே வெளியாகி ரத்தின சேனனால் நாடு கடத்தப் பட்டு விடுகிறான். அப்போது கூட ராஜா அந்தப் பண்டிதனுக்கு மரண தண்டனை கொடுக்கவில்லை. ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் (பிரம்ம ஹத்தி தோஷம்) தனக்கு வரக்கூடாது என்று கூறுகிறான்.
ஆனால் கில்ஜி மட்டுமல்ல, கில்ஜியின் அமைச்சரவையில் எல்லாருமே தீயவர்கள். அவனருகில் இருக்கும் சுமாரான நல்ல மானுடம் அவன் மனைவி மட்டுமே. அதுவும் அவள் நல்லவள் என்று சொல்லவியலாது. கில்ஜியை பழிவாங்க அவளுக்கு ஒரு பழைய கணக்கு இருக்கிறது. அதுவும் இல்லையென்றால் அவளும் இவர்களோடு சேர்ந்தே இயங்கி இருக்கக் கூடும்.
அதிலும் ரத்தின சேனனும் கூட ஏற்கெனவே திருமணமாகி இன்னொரு பெண் மேல் மையல் கொண்டு அவளை மணந்து கொண்டு வருகிறான். கில்ஜியும் அதையே செய்ய முற்படுகிறான். ஆனால் இருவருக்கும் என்ன வித்தியாசம்! ஒருவன் மகா காதலன்; இன்னொருவன் காமாந்தகாரன்.
என்னைப் பொறுத்தவரை ராஜபுத்திரர்களாகட்டும், சோழ பாண்டியார்களாக இருக்கட்டும், மௌரியர்களாக இருக்கட்டும். எல்லாருமே பெருமளவுக்கு கொடுங்கோலர்களாக, ஆணாதிக்கவாதிகளாகவே இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சொல்லப் போனால் 12ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சமூகம் ராஜபுத்திரர்களை விட அதிகமாக பெண்களுக்கு உரிமைகள் கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. விதவை மறுமணம், விவாகரத்து உரிமை போன்றவற்றை எல்லாம் இந்திய சமூகம் கேள்விப்படும் முன்பே இஸ்லாம் கொண்டு வந்திருக்கிறது.
ஏன், இன்றைக்குமே கூட, இத்தனை முன்னேற்றங்களுக்குப் பிறகும் கூட, பெண்கள் வளர்ச்சியில் பின்னணியில் இருக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முக்கிய இடம் வகித்துக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது இதே சமூகம் 12ம் நூற்றாண்டில் பெண்களுக்கு பெரிய மரியாதை செய்தது என்று நம்ப இயலவில்லை. இன்றைக்கு இருக்கும் மனித வளக் குறியீடுகளில் எதிலுமே ராஜபுத்திர அரசர்கள் பங்களித்ததாக வரலாறு இல்லை. தில்லி சுல்தான்கள் போல, முகலாயர்கள் போல இவர்களும் அதிகாரத்துக்காக மாமன் மச்சான் சண்டை, அரண்மனை சதிகள், மர்மமான அரச குடும்ப கொலைகள் என்றுதான் வாழ்ந்திருந்திருக்கிறார்கள். எத்தனை அரசர்கள் தங்கள் ராஜ்யத்தின் மக்களை சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற்ற முயற்சிகள் மற்றும் கொள்கை முனைப்புகள் எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கில்ஜிகளுக்கும் இதர அரசர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குறிப்பாக, மற்ற ராஜ்ஜியங்கள் மீது போர் தொடுத்து அவர்கள் சொத்துகளை, கோயில்களை கொள்ளையடிப்பதில் கூட இந்து மற்றும் முஸ்லீம் அரசர்களுக்குள் பெரிய அளவு வித்தியாசம் இருக்கவில்லை.
கூடவே எல்லா அரசர்களும் தங்கள் சுய முக்கியத்துவத்தை போற்றுவதையே வேலையாக கொண்டிருந்தார்கள். திரைப்படத்தில் தன் பெயர் இல்லாத வரலாற்றுப் பக்கங்களை கில்ஜி கிழித்து நெருப்பில் வீசும் காட்சி ஒன்று வரும். அதே போல நிறைய அரசர்கள் கூட செய்து கொண்டு இருந்தார்கள். பண்டைய இந்திய வரலாற்றிலேயே கூட நிறைய காலி பக்கங்கள் இருக்கின்றன. நபிகள் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே கூட, அதாவது இஸ்லாம் என்ற ஒன்று உருவாவதற்கு முன்பே கூட இந்த காலி பக்கங்கள் இருக்கின்றன. ஆகவே வரலாறுகள் ‘காணாமல் போனதற்கு’ இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டும் காரணம் அல்ல. இந்து அரசர்களும் நிறைய ‘பங்களித்து’ இருக்கிறார்கள்.
அடுத்தது சட்டம் ஒழுங்கைப் பேணுதல். கில்ஜி தாறுமாறாக உத்தரவுகளை இடுவான். அதன் சாதக பாதகங்களை யோசிக்கவே மாட்டான். இதுவும் எல்லா அரசர்களும் செய்ததுதான். பாகுபலியில் ராஜமாதா சிவகாமி அடிக்கடி கூறும் வசனம் ஒன்று வரும். ‘இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்.’ அதன் சரியான அர்த்தம் என்ன? ‘நான் வெச்சதுதான் இங்க சட்டம்.’ அதுதானே?
