Tuesday, 23 February 2016

நாம் பார்க்காத முதல்வர்



‘ஒரு முதலமைச்சரை எப்படி மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்க முடியும்?’


‘தினமும் நான் பார்க்க முடிகிற ஆளைத்தான் சி.எம் ஆக்க வேண்டுமென்றால் எங்க எதிர் வீட்டு சிந்துவை-தான் முதல்வராக்கணும்!’


‘முதல்வரை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? ஒரு சால்வை போர்த்தி விட்டு வந்து விடுவீர்கள். அவ்வளவுதானே?’


செய்தித் தாள்களில் திமுக வெளியிட்ட முதல் பக்க விளம்பரத்துக்கு பதிலாக இந்த மாதிரியான பதிவுகள் பார்க்கிறேன். அந்த விளம்பரத்தை அவர்கள் ரொம்பவும் literal ஆக அர்த்தம் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. அதற்கு இரண்டு விதங்களில் விளக்கம் அளிக்கலாம் என்று யோசித்தேன்.


ஒரு முதல்வர் அல்லது பிரதமர் என்பவர் ராஜா அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவர் மக்களின் ‘பிரதிநிதி’ அவ்வளவுதான். ஒரு பிரச்சனை அல்லது ஒரு தேவை என்று வரும் போது மக்களோடு மக்களாக கை கோர்த்து நிற்பது அவரின் முதல் கடமை.


இங்கிலாந்தில் 2011ல் போலீஸ் தவறுதலாக ஒரு கறுப்பின மனிதரை சுட்டு அவர் இறந்து விட கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளில் கலவரம் மூண்டது. லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு எல்லாம் சென்றார். 


ஒவ்வொரு மணி நேர இடைவெளிக்கும் பத்திரிகைகளுக்கு கலவரத்தை அடக்கும் முயற்சிகள் பற்றிய அப்டேட் அளித்துக் கொண்டே இருந்தார். முடிந்த அளவு டிவி விவாத நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஒரு  கறுப்பின ஏரியாவுக்கு  மிக அருகில் வசித்துக் கொண்டிருந்த என் மாதிரி ஆட்களுக்கு ஜான்சன் எங்கள் வீட்டுக்கே வந்து ஆறுதல் செய்தது மாதிரி இருந்தது.


அதற்குப் பிறகும் கூட போரிஸ் ஜான்சனை இரண்டு முறைகள் டியூப் ரயிலில் (மெட்ரோ) பார்த்திருக்கிறேன். ஒரு முறை செல்பி கூட எடுத்துக் கொண்டேன்.




சென்ற டிசம்பர் தமிழ் நாட்டில் வெள்ளம் வந்த அதே நேரம் இங்கிலாந்தின் வட பிராந்தியங்களிலும் வெள்ளம் வந்தது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் அந்த ஊரிலேயே ஒரு வீடு எடுத்து தங்கி தினமும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு போய் நிவாரணப் பணிகளை மேற்பார்வை இட்டும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல்கள் சொல்லிக் கொண்டும் இருந்தார். அவர் அப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் வெள்ள எச்சரிக்கை வந்ததுமே ராணுவமும், பேரிடர் குழுவும் அந்தந்த ஊர்களில் முகாமிட்டு வெள்ளம் வரும் முன்பே மக்களை இடம் பெயர்த்துக் கொண்டு இருந்தார்கள். ஒருத்தர் கூட சாகவில்லை. பொருட்சேதமும் குறைவுதான். ஆயினும் கேமரான் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தார்.


நாங்கள் விம்பிள்டனில் குடி பெயர்ந்த போது ஒரு நாள் யாரோ கதவை தட்ட யார் என்று கேட்டால் ‘உங்கள் ஏரியாவின் எம்பி நாந்தான்!’ என்றார் அவர். உள்ளே வரச் சொல்லி காபி கொடுத்து பேசிக் கொண்டு இருந்தோம். ‘என்ன வேலை செய்கிறீர்கள்?’, ‘உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கின்றனவா?’, ‘ஏரியா உங்களுக்கு வசதியாக இருக்கிறதா?’ என்றெல்லாம் பேசி விட்டு காபி குடித்து விட்டு புறப்பட்டு விட்டார். அதற்குப் பிறகும் அவரை சில முறை தெருவில் பார்த்த போது சிரித்து விட்டு ‘ஹவ் ஆர் யூ?’ என்று தலை ஆட்டி விட்டு போவார்.


மக்களை சந்திப்பது என்றால் இதுதான். இந்த அளவுக்கு நெருக்கமாக மக்களோடு வாழ்வதுதான் மக்களாட்சி. சரி இந்த மாதிரி எல்லாம் இங்கே எம்பிக்கள், மேயர்கள் இருக்க முடியாது. பாதுகாப்பு பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன என்றே வைத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?


கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறை கூட முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. மேலே சொன்ன மாதிரி பிரச்சனைகளில் மக்களோடு ஆதரவாக கூட நின்றதில்லை. பொருளாதாரம், மது விலக்கு, மாநில நிதிப் பற்றாக்குறைகள், போன்ற முக்கியமான பிரச்ச்சனைகளில் அவர் நிலைப்பாடு என்ன என்று நமக்குத் தெரியாது. கோவன் கைது, சசி பெருமாள் மரணம், டிராபிக் ராமசாமி தாக்குதல், அவதூறு வழக்குகள் போன்ற விஷயங்களில் அவர் என்ன நினைத்தார் என்றே நமக்கு தெரியாது. மந்திரிகள் அடிமைகள் போல் நடந்து கொள்வது, அவர் சிறையில் இருந்த போது நடந்த அலகு குத்திய, யாகம் செய்த  அவலங்கள் பற்றி எல்லாம் அவர் என்ன நினைக்கிறார் என்றே நமக்கு தெரியாது.


எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக வெள்ள நேரத்தில் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார், ஏன் எங்கேயும் தென்படவே இல்லை, ஏன் ஒரு நிருபர் கூட்டம் கூட நடத்தவில்லை, ஏன் ஒரு தரம்குறைந்த ஒரு வாட்ஸ் அப் ஆடியோ மூலம், அதுவும் வெள்ளம் வடிந்து பல நாட்கள் கழித்து, மக்களோடு அவர் பேச வேண்டிய அவசியம் வந்தது என்பதற்கு எல்லாம் அவர் பதில் சொல்லவே இல்லை. அப்படி செய்யவில்லை என்பதை விட, பதில் சொல்ல வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கூட அவர் நினைக்கவில்லை என்பதுதான் பெரிதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். ஜனநாயக ரீதியில் நிர்வாகம் நடத்தும் முதல்வர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. உப்பரிகையில் இருந்து கொண்டு அரசாளும் மகாராணி போல மட்டுமே நடந்து கொள்ளும் மனநிலை அவரிடம் தென்படுகிறது.


வெள்ள நேரத்தில் அவருக்கு உடம்பு சரியில்லை; ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு இருந்தார் என்று சிலர் வாதம் செய்கின்றனர். அது வாதம் இல்லை, வெறும் வதந்தி மட்டுமே. அவருக்கு உடலுக்கு என்ன பிரச்சனை, என்ன அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பன பற்றி எல்லாம் எந்த அதிகார பூர்வ தகவல்களும் நம்மிடம் இல்லை. சும்மா கிசுகிசு போல மட்டுமே விஷயங்கள் உலா வருகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதி சும்மா ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் கூட அந்த ரிப்போர்ட் அவரின் அதிகார பூர்வ இணையத்தில் வெளிடப் பட்டு விடும். அதற்குக் காரணம் ஜனாதிபதியின் உடல்நலம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இருக்கிறது என்பதுதான். சில தீவிரமான வியாதிகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் நம் சிந்தனைத் திறமையை பாதிக்கும் சக்தி உள்ளவை. நிறைய நேரங்களில் சரியான முடிவெடுக்கும் திறனை அவை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றால் அந்த ஆட்சியாளர் ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுகிறார். ஆனால் இங்கே அந்த மாதிரி எந்தக் அக்கறையும் நம் முதல்வருக்கு இருந்ததாக தெரியவில்லை. தமிழகத்தை ‘ஆளும் உரிமையை’ அவர் பரம்பரை சொத்து மாதிரி மட்டுமே கருதுவதாக தெரிகிறது.


தான் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை, எந்த நிருபரையும் மதிக்கத் தேவையில்லை. எந்த அக்கவுண்டபிலிட்டி-யும் எனக்குக் கிடையாது என்று உலவும் ஒரு முதல்வர் ஆபத்தானவர். அப்படிப்பட்டவர் நல்லவராகவும், கருணையுடைவராகவும் கூட இருக்கட்டும். ஆனால் அவர் ஜனநாயகத்தின் நீண்ட கால ஆரோக்கியத்துக்கு ஒவ்வாதவர்.


முதல்வரை மக்கள் பார்க்க வேண்டும் என்றால் தினமும் கேட் வாசலில் வந்து ‘குட் மார்னிங் ஆன்டி’ என்று சொல்லி விட்டுப் போகிற எதிர் வீட்டு சிந்து அல்ல; நம்மோடே வாழ்கிறார்; நம் கவலைகளை பகிர்ந்து கொள்கிறார்; நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்; தேவைப்படும் போது நம் வீட்டுக்கு அல்ல,  நம் ஏரியாவுக்கு வருகிறார் போன்றவைதான் தேவை. வெள்ளம் வந்த போது பாரீஸில் இருந்தாலும் ட்விட்டர் மூலம் கவலைப் பட்டு இந்தியா திரும்பியவுடனே  ஹெலிகாப்டரில் ஏறி பாதிப்பை பார்வையிட வந்த மோடியின் கவலை, வீல் சேரில் மட்டுமே வாழும் அளவுக்கு மூப்படைந்து விட்டாலும் தெருவில் இறங்கி சேதங்களை பார்வையிட்ட கருணாநிதியின் அக்கறை, இவைகள்தான் நமக்குத் தேவை. அரசியல் லாபத்துக்காக இவர்கள் செய்கிறார்கள் என்கிற வாதத்தை முன் வைத்தால் கூட அதே அரசியல் லாபத்தைப் பற்றி முதல்வர் ஏன் யோசிக்கவில்லை என்கிற கேள்வி வருகிறது.