அப்படித்தான் எல்லா அரசர்களும் இருந்திருக்கிறார்கள். எல்லா அரசர்களும் படையெடுப்பாளர்கள்தான். எல்லா அரசர்களும் ஒரு வகையில் கொடுங்கோலர்கள்தான். இவன் கெட்டவன், இவன் ரொம்பக் கெட்டவன் என்று வேண்டுமானால் வித்தியாசப் படுத்தலாம், அவ்வளவுதான்.
இந்த வரைமுறையை மீறி பெருங்கருணையுடன், ஓரளவு சட்ட திட்டங்களை வடிவமைத்து அதன் அடிப்படையில் ஆட்சி செய்த அரசர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை கைவிரல்களில் எண்ணி விடலாம்.
எவ்வளவு ஓட்டைகள் இருந்தாலும் உலகெங்கும் ஜனநாயகம் போற்றப்படுவதற்கு காரணம் இதுதான். ஒரு ஓட்டை ஜனநாயக அரசு சாதித்ததில் பத்து சதவிகிதம் கூட ‘கருணை மிக்க அரசர்’ ஒருவர் சாதிக்கவில்லை. இந்தியாவிலும் ஜனநாயகம் வந்த பிறகுதான் சமூகப் பொருளாதார முன்னேற்றங்கள் சாதாரண மனிதனை சென்றடைந்தது. வறுமைகள் குறைந்து, பட்டினி சாவுகள் நீங்கி, மருத்துவ வசதி அதிகரித்து, கல்வியறிவு பரவி, கருத்து சுதந்திரம் பெருவாரியாக கிடைத்து பொதுவான வாழ்க்கைத்தரம் பெருகியது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களை தவறாக சித்தரிக்கிறோம். அவர்கள் இங்கே படையெடுத்தார்கள். இங்கே மதமாற்றம் செய்தார்கள். இங்கே மசூதிகள் கட்டினார்கள் என்கிறோம். உண்மைதான். அதனை மோசமாக சித்தரிக்கிறோம்.
ஆனால் சோழர்கள் இந்தோனேஷியாவில் படையெடுத்தது, அதில் தோற்றுப் போன மன்னர்களையே கல் சுமக்க வைத்து இந்துக் கோயில் கட்டியது எல்லாம் பெருமையாக பேசப்படுகிறது. இஸ்லாமிய சுல்தான்கள் செய்ததற்கும் சோழப் படையெடுப்பார்கள் செய்ததற்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஆனால் ஒருவர் செய்தது கொடுமையாகவும் அடுத்தவர் செய்தது பெருமையாகவும் பார்க்கப் படுகிறது. ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.
ஒரே காரணம்தான். ‘நம்மாளு’ ஜெயிக்கிறான். ‘நம்மாளு’ தோற்கிறான். ‘’நம்மாளு’ ஜெயித்தால் அவன் வீரன். ‘நம்மாளு’ தோற்றால் ‘எதிரி’ ஒரு கொடுங்கோலன். நம்மாளு வேற்று தேசத்து பெண்ணை இரண்டாம் தாரமாக மணமுடித்து கூட்டி வந்தால் அவன் கில்லாடி. ‘எதிரி’ நம் பெண்ணை அப்படி செய்ய முயற்சித்தால் அவன் காமாந்தக்காரன்.
இதுதான் நாம் எழுதிக் கொண்டு இருக்கும் வரலாறு.

உழைக்கும் வர்க்கம்


.
வேலை நிறுத்த ஆதரவு பதிவுகளில் 'உழைக்கும் வர்க்கம்' என்கிற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது உடலால் வேலை செய்வதுதான் உழைப்பு. மீதி எல்லாமே உழைப்பு இல்லை என்கிற சிந்தனாவாதம். இதுவும் எம்ஜியார் காலத்து சிந்தனைதான். நான் வாரத்துக்கு 70 மணி நேரம் அலுவல் வேலைகளை செயகிறேன். மீதி நேரம் என் நாவல், சில கன்சல்டன்சி, என் துறை பற்றிய தொடர் படிப்பு, என் விருப்பமான சப்ஜெக்ட்கள் பற்றிய படிப்பு என்று பிசியாக இருக்கிறேன். இதெல்லாம் உழைப்பு கேட்டகிரியில் வராதா?