நிறைவாக, ‘எங்கேயுமே போக மாட்டேன்’, ‘யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன்’, ‘எந்த நிருபரையும் சந்திக்க மாட்டேன்’, என்று நினைக்கும் ஒருவர் அவர் நல்லவராகவே இருந்தால் கூட எனக்கு தேவையில்லை. எல்லாரையும் அரவணைத்துச் செல்ல நினைக்கும், யாரும் சந்திக்க பெரிதும் கஷ்டப்படத் தேவையிருக்காத, பத்திரிகைகளை மதிக்கும் ஒருவர், அவர் ஓரளவு கெட்டவராகவே இருந்தால் கூட அவர்தான் இந்த நாட்டுக்கும், நம் ஜனநாயகத்துக்கும் தேவை. அந்த நோக்கில் இன்றைய விளம்பரத்தில் உள்ளடங்கிய விமர்சனத்தை முழுவதும் ஆதரிக்கிறேன். எந்த அக்கவுண்டபிலிட்டியும் எடுத்துக் கொள்ளாத இந்த அரசும், உப்பரிகையில் அமர்ந்து அருள் புரியும் இந்த மகாராணித்தனமும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

Thursday, 14 January 2016

ஜல்லிக் கட்டு - பாகம் 1 (பீட்டா)

Big Girl, one of the dogs that was abused by their owners and left to die. PETA put her to sleep.
ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக பெரும் ஆரவாரத்துடன் கருத்துகள் முன் வைக்கப் பட்டுக் கொண்டு வருகின்றன. என் முகநூல் கணக்கில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு என்னை டேக் செய்து பதிவுகள் வந்திருக்கின்றன. இன்பாக்ஸில் கொஞ்சம் பாராட்டியும் மிக அதிக அளவு விமர்சித்தும் வந்திருக்கின்றன. பாட்டி தவிர என் வீட்டில் உள்ள எல்லாப் பெண்களும் வீதிக்கு இழுத்து வரப் பட்டு விட்டார்கள்.


இன்றும் நேற்றும் ஜல்லிக்கட்டு பற்றி வந்த பதிவுகள், திட்டுக்கள் அளவுக்கதிகமாக இருந்ததால் முழுமையாக பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. எனவே தனித் தனியாக பதில் அளிக்க இயலாததற்கு வருந்துகிறேன். ஆனால் அந்தக் கேள்விகள் இன்னமும் கொஞ்சம் தொக்கி நிற்கின்றன. எனவே அவற்றை இங்கே ஆராயலாம் என்று முனைந்தேன்.


முதல் முதலில் PETA பற்றி பேசலாம். அவர்கள் நாய் பூனைகளை கொல்கிறார்கள் என்பதை பெரிய வாதமாக முன் வைக்கிறார்கள். எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் விகடன் இணைய தளத்திலேயே இதை ஒரு கட்டுரையாக போட்டிருந்தார்கள் (1). அதை விட பெரிய ஆச்சரியம் ‘ரத்தக் கறை படிந்த பீட்டா-வின் உண்மை முகம்!’ என்றும் ‘அதிர்ச்சிப் பின்னணி’ என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் கொடுக்கும் ஒரே ஆதாரம் ஹஃபிங்க்டன் போஸ்ட் என்கிற இணைய தளத்தில் வந்த கட்டுரை (2). பாதிக்குப் பாதி விஷயங்கள் ‘சொல்லப் படுகிறது’, ‘கூறப்படுகிறது’ என்றெல்லாம் சாமர்த்தியமாக எழுதி உள்ளனர். யார் கூறினார்கள், யார் சொன்னார்கள் என்பதெல்லாம் பற்றி கவலையே படவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பீட்டா-வின் இணைய தளத்துக்கு போய் பார்த்தோ அல்லது அவர்கள் அலுவலகத்துக்கோ கூட போன் பேசி விசாரித்து இருக்கலாம். அப்படி செய்யாமல் ஒரு பக்க வாதத்தை மட்டுமே கொடுப்பதன் மூலம் கட்டுரையாளரின் நோக்கம் என்ன என்பதை சொல்லி விடுகிறார்.


இப்போது அந்தக் குற்றச்சாட்டை பார்ப்போம்.


பீட்டா ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான விலங்குகளை கருணைக் கொலை செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களும் அதனை மறைக்கவோ மறுக்கவோ செய்வதே இல்லை. இதை வைத்து பீட்டா விலங்குகளை கொன்று குவிக்கும் அசுர குலம் மாதிரி இங்கே பேசப்படுகிறது. ஆனால் அப்படி கருணைக் கொலை செய்வதற்கு இருக்கும் காரணங்கள்தான் இங்கே முக்கியம்.


ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பல்லாயிரக் கணக்கான விலங்குகளை தெருக்களில், வீடுகளில் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றுகிறார்கள். அப்படி பெறப்பட்ட விலங்குகளை தத்து எடுத்துக் கொள்ள பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி அழைப்பு விடுக்க வேண்டும், அவர்களே காப்பகத்தில் வைத்துக் காப்பாற்றலாமே என்று கேட்கலாம். நிறைய விலங்குகள், குறிப்பாக நாய் பூனை, இவை territorial animals என்று சொல்லப்படுபவை (3). அதாவது அவை பிறந்த, கொஞ்ச நாள் வளர்ந்த இடங்களை தங்கள் சொந்த வாழ்விடமாக பாவித்து அந்த இடத்தில் அடுத்த விலங்கை அனுமதிக்காது. அப்படி வேறு ஒரு விலங்கு அந்த இடத்துக்கு வந்தால் அதனை சண்டையிட்டு துரத்தி அடித்து விடும். இதை நீங்கள் நம் ஊர் தெரு நாய்களிடமும் பார்க்கலாம். ஒரு தெருவில் வசிக்கும் நாய் அடுத்த தெரு நாயை உள்ளே விடாது. அப்படி வாழ்ந்த நாய்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க முடியாது. அதனால்தான் நம் ஊர் கார்ப்பரேஷன் கூட தெரு நாய்களுக்கு கருத்தடை பண்ண எடுத்துக் கொண்டு போய் ஆபரேஷன் பண்ணி விட்டு திரும்பவும் அவர்களை எடுத்த தெருவிலேயே விட்டு விடுவார்கள். நாய்களின் இந்த குணம் தெரியாமல் நிறைய மக்கள் திரும்ப அவற்றை அவர்கள் தெருவில் விடுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அவர்களுக்கும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் எல்லாம் வந்திருக்கிறது.


அந்த மாதிரி மக்கள் எதிர்ப்புக்கு பயந்து பூட்டான், ஜோத்பூர் இரண்டு ஊர்களிலும் அந்த ஊர் கார்ப்பரேஷன் தெரு நாய்கள் எல்லாவற்றையும் ஒரு பெரிய மைதானத்தில் வேலிகள் கட்டி காப்பகம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே நாய்கள் கும்பல் கும்பலாக சண்டையிட்டுக் கொண்டு பலவீன நாய்கள் பெரும் காயங்கள் அடைந்திருக்கின்றன. வெற்றி பெற்ற நாய்கள் போடப்படும் உணவை தாங்களே எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க, அவற்றுக்கு பயந்து காப்பக ஊழியர்கள் வேலிக்கு வெளியில் இருந்தே உணவு மொத்தத்தையும் தூக்கிப் போட்டுப் போய் விட, யாரும் சுத்தம் செய்ய உள்ளே போகாமலே போய்  நாய்கள் எல்லாம் காயத்திலும், பட்டினியிலும், தங்கள் மல-ஜல சேற்றில் மூழ்கியும் கொஞ்சம் கொஞ்சமாக இறந்திருக்கின்றன.(4)


எதற்கு இதை சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி இருக்கும் போது அந்த நாய்களை வைத்துக் காப்பாற்ற முடியாது. அவற்றை தனித் தனியாக வீடுகளில் தத்துக் கொடுப்பது மட்டுமே தீர்வு. அதுவும் பத்துப் பதினைந்து நாய்கள் என்றால் கூட சமாளித்து விடலாம். பீட்டா கையகப் படுத்தும் விலங்குகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் தத்து எடுக்க வருபவர்களோ டஜன் கணக்கில் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் அந்த நாய் பூனைகள் அடித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சாவதற்கு இதுவே பரவாயில்லை என்று ஆகிறது.


அடுத்த வகை feral என்று அழைக்கப் படும் விலங்குகள். அதாவது காட்டு விலங்கு நிலையிலேயே இருப்பவை. பெரும்பாலான தெரு நாய்கள், தெருப் பூனைகள் இவ்வகையானவையே. இவற்றை தத்து எடுத்துப் போய் எல்லாம் வீட்டில் வளர்க்க முடியாது. இவற்றில் சில பெரும் ஆக்ரோஷத்துடனேயே இருக்கும். இப்படி இருப்பதால் இந்த விலங்குகளுக்கும் பிரச்சனை, அதை சுற்றி இருப்பவர்களுக்கும் ரிஸ்க்தான்.


அடுத்து, பெறப்பட்ட விலங்குகளில் நிறைய பெரும் நோயினால் காப்பாற்றும் நிலையை தாண்டியவை மற்றும் அவற்றை வைத்திருந்தவர்களால் கொடூரமாக நடத்தப் பட்டு மனிதர்களைக் கண்டாலே பயந்து நடுங்குபவை. இவற்றை வாழ வைத்திருப்பதை விட கருணைக் கொலை செய்வது பல மடங்கு நல்லது. மனிதர்களிலேயே quadriplegia மாதிரி வாத நோய் அல்லது காப்பாற்ற இயலாத, பெரும் வலி கொண்ட சிலவகை கான்சர் நோயுடையோரை கருணைக் கொலை செய்ய பெரும்பாலான மேலை நாடுகளில் சட்டம் அனுமதிக்கிறது. இந்தியாவிலும் இந்த கருணைக் கொலை பற்றிய விவாதங்கள் கோர்ட்டில் அடிக்கடி நடக்கின்றன.


இந்த மாதிரி விலங்குகள்தான் கருணைக் கொலை செய்யப் படுகின்றன. பீட்டா இது பற்றி நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள். இணையத்தில் கிடைக்கின்றன (5). அதற்கு பொறுமை இல்லாதவர்கள் அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவைப் பார்க்கலாம் (6).


விலங்கு உரிமை விவாதத்தில் இரு தரப்பு இருக்கின்றன. ஒரு தரப்பு கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்பது.பீட்டா இந்த தரப்பு. இன்னொரு தரப்பு விலங்குகளை எந்த நிலையிலும் கொலையே செய்யக் கூடாது என்பது. No Kill Advocacy Centre மாதிரி இந்த இயக்கங்கள் இதனை முன்னெடுக்கின்றன. இந்த இயக்கம்தான் பீட்டாவின் கருணைக் கொலையை விமர்சித்த ஹஃபிங்க்டன் போஸ்ட் கட்டுரைக்கு காரணமானவர்கள். இந்த இயக்கத்தின் விமர்சனம்தான் விகடன் கட்டுரை மற்றும் முகநூலில் பகிரப் பட்ட நிறைய பதிவுகளுக்கு மூலமாக கிடைத்திருக்கிறது.


என்னைப் பொறுத்த வரை இந்த ஹஃபிங்க்டன் போஸ்ட் கட்டுரையை பீட்டா-வின் ‘கொடூர முகமாக’ பார்ப்பதை விட கருணைக் கொலை பற்றிய விவாதமாகவே பார்க்க வேண்டும் என்பேன். இரண்டு விலங்கு உரிமை இயக்கங்கள் தங்கள் கொள்கை நிலைப்பாட்டை விமர்சித்துக் கொள்கின்றன என்கிற நிலையில் மட்டுமே இது முக்கியத்துவம் பெறுகிறது.


நான் கருணைக் கொலையை ஆதரிக்கிறேனா என்பதை என்னால் இன்னமும் முடிவு செய்ய இயலவில்லை. மனிதனோ, மிருகமோ அவற்றை கருணைக் கொலை செய்வதை ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது. ஆனால் மேற்சொன்ன எல்லாக் காரணங்களையும் நான் ஏற்றுக் கொள்ளவே செய்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நிலையில் என்னை நிறுத்தினால் பீட்டா செய்வதையேதான் நானும் செய்வேனா என்பது தெரியவில்லை. இதில் பிரச்சனை என்னவென்றால் கொலை செய்யாமல் இருக்கும் கொள்கை கொண்டதினால் No Kill Advocacy Centre மிகக் குறைவான விலங்குகளையே தங்கள் காப்பகத்தில் ஏற்றுக் கொள்கிறது. பீட்டா உலகளாவிய இயக்கமாதலால் இவர்கள் மாதிரி அளவோடு நிறுத்த முடியாது. அப்படி அளவோடு ஏற்றுக் கொண்டால் ‘No Kill Advocacy Centre கையகப் படுத்தாமல் போன மற்ற விலங்குகள் கஷ்டப் படுவதை அவர்கள் அனுமதிப்பதாகத்தானே ஆகிறது?’ என்கிற பீட்டாவின் கேள்வி இங்கே முக்கியமானது (7).


இப்படி இரு விலங்கு உரிமை இயக்கங்கள் நடுவில் நடக்கும் சிந்தனாவாத விவாதத்தைதான் ஜல்லிக் கட்டு ஆதரவாளர்கள் எடுத்துக் கொண்டு பீட்டாவின் ‘முகமுடியை’ கிழித்து விட்டதாக பரபரகிறார்கள்.


விகடன் கட்டுரையின் அடுத்த விமர்சனம் கருத்தடை பற்றியது. விலங்குகளை கருத்தரிக்கவே செய்யாமல் அவர்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்து விடுவதை பீட்டா பிரச்சாரம் செய்கிறது, அப்படி செய்வதன் மூலம் அந்த விலங்குகள் இயற்கையான வாழ்க்கை வாழ்வதை தடுத்து அவர்களை ‘கொடுமைப் படுத்துகிறது’  என்று விகடன் கட்டுரை குற்றம் சாட்டியது.


இந்தக் குற்றச்சாட்டை விட இந்தக் கட்டுரையாளரின் illiteracy என்னை மிகவும் பாதித்தது என்பதுதான் உண்மை.


தெரிந்தோ தெரியாமலோ பூனை, நாய் இவற்றை மனிதன் domesticate பண்ணி நம்மோடு வாழப் பழக்கி விட்டான். சில காலத்துக்கு முன்பு வரை அவற்றின் தேவை அவனுக்கு இருந்தது. இப்போது அந்தத் தேவை முடிந்து போய் விட்டதால் அவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் முடிந்து போய் விட்டதாக கருதுகிறோம். அப்படி செய்ததனால் இந்த இரண்டு விலங்கினங்களும் பெரும் கஷ்டத்தில் உழல்கின்றன. தெரு நாய்களின் கஷ்ட ஜீவனம் பற்றி நானே முன்பு ஒரு ப்லாக் எழுதியிருந்தேன் (8) இவை பல்கிப் பெருகி இன்னமும் பெரும் கஷ்டத்தில் முழுகுகின்றன. இந்தப் பிரச்சனைக்கு நம்மிடம் இருக்கும் தீர்வுகள் இரண்டு. ஒன்று: இந்த விலங்குகள் அனைத்தையும் ஒவ்வொரு குடும்பமும் ஆளுக்கு ஒன்று என்று தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு: இந்த விலங்குகளுக்கு கருத்தடை பண்ணி அவை இன்னமும் பெருகாமல், அவற்றின் சனத்தொகை குறையும் படி செய்ய வேண்டும்.


பீட்டா இரண்டாவதைத்தான் பின்பற்ற வேண்டும் என்கிறது. இந்தக் கருத்தில் நான் முழுமையாக உடன் படுகிறேன். ஆரோக்கியமான பூனைகள் அவர்கள் வாழ்நாளில் கிட்டத் தட்ட 100 குட்டிகள் போடும் சக்தி கொண்டவை. ஏற்கெனெவே நம்மிடையே இருக்கும் பூனைகளை காப்பாற்ற வழியில்லாத போது பிறந்த குட்டிகளை எப்படி வைத்துப் பாதுகாப்பது? தெரு நாய்கள் ஆறேழு குட்டி போட்டு விட்டு அவற்றுக்கு பால் கூட கொடுக்க முடியாமல் கஷ்டப் படுகின்றன. உங்களுக்கு எப்போதாவது நேரமிருந்தால் குட்டி போட்ட தெரு நாயை போய் கவனியுங்கள். உங்கள் இதயம் உடைபடும். அப்போது நீங்களும் இந்த வழிமுறையை வரவேற்க வாய்ப்பிருக்கிறது.


நம்மிடம் இன்றைக்கு இருக்கும் பிரச்சனை pet animals எனப்படும் செல்ல விலங்குகள் லட்சக் கணக்கில் இருக்கின்றன. ஆனால் அவற்றை வளர்க்க ஆசைப்படும் மக்கள் ஆயிரத்தில் கூட இல்லை. அந்த மாதிரி சமயத்தில் இருப்பவற்றை முடிந்த அளவு காப்பற்ற வேண்டும், மற்றும் அவை பல்கிப் பெருகாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பீட்டாவின் நிலைப்பாடு. அதில் முழுமையாக நான் உடன்படுகிறேன். நான் முன்பு ஒரு பூனை வளர்த்து வந்தேன். அது வயதுக்கு வந்த உடனேயே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து விட்டேன். சென்னை கார்ப்பரேஷன் ப்ளூ க்ராஸ் சேர்ந்து தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைத்தார்கள். உண்மையில் இந்த சிந்தனைக்கு முன்னோடியாக இருந்ததற்காக பீட்டா-வுக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும்.


இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். பீட்டா பற்றி விமர்சிக்கும் விதமான விஷயங்கள் எங்கே படித்தாலும் அதை நன்கு ஆராய்வது முக்கியம். Taking it with a pinch of salt என்று சொல்வார்கள். அது மாதிரி. ஏனெனில் பீட்டா-வுக்கு உலகெங்கிலும் சக்தி வாய்ந்த எதிரிகள் இருக்கிறார்கள். சும்மா ஜல்லிக் கட்டு என்கிற ஒரு விஷயத்தில் கை வைத்ததற்கே பாதி தமிழ் நாடு அவர்களுக்கு எதிராக கொதித்து எழுந்திருக்கிறது. ஆனால் பீட்டா கை வைத்த மற்ற விஷயங்கள் பில்லியன் டாலர் தொழில்கள் சம்பந்தப் பட்டவை. விலங்குகளை பரிசோதனைக்கு பயன்படுத்தும் மருந்து கம்பனிகள், அழகு சாதன க்ரீம்களை விலங்குகள் மேல் டெஸ்ட் செய்யும் காஸ்மெடிக் கம்பனிகள்,  இறைச்சி உற்பத்தி கம்பனிகள், தோல் பதனிடும் கம்பனிகள், ஹலால் இயக்கங்கள், திமிங்கலங்களை வேட்டையாடும் ஜப்பானிய அரசு  என்று பீட்டாவின் மேல் கறம் வைத்துக் கொண்டு ஆயிரம் எதிரிகள் காத்திருக்கிறார்கள். பீட்டாவின் மேல் ஒரு சிறிய புகார் வந்தாலும் அதனை கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெளியிட பில்லியன் டாலரில் பட்ஜெட் வைத்துக் கொண்டு இவர்கள் தயார்.