உடல் உழைப்பு என்பது என்பதை பெருமையாகவும், முக்கிய சேவையாகவும் பார்க்கப்பட்டது அந்தக்காலம். இன்று மூளை உழைப்பின் முக்கியத்துவம் எல்லாருக்கும் புரிந்து விட்டது. ஒருவர் எவ்வளவு உழைக்கிறார் என்பதை விட அவரின் உழைப்பின் திறமையின் மதிப்பு, productivity, இப்போது முக்கியமாக பார்க்கப் படுகிறது. அதாவது ஒருவர் 8 மணி நேரம் போடும் உழைப்புக்கு 100 ரூபாய் சம்பாதிக்கலாம். அடுத்தவர் அதே 8 மணி நேரத்தில் 10 ஆயிரம் சம்பாதிக்கலாம். சமூகத்துக்கு இரண்டாமவர்தான் முக்கியமானவராக இருப்பார். இருக்க வேண்டும். முதலமாவர் மேல் கருணை அல்லது பரிதாபம் வரலாம். ஆனால் 100 ரூபாய் உழைப்பாளியை 10 ஆயிரம் உழைப்பாளியை விட பெரிதும் மதித்தால் நாம் தவறான கண்ணோட்டத்தை கொண்ட சமூகத்தை உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.விஜயகாந்த் ஒரு படத்தில் எம்ஏ படித்து முடித்து விட்டு ஆனால் வேறு ஆபீஸ் வேலை எதுவும் செய்யாமல் ரிக்ஷா ஓட்டுவார். 'உழைப்பின் முக்கியத்துவத்தை' சமூகத்துக்கு உணர்த்த வேண்டி அப்படி செய்வதாக நியாயப் படுத்துவார். அந்த மாதிரி நகைச்சுவை அவலம்தான் சமூகத்தில் நிலவும்.
தவிர, நான் முன்பே 'ரஹ்மான் ரோபோ' என்கிற கட்டுரையில் குறிப்பிட்டது மாதிரி ஆட்டோமேஷன் துறையின் முன்னேற்றங்கள் நம் எல்லார் வேலைக்கும் உலை வைக்கப் போகின்றன. அதில் முதலில் காலியாகப் போவது 'உடல் உழைப்பு' சம்பந்தப்பட்ட வேலைகள்தான். ஏனெனில் அதுதான் ரோபோட்கள் சுலபமாக செய்ய முடிந்தவை. இப்போதே driverless cars பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் முன்னேறிக் கொண்டு இருக்கின்றன. உலகில் பாதி ரயில்கள் இன்றைக்கு ட்ரைவர் இல்லாமல் இயக்கப் படுகின்றன. தில்லி மெட்ரோவில் ஒரு லைனில் அடுத்த வருடம் முதல் ட்ரைவர் இருக்கப் போவதில்லை. இன்னும் பத்து வருடங்களுக்குள் ட்ரைவர் தேவைப்படாத பஸ், கார், ரயில்கள் உலகெங்கும் வந்து விடும். இந்தியாவிலேயே அவற்றின் சாத்தியக்கூறுகள் சோதிக்கப் பட்டு வருகின்றன. டாடாவின் எல்க்ஸி நிறுவனம் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றது கொஞ்ச நாளைக்கு வேலைகளை பாதுகாக்கிறோம் என்று அரசு இந்த வண்டிகளை தடை செய்யலாம். ஆனால் இவை வந்தே தீரும். அதே போல விவசாயம், தொழிற்சாலைகளில் assembly line வேலைகள் இவை யாவையும் ரோபோட்டுகள் கையகப் படுத்தி விடும்.
அப்போது உழைக்கும் வர்க்கம் என்று சிட்டி வகையறாக்களை கட்டிப் பிடித்துக் கொண்டுதான் எம்ஜியார் பாடல்களை பாட வேண்டிவேண்டி இருக்கும்.

பெண்ணியமும் ஆபாசமும்



கட்டுரைக்கு முன் 
====================
மணிக்கட்டில் கட்டிக் கொள்ளும் உடற்பயிற்சி வாட்சுக்கான விளம்பரம்:
ஒரு இளைஞன் மைதானத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். ஒரு இளைஞி, அவளும் உடற்பயிற்சி முடித்து வியர்வை வழிய, அவனிடம் 'என்ன எக்சர்சைஸ் முடிஞ்சுதா?' என்று கேட்கிறாள்.
அவன் தன் மணிக்கட்டு பேண்டில் செக் பண்ணி களைப்புடன் 'இன்னும் அம்பது கலோரி எரிக்க வேண்டி இருக்கு!' என்கிறான்.
அவள் 'அதுக்கு நான் வேணா ஹெல்ப் பண்ணவா?' என்று சொல்லி விட்டு குறும்பாக சிரிக்கிறாள்.
-------
இந்த மாதிரி நிறைய விளம்பரங்கள் தேவைப்படுகின்றன.
.
.
#பெண்ணியம்#சுதந்திரம்
==========================================================================


.
கட்டுரை
==========

உடற்பயிற்சி கடிகார விளம்பரம் குறித்து நான் எழுதிய பதிவில் இருந்த ஹேஷ்டேக் நிறைய பேரை யோசிக்க வைத்திருக்கிறது. புரியாதவர்கள் ‘அதற்கும் பெண்ணியத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டிருக்கின்றனர். புரிந்தவர்கள் ‘ஆபாசமாக நடந்து கொள்வதுதான் பெண்ணியமா?’ என்று கேட்கின்றனர். அது பற்றி விளக்கலாம் என்று யோசித்தேன்.
ஒரு உதாரணம் பார்ப்போம்: பழைய திரைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். சிவாஜியும் கேஆர் விஜயாவும் டூயட் பாடுகின்றனர். இடையில் இருவரும் ஒரு புதருக்குப் பின் மறைகின்றனர். இரண்டு ரோஜாப்பூக்கள் உரசுவது காட்டப் படுகிறது. அடுத்த காட்சியில் கேஆர் விஜயா வெட்கி எழுந்து ஓடுகிறார். சிவாஜி பெருமையுடன் தன் உதட்டை விரலால் நீவி விட்டுக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்.