இன்று பொதுக் கருத்தை ஒட்டி விகடன் மாதிரி, தி இந்து மாதிரி பத்திரிகைகளே கூட ஜல்லிக் கட்டு ஆதரவாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது. அப்படியானால் உலக அளவில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இயக்கம் இது.

இவர்கள் முன்னெடுக்கும் விஷயங்கள் இன்று சிரிப்பாகவும், நடைமுறைக்கு ஒத்து வராததாகவும் தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயக்கம் நமக்கு கண்டிப்பாக தேவை என்பது என் கருத்து. இங்கே இப்போது பீட்டா நுழைந்ததனால் விலங்குகளை இதுவரை ஒரு பொருட்டாக மதித்திராதவர் கூட அதைப் பற்றி பேசும், கொஞ்சமாவது யோசிக்கும் நிலை தோன்றி இருக்கிறது. போன வருஷம் வரை சாராயம் ஊற்றிக் கொடுத்து, கூர் கத்தியால் மாட்டின் பின்னால் குத்து குத்தென்று குத்தி விட்டு, இன்றைக்கு ‘மாடும் மனிதனும் ஒன்றென வாழும் இனம் நாம்,’ என்று நம்மைப் பேச வைத்ததற்கே பீட்டா-வுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.


தரவுகள்:
========
1)http://goo.gl/5NZeyW
2) http://goo.gl/614HKQ
3) https://en.wikipedia.org/wiki/Territory_(animal)
4) http://goo.gl/nX0uAW
5) http://www.peta.org/blog/euthanize/
6) https://www.youtube.com/watch?v=u3AxNgrU51o
7) http://www.peta.org/issues/companion-animal-issues/animal-shelters/
8) http://sriwritesintamil.blogspot.in/2015/10/blog-post_22.html

Tuesday, 5 January 2016

ரஹ்மான்


‘ஒ ஸாயா…’ என்கிற அடி நாத சப்தத்தில் அது ஆரம்பிக்கவில்லை. அந்தப் பயணம் உண்மையில் ஆரம்பித்தது கொஞ்சம் நீண்ட, சற்றே கிராமிய வாசம் கொண்ட ஹம்மிங்-கில்தான். ஒரு கிராமப் பெண் தன் சின்னச் சின்ன ஆசைகளை வெளிப்படுத்திய பாடலில்தான் அவரின் முதல் ஹம்மிங் குரல் வெளிப்பட்டது. அந்தப் பாடலைக் கேட்ட எல்லாருக்குமே அவர்கள் உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றப் பட்டு விட்டது என்பது புரிந்து விட்டது. பொருளாதார சீர்திருத்தக் குழந்தைகள் எல்லாருக்குமே ஒரே இரவில் அல்லா ராக்கா ரஹ்மான் ஒரு ஆதர்ஷ புருஷனாகி விட்டார்.


ரஹ்மானைப் பற்றி எழுதுவது கொஞ்சம் சிரமம்தான். என்ன எழுதினாலும் ரொம்பவும் அதீத பாராட்டுதல்கள் அல்லது ஏற்கெனெவே படித்த வார்த்தைகள் மாதிரி எழுதுவது தவிர்க்க இயலாமல் போகிறது. ஏனெனில் அவ்வளவு வார்த்தைகள் ஏற்கெனெவே எழுதப் பட்டு விட்டன. அவர் ஆரம்பித்த காலத்தில் அவர் இசையில் ‘கம்ப்யூட்டர் வாசம்’ அதிகம் வீசியதாக குற்றம் சாட்டப் பட்டார். கொஞ்சம் பேஸ் சப்தம் அதிகமாகவும், மெல்லிய எதிரொலியோடும், ரொம்ப கீச்சும் பின்னணி இசையும் செயற்கையாக இருப்பதாக கருதப் பட்டது. அவர் ஒன்று ரிதம் லூப்-களிலும் எலெக்ட்ரானிக் வாத்திய இசைகளிலும் வரிகள் கொஞ்சம் அமிழ்ந்து போன நிலையில் அமைத்தார், அல்லது அமைதியான ஹாலோ கிடாரில் தெளிவான வரிக் கொண்ட பாடல்களில் கொஞ்சம் மேலோடியின் விதிகளை வளைத்து பாடல்கள் அமைத்தார். அந்தக் கால கட்டங்கள்தான் அவர் தன் இசை ஒலியை இன்னமும் வளர்த்துக் கொண்டிருந்த தருணங்கள். ஒரு இசைக்கலைஞன் தன் சொந்த இசை ஒலியை உருவாக்குவது என்பது பெரும் சிரமத்துக்குரிய காரியம். அதுவும் இந்திய சூழலில், ஒரு திரைக்கதையை ஒட்டியே இசை அமைக்க வேண்டியிருக்கிறது. அதுவும் வெறும் காதல் பாடல்களுக்கு மட்டுமே இசை அமைப்பது ரஹ்மானுக்கு கொஞ்சம் அலுப்பாகவே இருந்தது. ஆனால் அவர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிதான். ஏனெனில் அப்போது வந்த நிறைய புதிய இயக்குனர்கள் அவர் சுதந்திரமாக விளையாட களம் அமைத்துக் கொடுத்தனர். அதன் காரணமாக லகான், பம்பாய், ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, மீனாக்ஷி போன்ற படங்கள் வந்தன.


தன் கற்பனை சுதந்திரம் முழுவதுமாக கிடைத்த சந்தோசத்தில் ரஹ்மான் ஒலியில் புதுப் புது பரிசோதனை முயற்சிகள் செய்யத் துவங்கினார். உலகில் பல்வேறு இசை ரகங்களை கலந்து ஒன்றிணைப்பது அவருக்குப் பிடித்தமாக இருந்தது. கவ்வாலி-யில் காதல் கலந்து ‘தேரே பினா’ என்று குரு-வில் கொடுத்தார். Folk Rock எனும் பாப் டிலன் ஸ்டைலில் இளைஞர்களின் எழுச்சி ‘ரூ பா ரூ’ என்று ரங் தே பசந்தியில் பாடினார்கள். மேற்கத்திய கிராமிய இசையை ஒட்டி வந்த பாடல் போருக்கு எதிராக ‘வெள்ளைப் பூக்கள்’ மலர ஏங்கியது. இன்றைய டெக்னோவோடு அன்றைய மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தோடு இயைந்து ‘தில் கா ரிஷ்தா’ வாக கூவியது. பொருளாதார தாராளமயத்துக்குப் பின் தாங்களும் உலகமயமாகிய இந்திய இளைஞர்கள் இவற்றை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார்கள். அதே சமயம்  சாஸ்த்ரிய சங்கீத ரசிகர்களையும் கைவிடாமல் அவர்களையும் திருப்திப் படுத்த முனைந்தார். ஜோதா அக்பரின் ‘மன் மோகனா’-வில் சுத்தமான பஜனை கிடைத்தது. ஜானே தூ யா ஜானே நா-வின் ‘ஜானே தூ’ பாடலில் இந்தியாவிலேயே முதன் முதல் தூய ஜாஸ் ஒலித்தது. பகத் சிங்-கில் ‘சர்ஃபரோஷ் கி தமன்னா’ ஹிந்துஸ்தானியில் மேலோடி கலந்து குழைந்தது. இன்னும் கொஞ்சம் மேலே போய் தூய ஹிந்துஸ்தானியே டெல்லி 6ல் ‘போரே மாயி’ வழியாக கொடுத்தார்.

இப்படிப்பட்ட ஆரவாரமான சாதனைகளோடு எல்லாம் ஒப்பிடுகையில் ‘ஜெய் ஹோ’ கொஞ்சம் மட்ட ரகம்தான். ஆனால் என்ன செய்வது, அகாதெமி அவார்ட்-கார்கள் ‘ஜானே தூ’ கேட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா? ‘ஜெய் ஹோ’ எப்படி இருந்தாலும் ஆஸ்கார் விருது சரியான ஆளைத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா என்ன? இந்தப் பாடல்தான் அவருக்கு அந்த விருதை கையில் வைத்தது என்றாலும் கிட்டத் தட்ட இருபது ஆண்டுகளின் உழைப்பும் அசாத்தியத் திறமையுமே அந்த மேடைக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கிறது என்பது ரஹ்மானின் ரசிகர்களுக்கு தெரியும். ‘ஜெய் ஹோ’-வை விட்டுத் தள்ளுங்கள். டெல்லி 6ல் ‘ரெஹ்னா தூ’ பாடலைக் கேளுங்கள். ஆப்பிரிக்க ரெக்கே பின்னணியில் துவங்கும் பாடல் மெலோடி விதிகளை எல்லாம் உடைத்து ரஹ்மானின் குரலோடு இழைந்து துவங்குகிறது. உடனே இடைவெளியில் கொஞ்சம் அரேபிய இசை உறுத்தாமல் நுழைந்து கலந்து செல்கிறது. கடைசியில் புல்லாங்குழல் போன்ற ஒரு சிந்தஸைசர் ஒலியில் கர்நாடக வடிவ இசை துவங்கி அந்த ரெக்கே-வோடு கலந்து வருடி முடிகிறது. பாப் மார்லியும் தியாகராஜரும் கட்டி அணைத்து விடை பெறுகிறார்கள். அதுதான் ரஹ்மான். அந்த மனிதருக்குத்தான் ஆஸ்கார் கொடுத்திருக்கிறார்கள்!

Monday, 2 November 2015

மோடியின் இந்தியா - பாகிஸ்தானின் வாய்ப்பு



(ஆயாஸ் அமீர் பாகிஸ்தானிய பத்திரிகையாளர் மற்றும் அனுபவமிக்க அரசியல்வாதி. பஞ்சாப் சட்டசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். The Newsல் அவர் எழுதிய இந்தக் கட்டுரையை அவர் அனுமதி பெற்று இங்கே மொழி பெயர்த்திருக்கிறேன்.)


இந்தியாவில் நிகழ்ந்தவற்றிலே பாகிஸ்தானுக்கு மிகவும் பிரயோசனமான என்றால் அது நரேந்திர மோடி பிரதமரானதுதான். ஜியா உல் ஹக் சமயத்தில் பாகிஸ்தான் எப்படி பார்க்கப் பட்டதோ அந்த மாதிரி மற்றவர்கள் இந்தியாவை பார்க்க வைத்திருக்கிறார் அவர்.

சுதந்திர சிந்தனைகள் மேல் தாக்குதல்கள், கருத்து சுதந்திரத்துக்கு எதிர் வரும் ஆபத்து, தன் நம்பிக்கைகள் காரணமாக தனி மனிதர்கள் கொல்லப் படுவது, வெறுப்பும், அடிப்படைவாதமும் தேசத்தின் மேல் உமிழப் படுவது, மத அடிப்படைவாத கருத்துக்கள் திணிக்கப் படத் துவங்குவது, அரசியலில் இதற்கு முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு மதம் நுழைவது...இது எல்லாமே பாகிஸ்தானில் நடக்க வேண்டியது.

இதில் விஷயம் என்னவென்றால் இது வரை இந்தியர்கள் தங்கள் தேசத்தின் பெருமையைப் பற்றி, ‘ஒளிரும் இந்தியாவைப்’ பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருந்தார்கள்; இந்தியாவின் முன்னேற்றம், எதிர்காலத்தின் சாத்தியக் கூறுகள் எல்லாமே விளம்பர ஏஜென்சிகளின் கனவு உலகம் போல இருந்தது. பாகிஸ்தானின் தோல்விகளோடு ஒப்பிடுகையில் அவை எங்கோ மேலே இருந்தது. பாகிஸ்தானியர்களோடு பேசும் போதெல்லாம் இந்தியர்கள் ஒரு பாசாங்குக் கவலையோடும், ‘நாங்கள் மிகவும் முன்னேறிய சமூகம் பார்’ என்கிற தோரணையோடுமே அணுகினார்கள்.

இது எல்லாம் போதாதென்று ‘நாங்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு பார்’ என்றும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உலகத்துக்கு நினைவுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.  இதனால் உலகெங்கும் பொதுவான எண்ணம் ‘இந்தியா முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்க பாகிஸ்தான் மதத் தீவிரவாதிகளின் கையில் சிக்கி சின்னா பின்ன மாகிக் கொண்டிருக்கிறது,’ என்று நிலைத்தது.

அந்த மாதிரி சிந்தனைகள் நம்மை சோர்வடைய வைத்தாலும் அதை நிரூபிக்கும் வகையில்தான் பாகிஸ்தானில் நடந்து வந்து கொண்டிருந்தது.  யாராவது ஒரு ஏழை மத அவமதிப்பு கைது செய்யப் ஜெயிலில் போடப் படுவார், ஒரு கிறித்துவ சமூகத்தில் தாக்குதல் நடக்கும், இஸ்லாத்தின் ஒரு தனிப் பிரிவை சேர்ந்த ஒருவர் சுடப்படுவார், இன்னொரு தீவிரவாதத் தாக்குதல் நடக்கும், இவைதான் உலக செய்திகளில் முதல் பக்கத்தை பிடிக்கும். அதுவே பின்னர் பாகிஸ்தான் எப்போதுமே பிரச்சனை நிறைந்த நாடுதான் என்கிற எண்ணத்தை உலகுக்கு உறுதிப் படுத்தும்.

ஆனால் சென்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதும், அதன் மூலம் ஹிந்து அடிப்படைவாதத்துக்கு கிடைத்த உற்சாகமும், இந்தியா ஒரு ‘ஹிந்து தேசம்’ என்று திரும்ப திரும்ப நிரூபிக்க நடக்கும் முயற்சிகளும் ஆட்ட விதிகளை பெருமளவு மாற்றி விட்டன. இன்றைய தேதியில் கொஞ்சம் கொஞ்சமாக அடிப்படைவாதம் என்கிற குழியில் இருந்து மேலே வர பாகிஸ்தான் கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அதற்கு எதிர் திசையில் வேகமாக பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

நியூ யார்க் டைம்ஸ்ஸில் பணி புரியும் இந்திய பத்திரிகையாளர் சோனியா ஃபலெரொ எழுதுகிறார்: ‘இன்றைய இந்தியாவில் மத சார்பற்ற சிந்தனையாளர்கள் கடும் சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 77 வயது கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். கோவிந்த் பனசாரே மும்பையில் கொல்லப் பட்டிருக்கிறார். நரேந்திர தாபோல்கர் கொல்லப் பட்டிருக்கிறார். இவர்கள் எல்லாருமே ஹிந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை சாடியவர்கள்.’  

கூடவே உபியில் ஒரு முஸ்லிம் பசுக்கறி வைத்து உண்டார் என்கிற சந்தேகத்தில் அடித்துக் கொல்லப் பட்டிருக்கிறார். இதனை எதிர்த்து நிறைய எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தந்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். ஷர்மிளா தாகூர் இன்றைய இந்தியாவை எமெர்ஜென்சியோடும் பாபர் மசூதி இடிப்பு நேரத்தோடும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். ஆனால் இவை எல்லாம் ஆங்காங்கே ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்கள்தான். சமூகத்தில் பொதுவாக பயமும் சகிப்பின்மையும்தான் நிலவுகிறது.

பிரதமரோ அமைதியாகவே இருக்கிறார். ஹிந்துக் கும்பல்கள் குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த போது அவர் காத்த அதே அமைதிதான் இப்போதும் அவரிடம் தென்படுகிறது. முதல்வர் மோடிக்கும் பிரதமர் மோடிக்கும் வித்யாசம் இருக்கும் என்று நிறையப் பேர் நம்பினார்கள். ஆனால் அவர் மாறவே இல்லை என்பது இப்போது புரிபடுகிறது. நரேந்திர மோடி ஹிந்துத்வா கொள்கைகளை ஆதாரமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ்-ஸோடு மணம் புரிந்து அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஹிந்துத்வாவும் ஒரு மாதிரியான நாஜி சிந்தனைதான். உள்ளூர் நாஜி அல்லது காவி நாஜி என்றும் அதனை அழைக்கலாம். இந்தியா ஹிந்துக்களுக்காகவே உள்ள தேசம், அதில் முஸ்லிம்களுக்கோ வேறு மதத்தினருக்கோ இடம் கிடையாது என்று நம்பும் ஒருவகையான இனவாதம் அது. ஆனால் இந்தியாவில் நிகழும் இந்தக் குழப்பத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. வெகு காலமாகவே நாம் மத அடிப்படைவாதத்திலும் சகிப்புத் தன்மையற்ற நிலையிலும் உழன்று கொண்டிருக்கிறோம். இப்போது இந்தியா ஒரு ஹிந்துப் பாகிஸ்தானாக ஆகத் துவங்கும் வேளையில் இந்தியாவின் நஷ்டம் பாகிஸ்தானின் லாபமாக மாற நாம் உழைக்க வேண்டும்.

ஆனால் இந்த லாபம் நல்ல பிரயோசனமான லாபமாகவும் பாகிஸ்தானிய சிந்தனைத் திறனை முன்னேற்றுவதாகவும் இருக்க வேண்டும். நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்: பாகிஸ்தானிய அடிப்படைவாதத்தின் பொற்காலம் முடிந்து போய் விட்டது. துப்பாக்கியை ஆட்டிக் கொண்டு இஸ்லாமிய தேசத்தை கட்டமைக்க உலவிய முல்லாக்கள் பெருமளவு அடக்கப் பட்டு விட்டார்கள்; முழுவதும் ஒழிக்கப் படவில்லைதான், ஆனால் அடக்கப் பட்டு விட்டார்கள். ஆனால் இந்த வெற்றியை இன்னமும் விரிவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நம் தேசத்தில் பெருமளவு விரவிக் கிடக்கும் ஊழல் ஒழிய வேண்டும். அடிப்படை சேவைகள் - நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை - போன்றவை சரி செய்யப் பட வேண்டும். சுகாதாரத்துக்கு நாம் தேவையான அளவு செலவிடுகிறோமா என்று பார்க்க வேண்டும். தேசம் முழுவதும் ஒரே கல்வி முறை கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. எல்லா மாணவர்களுக்கு ஒரே புத்தகம் தேவை; அது நல்ல, அறிவார்ந்த புத்தகமாக இருக்க வேண்டும், சும்மா பாகிஸ்தானிய வரலாறு மாதிரி குப்பைகள் இருக்கக் கூடாது.

நம் ஒட்டு மொத்த பார்வையும், சிந்தனையும் பகுத்தறிவு மற்றும் நவீனவாதம் நோக்கிப் பயணிக்க வேண்டும். பழைய மூட சிந்தனைகளில் இருந்து நாம் வெளி வர வேண்டும். இந்தியா அடிப்படை வாதத்தை தழுவிக் கொண்டால் தழுவிக் கொள்ளட்டும். நாம் அந்த நிலையில் ஏற்கெனெவே இருந்திருக்கிறோம். அது நம்மை முன்னேற்றவில்லை. எனவே அதனை நாம் தூக்கி எறியவேண்டும். பகுத்தறியும் பண்புதான் கற்றலுக்கு முதல் தேவை. அந்தப் பண்பை நாம் வளர்க்க வேண்டும்.

மேற்கு தேசங்கள் எல்லாம் மதமே இல்லாத தேசங்கள் கிடையாது. அவற்றில் முக்கால்வாசி கிறித்துவ நம்பிக்கைகளை போற்றுபவை. நமது நம்பிக்கை இஸ்லாம், இந்த தேசத்தின் பெரும்பான்மையினரின் மதம். மேற்கு தேசங்களிலும் மதப் பிரச்சனைகள் தோன்றி மறைந்திருக்கின்றன. இப்போது தங்கள் மதத்தை  அவர்கள் சட்டைப் பையில் குத்திக் கொண்டு அலைவதில்லை. அதே போல நாமும் நம் மதத்தை சட்டைப் பையில் குத்திக் கொண்டு அலைவதை நிறுத்த வேண்டும்.