இதே காட்சியில் வேறு மாதிரி யோசித்துப் பார்ப்போம். ரோஜாக்கள் உரசியதும் கேஆர் விஜயா உதட்டை நீவி விட்டு பெருமையுடன் வெளியே வருகிறார். அதைப் பார்த்ததும் என்ன நினைத்திருப்பீர்கள்?
அடுத்த உதாரணம்: முதலிரவுக் காட்சி. நாயகி தலைகுனிந்து பால் டம்ளரை எடுத்து அறைக்கு உள்ளே நுழைகிறாள். நாயகன் அந்த டம்ளரை வாங்கி அலட்சியமாக சைடு டேபிளில் வைத்து விட்டு சிரித்துக் கொண்டே அவளை இழுத்து கட்டிலில் தள்ளுகிறான். இந்தக் காட்சியை இந்திய சினிமாவில் ஆயிரம் தடவை பார்த்திருப்போம்.
இந்தக் காட்சியை மணமகள் கணவனை இழுத்து தள்ளுவது மாதிரி யோசித்துப் பாருங்கள். அந்தக் காட்சியை எப்படி எதிர் கொண்டிருப்பீர்கள்?
இதில் என்ன தெரிகிறது? பாலியல் ரீதியாக தன்னை, தன் ஆசை, ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே இருக்கிறது என்று நம்புகிறோம். சினிமாவில் கூட துரத்தித் துரத்தி காதலிக்கும் உரிமை ஹீரோவுக்கு மட்டுமே இருக்கிறது. அதற்கு ‘தெய்வீகக் காதல்’ என்று வேறு (சரக்கடித்துக் கொண்டே) விளக்கம் தருவார்கள். ஆனால் அதே பெண் ஆண் மேல் விழுந்தால் அவள் கண்டிப்பாக லோலாயியாகத்தான் இருப்பாள். ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ வகை பாடல் மும்தாஜுக்குதான் கொடுக்கப் படும். ‘தூள்’ படத்தில் விக்ரம் மேல் விழுந்து புரளும் ரீமா சென் ‘ஐட்டம்’ என்றுதான் பார்க்கப் படுவாள். கடைசியில் ‘குடும்பப் பாங்கினி’ ஜோதிகா பாத்திரத்தைத்தான் ஹீரோ கைப்பிடிப்பான்.
நவீன சிந்தனைகளோடு படம் எடுக்கிறேன் என்று வரும் கௌதம் மேனன் இயக்கிய ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் கூட விழுந்து விழுந்து காதலிக்கும் நாயகி பொறுப்பில்லாதவள் என்றுதான் சித்தரிக்கப் படுகிறாள். (இந்தப் படம் பற்றி விவாதித்த ஒரு கட்டுரை என் புத்தகத்தில் இருக்கிறது.)
அதாவது நம் சிந்தனை என்ன? சிவாஜி செய்ததோ, முதலிரவில் நாயகன் செய்ததோ நமக்கு ஆபாசமாக தோன்றவில்லை. அதையே ஒரு பெண் செய்வதாக சித்தரித்தால் ஆபாசம் தோன்றி விடுகிறது. போர்னோகிராஃபி பற்றிக் கூட ஒரு ஆண் முகநூல் மாதிரி பொதுத் தளத்தில் பதிவுகள் போட்டு விட்டு தன் பிம்பத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் கடந்து விட முடிகிறது. ஆனால் தன் ‘பாலியல் உணர்வை’ அடக்கி ஒடுக்கிக் கொண்டுதான் ஒரு பெண் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஸல்மா மாதிரி பாலியல் உணர்வுகளை முன் நிறுத்தும் கவிதைகள் எழுதும் பெண்கள் மோசமான தாக்குதல்களுக்கு பொதுவெளியில் ஆளாகிறார்கள்.
இந்த சூழலில் தன் பாலியல் உணர்வை நிலை நிறுத்தும், அதனை தைரியமாக வெளிக்காட்டும் உரிமையை மீட்க வேண்டிய தேவை பெண்களுக்கு இருக்கிறது. தனக்கும் பாலியல் உணர்வுகள் இருக்கின்றன. எந்தக் கவலையும் இன்றி, எந்த எடைபோடுதலும் இன்றி ஆண்கள் அதனை வெளிப்படுத்த வசதி இருப்பது போல, பெண்களும் அதனை செய்யும் வழிவகை வரவேண்டும். படிக்க வைப்பது, வேலைக்குப் போவது, பொதுவெளியில் ஆண்களுக்கு சமமாக வாழ்வது இவை எல்லாம் மட்டும் பெண்ணியத்தின் அடையாளங்கள் அல்ல. இவை வெறும் துவக்கம்தான். பெண் உரிமையின் இறுதி இலக்கு அவள் தன் சுயத்தை, தன் தேவைகளை எந்தத் தயக்கமும் இன்றி ஆண்களுக்கு நிகராக வெளிப்படுத்தும் சூழல் வர வேண்டும். அதனை ஆண்கள் ஏற்றுக் கொண்டு அப்படி செய்ய முயலும் பெண்களை ‘ஐட்டம்’, ‘லோலாயி’ என்றெல்லாம் பிம்பங்களை கட்டமைக்காமல் சரிசமமாக நடந்து கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான பெண் உரிமையை உறுதி செய்யும் இறுதிக் கட்டம்.