மசூதிகளில் தென்படும் ஒலிப்பெருக்கி துப்பாக்கிகளை விட அதிக நாசங்களை நம் சமூகத்தில் செய்ய வல்லவை. அவற்றை இப்போதுதான் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரத் துவங்கியிருக்கிறோம். இன்னமும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத அவமதிப்பு சட்டத்தை வைத்து குழப்பம் விளைவிப்பது நிற்க வேண்டும்.

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு ஏவுகணைக்கும் பதில் ஏவுகணையோ ஒவ்வொரு அணுகுண்டுக்கும் பதில் அணுகுண்டோ நாம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நமக்கென்று ராக்கெட்டுகள், டாங்குகள், அணுகுண்டுகள் உள்ளன. இதுவே போதுமானது. வலிமையான தரைப் படையும் விமானப் படையும் நம்மிடம் உள்ளன. நமக்கு இப்போதைக்கு தேவை எல்லாம் நல்ல பள்ளிகள், கல்லூரிகள், அறிவியல் ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமான ஞானம் இவையெல்லாம்தான். நம் மேல் பெரும் நம்பிக்கை வைத்து இந்தியா பற்றி குறைவாகப் பேசி இந்தியா பற்றிய பயத்தைக் குறைத்துக் கொண்டு வாழ முயல வேண்டும். அணுகுண்டு எண்ணிகையில் இந்தியாவை முறியடிக்க நினைக்காமல் சகிப்புத் தன்மையில், அறிவியல் அறிவில், பகுத்தறிவில், ஒருங்கிணைத்துச் செல்லும் மனநிலையில் இந்தியாவை விட உயர வேண்டும்... இசையிலும் கலையிலும் கூட அவர்களை மீற வேண்டும்.

நம் தேசத்து அறிவு ஜீவிகள் பாகிஸ்தான் தாலிபானை நம்மால் முறியடிக்கவே முடியாது என்று நினைத்தனர். கராச்சி பிரச்சனையை தீர்க்கவே முடியாது என்று எண்ணினர். அவர்கள் எண்ணம் தவறாகப் போனது. தாலிபான் மாதிரியான பெரும் சோதனைகளை பாகிஸ்தான் எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது. மற்றவற்றையும் அப்படி கடக்க முடியாதா என்ன? மதுவிலக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சட்டம் மதுவை தடை செய்தாலும் ஒரு போன் செய்தால் எந்த ஊரிலும் உங்களுக்கு டெலிவரி கிடைக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும் இந்த மாதிரி பாசாங்குத் தன்மையிலேயே இருக்கிறோம். சட்டமும் நிஜ வாழ்க்கையும் ஒரே கோட்டில் இணைய வேண்டும். மதுவிலக்கு போன்ற பாசாங்குத் தனங்கள் ஒரு முன்னேறிய சமூகத்துக்கு ஒவ்வாதவை. அவை பாகிஸ்தானின் பிற்போக்குத்தனமான பிம்பத்தை கட்டிக் காக்கவே உதவுகின்றன. கிரிமினல்களுக்கும் இந்த பாசாங்குத் தனங்கள் வசதியாக இருக்கின்றன. கள்ள மார்க்கெட்டுக்குப் போக வேண்டியது அரசு கஜானாவுக்கு போக வேண்டும். நமக்கு முன்மாதிரி துபாயாக இருக்க வேண்டும், சவுதியாக இருக்கக் கூடாது. நடைமுறை உண்மையை உணர்ந்து கொண்ட தேசமாக துபாய் இருக்கிறது, அதுவே அதன் பொருளாதார வெற்றிக்கும் காரணம் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக, நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு இறைவன் கொடுத்த வரம். ஹிந்துத்வாவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும், காவி நாஜிகளுக்கு சேரும் வலிமைகளும் நமக்கு நல்லதுதான். நம்முடைய உள்நாட்டு பலவீனங்களை சரி செய்து கொண்டால், நம் சகிப்புத் தன்மையை, நம் பகுத்தறிவை நாம் வளர்த்துக் கொண்டால் யாரைப் பார்த்தும் எந்த நாட்டைப் பார்த்தும் பயந்து சாக வேண்டிய அவசியம் நமக்கு வராது.

Thursday, 22 October 2015

கல்லடி படும் அரசு



'நாய்கள் மேல் யாராவது கல்லடித்தால் அரசாங்கம் பொறுப்பல்ல,' என்று தலித் குழந்தைகள் எரிப்பு பற்றி கருத்தளித்த ஜெனரல் விகே சிங் தலித்துகளை இழிவு படுத்தியிருக்கிறார் என்பது ஒரு முக்கியமான கருத்தாக பார்க்கப் படுகிறது. அது சரிதான் என்றாலும் பிராணிகள் மீதான அக்கறையின்மையும் அதை ஒட்டி உள்ள பெரும் பிரச்சனையும் இங்கே தென்படுகிறது. எனவே அவர் சொன்னதால் வெளிப்பட்டிருக்கிற உணர்ச்சிகளை கொஞ்ச நேரம் தள்ளி வைத்து விட்டு இந்தப் பிரச்சனையை பார்ப்போம்.


நம்மில் நிறையப் பேர் பொதுவாக தெரு நாய்கள் பற்றி கவலைப் படுவதில்லை. அவை என்ன சாப்பிடுகின்றன, எங்கே தூங்குகின்றன, மழை அல்லது கடும் வெயிலில் என்ன செய்கின்றன என்கிற கவலை நமக்கு பொதுவாக இருப்பதில்லை. உணவாவது குப்பை தொட்டியிலும், கசாப்பு மற்றும் டீக் கடைகளிலும் ஓரளவுக்கு கிடைத்து விடும். ஆனால் அவற்றுக்கு தண்ணீர் கிடைப்பதே இல்லை. பிஸ்கட் அல்லது இறைச்சி துண்டு போடுகிறவர்கள் கூட அவற்றுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை.


பொதுவாக குப்பங்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்விடங்களில்தான் நாம் நிறைய தெரு நாய்களை பார்க்கலாம். அவர்களில் நிறைய பேர் இந்த நாய்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க அங்கேதான் குப்பைகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன என்பதும் ஒரு காரணம். மும்பையில் மட்டும் தினமும் 500 டன் குப்பை அள்ளாமல் இரவில் விடப்படுகிறது என்று ஒரு தகவல் சொல்கிறது. இவை இந்த நாய்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இங்கே  புணர்வில் ஈடுபடும், குட்டி போட்டு பாதுகாக்கும் அல்லது ரேபிஸ் போன்ற கொடும் வைரஸ் வந்து அவதியுறும் நாய்கள் மக்களை கடிக்க முயல்கின்றன. இதில் இருந்து தப்பிக்க மக்கள் அவற்றின் மேல் கல்லடித்து விட்டு தங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொள்கிறார்கள்.


தெரு நாய்கள் உலவுதற்கு மூல காரணம் மனிதனின் தோல்விதான். Stray dogs எனப்படும் ஆதரவற்ற நாய்கள் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதே போல ரேபிஸ்-ஸால் ஏற்படும் மரணங்களிலும் நமக்குத்தான் முதலிடம். மும்பையில் மட்டும் ஆண்டுக்கு 80,000 பேர் நாய்க் கடி படுகிறார்கள்; 20,000 பேர் ரேபிஸால் இறக்கிறார்கள். ரேபிஸ் வைரஸ் உருவானதே இந்தியாவில்தான் என்று சார்லஸ் ரெப்ரெக்ட், அட்லாண்டாவை சேர்ந்த Centers for Disease Control and Preventionன் தலைவர், குறிப்பிடுகிறார்.


இந்தியாவில் நமக்கு இருக்கும் பொதுவான கருணையின்மையால் வளர்ப்பு நாய்களாக வாங்கப்படும் ஜாதி நாய்களையும்  முக்கால் வாசி நேரம் சரியாக கவனிக்க முடியாமல் துரத்தி விடுகிறோம். அதே போல நாய் விற்பனையாளர்களும் விற்காத நாய்க் குட்டிகளை துரத்தி விட்டு விடுகிறார்கள். இவை எல்லாம் தெரு நாய்களோடு சேர்ந்து உணவுக்கும் வாழ்வுக்கும் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டு விடுகின்றன.


சில பேர் தெரு நாய்களை பிடித்து கும்பலாக கொல்வதை தீர்வாக முன்வைக்கிறார்கள். ஆனால் பிரச்சனை நாய்கள் அல்ல; நம் ஊர் குப்பைகள். நாய்களை கொன்று தீர்த்து விட்டால் எலிகள் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஏன் போயஸ் கார்டனிலோ போட் கிளப்பிலோ தெரு நாய்களை பார்க்க முடியவில்லை என்றால் அந்த சாலைகள் துப்புரவாக இருக்கின்றன. அங்கே நாய்களுக்கு பெரிய தீனி கிடைக்காது.


ஆகவே நம் சாலைகளின் துப்புரவுக்கும், நம்முடைய சுகாதாரத்துக்கும், நாய்களின் பிரச்சனையை தீர்ப்பது ஒரு முக்கியமான தேவை. ஒரு தேசம் என்கிற அளவில் நாம் ஓரளவு முன்னேறுவதற்கும் நம் சாலைகள் பாதுகாப்பானதாக ஆவதற்கும் நாய்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டும்.  இது பிராணிகள் மீதான கருணை என்கிற அளவில் மட்டுமே நிற்பதல்ல. மனிதர்கள் மீதான கவலையும் கூட. சும்மா ஏதோ நாய் மேல் ஒருத்தன் கல்லடிக்கிறான் என்பதன் பின்னணியில் ‘நாய்கள் / குப்பைகள் / ரேபிஸ் / சாலை பாதுகாப்பு / துர்மரணம்’ என்கிற ஒரு வட்டம் இருக்கிறது.