இந்த மாற்றங்கள் விளம்பரங்கள், திரைப்படங்கள், இலக்கியங்கள், பாடல்கள் இவை மூலம்தான் வர முடியும். பாரதி, பெரியார், பாலச்சந்தர் போன்றோர் செய்த முயற்சிகள்தான் நாம் ஓரளவாவது பெண்ணுரிமையை தமிழ் நாட்டில் மீட்க முடிந்ததற்கு காரணம். ஆனால் அதையே சொல்லி பழைய புராணம் பாடிக் கொண்டு இராமல், அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய அவசியம் வந்து விட்டது.
தொண்ணூறுகளின் இறுதியில் ஃபெமினா விளம்பரம் ஒன்று வந்தது. முதலிரவில் ஆண் அறையின் உள்ளே நுழைய, திருமண முக்காடு போட்டுக் கொண்டு பெண் கட்டிலில் அமர்ந்திருப்பாள். ஆண் அவள் அருகில் நிற்க அவள் திரும்பி முக்காட்டை கழட்டி வீசி எறிந்து அவனை தன்னருகில் இழுத்து கட்டிலில் தள்ளி சிரித்துக் கொண்டே அவனருகில் செல்வாள். ‘அடுத்த தலைமுறை பெண்களுக்கான பத்திரிகை’ என்று தலைப்புடன் விளம்பரம் முடியும்.
அடுத்த தலைமுறை பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் தயாராக இல்லை. அது நடக்க வேண்டும். அதற்கான எந்த முனைப்பையும், அது கவிதையோ, விளம்பரமோ, திரைப்படமோ, அதனை நாம் கொண்டாட வேண்டும்.

புத்தகங்களின் அழிவு


புத்தங்கள் படிப்பது அழிந்து வருவது குறித்து மிகவும் வருத்தப்பட்டு சோகரசம் சொட்டும் நீள் பதிவு ஒன்றை ஒருவர் எழுத, அதில் Amudhan Shanthi என்னை டேக் செய்திருந்தார். அந்தப் பதிவர் என் நட்பு வட்டத்தில் இல்லாததால் அங்கே பின்னூட்டம் இட இயலவில்லை. எனவே இங்கே பதில் சொல்கிறேன்.
புத்தகம் எனும் வடிவம் கூடிய விரைவில் அழிந்துதான் போகப் போகிறது. அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அது குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. புத்தகம் என்பது ஒரு கருவிதான். அறிவைக் கடத்துவதற்கு, நிகழ்வுகளை பதிவிடுவதற்கு, தகவல் தொடர்புக்கு, மனமகிழ்விற்கு (entertainment), புரட்சியை துவக்குவதற்கு என்று நிறைய வேலைகள் செய்வதற்கு நாம் உருவாக்கிய கருவி, அவ்வளவே. இவை எல்லாவற்றுக்கும் புத்தகத்தை விட பன்மடங்கு வீரியம் மிகுந்த வேறு கருவிகளை மானுடகுலம் உருவாக்கிக் கொண்டு வருகிறது. அவை நிலை கொண்டதும் புத்தகம் முழுவதுமாக நமக்கு தேவைப்படாமல் போய் விடும்.
புத்தகங்களும் ஒன்றும் பத்தாயிரம் வருடமாக நம்மிடையே இல்லை. அவை சுமார் 500 ஆண்டுகளாகத்தான் உலவுகின்றன. அதற்கு முன்பு ஓலைச்சுவடி, ஸ்க்ரோல், கல்வெட்டுகள் என்று பல்வேறு கருவிகளை பயன்படுத்தி வந்தோம். அதற்கும் முன்பு வாய்வழி கடத்தல் எனும் (Oral Tradition) மரபை பின்பற்றி வந்தோம். என்ன, அவை அனைத்தையும் விட புத்தகம் மாபெரும் சக்தி வாய்ந்த கருவி. குறைந்த முயற்சியில் ஆயிரக்கணக்கான பிரதிகள் எடுக்க முடிந்தது என்பதுதான் அதன் தாக்கம். தோற்றுவித்து பத்திருபது ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் முழுவதும் புத்தகம் ஊடுருவ அதுதான் காரணம்.
இப்போது அதை விட அதிக சக்தி மற்றும் வீரியம் கொண்ட கருவிகள் நம் பயன்பாட்டுக்கு வந்து இருக்கின்றன. அமேசானின் கிண்டில் படிப்பான் (Kindle Reader) கருவியில் 1000க்கும் அதிகமான புத்தகங்களை நாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். யோசித்துப் பாருங்கள். ஒரு சிறிய லைப்ரரியையே நம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஊர் சுற்ற முடியும். (நான் கிண்டில் வாங்கிய புதிதில் அதில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் வேறு புத்தகம் ஒன்று பற்றிய குறிப்புகள் வரவே ஆர்வ மிகுதியில் அப்போதே கிண்டில் ஸ்டோர் போய் தேடினேன். அந்தப் புத்தகம் கிடைத்தது. உடனே ‘வாங்கு’ எனும் பட்டனில் சுட்ட, புத்தகம் டவுன்லோடு ஆகி இரண்டே நிமிடங்களில் அந்த அடுத்தப் புத்தகமும் என் கையில். அப்போது நினைவுகள் பின்னோக்கி ஓடின. எண்பதுகளில் சில புத்தகங்களின் பெயர் மட்டுமே கேள்விப்பட்டு வாரக்கணக்கில் தெருத்தெருவாக தேடி அலைந்த நாட்கள் நினைவுக்கு வரவே கண்ணீர் மிகுந்தேன்.)