நாய்கள் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. குப்பை இல்லா தெருக்களை உருவாக்குவது, தெரு நாய்கள் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் குறைக்கும் வழிகளை கண்டறிவது, பிராணிகள் மீதான மக்களின் அக்கறையின்மையை போக்கும் வழிகளை கண்டறிவது, என்று அவர்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.  


எனவே தலித் குழந்தைகளோடு செய்யப்பட்ட அந்த அருவருக்கத் தக்க ஒப்பீட்டை கொஞ்சம் ஒதுக்கி  விட்டுப் பார்த்தால் கூட ஜெனரல் விகே சிங் சொன்னது தவறு. நாய்கள் மீது அடிக்கப்படும் கல் உண்மையில் சமூகத்தின் மீதும் அதனை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் செயலின்மை மீதும் அடிக்கப்படும் கல்தான். அதற்கு தான் பொறுப்பல்ல என்று அரசு சொல்லவே முடியாது. அந்த அப்பாவி விலங்குகள் மேல் எறியப்படும் கற்களை தடுப்பதில் நம் சமுதாயத்துக்கும் நம் அரசுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது.

Tuesday, 13 October 2015

விருதுகளும் கேள்விகளும்



சாஹித்ய அகாதெமி அலுவலகத்தின் அலமாரிக்கு திரும்ப வந்து கொண்டிருக்கும் விருதுகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட இருக்கும் இந்நிலையில் அதனை கிண்டல் அடித்தும் விமர்சித்தும் நிறைய கருத்துக்கள் வலது சாரி சிந்தனையாளர்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக காஷ்மீரில் பண்டிட்கள் தாக்கப் பட்ட போது ஏன் திருப்பவில்லை, ஸ்ரீலங்காவில் போர் மூண்ட போது ஏன் செய்யவில்லை என்கிற மாதிரி கேள்விகள் எழுப்பப் படுகின்றன. அந்தக் கேள்விகளை கொஞ்சம் அலசலாம் என்றிருக்கிறேன்.


முந்தைய பிரச்சனைகளில் நயன்தரா சஹ்கல் என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியாது. நான் இங்கே சொல்லப் போவது என்னை முன் நிறுத்தி மட்டுமே. நான் ஒரு விருதை திருப்பி அதற்கு இந்தக் கேள்விகள் எழும் பட்சத்தில் என்ன பதில் சொல்வது என்று மட்டுமே இங்கே யோசிக்கிறேன். அவ்வளவுதான்.


முதலில் காஷ்மீரி பண்டிட்கள் விஷயத்தைப் பார்க்கலாம். அதனை ஒரு இந்திய அரசியல் கட்சி முன் நின்று நடத்தவில்லை. அது காஷ்மீர் வெறியர்கள் நடத்திய செயல். ஜியா உல் ஹக் பாகிஸ்தானில்  கொண்டு வந்த இஸ்லாமியமயம் காஷ்மீரையும் பாதித்தது. அதில் பண்டிட்கள் பெருமளவு பாதிக்கப் பட்டார்கள். ஆனால் பெரும்பான்மை முஸ்லிம்கள் இதற்கு எதிராகவே இருந்தார்கள். இன்றும் கூட மிதவாத பிரிவினை அமைப்புகள் பண்டிட்களை திரும்பவும் குடியேற அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். (1) இன்றும் அங்கே நிறைய பண்டிட்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பகுதியில் பஞ்சாயத்து தலைவியாக ஒரு பண்டிட் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. (2)


அது ஒரு புறம் இருக்க அதை யாரும் கேட்கவில்லை என்று சொல்லவே முடியாது. 1989க்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தை மத்திய அரசு மிகக் கடுமையாக அணுகியிருக்கிறது. 1989ல் அங்கே 36,000 ராணுவ வீரர்கள் இருந்தார்கள் . இன்று ஆறு லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். அதாவது 15 காஷ்மீரிகளுக்கு ஒரு வீரர் என்கிற மேனிக்கு காஷ்மீர் ராணுவமயமாகி இருக்கிறது. 'Most militarised civilian zone in the word' என்கிற பெருமையை காஷ்மீர் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.(3) அங்கே அமுலில் உள்ள AFSPA என்கிற சட்டத்தை எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என்று தெரியாது. அங்கே ராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாரண்டே இல்லாமல் கைது செய்யலாம். சித்ரவதை பண்ணலாம். கொலை கூட பண்ணலாம். இதுவரை பல்லாயிர கணக்கான காஷ்மீரிகள் அந்த மாதிரி 'காணாமல்' போயிருக்கிறார்கள். அங்கே ‘அரை விதவைகள்’, Half Widows, என்கிற பதம் மிகப் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. அதாவது கணவனை ‘விசாரணைக்கு’ ராணுவம் அழைத்துக் கொண்டு போய் அவன் காணாமல் போய் திரும்பியே வராமல் போய் விடுவான். அந்தப் பெண் விதவையாகி விட்டாளா இல்லையா என்பது தெரியாமலே அவள் வாழ்ந்து கொண்டிருப்பாள். (4) அப்படி நூற்றுக்கணக்கான அரை விதவைகள் அங்கே இருக்கிறார்கள். எனவே 1989க்குப் பின் சில ஆண்டுகள் நடந்த கலவரங்களுக்கான விலையை காஷ்மீர் மக்கள் இன்று வரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பது பெரும் பொய். சொல்லப் போனால் காஷ்மீரில் நம் இந்திய அரசு செய்யும் அட்டூழியங்களை எதிர்த்து வேண்டுமானால் விருதை திருப்பித் தந்திருக்கலாம்.


அடுத்தது சீக்கியர் பிரச்சனை. அது இந்திரா காந்தி தன் சுய லாபத்துக்காக உருவாக்கியது. அதற்கு விலையாக தன் உயிரரையே கொடுத்தார். அவருக்குப் பிறகு அதுவும் பெருமளவு வன்முறையினாலேயே ஒடுக்கப் பட்டது. கேபிஎஸ் கில் பஞ்சாபில் பெரும் முயற்சிகள் செய்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த முயற்சிகளில் பெரும் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என்கிற குற்றச் சாட்டுக்கள் இன்றளவும் தொடர்கின்றன.(5) அதுவுமின்றி இன்று வரை ராணுவம் புகுந்த ஒரே வழிபாட்டுத் தலம் சீக்கியர்களின் பொற்கோயில் என்கிற அவமான சின்னத்தை தாங்கியே அது நிற்கிறது. சீக்கியர் கலவரத்துக்கு சோனியா, மன்மோகன் ஆகியோர் பொது மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரங்கள் நிகழ்ந்த போது நயன்தரா சஹ்கல் அகாதெமி விருது வாங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, அவர் தன் வாழ்நாள் முழுவதும் இந்திரா காந்தியை பெரிதும் விமர்சித்தே வந்தார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.


அடுத்தது, இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள் பற்றி சொல்லப் பட்டது. அதையும் யாரும் கேட்கவில்லை என்பது சரியல்ல. அந்த மாதிரியான நிகழ்வுகளால் அந்த சமூகம் படும் கஷ்டம் சொல்லி மாளாது. நிறைய ஊர்களில் முஸ்லிம்களுக்கு வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பதில் தொடங்கி அன்றாடம் நிறைய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். முக்கியமாக, undertrials என்று சொல்லப்படும், சிறைப்பிடிக்கப்பட்டு வெறும் விசாரணை நிலையில் மட்டுமே சிறையில் வாடும் மூன்று லட்சம் பேரில் 21 சதவிகிதம் பேர்  முஸ்லிம்கள். (6) தலித்/பழங்குடியினருக்கு அடுத்த இடம் இவர்களுக்குத்தான். அதிலும் இந்தக் கைதிகளில் 17 சதவிகிதம் பேர் மேல்தான்   குற்றம் நிரூபிக்கப் படுகிறது. அதாவது 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் அப்பாவிகள். எனவே, யாரோ பத்துப் பதினைந்து தீவிரவாதிகள் செய்யும் அநீதிகளுக்கு மொத்த சமூகமும் பெரும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது.


ஆகவே இந்தப் பிரச்சனைகளில் யாருமே கேள்வி கேட்கவில்லை. எந்த நடவடிக்கையுமே வரவில்லை என்கிறவர்கள் ஒன்று விவரம் தெரியாதவர்கள், அல்லது பொய் சொல்பவர்கள்.


(இலங்கையில் நடந்த போரை எதிர்த்து ஏன் யாரும் விருதை திருப்பி அனுப்பவில்லை என்கிற ஒரு பதிவையும் பார்த்தேன். அது கொஞ்சம் குழப்பமாக இருந்தது.சரி, இலங்கை எழுத்தாளர்களைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று அந்தப் பதிவைக் கடந்து விட்டேன்!)


ஆனால் ‘இதைக் கேட்டார்களா?’, ‘அதைக் கேட்டார்களா?’ என்று முஸ்லிம்கள் மேல் குற்றம் சாட்டும் இவர்கள் உண்மையிலேயே முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான இரண்டு நிகழ்வுகளை குறிப்பிடுவதே இல்லை.


முதல் விஷயம், சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் பாடல்கள்’ (The Satanic Verses) புத்தகம் ராஜீவ் அரசால் தடை செய்யப் பட்டது. கருத்து சுதந்திரத்துக்கு இந்தியாவில் அடிக்கப்பட்ட மிக முக்கியமான சாவுமணி அது. இன்று 'மாட்டுக்கறி சாப்பிடுவது என் உரிமை,' என்று கூக்குரல் விடும் நிறைய முஸ்லிம்கள் அன்று அந்தத் தடையை ஆதரித்து குரல் விடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் நபிகள் நாயகத்தை மிகவும் கண்ணியக் குறைவாக சித்தரித்திருந்தது என்பது உண்மைதான் எனினும் தங்கள் மதத்துக்கு ஒவ்வாத ஒரு புத்தகத்தை தேசம் முழுமைக்கும் தடை செய்ய வேண்டும், அதாவது  அதை மற்ற மதத்தவரும் படிக்கக் கூடாது என்று போராடியது முஸ்லிம் இயக்கத்தவர்கள் செய்த தவறு. முஸ்லிம்களில் நிறைய முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்தத் தடையை கண்டித்திருந்தாலும் அப்போது எழுந்த பெரும் கூக்குரல்களில் அவர்களின் குரல்கள் அடிபட்டுப் போய் விட்டன. அதிலும் முற்போக்குவாதியான குஷ்வந்த் சிங் இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டவர்களில் முதலாமவர்.(7)


ஆனால் ருஷ்டி சம்பவம் உலகளாவிய பிரச்சனையாக மாறிய ஒன்று. அப்போது மும்பையில் கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியானார்கள். அந்த நாவலை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்தவர் குத்திக் கொல்லப்பட்டார். இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். உலகம் முழுவதும் ஆயதொல்லா கொமேனியின் ஆணையை சிரமேற்கொண்டு ருஷ்டியை கொல்ல நிறைய பேர் அவரைத் தேடி அலையோ அலை என்று அலைந்தார்கள். (8)


இரண்டாவது, ஷா பானோ வழக்கு. கணவனால் விவாகரத்து செய்யப் பட்ட ஷா பானோ ஜீவனாம்சம் கோரி கோர்ட்டுக்கு சென்றார். ஹை கோர்ட்டில் அவர் வெற்றி பெறவே அவர் கணவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார். அங்கும் ஷா பானோ வெற்றி பெற்று விடவே பிரச்சனை பெரிதானது. விஷயம் என்னவென்றால் இஸ்லாமிய ஷரியா சட்டப்பட்டி விவாகரத்து நடந்து 90 நாட்களுக்கு மட்டுமே ஜீவனாம்சம் கொடுத்தால் போதுமானது. இதனை சுட்டிக் காட்டி முஸ்லிம்கள் தேசமெங்கும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதனால் பயந்து போன மத்திய அரசு அந்த ஷரியா சட்டத்தை உள்ளடக்கி புதிய சட்டம் ஒன்றை இயற்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் இந்தியாவில் இருந்த எல்லா முஸ்லிம் பெண்களின் உரிமையும் ஒரே நாளில் சட்ட ரீதியாக பறிக்கப் பட்டது. இதனை எதிர்த்து எந்த எழுத்தாளரும் பிரச்சனை பண்ணவில்லை. சொல்லப் போனால் வினோத் மேத்தா போன்ற கருத்து சுதந்திர காவலர்கள் இந்த புதிய சட்டத்தை வரவேற்று ‘இதன் மூலம் முஸ்லிம்கள் கலவரத்தை நிறுத்துவார்கள் என்றால் இந்த சட்டம் வருவதில் தவறில்லை’ என்றே எழுதினார். (9)


என்னைக் கேட்டால் ஸல்மான் ருஷ்டி மற்றும் ஷா பானோ வழக்கு இந்த இரண்டும்தான் செக்யூலரிசம் பலவீனமடைய காரணமாக இருந்தவை. இந்த இரண்டு விஷயங்களில் கோபமுற்றிருந்த ஹிந்துத்வா இயக்கங்களை மனம் குளிர்விக்க வேண்டி அயோத்தியில் பாபர் மசூதியை ராமர் பூஜைக்காக ராஜீவ் காந்தி திறந்து கொடுத்தார். அதன் பிறகு நடந்ததை நாடறியும். அதற்குப் பிறகு ஹிந்துத்வவாதிகள் தங்களுக்குப் பிடிக்காத புத்தகங்கள், சினிமாக்கள், டிவி சீரியல்கள் போன்றவற்றை தடை செய்யக் கோரும் போதெல்லாம் அவர்களுக்கு வசதியாக ருஷ்டி சம்பவம் பயன்பட்டது.


ஆனால் ஒன்று. இவை எல்லாவற்றையும் விட இன்று நடக்கும் சமாச்சாரங்கள் மிக மோசமானவை. ஏனெனில் இன்றைய பிரச்சனை என்னவென்றால் மத்திய அரசே முன் நின்று ஹிந்துத்வா சிந்தனைகளை, அதன் அடிப்படையற்ற தாத்பரியங்களை பரப்பும் பெருமுயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான். இங்கே சிறுபான்மையினரின் தேசபக்தி அதிகம் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. அவர்களின் வாழ்க்கை முறைகள் மீது தொடர்ந்து சிந்தனாவாத தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கூடவே ஹிந்து மதத்தின் பன்முக படிவங்கள் ஒடுக்கப் பட்டு ஹிந்துத்வவாதிகள் மனதில் மட்டுமே இருக்கும் ஒரு கற்பனையான ஹிந்து மதம் நடை முறைப் படுத்தப்படும் முயற்சிகள் அரங்கேறுகின்றன. பாடப் புத்தகங்கள் ‘சுத்திகரிக்கப்’ படுகின்றன. வரலாறு ‘சுத்தம்’ பண்ணப் படுகிறது. பகுத்தறிவுவாதிகள் மற்றும் நாத்திகர்கள் மீது மிரட்டல்கள் விடப்படுகின்றன. நம் பண்டைய வரலாறு பற்றிய கற்பனையான விஷயங்கள் புகுத்தப் படுகின்றன. ஹிந்து அரசர்கள் ஹீரோக்களாகவும் இஸ்லாமிய அரசர்கள் வில்லன்களாகவும் மாற்றப் பட்டு வருகின்றனர்.


இவை எல்லாமே பாகிஸ்தானில் எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் நிகழ்ந்தவை. அப்போது பாக் அதிபராக பொறுப்பேற்ற ஜியா உல் ஹக் அங்கே இஸ்லாமியவாதத்தை கொண்டு வந்தார். ஷரியா விதிகளை சட்டங்களாக்கினார். பாடப் புத்தகங்களை இஸ்லாம் மயமாக்கினார். இன்று பாகிஸ்தானில் பெரும்பான்மை இளைஞர்கள் இந்தியாவை வெறுக்கும் மனநிலையில் இருப்பதற்கும் இஸ்லாமிய தீவிரவாதம் அங்கே பெருகியதற்கும் ஜியா உல் ஹக்கின் இந்த முயற்சிகள்தான் காரணம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். (10)


அதே மாதிரியான முயற்சிகள் இங்கே ஆரம்பித்திருக்கின்றன. மத்திய அரசில் இருக்கும் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்களே இப்படி நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார்கள். முக்கியமான ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்களுக்கு தகுதியே இல்லாத ஹிந்துத்வா அபிமானிகள் தலைவர்களாக நியமிக்கப் பட்டு வருகிறார்கள் (11) இந்த விஷயங்களை விளக்கவோ, இந்த குறுந் தலைவர்களை கண்டிக்கவோ, அல்லது இவர்களால் நமக்கு வரும் கவலைகளை போக்கவோ ஓரிரு வார்த்தைகளையாவது சொல்ல பிரதமர் தயாராக இல்லை. ஹிந்துத்வவாதம் சம்பந்தமாக அவரிடம் இருந்து கனத்த மவுனம்தான் நமக்கு கிடைக்கிறது. உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் நடிகர்கள் வரை எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு சமூக ஊடகங்களில் நிறைந்து கிடக்கும் நம் பிரதமர் இதுவரை இந்த எந்த விஷயத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு ட்விட்டர் கூட பதியவில்லை. இதைப் பார்க்கும் போது அவரின் சம்மதம் அல்லது ஆசியுடனேயே இவை எல்லாம் நடக்கின்றன என்றுதான் கருத  வேண்டி இருக்கிறது.


இதற்கு எதிராக பெருமளவிலான உரத்த குரல்கள் தேவைப்படுகின்றன. மனம் நொந்து விருதுகளை திருப்பி அனுப்பும் எழுத்தாளர்களின் ஈனக் குரல்கள்தான் இப்போதைக்கு ஒலித்து வருகின்றன. அவை கிண்டல்களாலும் கேலிகளாலும் அலட்சியப் படுத்தப் படுகின்றன. ‘விருது சரி, வாங்கிய பணத்தை கொடுத்தியா?’ என்று எக்காளங்கள் கேட்கின்றன.


இந்த வழியிலேயே இவர்களை போக விட்டால் இவர்கள் ஒரு ஹிந்து தேசத்தை கட்டமைக்காமல் நிறுத்த மாட்டார்கள். ஹிந்து தேசம் என்பது உண்மையில் ஒரு நரக உலகம்தான். தங்களுக்கென ஒரு இஸ்லாமிய தேசம் அமைத்து நரகத்தில் உழலும் பாகிஸ்தானுக்கு போட்டியாக இவர்கள் உருவாக்கும் ஹிந்து நரகம்தான் அது. இப்போதைக்கு அந்த நரகத்துக்கு கடைக்கால்கள் நடப்பட்டு வருகின்றன. நாம் யாரும் கண்டுகொள்ளாமல் போனால் கூடிய விரைவில் நரகத்தின் திறப்பு விழாவிற்கு நமக்கெல்லாம் அழைப்பு அனுப்பப்படும்.


References:
---
1) Separatists ask Pandits to return: http://goo.gl/qL9NUR
2) Kashmiri Pandit woman wins Panchayat poll: http://goo.gl/2ZHVX5
3) Most Militarised Zone: https://goo.gl/Nj2lHo
4) Kashmir's Half Widows: http://goo.gl/IpEfeT
5) Punjab Counterinsurgency: http://goo.gl/2tJzCP
6) Undertrials: http://goo.gl/GCRSJf
7) Satanic Verses Controversy: http://goo.gl/47wsuL
8) Salman Rushdie's run for his life is depicted in his autobiography Joseph Anton
9) Mehta supporting  Muslim Women (Protection of Rights on Divorce) Act 1986: From the book 'Mr Editor, How Close are you to the PM?' by Vinod Mehta
10) Jia and his Islamisation: From the book 'Pakistan: Eye of the Storm' by Owen Bennett Jones
11) On NDA's academic appointments: http://goo.gl/zNcba1