அதே போல பொழுதுபோக்கிலும் மனமகிழ்விலும் புத்தகம் பெரும் பங்கு வகித்திருந்தது. துப்பறியும் நாவல்கள், காதல் கதைகள், அரச/கடவுள் கதைகள், சரோஜாதேவி வரை நமக்கு கொண்டு வந்தது. இப்போது எல்லாமே வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. வீடியோ கேம்கள், யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் என்று கணக்கே இல்லை. சரோஜாதேவிக்கும் மாற்றாக தெள்ளத் தெளிவான, பன்மடங்கு சுவாரஸ்யமான போர்னோகிராஃபி பரவி விரவிக் கிடக்கிறது.
கல்விக்கும் இப்போது ஆயிரம் செயலிகள் இருக்கின்றன. யூ டியூபில் கொட்டிக் கிடக்கின்றன. எட்எக்ஸ், கோர்ஸெரா, கான் அகாதெமி போன்ற இணைய தளங்கள் கல்வியில் புரட்சி செய்து வருகின்றன. கல்வியை எப்படி உள்வாங்குகிறோம் என்கிற அடிப்படை சித்தாந்தமே ஆட்டம் கண்டு கொண்டு வருகிறது. முன்னர் குருகுலம் என்று பாடசாலையில் பல ஆண்டுகள் தங்கிப் படித்த நிலை மாறி மான்டிசோரி என்று வகுப்புகள், முறையான பாடத்திட்டங்கள் என்று ஒரு புதிய முறைமை வந்து கல்விப் புரட்சி செய்தது. அந்த மாதிரி ஒழுங்குபடுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு முறைகள் எனும் பழைய கல்வி முறை இனி மாறி கணினி மற்றும் செயலிகள் மூலம் நாளைய தலைமுறை கல்வி கற்கும் நிலை வரும். மற்றுமொரு கல்விப் புரட்சி சத்தமில்லாமல் இப்போது நடந்து வருகிறது.
எனவே புதிய தலைமுறை புத்தகம் படிப்பதே இல்லை என்றெல்லாம் அங்கலாய்ப்புகள் தேவையில்லை என்று நம்புகிறேன். அவர்கள் புத்தகம் பெரிதும் படிப்பதில்லை என்பது உண்மைதான் எனினும் அவர்கள் அறிவை வேறு தளங்களில் தேடிப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ‘அந்தக் காலம்’ என்று பொதுவாக சொல்லப்படும் எண்பதுகளிலேயே கூட எல்லாரும் நல் இலக்கியங்களை படித்துக் கொண்டு இருக்கவில்லை. ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்தான் படித்துக் கொண்டு இருந்தோம். நிறைய பேர் புஷ்பா தங்கதுரை, இன்னும் நிறைய பேர் சரோஜாதேவி. அப்போதே ‘ஜேஜே சில குறிப்புகள்’ படித்த ஆசாமிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்போதே அறிவுத்தேடலில் ஈடுபடும் இளைஞர்கள்/இளைஞிகள் குறைந்த அளவிலும் பொழுதுபோக்கை நாடுவோர் அதிக அளவிலும்தான் இருந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் தகவல் தொடர்பு புரட்சியால் அறிவுத்தேடல் என்பது இப்போது வசீகரமான விஷயமாக (a cool thing) மாறி அந்த விகிதாச்சாரம் அதிகரித்து இருக்கிறது என்று கூட சொல்லலாம். தவிர தொழில் நுட்பம் விளிம்பு நிலை மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது.
அதன் ரிசல்ட் தெரிகிறது. அன்றைய காலத்தை விட இன்று அதிக அளவில் பத்தாவது, பனிரெண்டாவது தேர்ச்சி அடைகிறார்கள். மொத்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. முதுகலை பட்டதாரிகள் எண்ணிக்கையில் உலகிலேயே முதல் தேசமாக இந்தியா மாறுவதற்கு சில காலங்களே பாக்கி இருக்கிறது. கல்வி சாதனைகளில் பெண்கள் ஆண்களை போட்டுத் தாக்கி வருகிறார்கள்.
போலவே ஆய்வு பல்கலைக் கழகங்கள் அதிகரித்து வருகின்றன. கூகுள் முதல் பிலிப்ஸ் வரை இந்தியாவில் ஆய்வு நிலையங்கள் கட்டமைத்து வருகிறார்கள். இவை யாவும் நம் புதிய தலைமுறை இளைஞர்களை நம்பியே நடக்கிறது. ஆரம்பக் கல்வி விகிதமும் அதிகரித்து வருகிறது. கற்றல் பற்றி முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்ச்சி மற்றும் சக அழுத்தம் பரவி வருகிறது.
அது ஒரு புறம் இருக்க, ஞாபக சக்திதான் அறிவு என்று ஒரு நிலை இருந்தது. ‘எல்லாத் திருக்குறளையும் ஒப்பிப்பான்’, ‘எல்லா முகலாய மன்னர் பெயரையும் சொல்வாள்!’ என்பதெல்லாம் அறிவாளிக்கு அடையாளம் என்ற காலம் ஒன்று இருந்தது. கூகுள், இணையம் போன்றவை வந்து ஞாபக சக்திக்கு பெரிய தேவை இல்லாமல் செய்து விட்டது. நம் ஃபோனை கேட்டால் எல்லா முகலாய மன்னர்கள் பெயரையும் நொடியில் லிஸ்ட் போட்டு கொடுத்து விடுகிறது. எனவே நம் மூளை அதைவிட முக்கியமான விஷயங்களான Logic, Analytical thinking, Synthesis, Emotional Intelligence போன்ற திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி வந்து விட்டது. அதாவது மனிதர்களுக்கான அறிவின் சவால்களும் அதிகரித்து விட்டன.
அந்த சவால்களை புதிய தலைமுறை பாராட்டத் தக்க வகையிலேயே எதிர்கொண்டு வருகிறது. எனவே அந்தத் தலைமுறைக்கு வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துக் கொண்டு நம்பிக்கையுடன் நம் நாளையை எதிர்கொள்வோம்.

ரஹ்மான் ரோபோ

ஐடி துறைகளில் வேலைகள் காலியாக்கப் படுவதைப் பற்றியும் Automation எனப்படும் தானியங்கி மென்பொருட்கள் எப்படி மனித உழைப்பை தேவையில்லாமல் ஆக்குகின்றன என்றும் Shan Karuppusamy ஒரு பதிவு எழுதி இருந்தார். அது உடனே சர்ச்சைகளை எழுப்பி விவாதம் (வழக்கம் போல) கம்யூனிசம் வரை போய் விட்டது.
நானே கூட சில வாரங்களுக்கு முன்பு தானியங்கி செயலிகள் எப்படி மனிதர்களுக்கு வருங்காலங்களில் வேலைகளே இல்லாமல் செய்யப் போகிறது என்ற தலைப்பில் துறை நிபுணர் ஒருவரின் கட்டுரை ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். அது ஆங்கிலத்தில் இருந்ததால் பெரிதும் கவனிக்கப் படாமல் போய் விட்டது.
தானியங்கி என்பதை நாம் நிறுத்த முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியின் வரலாறே தானியங்கிதான் என்று சொல்லி விடலாம். காலால் நடப்பதற்கு பதிலாக குதிரையை அல்லது கழுதையை பழக்கியதே கூட ஆட்டோமேஷன்தான். விவசாயம் என்கிற கண்டுபிடிப்பு அடுத்த ஆட்டோமேஷன். தினமும் தேடித்தேடி காட்டு தானியங்களை உண்பதற்கு பதில் தானே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து பயிரிட்டு அவற்றை சேகரித்து அப்புறம் கொஞ்ச காலம் உட்கார்ந்து உண்பது. வாழ்நாள் வரை ஆங்காங்கே திரிந்து கொண்டிருந்த நாடோடி கும்பல்கள் ஒரே இடத்தில் டேரா போட்டு வாழத் துவங்கியது இதற்கு அப்புறம்தான். இல்லையேல் என் தேசம், என் தமிழ்த் திரு நாடு, என் சொந்த ஊர் போன்ற பிரச்னை எல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது. அதே போல கையால் மாவு அரைப்பது, உரலில் நெல்லை இடிப்பது, அடுப்பை ஊதி ஊதி பத்த வைப்பது இதை எல்லாம் நிறுத்தி விட்டது ஆட்டோமேஷனின் அடுத்த கட்டம். சுமார் எண்பது ஆண்டுகள் முன்பு என்.எஸ். கிருஷ்ணன் பாடல் ஒன்றில் ‘பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும் கூட காபியும் வந்திடனும்,’ என்று கிண்டலாக வரிகள் வரும். இப்போது மொபைலில் ஸோமாடோ செயலியை தட்டினால் வெங்காய பக்கோடா வீட்டுக்கே வருகிறது (தில்லியில் கூட).
அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டாயிரம் ஏக்கர் நிலங்களை நான்கு ஐந்து பேர் மட்டும் பராமரித்து விவசாயம் பண்ணி விடுகிறார்கள். மற்ற எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் கவனித்துக் கொண்டு விடுகின்றன.
போரில் 'வீல், வீல்' என்று கத்தி வாள் வீசி சண்டை போடுவதற்கு பதில் உட்கார்ந்த இடத்தில் ஒரே ஒரு பட்டனை அமுக்கினால் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் குண்டு வெடிக்கிறது. இருந்த இடத்தில இருந்தே மானிட்டர் மூலம் பார்த்து எதிரி இருக்கும் இடத்தை சரியாக கண்டு கொண்டு ஒரு பட்டன் அமுக்கினால் ட்ரொன் எனப்படும் சாட்டிலைட் ஏவுகணை குறிப்பிட்ட ஜிபிஎஸ் லொகேஷனை வெடித்துத் தகர்க்கிறது. கத்தி கூச்சல் போட வேண்டிய அவசியமே இல்லை. நிதானமாக பியர் குடித்துக் கொண்டே போர் புரியலாம்.
பொழுதுபோக்கில் மனிதர்கள் தினம் தினம் மேடையில் நடிப்பது நின்று போய் ஒரு முறை நடித்து பின்னர் திரும்ப திரும்ப திரையில் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றாகி விட்டது. அதுவும் பிலிம் ரோல் வைத்து கழற்றி கழற்றி மாற்றி போட்டுக் கொண்டு இருந்தார்கள். அது மாறி ஒரு ஹார்ட் டிஸ்கை சொருகினால் படம் தானாக ஓட ஆரம்பித்தது. இப்போது அதுவும் போய் க்யூப் ப்ரொஜெக்ஷன் என்று இணையம் மூலம் சர்வரை தொடர்பு கொண்டு படத்தை தானாக லோட் பண்ணி படம் ஒடத் துவங்குகிறது. தினமும் மேடையில் இசைக் கலைஞர்கள் வாசித்தது நின்று போய் எம்பி3-யில் சும்மா டவுன்லோட் பண்ணி பீத்தோவனா, இளையராஜாவா, மைக்கேல் ஜாக்ஸனா நாமே கேட்டுக் கொள்கிறோம்.
மனித பரிணாம வளர்ச்சியின் பயணத்தை கவனித்தால் ஆதியில் இருந்து இன்று வரை ஆட்டோமேஷனை நோக்கி மட்டுமே போய்க் கொண்டு இருக்கிறோம். ‘எவ்வளவு குறைவாக வேலை செய்ய முடியும்?’ என்பதை கண்டுபிடித்து செயல்படுத்துவதில் மட்டுமே நம் பூராக் கவனமும் இருந்து வந்திருக்கிறது.
இது தவறில்லையா, இதனால் வேலைகள் பறிபோகாதா என்று கேட்டால் ஆமாம், வேலைகள் போகும். ஆனால் புது வேலைகள் உருவாகும். நீங்கள் கவனித்தால் தெரியும். ஐநூறு வருடங்களுக்கு முன்பு இருந்த வேலைகளைப் பற்றி படித்துப் பாருங்கள். அவற்றில் முக்கால்வாசி இன்று தேவைப்படாத வேலையாக இருக்கும். 1900ன் ஆரம்பத்தில் இருந்த வேலைகள் கூட முக்கால்வாசி இன்று இல்லை. அதே போல இன்று இருக்கும் சாஃப்ட்வெர், டிவி சானல், வீடியோ கிராஃபிக்ஸ், டிஜே, ஆர்ஜே, பிக் பாஸ்கெட் டெலிவரி, கூரியர், இன்பவுண்ட் மார்க்கெட்டிங் போன்ற வேலைகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில்லை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்; இன்று நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை அல்லது தொழில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்காது என்று பெருமளவு உறுதியாக சொல்லி விட முடியும்.
ஆட்டோமேஷன் பாரம்பரிய வேலைகளை ஒழிக்கிறது. கடினமான வேலைகளை மனிதன் செய்ய வேண்டி இல்லாமல் ஆக்குகிறது. என்ன, அதன் பரிமாண வளர்ச்சி இப்போது கொஞ்சம் வேகமாகவே பயணிக்கிறது. இதை செய்ய வேண்டாம், அதை செய்ய வேண்டாம் என்பது தாண்டி, இன்னமும் 100 ஆண்டுகளில் எந்த வேலையையும் நாம் செய்ய வேண்டி இருக்காது. கவிதை-நாவல் எழுதுவது, ஓவியங்கள் வரைவது, இசை அமைப்பது இந்த மாதிரி கிரியேட்டிவ் வேலைகள் மட்டும்தான் மனிதன் செய்ய வேண்டி இருக்கும் என்று கொஞ்ச நாள் வரை நம்பிக் கொண்டு இருந்தோம். அதெல்லாம் மட்டும் எதற்கு என்று இப்போதே செயலிகள் வந்து விட்டன. இப்போதைக்கு சொதப்பலாக முகநூலில் காதல் கவிதை எழுதுபவர்கள் மாதிரி ரோபோ எழுதிக் கொண்டிருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் ஓரளவு பாரதி ரேஞ்சை தொட்டு விடக் கூடும். இப்போதைக்கு சந்திரபோஸ் மாதிரி இசை வடிவமைத்தது போய் நூறு ஆண்டுகளில் ரஹ்மான் ரோபோ வந்து விடும்.
மனிதன்? மனிதர்கள் வேலையே செய்ய வேண்டி இல்லாமல் அரசாங்கமே வீடு, உணவு எல்லாம் கொடுத்து எல்லாவற்றுக்கும் மிஷின் வைத்து நடக்கக் கூட தேவை இல்லாமல் ஒரு ஸ்கேட்டிங் மிஷினை உடலில் இணைத்து வைத்துக் கொண்டு தின்றுத் தின்று பெருத்துப் போய் ஜாலியாக இருப்பான். கொஞ்ச நாள் முன்பு பிக்ஸார் தயாரிப்பில் வந்த வால்-ஈ (Wall-E) எனும் அற்புதமான படத்தை தேடிப் பாருங்கள். மனித குலத்தின் வருங்காலம் அந்தப் படத்தில் இருக்கிறது.